Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆச்சரியப்படுத்தும் அஸோஸியேட் அணிகள்

 தற்போது நடந்துவரும் (ஆண்கள்) டி20 உலகக்கோப்பையில் அஸோஸியேட் அணிகள் பெரிய ஓட்டலுக்கு வெளியே பெரிய கூட்டத்துடன் ஆரவாரமாக நடக்கும் நடைபாதைக் கடைகளைப் போல கலக்குகின்றன. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நன்றாகவே ஆடியது, இன்றைய போட்டியில் நமீபியாவும் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த அணிகள் முன்பு இருந்ததைப் போல மாத இறுதியில் தொப்பையைத் தள்ளிக்கொண்டு ஜாலியாக ஆடும் சல்லிசான அணிகள் அல்ல. நல்ல ஊதியத்துடன் அந்தந்த நாட்டு அரசுகள் தரும் தரமான நிதி ஒதுக்கீடு, தரமான உள்கட்டமைப்புடன் தயாராகின்றன. அத்தோடு இப்போது நேபாளத்தில் கூட தனியார் கிரிக்கெட் லீக் நடக்கிறது. கன்னாபின்னாவென லீக் தொடர்கள் பெருகிவிட்டன. அங்கு நல்ல பயிற்சியும் அனுபவமும் இந்த அஸோஸியட் அணி வீரர்களுக்குக் கிடைக்கிறது. கடைசியாக, டி20 வடிவமே பெரிய தடபுடல் அணிகளையும் அனுபவமற்ற புதிய அணிகளையும் கிட்டத்தட்ட சமப்படுத்தி விடுகிறது. கொஞ்சம் அனுபவமும் நாசூக்கும் இருந்தால் அவர்களால் இந்த உலக்கோப்பையிலே கூட சில போட்டிகளை வென்றிருக்க முடியும்.

ஐ.ஸி.ஸியும் இந்த அணிகளுக்குப் போதுமான வாய்ப்புகள் அளித்து கிரிக்கெட்டை உலக விளையாட்டாக்க தீவிரமாகவே முயல்கிறது. ஏனென்றால், பின்காலனிய, காலனிய தேசங்கள் இடையே மட்டுமே ஓரளவுக்கு மேல் ஆட்டத்தை நடத்தி பணத்தைக் கறக்க முடியாது. உலகளவில் பரவலாக ஆடப்பட்டாலே பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும், போட்டிகளின் தீவிரமும் அதிகமாகும். என்னை வெகுவாகக் கவர்ந்த வேறு விசயங்கள்பந்து வீச்சாளர்களின் புத்திசாலித்தனம், அவர்கள் தரவுகளைப் பயன்படுத்தி களத்தடுப்பு வியூகம் அமைப்பது, மெதுப்பந்துகள், யார்க்கர்களை வீசுவது, 135-140 கிலோமீட்டர் வேகவீச்சாளர் ஒருவரையாவது வைத்திருப்பது, நல்ல சுழலர்களைக் கொண்டிருப்பது மற்றும் அவர்களுடைய மட்டையாளர்கள் வேகப்பந்தை மைசூர்வாசிகள் சாம்பாரில் ஊறிய போண்டாவை ஸ்பூனால் வெட்டுவதைப் போல நாசூக்காக எதிர்கொள்வது.
இன்றைய போட்டியில் நபீபியாவின் பந்துவீச்சைப் பார்க்கையில் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனத் தோன்றியது. அண்மையில் ஒரு டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை முறியடித்ததாகப் படித்தேன். அவர்களுடைய அரசு மத்திய ஒப்பந்தம் இட்டு வீரர்களுக்கு முழுநேர சம்பளம் கொடுக்கிறது. நபீபியா உயர்மத்திய வருமான தேசம். பக்கத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவில் அவர்களுடைய வீரர்கள் சென்று ஆடிப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களைப் போன்ற வசதியும் விருப்பமும் உள்ள கிரிக்கெட் பின்னணி இல்லாத வேறு நாடுகளையும் இனி உள்ளே கொண்டு வருவார்கள். ஒன்றிரண்டு நாடுகள் மட்டுமே கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தும் காலம் அடுத்த பத்தாண்டுகளில் முடிவுக்கு வரும் என்பது என் கணிப்பு. எப்படியும் 90% மேல் டி20 மட்டுமே ஆடுவார்கள். அதனால் மிகத்திறமையான வீச்சாளர்களும் மட்டையாளர்களும் தேவைப்பட மாட்டார்கள். சிக்ஸர் அடிக்கத் தெரிந்தவர்களும் புத்திசாலித்தனமான வீச்சாளர்களும் போதும். அனுபவமும் திறனும் குறைந்த அணிகளால் கூட இத்தகைய வீரர்களை உருவாக்க முடியும். கிரிக்கெட்டின் எதிர்காலம் நமது பர்மா பஜார், தில்லியின் சோர் பஜார் போல இருக்கும்.

Comments