முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"எழுத்தாளராக இருப்பது எப்படி?" - மா. அண்ணாமலை விமர்சனம்


 

நூல் : எழுத்தாளராக இருப்பது

எப்படி?
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 332
வகை : துறைசார் நூல்
எழுத்தாளர் என்ற ஒற்றை வார்த்தையை சிறு செடியாய்க் கொண்டு 332 பக்கத்தில் கிளைகள், சிறுகிளைகள், குறுங்கிளைகள் என அடர்த்தியான ஒரு பெருமரமாய் வளர்த்திக் காட்டியுள்ளார் அபிலாஷ். அபிலாஷிடம் எனக்குள்ள சிக்கலே இருமுறை படிக்க வைப்பது. இந்நூலையும் அவ்வாறே செய்வித்தார். அந்தளவிற்கு தரமானதுதான். எழுத்துத்துறை பற்றி இதற்கு முன்னர் சி. சரவண கார்த்திகேயனின் 'ரைட்டர் ' நூலும், பாராவின் 'எழுதுதல் பற்றிய குறிப்புகளும்' அறிமுகமாகி இருந்தன. இரண்டுமே தன் அனுபவ குறிப்புகள். இந்நூலும் அனுபவங்களை அடிக்கடி பேசினாலும் ஒரு எழுத்தாளனின் சிக்கல்களை ஆழ்ந்து பேசி இருப்பதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. கூடவே தத்துவார்த்தமான பார்வையும் இணைந்து தமிழ் இலக்கிய, வெகுஜன, வணிக எழுத்தாளர்களின் இருப்பைப் பேசுகிறது.
ஒரு எழுத்தாளனை எழுதுவதற்கு ஆயத்தப்படுத்தி; அவன் எழுத்துக்களை வளர்த்தி; அதன் மூலமாக எழுத்தாளனின் நம்பிக்கையை கூட்டி பின் அதற்காக அகங்காரம் கொள்ள வேண்டாம் என முடித்திருக்கிறார். நூலின் இறுதியில் எனக்கு சந்தேகம் எழுகிறது. அதாவது நூலின் இறுதி வரிகள் இவ்வாறு முடிகின்றன‌. ' எழுத்துக்கும் எழுதுபவனுக்கும் மதிப்பு உள்ளதாய் எண்ணுவது வெறும் பார்வை மயக்கம்தான்'. எனில் எதற்கு இந்த 330 பக்க புத்தகம் ? பிறகு ஏன் ஒரு அறிவார்ந்த சமூகம் மேலெழும்பி வர இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட வேண்டும்? ஒருவேளை எழுத்தாளன் தானொரு படைப்பு பிரம்மா என்ற எண்ணத்தோடு அலையக்கூடாது என்பதற்கான முட்டுக்கட்டை என நாம் இதை எடுத்துக் கொள்ளலாமா? தெரியவில்லை.
எழுத்தாளனின் அத்தனை உருமாற்றங்கள், மனமாற்றங்கள், தொல்லைகள், வாய்ப்புகள் பற்றி நேரடியாகவும் வாழ்வியல் நிகழ்வுகள் மூலமும் சொல்லியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களுக்கு ஏதும் இருக்கிறதா? நிறைய இருக்கின்றது. ஆனால் அத்தனையையும் உணர அவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். நூலில் என்னை முதலில் வியக்க வைத்தது நூல் முழுக்க வியாபத்திருக்கும் ஜெயமோகன். ஒருவேளை இது ஜெயமோகன் என்னும் எழுத்தாளரின் புகழ் பாடும் நூலோ என்ற எண்ணமும் எழுகிறது. ஆனால் நூலை முழுதும் வாசிக்கும் போது அது ஆர் அபிலாஷ் எனும் எழுத்தாளரிடம் ஜெயமோகன் என்னும் முன்னோடி எழுத்தாளர் செலுத்தியிருக்கும் தாக்கமே என அறிய முடிகிறது. இதில் வியக்க என்ன இருக்கிறது என்றால் சமீபமாக அபிலாஷை விட ஜெயமோகனை எதிர் முனையில் வைத்து விமர்சித்தது யாரும் இல்லை. ரமேஷ் பிரேதன் அஞ்சலி குறிப்பு, ஜெயமோகனின் சமீபத்திய ஒரு கோடி ரூபாய் இலக்கிய பரிசு அறிவிப்பு, வைரமுத்துவிற்கான ஞானபீட பரிசு அறிவிப்பிற்கான ஜெயமோகனின் எதிர்வினை என எல்லாவற்றிலும் அவரை எதிர் நிறுத்தி கருத்து வெளியிட்டிருக்கிறார். அதனாலேயே இது வியப்பாக இருந்தது. என்னதான் ஜெயமோகனை எதிர்த்தாலும் எழுத்தாளன் எனும் மோன வாழ்வில் ஜெயமோகனின் செயல்கள் போற்றப்பட வேண்டும் என எண்ணியிருக்கிறார் போலும்.
