முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவன் கெட்டவன் என்பதால் நான் நல்லவன்


 

நேற்று ஒரு இலக்கிய நண்பரிடம் உரையாடும்போது அவர் வைரமுத்து VS தீவிர இலக்கியம் என ஒரு டிராக்கில் சென்றார்; அயல்மொழியினர் இவர் படைப்புகளை மொழியாக்கத்தில் படித்த்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அங்கலாய்த்தார். நான் அவரிடம் அக்கவலை மிகையானது என்றேன்.

புத்தக வாசிப்பு சிறந்த படைப்புகளை யாரோ முன்வைத்து அதைப் பலரும் படித்து நடப்பதல்ல. சந்தைப்படுத்துதலும் பரிந்துரைகளும் ஒரு புத்தகத்தைக் கொண்டு சேர்க்க உதவும். ஆனால் அதைத் தாண்டியும் வாசிப்பு நிகழும். அதுதான் அசல் வாசிப்பு. இதையெல்லாம் நெறிப்படுத்த முடியாது, அதைச் செய்யவும் கூடாது. ஏனென்றால் இலக்கியம் என்பது அரசியல் அல்ல. அது புறமேயிருந்து நிர்வகிக்க வேண்டியது அல்ல. அது சுதந்திரமாக இயங்க வேண்டும்.
வைரமுத்துவுக்கு என்று ஒரு இடம் இருக்கும். அவரை வாசிக்கிறவர்கள் இருப்பார்கள். இலக்கிய வாசகர்கள் என்ன நடந்தாலும் அவர் எழுத்தை ஏற்கப் போவதில்லை. எந்த மொழிக்குச் சென்றாலும் இதுவே நடக்கும். ஒருவேளை அவரது சில எழுத்துக்களில் உள்ள நாட்டார் கூறுகளுக்காக அவரைச் சிலர் படிக்கலாம். இந்த ஞானபீடம் வரும் முன்பே அவர் ஒரு முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம் மூலமாக தன் புனைவொன்றை மொழியாக்கத்தில் கொண்டு வந்தார். OUPக்கும் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்துக்குமான இணைவாக்கம் இப்பணி. பாடநூல் கழகம் ஒருவேளை மொழியாக்கத்துக்கோ பதிப்புக்கோவான நிதியை அளித்திருக்கலாம், ஒருங்கிணைப்பில் உதவியிருக்கலாம். சர்வதேசப் புத்தக விழாவின்போது நூல் வெளியீடு தடபுடலாக நடந்தது என நினைக்கிறேன். இதுவும் வைரமுத்துவுக்கு அல்ல, ஒரு இலக்கிய படைப்பாளிக்கே நடந்திருக்க வேண்டும் என சிலர் கூறலாம். இங்குதான் நாம் எதை விவாதிக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும் - வைரமுத்து vs இலக்கிய படைப்பாளிகள் எனும் எதிரிடையையா அல்லது இந்த செயலாக்கத்தில் உள்ள சிக்கலை, அரசியலை, லாபியிங்கைக் குறித்தா?
உண்மையான பிரச்சினை பின்னதுதான். நான் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழியாக்கத்துக்கான பரிந்துரைப் பட்டியலைக் கண்டிருக்கிறேன். அதில் பல விடுபடல்களும் தவறான தேர்வுகளும் உள்ளன. அது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இத்தகைய பணிகளில் வெளிப்படையான முறைமைகள் உண்டா, தேர்வுக்கான நியாயங்களைச் சொல்கிறார்களா எனும் கேள்விகளே அவசியமானவை. நம் ஆட்களை உள்ளே வைப்பது, அவர்களைக் கொண்டு நம்மை உள்ளே கொண்டு போவது எழுத்தாளர்களுக்கான பணி அல்ல. ஒரு ஜனநாயகச் சமூகத்தில் எல்லாம் வெளிப்படையாக, நேர்மையாக இருக்க வேண்டும். வெகுஜனப் படைப்பாளிகளைத் தாராளமாக மொழியாக்கட்டும், ஆனால் அதற்கான வரைமுறைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியே சொல்ல வேண்டும். முக்கியமாக இதில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தமிழில் படிக்கத் தெரிய வேண்டும்.
