Skip to main content

ஆவண அரசியல் 1

உலகின் வேறெந்த வரலாற்றுக் கட்டத்திலும் இந்தளவுக்கு அதிகாரத்துவ நடைமுறைகள், அவை சார்ந்த ஆவணமாக்கல் நிகழ்ந்திருக்காது என நினைக்கிறேன் - அதிகாரத்துவ அமைப்புகள் தொடர்ந்து தாம் அளிக்கிற அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களையே சந்தேகம் கொண்டு மறுக்கிற அவலமும் நடக்கிறது, இது ஒரு பின்நவீனத்துவ தன்மை கொண்டது.
நான் அன்று ஒரு பட்டியலைப் பார்த்தேன். அதில் எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பிக்கவும் புதுப்பிக்கவும் அரசு எவ்வகை ஆதாரங்களை ஏற்கும் எனப் போட்டிருந்தார்கள். அடையாள அட்டைக்கு ஏற்கப்படும் ஒன்று முகவரி ஆதாரத்துக்கு ஏற்கப்படாது, அதில் உள்ள ஒன்று இதில் இருக்காது. முக்கியமாக ஆதார் அட்டையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் பரவலாக ஏற்பதில்லை. இதைவிடக் கொடுமை வங்கி மேலாளர் கொடுக்கிற ஆவணத்தைக் கூட ஏற்கிறார்கள், ஆனால் அரசு தரும் அட்டையை மறுக்கிறார்கள். சில இடங்களில் எம்.பி., எம்.எல்லே, வார்ட் கவுன்சிலரின் கடிதத்தை ஏற்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலரோ இப்போதெல்லாம் அதிகாரிகள் தம் கடிதத்தையும் மறுப்பதாகக் கூறுகிறார்கள். இந்நிலைக்கு ஒரு காரணம் இந்த அட்டைகளை, ஆவணங்களை வழங்கும்போது அரசியல் தேவைக்காக செய்யப்படும் ஊழல், பின்பற்றப்படும் முறையட்ட நடைமுறைகள். அதாவது ஆளுங்கட்சி ஒரு நோக்கத்துக்காக இதைக் கொண்டு வந்து பின்னர் அரசியலுக்காக, வாக்குகளுக்கு இதை முறையற்று வழங்கி இதன் செல்லுபடியாகும் தன்மையையே ஒழிக்கிறார்கள். மக்கள் தாம் இருக்கிறோமா இல்லையா எனும் பதற்றத்தில் இருப்பதை ஒருவிதத்தில் அதிகாரம் விரும்புகிறது. அப்போதே அவர்களைத் தம் விருப்பப்படி வளைக்க முடியும். பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அழிக்கவும் சேர்க்கவும் முடியும். யாரும் அரசை எதிர்க்க முடியாது. ஒரு மாநிலத்தின் அசலான குடிமக்களின் ஆவணங்கள் போலி ஆவணங்களால் மதிப்பிழக்கும்போது அந்த மக்கள் உண்மையில் தமக்கு அதிகாரம் உண்டா, இடமுண்டா எனக் குழம்புகிறார்கள். இருக்கும்போதே வெளியேற்றப்படுகிறார்கள். அதாவது வாழும் காலத்திலேயே அவர்கள் 'மிதக்கும் சமூகமாகிறார்கள்'.
இது ஏன் நடக்கிறது என்பதற்கு என் பார்வை இதுதான்: நாம் பரஸ்பரம் நம்பிக்கை இழக்கிறோம், ஒரு சமூகமாக உதிரிகளாக உடைகிறோம். அப்போது ஒவ்வொருவரும் மோசடிக்காரரே எனும் எண்ணம் வலுக்கிறது. இதுவே அரசின் தளத்தில், அதிகாரத்துவ மட்டத்தில், ஆவணங்களை வழங்கியும் மறுத்தும் நம்மைக் கட்டுப்படுத்துகிற அரசியலாகிறது. முன்பு சேவை வழங்குகிற, வரி வசூலிக்கிற அமைப்பாக இருந்த அரசு இன்று அதிகாரத்துவ நடைமுறை அரசாகிறது, ஆவணங்களை வழங்குகிற அரசாகிறது. ஆவணங்களை நிராகரிக்கிற அரசாகிறது. ஒப்பந்தங்களைச் சாத்தியமாக்குகிற, உருவாக்குகிற, மத்தியஸ்தம் பண்ணுகிற அரசாகிறது. அரசு மெல்லமெல்ல தம் குடிமக்கள் மீதே நம்பிக்கை இழக்கும்போது யார் வாக்களிக்கலாம், கூடாது என்பதில் குழப்பத்தைக் கொண்டு வருகிறது. அது யாருக்கெல்லாம் நலத்திட்டங்கள் போய்ச் சேர வேண்டும், யாருக்கு கூடாது எனத் தீர்மானிக்கிறது. தாம் எல்லாருக்குமான அரசு அல்ல என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீ இத்தேசத்தின் குடிமகனா என்று உரத்து பலவிதங்களில் கேட்டபடியே இருக்கிறது. இன்று அயல்நாடுகளிலும் குடியேறிகளுக்குள்ள சிக்கல் இதுதான்.
இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது. பரஸ்பரம் வெறுக்காமலும் சந்தேகிக்காமலும் சேர்ந்திருப்பது, துணையிருப்பது, அடையாளங்களுக்கு அப்பால் இணைவது, காலத்தையும் வெளியையும் அரசியலுக்கு அப்பால் நம்பி உறவாடுவது. மக்கள் இப்படித்தான் ஆவணங்களின் ஐயப்பாடுகளுக்கு வெளியே உயிர்த்திருக்கிறார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...