இரண்டாவதாக என்னைக் கவர்ந்த மற்றொன்று எழுத்தாளன் என்பதால் எதையும் தலையில் சுமையாக சுமந்து கொள்ள வேண்டாம் என்பது. அதனை 'எழுத்துக்காக வாழ்வு அல்ல; செறிவாய் வாழ்வதற்கே எழுத்து' என்கிறார். இது ஒரு விதத்தில் சுதந்திர உணர்வை அளிக்கும் என்கிறார். எழுத்தாளர் என்பதால் அவனை சுற்றிய ஒரு ஒளிவட்டம் வேண்டாம் என்கிறார். இவரே தான் அறிவுஜீவிகள் இருப்பு நமக்கு வேண்டும் என்கிறார். ஏனெனில் ஒரு பிரச்சனையின் கோணத்தை அதன் அடி ஆழத்திலிருந்து பார்ப்பவர்கள் அவர்கள். மதப் பிரச்சினைகளுக்கு மதம் மட்டுமோ மத அமைப்புகளோ மட்டுமே காரணமல்ல. அவர்களை இயக்கும் கார்ப்பரேட் முதலாளித்துவமும் இணைந்திருப்பதை சிந்திக்க வேண்டும் என்கிறார். இது எல்லா பிரச்சனைகளையும் வேறு கோணத்தில் சிந்திப்பதால் நடக்கும் என்கிறார். அதேபோன்று ஏன் தமிழ் எழுத்தாளர் மதிக்கப்படுவதில்லை? என்ற கட்டுரையில்
தமிழவனின் அமைப்பியல் கொள்கையும்; ஜெயமோகனின் பஞ்சம், வறுமை போன்ற கொள்கைகளும் வருக்கின்றன. எனக்கென்னவோ இந்திய முழுக்கவே குறிப்பிட்ட காலம் வரை கல்வி ஒரு குறிப்பிட்ட சாராரிடமே இருந்ததே காரணம் என்பேன்‌. எழுத்தாளர் அ. வெண்ணிலா பெண் எழுத்தாளர்களை தொகுத்து வெளியிட்டிருக்கும் 'மீதமிருக்கும் சொற்கள் ' என்ற நூலில் கிட்டத்தட்ட 1930 களிலிருந்து தற்போது வரை உள்ள பெண் எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி இருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அதாவது 1980கள் வரை கல்வி வாய்ப்பை பெற்றவர்களில் மேல் தட்டு வர்க்க பெண்களே இருக்கின்றனர். பின்னரே ஏனைய சமூகப் பெண்கள் எழுத்தாளர்களாக வருகின்றனர். அதுவும் குறைவான எண்ணிக்கையிலேயே. நிலைமை இப்படி இருக்க இனி வருங்காலங்களில்தான் அந்நிலைகள் மாறும்.
எழுத்து பொதுமைப்படுத்தப்பட்டதால் அது மதிப்பிழந்து இருக்கிறது என்கிறார். எனக்கு அதில் உடன்பாடில்லை‌‌. நல்ல வாசகன் நல்ல எழுத்தாளனை அடையாளம் கண்டு கொள்கிறான். அது எழுத்தின் மூலமாகத்தான் நடக்கிறது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்‌. நானும் கூட அபிலாஷ் எனக்கு அறிமுகமான புதிதில் என்னடா இவ்வளவு நீளமாக இருக்கிறது என்று அவரின் கட்டுரைகளை கடந்து போயிருக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அவரின் எழுத்தில் உள்ள நேர்மையை கண்டறிந்தேன். இப்பொழுது அவர் எழுதும் பெரும்பாலான கட்டுரைகளை வாசித்து விடுகிறேன். அப்படியேதான் போகன் சங்கரை முகநூலிலும் புத்தகங்களின் வாயிலாகவும் பின்தொடர்கிறேன். பெரும்பாலான எழுத்தாளர்களை சமூக ஊடகங்கள்தான் எனக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. இது பொதுமைப்படுத்தாமல் நிகழ்ந்திருக்குமா எனத் தெரியவில்லை.
