முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நிழல் பொம்மை" நாவலின் துவக்கம்

 


அன்புள்ள பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு உறுப்பினர்களே,


என் மீதான விசாரணை கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. நான் முதலில் இதைக் குறித்து மிகுந்த பயம் கொண்டிருந்தேன். ஆனால் தொடங்கிய பின்பே நான் இதை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன் எனப் புரிந்தது. விசாரணை அரங்குக்குள் வரும்போது என் உடல் மெல்ல நடுங்கியது. தன்னிச்சையாகத்தான். என் கைகால்களில் ஏற்பட்ட நடுக்கம் என் குரலையும் பற்றிக்கொண்டது. அச்சத்தினால் வரும் நடுக்கமல்ல. பரவசத்தினால் வரும் நடுக்கம். நான் விசாரணைக் குழுவினரிடம் அல்ல கடவுளிடம் அழைத்துச் செல்லப்படுகிறேன் என்றே உணர்ந்தேன். இதுவரை நான் கோயில்களிலும், மதநூல்களிலும், தத்துவங்களிலும்கூட கடவுளைக் கண்டதில்லை. என் வாழ்க்கையின் தேடல் கடவுளைத் தேடுவதிலேயே இயல்பாக ஆரம்பித்தது. உங்கள் முன்வந்து நின்றபோது நான் கைகளைக் கூப்பி பேச்சற்று நின்றேன். நீங்கள் என்னை நகர சொன்னீர்கள். அப்போதுதான் ஏன் விழுந்து கும்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. நான் தரையில் குப்புற விழுந்திட முனைந்தபோது சிலர் வந்து என்னை அழைத்து ஓரமாக நிற்க வைத்தார்கள். மெல்லமெல்ல நீங்கள் என்னிடம் சில சிக்கலான ஆனால் தெளிவான நடைமுறை விதிகள், நம்பிக்கைகள், தர்க்கத்தின்படி இயங்கும் அமைப்பின் பிரதிநிதிகளே நீங்கள் எனப் புரிய வைக்க முயன்றனர். உங்கள் உடல் அசைவுகள், நீங்கள் என்னைப் பார்த்தவிதம், உங்கள் சொற்தேர்வு, குரலின் மென்மை என்னை மீண்டும் மானுட உலகுக்கு அழைத்து வந்தன. ஆனால் உங்கள் மகத்தான அதிகாரத்தின் அமானுஷ்யதன்மை நான் அங்கிருந்த நேரம் முழுக்க உணரத்தான் செய்தேன். எந்நேரமும் நீங்கள் மெய்யறிவை போதிக்கக்கூடும், தரிசனம் சாத்தியப்படும் என நம்பினேன். அங்குள்ள அதிர்வு என்னை உள்ளுக்குள் உருகவும், உணர்ச்சிவயப்பட்டு நிர்மூலமாக உணரவும் வைத்தது. இதையெல்லாம் என்னிடம் முன்பு யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். இப்போது இதைப் படிக்கும் உங்களுக்கும்கூட நான் மிகைப்படுத்தவதாகத் தோன்றினால் அது என் தவறு அல்ல. நமது சமூக அமைப்பில் அதிகார அமைப்புகளுக்கு இணையாக தெய்வ தரிசனத்தைக் காட்ட வேறு எவையும் இல்லை. நான் அத்தனைக் காலமும் இதை நோக்கித்தான் பாய்ந்துகொண்டிருந்தேன் என்பதை அந்தச் சிறிய அரை இருட்டான தூசு மண்டிய அரங்குக்குள் வந்தபோதுதான் உணர்ந்தேன். இருட்டிலே வாழும் ஒரு மனிதன் நாடும் உச்சபட்சமான வெளிச்சம் ஒரு கையெழுத்து இடப்பட்ட சிறு அச்சிட்ட காகிதமே.

என்னை எனக்கே ஆச்சரியப்படுத்த உதவியதற்கு நன்றி. இந்த விசாரணையே எனக்குள் முடுக்கி சுற்றி இறுகிப் போயிருந்த சிடுக்கொன்றை விடுவிக்க உதவியது. அதற்கும் சேர்த்து நன்றி.

("நிழல் பொம்மை" நாவலின் முதல் அத்தியா துவக்கம்)

சென்னை புத்தகக் கண்காட்சி 2025 வெளியீடு -44
ஸ்டால் எண் 540,541

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...