முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசை அமைப்பும் இசைத்தேர்வும்

 


ராம் கோபால் வர்மா ரஹ்மான் செய்யும் ‘அறிவுத் திருட்டு’ பற்றி அவரது அண்மை பேட்டியில் சொன்னது உண்மை தான் என நினைக்கிறேன். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஆர்.ஜெ.வி அதை ‘திருட்டு’ எனக் கருதவில்லை. அதை ஒரு தெளிவான கலை உருவாக்க அணுகுமுறை என்கிறார். அவர் சொல்வது படி பார்த்தால் நீண்டகாலமாகவே ரஹ்மான் இந்த பாணியைப் பின்பற்றி வந்திருக்கிறார் - இளம் பாடகர்களின் மெட்டுகளை வாங்கி, விதவிதமான இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளைப் பதிவு பண்ணி வைத்துக்கொண்டு (எல்லாருக்கும் அவரவருக்கான பரிசைக் கொடுத்துதான்) தேவைப்படும் போது அவற்றைக் கலந்து ஒரு பாடலாக்குகிறார். அதனால் தான் அவர் என் பாடல்களின் மூலத்தைத் தேடாதீர்கள் என யஷ் கய்யிடம் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அதாவது ரஹ்மான் இசையமைப்பாளர் அல்ல, இசை இயக்குநர். ஒரு இயக்குநர் தன் சொந்த கதையை, வசனங்களைக் கொண்டு படமெடுக்க அவசியமில்லை. இசை, நடிப்பு, அரங்கு அமைப்பு, ஒலியமைப்பு, தொகுப்பு என பல்வேறு கலைஞர்களின் பங்களிப்புதான் அப்படமா என்றால் முழுக்க இல்லை, அதில் இயக்குநரின் ஒருங்கிணைப்புத் திறன், வாழ்க்கைப் பார்வையும் இருக்கிறது என சொல்கிறோம் அல்லவா, அதைத்தான் ரஹ்மான் செய்வதாக ஆர்.ஜெ.வி சொல்கிறார். ஆர்.ஜெ.வி இதை தரிசனம் என்றல்ல, ‘தேர்வு’ என்கிறார்.

இதுவே ரஹ்மானை 'வெற்றிகரமான இசையமைப்பாளர்’ ஆக்கியது. ஏனெனில் அவர் இசையை உருவாக்கவில்லை, தேர்வு செய்து தன் ரசனைப்படி தொகுத்து வடிவமைப்பதே அவர் செய்வது. அதனாலே வேறு யாரிடமும் இல்லாத ஒரு எதிர்பாராத இசைத்தன்மை, வேறுபட்ட வகைமைகள், ஒலிகள் அவரிடம் இருந்து வெளிப்பட்டது. அவருடைய ரசனையின் சாயலே அவரது இசையில் வெளிப்படும் சாயல். அந்த கலவையின் நீட்சியே அவரது ஆளுமை. அவர் இசையமைப்பதைப் பற்றி சொல்லும் பாடகர்கள் அவர் ஒரு அடிப்படையான மெட்டைக் கொடுத்து அதை தமது பாணியில் பாடச்சொல்லி பதிவு பண்ணி அதில் இருந்து சில பகுதிகளை வெட்டியெடுத்து இசைக்கோவையுடன் ஒரு பாடலாக்கி விடுவார் என சொல்வார்கள். பாடகர்களின் படைப்பாக்கத்தையும் தன் மெட்டுக்காக அவர் பயன்படுத்துவதால் அவரது இசை அவ்வளவு புதுமையாக இருக்கிறது. மேலும், சில நாட்டார் பாடகர்களும், வித்தியாசமான இசைக்கருவியை இசைக்கும் நாட்டுப்புற கலைஞர்களும் அவரது ஸ்டுடியோவை நாடிச்சென்று இசைத்து பணம் வாங்கிப் போவார்கள், அதை ரஹ்மான் பதிவு பண்ணி தன் ஆர்க்கைவ்வில் வைத்துக்கொள்வார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தனிமனிதர் தனது படைப்பாக்கத் திறன், அனுபவம், அறிவைக் கொண்டு இதை செய்வதானால் இவ்வளவு பன்முகத்தன்மை, மாறுபட்ட வகைமைகள் அவரது இசையில் வரவே முடியாது. ரஹ்மானுக்குப் பின் வந்தவர்கள் சர்வதேச இசைக்கலைஞர்களின் உரிமம் பெற்று மெட்டையும் கோவைகளையும் பெற்று தம் பாடல்களில் பயன்படுத்துவதாக கேபிள் சங்கர் சொல்கிறார். நாம் வழமையான இசையமைப்பாளர்களிடம் உள்ள அசலான படைப்பாக்கத்தை, சுயத்தை ரஹ்மானிடம் தேடக் கூடாது. ரஹ்மான் ஒரு ஒரிஜினல் இசை சாட் ஜி.பி.டி. இசையில் சாட் ஜி.பி.டியின் முன்னோடி அவர் தான். இதை நான் கிண்டலாக சொல்லவில்லை. இதை அவர் தெரிந்தே தெளிவாக யோசித்தே செய்திருக்கிறார் - தன் திறமையென்ன, தன் சாதனை என்ன என்று அவருக்குத் தெரியும். தமிழில் யாரும் இதை யோசிக்காத காலத்தில் செய்து இந்திய அளவுக்கு தமிழ் திரைப்பட இசையை அவர் புகழடைய செய்தார். இதுவும் ஒரு தனித்திறன் தானே. அவரால் மற்ற இசையமைப்பாளர்களைப் போல மெட்டமைக்க முடியாது. ஆனால் அவருக்கு முடிகிற ஒன்று ராஜாவுக்கும் தானே முடியாது. ராஜா ஒரு படைப்பாளி எனில் இவர் ஒருவித இசைப்பொறியியலாளர். அவர் மனிதர், இவர் மனித உருவிலான சாட் ஜி.பி.டி.
இன்னொரு விசயம் - வேறு இசையமைப்பாளர்களும் மெட்டைத் திருடியிருக்கிறார்கள். ரஹ்மான் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்பதே வித்தியாசம்.
ஒரே பிரச்சினை மெட்டுக்கான அங்கீகாரத்தை அவர் இந்த பாடகர்களுக்கும், கலைஞர்களுக்கும் கொடுக்கவில்லை என்பதே. அப்படி கொடுத்திருந்தாலும் என்ன ஆகியிருக்கும்? “ஜெய் ஹோவின்” மெட்டு சுக்வீந்தருடையது என்பதால் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்திருக்காது. ஆனால் ரசிகர்கள் அவரை என்றும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அவர் மீதான வியப்பு சற்று குறைந்திருக்கும், ஆனால் பிராண்ட் மதிப்பு இருந்திருக்கும். ஒருவேளை அதை செய்யும் துணிச்சல் ரஹ்மானுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். சினிமாவுக்குள் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று, ஊடகவியலாளர்கள் பேசத் தலைப்படாத ஒன்று நமக்கு மட்டும் தெரியவில்லை. நஸ்ரீன் முன்னி கபீர் தான் எழுதிய AR Rahman: The Spirit of Music நூலிலும் சொல்லவில்லை. ஆஸ்கார் குழுவினருக்கும் தெரிய வருகிறது. இப்போது ஒரு காணொளி வழியாக தெரிய வந்திருக்கிறது.

பி.கு: சுக்வீந்தர் சிங்கை வைத்து இப்போது மறுப்பு வெளியிட்டிருப்பதும் ஒருவித பி.ஆர் வேலையாகவே தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...