முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேலம் இட்லி

கடந்த ஞாயிறன்று சேலத்துக்குச் சென்றிருந்தேன். சேலத்தில் என்னை அசரடித்தது இட்லி. நான் இதுவரைச் சாப்பிட்டதிலேயே சிறந்த இட்லி அங்கு ஶ்ரீகிருஷ்ணா எனும் ஓட்டலில் சுவைத்ததே. முருகன் இட்லி கடையில் கிடைக்கும் இட்லி மென்மையாக இருக்கும், ஆனால் இந்த இட்லியோ மென்மையுடன் தனித்த சுவையும் கொண்டது. ஒப்பற்றது (சாரு தன் "எக்ஸைலில்" இட்லியை நிதம்பத்துடன் ஒப்பிடுவாரே அதற்கு ரொம்ப பொருத்தமான இட்லி இது). சரி அந்த ஓட்டலின் சிறப்பு போல என நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் ஒரு தெருவோர சிறிய கடையில் இட்லி வாங்கினேன். அது இந்தளவுக்கு மென்மையாக இல்லையென்றாலும் அபாரமான சுவையைக் கொண்டிருந்தது. இந்த ஊரின் மண்ணில் விளைகிற அரிசியில்தான் ஏதோ மாயம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அன்று மதியம் சாப்பிட்ட பிரியாணியின் சீரகச் சம்பாவும் தித்தித்தது. அப்போதுதான் அந்த ஊர் அரிசியில் உள்ள சிறிய இனிப்பு, வித்தியாசமான அடிநாக்கில் பரவும் இனிப்பே இட்லியை அவ்வளவு ரம்மியமான அனுபவமாக மாற்றுகிறது என்று புரிந்தது. அன்று மாலை அதே சேலத்தில் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இடைவேளையின்போது அரிசி விளம்பரம் போட்டார்கள். வேறெதாவது ஊரில் பார்த்தால் சிரித்திருப்பேன், ஆனால் உணவின் ராஜாவே அந்த அரிசிதான் எனும்போது திரையில் விளம்பரம் என்ன கோயில் கட்டி கும்பிடலாம்.

சேலத்துக்காரர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்தாம். அவர்களால் வேறு ஊர்களுக்குப் போய் அந்த ஊர் அரிசி வகைகளை, இட்லியை ரசிக்கவோ சகிக்கவோ சிரமமாக இருக்கும். நான் அரிசிச் சோற்றுக்கு இப்படி அடிமையாவேன் என்று நினைத்ததில்லை. ஆனால் பாருங்கள் நான் பேலியோ டயட்டில் இருக்கிறேன். பயணித்ததாலே அன்று டயட்டைக் கழற்றி மூலையில் போட்டேன். ஊர் திரும்பினால் பழையபடி பேலியோதான். அதனால் அங்கிருந்து அரிசி வாங்கவில்லை. ஒருநாள் மீண்டும் அங்கு போய் சாப்பிட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...