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கேமரா செல்போன்களின் மூலம் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுதல் பற்றி வினா எழுப்பும்போது, 'எல்லோரும் எடுக்கட்டுமே; நல்லதை அவர்களே முடிவு செய்யட்டும்.அது ஒரு திறப்பு ' என்கிறார். நான் இதை ஜனநாயகப்படுத்துதல் என்பேன்.
'நதியும் நீரும் நீரின் பல வடிவங்கள்: கே என் செந்திலின் வாசகசாலை பேட்டியும் கருத்துகளும்' என்ற கட்டுரையில் கே என் செந்தில் சமகால எழுத்தாளர்கள் சிலரை குற்றஞ்சாட்டியதற்கு 'காலாவதியாகிப்போன ஒரு குறுகின பார்வையின் எச்சமாய் செந்தில் தன்னை வைத்துக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது ' என்கிறார். எனில் 'பொதுவான எதுவும் அதிகாரம் அற்றதாகும் எனும் பொருளில் எழுத்து தன் அசலான சமூக அதிகாரத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இன்று எழுத்துக்குள்ள அதிகாரம் பெயரளவிலான ஒன்றுதான்' என்கிறார். இந்த முரணை எப்படி விளங்கிக் கொள்வது என்று தெரியவில்லை.
தற்போதுள்ள சமூக ஊடகச் சூழலில் திறமையான எழுத்தாளர்கள், அரைகுறையாய் எழுதும் என் போன்றோரின் கூட்டத்தில் சிக்குண்டு இருக்கிறார்கள். அதைத்தான் அபிலாஷ் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அத்திறமையான எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துகளின் மூலம் வாசகர்களை அடைந்து விடுகிறார்கள். வாசகனும் விரைவிலேயே தரமான எழுத்தை நோக்கி நகர்ந்து விடுகிறான்.
நூல் முழுக்க நிறைய சுவாரசியங்கள் விரவிக் கிடந்தாலும் என்னைக் கவர்ந்தது எழுத்தாளர்களுக்கு இடையில் நிகழும் சச்சரவுகள். அதற்கு, 'எழுத்தாளன் என்பவன் கூருணர்வு மிக்கவன். சின்ன சீண்டலுக்கும் கொதித்தெழுந்துவிடுவான். ஆனால் அது நீர்க்குமிழியாய் கண நேரத்தில் காணாமல் போகும்' என்கிறார். எனக்கு அபிலாஷிடம் பிடித்தது தோழமையான அவரது எழுத்து. சிக்கலான விஷயங்களைப் பேசினாலும் அதை மென்மையாய் நண்பனிடத்தில் சொல்லும் உரிமையோடு சொல்கிறார். ஆசிரியர் பணியில் இருப்பதால் இது அவருக்கு வாய்த்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
முடிவாக எழுத்தாளனும் மனிதனே. அவனையோ அவன் படைப்பையோ காலாதீதமாக அவன் பார்க்க வேண்டாம். எழுதுங்கள் உங்களின் மனம் சொல்லுவதை நேர்மையாய் படையுங்கள். முக்கியமாக எழுதும் போது மட்டும் எழுத்தாளனாக இருங்கள். மற்ற வேளைகளில் உங்களின் அன்றாடங்களை செம்மையாக செய்து உயிர் வாழுங்கள் என்கிறார்.
'ஏய்... என்னப்பா எழுத்தாளனைப் பற்றி இம்மதிப்புரையில் எதுவுமில்லை' என்கிறீர்களா? . எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்தே உங்களை வானளவு உயர்த்தும். இதுவும் அபிலாஷ் சொன்னதுதான். அது ஒன்றே எழுத்தாளனுக்கு எல்லாவற்றையும் கொண்டு வரும்.
நன்றி அபிலாஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...