சரியான படைப்புகள் மொழியாக்கப்பட வேண்டும் என்பதைவிட அனைத்து முக்கியமான படைப்பாளிகளுக்கும், அதாவது வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு, எளிதில் அணுகி தம் படைப்புகளை மொழியாக்கச் செய்வதற்கான ஒரு நடைமுறை வேண்டும். தகுதியானவர்களுக்கு இடையே சமத்துவம் வேண்டும்.
இதையேதான் நான் சில தனியார் விருதுகள் விசயத்திலும் சொல்கிறேன். அரசு நிறுவனங்களுக்கு இணையாக அங்கும் பல குழப்பங்கள், லாபியிங், முறையற்ற போக்குகள் உள்ளன. அங்கும் நடைமுறை வெளிப்படையாக இல்லை. சொல்லப்போனால் சாகித்ய அகாடெமி இவர்களைவிட பல மடங்கு மேலானது என்று சொல்வேன். அங்கு ஏதோ ஒரு நடைமுறையாவது உள்ளது. அங்கு தேர்வுக் குழுவில் தமிழில் படிக்கிறவர்களாவது இருக்கிறார்கள். அந்த நடைமுறைக்குள் நீங்கள் அரசியல் செய்வது, லாபியிங் செய்யலாம். ஆனால் தனியார் விருதுகள் சொந்த சாதி, மதத்துக்குள் கல்யாணம் பண்ணி வைப்பதைப் போல அது செய்வதில்லை. பழைய படங்களில் சொல்வார்கள், 'இந்தப் பொண்ணு பொறந்தப்பவே முடிவு பண்ணிட்டோம், இவனுக்குத்தான் அவளைக் கட்டி வைக்கணமுன்னு' என்று. தனியார் விருதுகள் இப்படி முன்தீர்மானமாகின்றன. சாகித்ய அகாடெமியில் கொஞ்சமாவது ஜனநாயகத்தன்மை உள்ளது, தனியாரில் சுத்தமாக இல்லை. ஒன்று நாம் இதை விமர்சிக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும்.
ஒப்பிடுகையில் வைரமுத்து vs இலக்கியவாதிகள் என்பது ஒரு மிகச்சின்ன பிரச்சினை. அது பூதாகரமாக்கப்படுவது இன்னும் சுவாரஸ்யமானது. அதில் ஒரு முக்கியமான சங்கதி உள்ளது - பொதுவாக அரசியல்வாதிகள் தாம் இத்தகைய இருமையைக் கட்டமைப்பார்கள். பூதாகரப்படுத்துவார்கள். அவர்களுக்கு ஒரு உத்தேசம் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து சிலரை அப்புறப்படுத்தி தம்மவர்களை அமர வைக்க வேண்டும் என நினைப்பார்கள். "அதோ பார் அவனை அடி, அல்லாவிட்டால் அவன் நம்மை அடித்துவிடுவான்" என்பார்கள். நம் மதம், நம் சாதி ஒழிந்துவிடும், அவர்களை நம்மை நசுக்குவார்கள் என்று பயத்தைக் கிளப்புவார்கள். கடைசியில் இதைவைத்து அவர்களே லாபமீட்டுவார்கள். யாரும் யாரையும் நசுக்கவோ ஒழிக்கவோ போவதில்லை என்பதைத் தாமதமாகப் புரிந்துகொள்வோம்.
அடுத்து, நமக்கென்று ஒரு தேசிய, சர்வதேசிய சந்தையே இல்லை. அங்கு வைரமுத்து போய்த்தான் நம் மானத்தை வாங்கப் போகிறாரா? அங்கு மானமே இல்லையே இழப்பதற்கு?
