மனம் கனியாமல் இருக்குமா?
"மனம் கனிந்து...."
இந்த அற்புதமான பாடலைக் கேட்கையில் முன்பு எம்.கெ.டி பாகவதரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது - அப்போது பாகவதருக்கு ஏழெட்டு வயதிருக்கும். பக்கத்து ஊருக்குப் போனவர் தொலைந்து போகிறார். பெற்றோர்களால் எவ்வளவு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தன் பாட்டுக்கு நடந்து ஒரு கோயில் நடையை அடைகிறார். அவருக்குப் பசிக்கிறது. வழி தெரியவில்லை. பயமாக இருக்கிறது. அதனால் அவருக்கு தெரிந்த ஒரே விசயத்தைப் பண்ணுகிறார்: அவருக்குத் தெரிந்த ஒரு அழகிய கீர்த்தனை ஒன்றை பாட ஆரம்பிக்கிறார், சத்தமாக கணீரென்று. சற்று நேரத்தில் அப்பாடலை ரசிக்க ஒரு சிறு கூட்டம் சேர்கிறது. அவர்கள் அவரை மேலும் பாடல் சொல்கிறார்கள். மேலும் மேலும் பல பாடல்களைப் பாடுகிறார். சிறுகூட்டம் பெருங்கூட்டம் ஆகிறது. அவர்கள் அப்பையனுக்கு கோயில் பிரசாதமும் வேறு உணவுகளும் வழங்குகிறார்கள். அவனைக் கொண்டாடுகிறார்கள். அவன் தான் தொலைந்து போனவன் என்பதையே மறந்து எதையோ கண்டுபிடித்தவன் ஆகிறான். மகிழ்கிறான். அவனை தம் வீட்டில் தங்க வைக்க ஆளாளுக்கு போட்டி போடும் நிலை உண்டாகிறது.
அடுத்தடுத்த நாட்களில் இந்த சிறுவனின் புகழ் பரவ அவன் பாட்டைக் கேட்க மக்கள் திரள்கிறார்கள். அவன் ஒரு செலிபிரிட்டி ஆகிறான். புகழ் பக்கத்து ஊரிலுள்ள அவனுடைய அப்பா வரைப் போக அவர் அது தன் மகனே என முடிவு பண்ணி வண்டி கட்டிக்கொண்டு வந்து கூட்டிப் போகிறார்!
பாகவதரின் மகோன்னத இசைப்பயணம் இப்படியே ஆரம்பிக்கிறது!
திரும்பவும் அப்பாடலுக்கு வருகிறேன். இப்படிப் பாடினால் கடவுளுக்கு மனம் கனியுமா என்றால் நிச்சயம் கனியும்! நமது கூட்டு மனம் என்பது ஒருவித கடவுள் தானே, அதைத் தொடுவது என்றால் இறையடி பணிவது தான்! எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் இதை வேறெப்படி சொல்வது எனத் தெரியவில்லை!
கருத்துகள்