Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இசை அமைப்பும் இசைத்தேர்வும்

 


ராம் கோபால் வர்மா ரஹ்மான் செய்யும் ‘அறிவுத் திருட்டு’ பற்றி அவரது அண்மை பேட்டியில் சொன்னது உண்மை தான் என நினைக்கிறேன். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஆர்.ஜெ.வி அதை ‘திருட்டு’ எனக் கருதவில்லை. அதை ஒரு தெளிவான கலை உருவாக்க அணுகுமுறை என்கிறார். அவர் சொல்வது படி பார்த்தால் நீண்டகாலமாகவே ரஹ்மான் இந்த பாணியைப் பின்பற்றி வந்திருக்கிறார் - இளம் பாடகர்களின் மெட்டுகளை வாங்கி, விதவிதமான இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளைப் பதிவு பண்ணி வைத்துக்கொண்டு (எல்லாருக்கும் அவரவருக்கான பரிசைக் கொடுத்துதான்) தேவைப்படும் போது அவற்றைக் கலந்து ஒரு பாடலாக்குகிறார். அதனால் தான் அவர் என் பாடல்களின் மூலத்தைத் தேடாதீர்கள் என யஷ் கய்யிடம் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அதாவது ரஹ்மான் இசையமைப்பாளர் அல்ல, இசை இயக்குநர். ஒரு இயக்குநர் தன் சொந்த கதையை, வசனங்களைக் கொண்டு படமெடுக்க அவசியமில்லை. இசை, நடிப்பு, அரங்கு அமைப்பு, ஒலியமைப்பு, தொகுப்பு என பல்வேறு கலைஞர்களின் பங்களிப்புதான் அப்படமா என்றால் முழுக்க இல்லை, அதில் இயக்குநரின் ஒருங்கிணைப்புத் திறன், வாழ்க்கைப் பார்வையும் இருக்கிறது என சொல்கிறோம் அல்லவா, அதைத்தான் ரஹ்மான் செய்வதாக ஆர்.ஜெ.வி சொல்கிறார். ஆர்.ஜெ.வி இதை தரிசனம் என்றல்ல, ‘தேர்வு’ என்கிறார்.

இதுவே ரஹ்மானை 'வெற்றிகரமான இசையமைப்பாளர்’ ஆக்கியது. ஏனெனில் அவர் இசையை உருவாக்கவில்லை, தேர்வு செய்து தன் ரசனைப்படி தொகுத்து வடிவமைப்பதே அவர் செய்வது. அதனாலே வேறு யாரிடமும் இல்லாத ஒரு எதிர்பாராத இசைத்தன்மை, வேறுபட்ட வகைமைகள், ஒலிகள் அவரிடம் இருந்து வெளிப்பட்டது. அவருடைய ரசனையின் சாயலே அவரது இசையில் வெளிப்படும் சாயல். அந்த கலவையின் நீட்சியே அவரது ஆளுமை. அவர் இசையமைப்பதைப் பற்றி சொல்லும் பாடகர்கள் அவர் ஒரு அடிப்படையான மெட்டைக் கொடுத்து அதை தமது பாணியில் பாடச்சொல்லி பதிவு பண்ணி அதில் இருந்து சில பகுதிகளை வெட்டியெடுத்து இசைக்கோவையுடன் ஒரு பாடலாக்கி விடுவார் என சொல்வார்கள். பாடகர்களின் படைப்பாக்கத்தையும் தன் மெட்டுக்காக அவர் பயன்படுத்துவதால் அவரது இசை அவ்வளவு புதுமையாக இருக்கிறது. மேலும், சில நாட்டார் பாடகர்களும், வித்தியாசமான இசைக்கருவியை இசைக்கும் நாட்டுப்புற கலைஞர்களும் அவரது ஸ்டுடியோவை நாடிச்சென்று இசைத்து பணம் வாங்கிப் போவார்கள், அதை ரஹ்மான் பதிவு பண்ணி தன் ஆர்க்கைவ்வில் வைத்துக்கொள்வார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தனிமனிதர் தனது படைப்பாக்கத் திறன், அனுபவம், அறிவைக் கொண்டு இதை செய்வதானால் இவ்வளவு பன்முகத்தன்மை, மாறுபட்ட வகைமைகள் அவரது இசையில் வரவே முடியாது. ரஹ்மானுக்குப் பின் வந்தவர்கள் சர்வதேச இசைக்கலைஞர்களின் உரிமம் பெற்று மெட்டையும் கோவைகளையும் பெற்று தம் பாடல்களில் பயன்படுத்துவதாக கேபிள் சங்கர் சொல்கிறார். நாம் வழமையான இசையமைப்பாளர்களிடம் உள்ள அசலான படைப்பாக்கத்தை, சுயத்தை ரஹ்மானிடம் தேடக் கூடாது. ரஹ்மான் ஒரு ஒரிஜினல் இசை சாட் ஜி.பி.டி. இசையில் சாட் ஜி.பி.டியின் முன்னோடி அவர் தான். இதை நான் கிண்டலாக சொல்லவில்லை. இதை அவர் தெரிந்தே தெளிவாக யோசித்தே செய்திருக்கிறார் - தன் திறமையென்ன, தன் சாதனை என்ன என்று அவருக்குத் தெரியும். தமிழில் யாரும் இதை யோசிக்காத காலத்தில் செய்து இந்திய அளவுக்கு தமிழ் திரைப்பட இசையை அவர் புகழடைய செய்தார். இதுவும் ஒரு தனித்திறன் தானே. அவரால் மற்ற இசையமைப்பாளர்களைப் போல மெட்டமைக்க முடியாது. ஆனால் அவருக்கு முடிகிற ஒன்று ராஜாவுக்கும் தானே முடியாது. ராஜா ஒரு படைப்பாளி எனில் இவர் ஒருவித இசைப்பொறியியலாளர். அவர் மனிதர், இவர் மனித உருவிலான சாட் ஜி.பி.டி.
இன்னொரு விசயம் - வேறு இசையமைப்பாளர்களும் மெட்டைத் திருடியிருக்கிறார்கள். ரஹ்மான் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்பதே வித்தியாசம்.
ஒரே பிரச்சினை மெட்டுக்கான அங்கீகாரத்தை அவர் இந்த பாடகர்களுக்கும், கலைஞர்களுக்கும் கொடுக்கவில்லை என்பதே. அப்படி கொடுத்திருந்தாலும் என்ன ஆகியிருக்கும்? “ஜெய் ஹோவின்” மெட்டு சுக்வீந்தருடையது என்பதால் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்திருக்காது. ஆனால் ரசிகர்கள் அவரை என்றும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அவர் மீதான வியப்பு சற்று குறைந்திருக்கும், ஆனால் பிராண்ட் மதிப்பு இருந்திருக்கும். ஒருவேளை அதை செய்யும் துணிச்சல் ரஹ்மானுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். சினிமாவுக்குள் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று, ஊடகவியலாளர்கள் பேசத் தலைப்படாத ஒன்று நமக்கு மட்டும் தெரியவில்லை. நஸ்ரீன் முன்னி கபீர் தான் எழுதிய AR Rahman: The Spirit of Music நூலிலும் சொல்லவில்லை. ஆஸ்கார் குழுவினருக்கும் தெரிய வருகிறது. இப்போது ஒரு காணொளி வழியாக தெரிய வந்திருக்கிறது.

பி.கு: சுக்வீந்தர் சிங்கை வைத்து இப்போது மறுப்பு வெளியிட்டிருப்பதும் ஒருவித பி.ஆர் வேலையாகவே தெரிகிறது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...