நமது முன்னோடிகள், சமகாலப் படைப்பாளிகள்ப் பற்றி நாம் ஆங்கில நாளிதழ்களில் பரவலாக எழுத வேண்டும். புத்தகங்கள் எழுத வேண்டும். அதைக் கல்விப் புலத்துக்குள் கொண்டு போக வேண்டும். சமகாலம் என்று நான் சொன்னது இளைஞர்களையும் சேர்த்துதான். 1950-60களில் பிறந்தவர்களை மட்டுமல்ல. வரவர தமிழில் சமகாலம் என்றாலே எதோ முதியோர் இல்லம் போல ஒரு பிம்பம் வருகிறது. நல்ல படைப்புகளைத் தரும் சமகாலப் படைப்பாளிகளை அவர்களுடைய வயதைப் பாராமல் பாராட்டி நாம் ஆங்கிலத்தில் எழுதி அதை கல்விப் புலத்துக்குள் கொண்டு போக வேண்டும். நான் இதற்காக முன்பு முயன்றிருக்கிறேன். ஆனால் கல்வித்திட்டத்துக்குள் கொண்டு போகலாம் என்றால் படைப்புகளுக்குச் சரியான மொழியாக்கம் இருக்காது, கல்விப்புலக் கட்டுரைகள் கிடைக்காது. நாம் செய்ய வேண்டிய இத்தகையப் பணிகளிலும் கூட லாபியிங், அரசியல், குழு நடவடிக்கை என்றே இயங்குகிறோம். சின்னச்சின்னக் குழுக்களில் இருந்தபடி நாங்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என்று நாம் கோரினால் உருப்படவே மாட்டோம்.
இருமைக் கட்டமைப்பு அரசியல்வாதியின் பணி. அதைச் செய்யாமல் நாம் சமத்துவமாக நடந்துகொண்டு உருப்படியான காரியங்களைச் செய்ய வேண்டும். நாம் இப்போது என்ன செய்கிறோம் என்றால் அரசியல்வாதியின் முறைமைகளை, தந்திரங்களைப் பின்பற்றுகிறோம். அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு நாமும் நெருக்கமாகிறோம். பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இணக்கமாகச் சிந்திக்கிறோம், அவர்களுடனே பழக விரும்புகிறோம், அதை விளம்பரப்படுத்தவும் செய்கிறோம். அவர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்ததும் நாமும் மௌனமாகி அடுத்து எங்கு போய் கடைவிரிக்கலாம் என யோசிக்கிறோம். நாம் ஒரு 'கிட்டத்தட்ட அரசியல்வாதியாகிறோம்'. அதாவது வைரமுத்துவும் சினிமாக்காரர்களும் போன பாதையிலே நம் இலக்கியப் படைப்பாளிகளும் இன்று போக முயல்கிறார்கள். மாநில அளவிலும் தேசிய அளவிலும். சர்வதேச அளவில் செய்தால் ஒரு அனுகூலம் நீங்கள் வெளிநாடு வாழ் ஆதரவாளர்களிடம் நிதி திரட்டி இன்னும் பெரிய அதிகார வட்டத்தை அமைக்கலாம் என்பது. இம்மாதிரி இரட்டைக் குதிரை சவாரி செய்வோர் முழுநேர அரசியலைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இது ஒரு வீழ்ச்சிதான். இத்தகைய சிந்தனையே வீழ்ச்சிதான்.
மீண்டும் சொல்கிறேன். கூட்டம் நடத்துவது, பரப்புரை செய்வது பிரச்சினை அல்ல. அரசியல்வாதியின் தந்திரங்களைப் பயன்படுத்துவதும் அதிகாரத்தைக் குவிப்பதும் மட்டுமே சிக்கல். ஸ்டாலினிய சோவிய ரஷ்யாவின் இலக்கிய நிலையைப் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியும், நமது இன்றைய இலக்கியச் சூழல் அதைப் போன்றே மாறி வருகிறது என்று. வைரமுத்து ஒரு பிரச்சினை இல்லை. நாம் நம்மவர்கள்-மற்றமையர் என மனதுக்குள் யோசித்து கருத்துக்களை யோசித்துப் பழகிக் கொள்வது நல்லதல்ல. மெல்லமெல்ல நம் மனம் அதற்கு ஏற்ப உருமாறி விடும். இதையெல்லாம் செய்ய ராஜாவும் அண்ணாமலையும் சீமானும் இன்னும் பல யுடியூபர்களும் இருக்கிறார்கள். நாம் அவர்களைப் பிரதியெடுத்து குட்டி ராஜாக்களாக, அண்ணாமலைகளாக, சீமான்களாக மாறக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...