முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாமரைக் கன்னங்கள்




பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு வருவது புதிதல்ல. முன்பு திட்டமிடப்பட்ட அழகான நகரம் என அறியப்பட்ட, பூங்கா நகரம் எனக் கொண்டாடப்பட்ட பெங்களூர் மென்பொருள் சொர்க்கமாக வளர்ந்து விரிந்தபோது சரியான திட்டமிடலோ கட்டமைப்பு வளர்ச்சியோ இல்லாமல் கொடூரமாக உருமாறிவிட்டது. துணை முதல்வர் டி.கெ சிவகுமார் பெங்களூர் "திட்டமிட்டு உருவான நகரம் அல்ல" எனச் சொல்லும் நிலை வந்துவிட்டது. இப்போதும் பெங்களூரின் சீதோஷ்ண நிலை, நவீனக் கலாச்சாரம் ரசனைக்குரியதே. ஆனால் உலகின் ஆக மட்டமான சாலைகளை பெங்களூரிலே பார்க்க முடியும் - புதிதாக சாலையை அமைத்துவிட்டுப் போவார்கள், ரெண்டு நாள் அரைமணி நேரம் தூறல் போட்டால் அந்த சாலை பிஸ்கட்டில் உள்ள கிரீமை குழந்தை நக்கியெடுத்ததைப் போல மறைந்துவிடும். இங்கு சாலையா இருந்தது என மக்கள் மூக்கில் விரலை வைக்க முடியாது, பின்னால் பெரிய டிராபிக் ஜாம் ஆகிவிடும். இந்த சாலைகளில் வாகனம் ஓட்டியும், ஆட்டோவில் பிரயாணம் செய்தும் தனக்கு கடும் முதுகுவலி ஏற்பட்டதாகவும், எவ்வளவு சிகிச்சைகள் எடுத்தும் செலவு அதிகமானதே ஒழிய வலி தீரவில்லை என்று, அதனால் பி.பி.எம்.பி தனக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் எனக் கோரி ஒரு பெங்களூர்க்காரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் இன்று நாளிதழில் செய்தி பார்த்தேன். பலராலும் உணர்வுரீதியாக ஒன்ற முடிகிற பிரச்சினை இது.

இங்குள்ள சாலைகள் உடனுக்குடன் பெயர்ந்து பள்ளமாகிவிடுவதற்கு காரணம் அதிகப்படியான வாகனங்கள் எனும் அரசாங்க வாதத்தை நான் ஏற்கவில்லை. அதிகப்படியான வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு தரமான சாலைகளை இங்குள்ள காண்டிராக்டர்கள் அமைப்பதில்லை. மிகமிக மலினமான பொருட்களாலே சாலையமைக்கிறார்கள். ஒரு மேடுபள்ளமான சாலையில் பேட்ச் போடவரும் ஒப்பந்த ஆட்கள் அரைமணியில் ஜல்லியும் கீலும் போட்டு உருளை வாகனத்தை ஓட்டி ஏதோ மாஸ்டர் பரோட்டோ போடுவதைப் போல முடித்துவிடுவார்கள். ரெண்டே நாட்களில் தோனியின் கன்னத்தில் உள்ள மேடுபள்ளங்கள் அந்த சாலைப் பகுதியில் தோன்றும். அவை சில வாரங்களில் அலியா பட்டின் கன்னக்குழிகள் ஆகும். சிலநேரங்களில் டூவீலர் சக்கரங்கள் உள்ளே போனால் வண்டி சரிந்துவிடும். இந்த குழிகளில் விழாமல் வாகனம் ஓட்ட ஒடிஸி நடனமே ஆடவேண்டும்.
2015இல் மழையினால் கொத்துப்பரோட்டாவாகும் இச்சாலைகளைக் கலாய்ப்பதற்காக நஞ்சுண்டசாமி என்பவர் சாலை நடுவே உள்ள பள்ளத்தில் வண்ணமடித்து அதில் ஒரு பெரிய முதலை பொம்மையை மிதக்கவிட்டார். ஆனாலும் அதிகாரிகள் அதைப் பார்த்து சிரித்தபடி ஊர் சூலெ மகா என்று போய்விட்டார்கள்.
பி.பி.எம்.பி ஒருபக்கம் வரி போதாமையால் கடன் சுமையால் தவிக்கிறது. ஜப்பானிடம் எட்டாயிரம் கோடிகள் அண்மையில் கடன் வாங்கியிருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். இன்னொரு பக்கம் இந்த ஆயிரக்கணக்கான கோடிகளை பல வருடங்களாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலங்களில், மட்டமாக அமைக்கப்படும் சாலைகளில் செலவிட்டு வீணடிக்கிறார்கள், தொலைநோக்குத் திட்டமின்றி செயல்படுகிறார்கள் என விமர்சிக்கிறது பெங்காவால்க் ஆவணப்படம் (The never ending construction of Bengaluru). பிரச்சினை கர்நாடக அரசாங்கங்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல தற்காலிக லாபங்களை மட்டுமே சிந்திக்கின்றன என்பதே - எந்த திட்டத்தையும் அமைச்சர், உள்ளூர் தலைவர், அதிகாரி, ஒப்பந்தக்காரர்கள் சேர்ந்து தமக்குள் பங்குபோடுவதையே முதலில் செய்கிறார்கள். சில திட்டங்களில் அதிகாரிகளின் பினாமிகளே நேரடியாக முதலீடு செய்து சம்பாதிக்கிறார்கள். இவர்கள் தின்று மீதம் வைக்கும் பணமே சாலையாகவோ பாலமாகவோ தோன்றுகிறது. நீங்கள் சிக்கன் குழம்புக்கு பொருள் வாங்க முன்னூறு ரூபாய் எடுத்துப் போய் அதில் சரக்கு வாங்கி ஊற்றிக்கொண்டு கடைசியில் முப்பது ரூபாய்க்கு வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு மட்டும் வாங்கி வந்து குழம்பு வைத்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இங்குள்ள கட்டமைப்புகளும் இருக்கும். ஊழலும் பயனர்களான மக்களின் நேரடியான கட்டுப்பாடும் இன்றி அரசு, அதிகாரி, ஒப்பந்தர்க்காரர் மாபியாவிடம் நகரம் போனால் இப்படித்தான் இருக்கும். இதன் விளைவை மக்கள் நேரடியாகக் காண்பது மழை வெள்ளத்தின்போதுதான்.
தமிழ்நாட்டின் கிராமங்களிலும், சென்னைப் புறநகரங்களிலும் உள்ள சாலைகள் பெங்களூர் சாலைகளைவிட பலமடங்கு தரத்திலானவை. நம்மூரிலும் ஊழல் உண்டு என்றாலும் கொஞ்சமாவது தரமாக அமைக்க வேண்டும் எனும் அழுத்தம் அங்கு இருக்கிறது. இப்படியே பத்தாண்டுகள் போனால் பெங்களூருக்கு வரவேண்டிய வளர்ச்சி சென்னைக்கும் ஹைதராபாதுக்கும் போய்விடும். பெங்களூரை இந்த மாபியா உள்ளிருந்து தின்று அழிக்கிறது.
மழை இன்னும் சில நாட்கள் பெய்து முடித்தபின் இந்த சாலைகளில் வண்டியோட்ட வேண்டுமே என நினைத்தால் திகிலாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...