ரோஹித் ஷர்மா திரும்ப வந்ததுமே அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் நாம் இழப்போம் என நான் எழுதியதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது - ஏனென்றால் அவர் வந்ததும் இளைஞர்களைத் தூக்கிவிட்டு முதியவர்களுக்குத் திரும்பவும் வாய்ப்பு அளிப்பது, மோசமான களத்தடுப்பு, பந்துவீச்சாளர்களை எதிர்மறையாக வழிநடத்துவது என மீண்டும் மோசமான ஆட்டத்தைக் கொண்டு வந்தார். மேலும் அவருக்கு எதிர்கால இலக்கே இல்லை. நிரூபிக்க ஒன்றுமேயில்லாத அவரைப் போல ஒருவரைத் தலைவராக நீடிக்கவிடுவதே அபத்தமென நினைக்கிறேன். கோலிக்கும் இது பொருந்தும்.
நாம் கவனிக்காமல் விடும் இன்னொரு பிரச்சினை உண்டு - அது ரோஹித்துக்கும் கம்பீருக்கும் மனச்சேர்க்கை, பொருத்தப்பாடு இல்லை. இலங்கையில் சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி இலங்கையை டி20 தொடரில் ஓடவிட்டது. ஆனால் ரோஹித் தூக்கக்கலக்கத்துடன் ஒருநாள் அணிக்கு வந்ததும் ஆட்டம் மிகமிக மோசமாகியது. அடுத்து இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களிலும் ரோஹித் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். நியுசிலாந்த் தொடரில் மிக மட்டமாக தலைமை செய்தும், மட்டையாடியும் தொடரை இழக்கக் காரணமானார். அப்போதே அவரையும் கோலியையும் ஓய்வுபெறும்படி வாரியம் கேட்டிருக்க வேண்டும். மிகமிக சொதப்பலாக முடிவெடுத்து அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினார்கள். கம்பீருக்கு ஒன்று ரோஹித்தின் தலைமையுடன் உடன்பாடில்லை அல்லது கம்பீரின் பயிற்சித் தத்துவத்துடன் ரோஹித்தால் உடன்பட முடியவில்லை. இதுதான் ரோஹித்தின் பெரும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என நினைக்கிறேன். ஏனெனில் ரோஹித் தலைமையில் இல்லாதபோது கம்பீரால் அணியை சிறப்பாக வழிநடத்தவும் வெற்றிகளைக் கொய்யவும் முடிகிறது.
இந்த டெஸ்ட் போட்டியை இழந்தபிறகேனும் ரோஹித் தன் தலைமையை விட்டுக்கொடுத்து, அவரும் கோலியும் ஓய்வை அறிவித்தால் இந்த அணியில் மீண்டும் இளைஞர்களைக் கொண்டு சிறப்பாக ஆடமுடியும் என நினைக்கிறேன்.
இதற்குப் பதிலாக மே.இ தீவுகள், வங்கதேசம் போன்ற அணிகளுடன் ஒரு தொடரை அறிவித்து தட்டையான ஆடுதளங்களைக் கொடுத்து ரோஹித், கோலிக்கு இறுதித்தொடர்களைக் கொடுத்திருக்கலாம். அதற்கு ஆஸ்திரேலியத் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் தியாகம் பண்ணியிருக்க வேண்டியதில்லை.
Comments