முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கு போய் புலம்புவது?

நான் அடிக்கடி யோசித்துப் பார்ப்பேன்.  நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு எழுதிய பல கவிஞர்களும், இளங்கோவும், கம்பனும், வள்ளுவரும், தொல்காப்பியரும், காரைக்கால் அம்மையும், ஆண்டாளும், மாணிக்கவாசகரும் சமகால தமிழ் மண்ணுக்கு வந்து பார்த்தால் எப்படி வியப்படைவார்கள் என. இங்கு என்று நான் சொல்வது பழைய தென்னிந்திய மண். இங்கு பௌத்தம் செழித்திருக்கிறது. மூன்று சிறந்த பௌத்த தத்துவஞானிகளாவது இங்கிருந்து தோன்றியிருக்கிறார்கள். மிகச்சிறந்த தத்துவம், இலக்கியம் மலர்ந்திருக்கின்றன. ஆனால் இன்று எஞ்சுவது என்ன சினிமாவைத் தவிர? எனக்குத் தெரிந்து ஐரோப்பிய மொழிகளில் அவர்கள் மேம்பட்டபடி வளர்ந்தபடியே போகிறார்கள். இந்திய மொழிகள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கும் மேலாகக் கூட வெறும் பாலைவனமாகி வருகின்றன. மிகச்சில மொழிகளே விதிவிலக்கு. அதுவும் எந்த போற்றத்தக்க மரபும் இல்லாத அந்த வெகுசில மொழிகளில் மட்டுமே நவீன காலத்தில் இலக்கியமும் சிந்தனைத் தளங்களும் வெகுமக்களிடம் கொண்டு செல்லப்பட்டு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் பொருளாதார தளத்தில் பெரும் வளர்ச்சி கண்டு பண்பாட்டு அறிவுத்துறைகளில் வெகுமக்களின் சமூகம் மலினமான உணர்ச்சிகளைத் தாண்டி எதையும் நாட முடியாதவர்களாக மாறி உள்ளார்கள்.

 நமது மூதாதைகள், பெரும் சாதனையாளர்கள், இந்த காலத்துக்கு திரும்ப வந்து இதைப் பார்த்தால் எதற்கு இங்கு வேலை பார்த்தோம், ஒன்றுமே நிலைக்காத இடத்தில் எதற்கு பங்களித்தோம் என ஏமாற்றம் கொள்வார்கள். எனக்குத் தெரிந்து இதற்கு ஈடான வீழ்ச்சி நவீன கிரேக்கத்தில் உள்ளது. ஆனால் அங்கும் உலகறிந்த நவீன படைப்பாளிகள் உளனர். நீங்கள் யோசித்ததுண்டா ஏன் நமது பிரதமர் தமிழின் பெருமையைக் காட்ட வள்ளுவரை மேற்கோள் காட்டுகிறார் அடிக்கடி என்று? இதுவே வங்காளம் எனில் அவர் தாகூருக்கும், அவருக்குப் பின் வந்தோருக்கும் போயிருப்பார். ஆனால் நமக்கு அப்படி ஒரு நவீன இலக்கிய / பண்பாட்டு மரபு வெகுமக்கள் தளத்தில் இல்லை. ரஜினி, அஜித், விஜய்யின் திரைவசன மேற்கோள்களை மேடையிக் கூறினால் கேவலமாக இருக்காதா? அதனால் தான் கடித்துக் கடித்து செவ்விலக்கியத் தமிழைத் துப்புகிறார். வேறுவழியில்லை என்றாகும் நம் எதார்த்தம் ரஜினி, கமல், அஜித், விஜய் தானே? அவர்களைத் தாண்டி நமக்கு எந்த அக்கறையும் இல்லையே! ஆகையால் அவர் ஒவ்வொரு முறை தப்பும் தவறுமாக வள்ளுவரை மேற்கோள் காட்டுவது உலகமே நம்மால் செருப்பால் அடிப்பதற்கு சமம். ஆனால் நாமோ நாம் போற்றப்படுவதாக நினைக்கிறோம்.

அண்மையில் ஒரு நண்பரிடம் பேசும் போது ஒரு சிறந்த புனைவெழுத்தாளரைக் குறிப்பிட்டு அவர் கமலையும், மணிரத்தினத்தையும் வந்தடைய இத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டி வந்தது, அதன் பிறகே திரைக்கதை எழுத்தாளராக நட்சத்திர அந்தஸ்து பெற்றார் என்றார். இதைவிட வேறு கேவலம் உண்டா? ஒரு மசாலா பட நடிகரும் இயக்குநரும் கவனித்தால் தான் அங்கீகாரமா? அவர்கள் முதலில் படிக்க வேண்டியதே இலக்கியம் தான், அதை ஒருவர் காத்திருந்து கொண்டு போகக் கூடாது. அது ஒரு அவமானம், பெருமை அல்ல. இன்னும் சொல்லப்போனால் 25 வயதுக்குள் முக்கிய படைப்பாளிகளைத் தெரிந்துகொண்டு அடுத்தடுத்த தளங்களுக்கு நகர வேண்டும். நீங்கள் ஜப்பானில் போய் நாற்பது வயதினருக்கு முராகாமியை அறிமுகப்படுத்துகிறோம் எனில் சிரிப்பார்கள். அவர் இருபது வயதில் வாசித்துக் கடக்க வேண்டியவர். நம் ஊரில் கமல் புதுமைப்பித்தன், அழகிரிசாமியைப் பற்றி சொன்னால் ஆவென வாயைப் பிளக்கிறார்கள்.  பிக்பாஸில் பரிந்துரைக்கபட்டால் தான் ஒரு புத்தகத்தை நம் சமூகம் அறியும் எனில் இவர்கள் ஏன் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்கிறார்கள்? நேரே பிக்பாஸ் வீட்டுக்குப் போய் படிக்கலாமே? 

இன்னொரு விசயம்: மேற்சொன்ன மகத்தான செவ்வியல் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் 18ஆம் நூற்றாண்டுக்கு மேல் கண்டடையப்பட்டு சைவ, வைணவ இயக்கங்களாலும், தலித் பூர்வ பௌத்தர்களாலும் பாதுகாத்து பரப்பப்பட்டார்கள். அதற்கு காலனிய ஆதிக்கம் ஒரு பெரும் தூண்டுதல். அடுத்து இதில் இருந்து தமிழ் தேசியவாதம், திராவிட இயக்கம் தோன்றி சிலம்பையும் வள்ளுவத்தையும் பண்பாட்டு சின்னங்கள் ஆக்கினார்கள். இந்த இரு கட்டங்களும் ஒருவேளை நிகழாமல் போயிருந்தால் நாம் தமிழ் பண்பாடே எம்.ஜி.ஆர், சிவாஜியின் படங்களில் இருந்து உதித்தது என சொல்லிக் கொண்டிருந்திருப்போம். 

நல்லவேளை இதுவாவது எஞ்சியது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...