Skip to main content

அவன் கெட்டவன் என்பதால் நான் நல்லவன்


 

நேற்று ஒரு இலக்கிய நண்பரிடம் உரையாடும்போது அவர் வைரமுத்து VS தீவிர இலக்கியம் என ஒரு டிராக்கில் சென்றார்; அயல்மொழியினர் இவர் படைப்புகளை மொழியாக்கத்தில் படித்த்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அங்கலாய்த்தார். நான் அவரிடம் அக்கவலை மிகையானது என்றேன்.

புத்தக வாசிப்பு சிறந்த படைப்புகளை யாரோ முன்வைத்து அதைப் பலரும் படித்து நடப்பதல்ல. சந்தைப்படுத்துதலும் பரிந்துரைகளும் ஒரு புத்தகத்தைக் கொண்டு சேர்க்க உதவும். ஆனால் அதைத் தாண்டியும் வாசிப்பு நிகழும். அதுதான் அசல் வாசிப்பு. இதையெல்லாம் நெறிப்படுத்த முடியாது, அதைச் செய்யவும் கூடாது. ஏனென்றால் இலக்கியம் என்பது அரசியல் அல்ல. அது புறமேயிருந்து நிர்வகிக்க வேண்டியது அல்ல. அது சுதந்திரமாக இயங்க வேண்டும்.
வைரமுத்துவுக்கு என்று ஒரு இடம் இருக்கும். அவரை வாசிக்கிறவர்கள் இருப்பார்கள். இலக்கிய வாசகர்கள் என்ன நடந்தாலும் அவர் எழுத்தை ஏற்கப் போவதில்லை. எந்த மொழிக்குச் சென்றாலும் இதுவே நடக்கும். ஒருவேளை அவரது சில எழுத்துக்களில் உள்ள நாட்டார் கூறுகளுக்காக அவரைச் சிலர் படிக்கலாம். இந்த ஞானபீடம் வரும் முன்பே அவர் ஒரு முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம் மூலமாக தன் புனைவொன்றை மொழியாக்கத்தில் கொண்டு வந்தார். OUPக்கும் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்துக்குமான இணைவாக்கம் இப்பணி. பாடநூல் கழகம் ஒருவேளை மொழியாக்கத்துக்கோ பதிப்புக்கோவான நிதியை அளித்திருக்கலாம், ஒருங்கிணைப்பில் உதவியிருக்கலாம். சர்வதேசப் புத்தக விழாவின்போது நூல் வெளியீடு தடபுடலாக நடந்தது என நினைக்கிறேன். இதுவும் வைரமுத்துவுக்கு அல்ல, ஒரு இலக்கிய படைப்பாளிக்கே நடந்திருக்க வேண்டும் என சிலர் கூறலாம். இங்குதான் நாம் எதை விவாதிக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும் - வைரமுத்து vs இலக்கிய படைப்பாளிகள் எனும் எதிரிடையையா அல்லது இந்த செயலாக்கத்தில் உள்ள சிக்கலை, அரசியலை, லாபியிங்கைக் குறித்தா?
உண்மையான பிரச்சினை பின்னதுதான். நான் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழியாக்கத்துக்கான பரிந்துரைப் பட்டியலைக் கண்டிருக்கிறேன். அதில் பல விடுபடல்களும் தவறான தேர்வுகளும் உள்ளன. அது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இத்தகைய பணிகளில் வெளிப்படையான முறைமைகள் உண்டா, தேர்வுக்கான நியாயங்களைச் சொல்கிறார்களா எனும் கேள்விகளே அவசியமானவை. நம் ஆட்களை உள்ளே வைப்பது, அவர்களைக் கொண்டு நம்மை உள்ளே கொண்டு போவது எழுத்தாளர்களுக்கான பணி அல்ல. ஒரு ஜனநாயகச் சமூகத்தில் எல்லாம் வெளிப்படையாக, நேர்மையாக இருக்க வேண்டும். வெகுஜனப் படைப்பாளிகளைத் தாராளமாக மொழியாக்கட்டும், ஆனால் அதற்கான வரைமுறைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியே சொல்ல வேண்டும். முக்கியமாக இதில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தமிழில் படிக்கத் தெரிய வேண்டும்.
சரியான படைப்புகள் மொழியாக்கப்பட வேண்டும் என்பதைவிட அனைத்து முக்கியமான படைப்பாளிகளுக்கும், அதாவது வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு, எளிதில் அணுகி தம் படைப்புகளை மொழியாக்கச் செய்வதற்கான ஒரு நடைமுறை வேண்டும். தகுதியானவர்களுக்கு இடையே சமத்துவம் வேண்டும்.
இதையேதான் நான் சில தனியார் விருதுகள் விசயத்திலும் சொல்கிறேன். அரசு நிறுவனங்களுக்கு இணையாக அங்கும் பல குழப்பங்கள், லாபியிங், முறையற்ற போக்குகள் உள்ளன. அங்கும் நடைமுறை வெளிப்படையாக இல்லை. சொல்லப்போனால் சாகித்ய அகாடெமி இவர்களைவிட பல மடங்கு மேலானது என்று சொல்வேன். அங்கு ஏதோ ஒரு நடைமுறையாவது உள்ளது. அங்கு தேர்வுக் குழுவில் தமிழில் படிக்கிறவர்களாவது இருக்கிறார்கள். அந்த நடைமுறைக்குள் நீங்கள் அரசியல் செய்வது, லாபியிங் செய்யலாம். ஆனால் தனியார் விருதுகள் சொந்த சாதி, மதத்துக்குள் கல்யாணம் பண்ணி வைப்பதைப் போல அது செய்வதில்லை. பழைய படங்களில் சொல்வார்கள், 'இந்தப் பொண்ணு பொறந்தப்பவே முடிவு பண்ணிட்டோம், இவனுக்குத்தான் அவளைக் கட்டி வைக்கணமுன்னு' என்று. தனியார் விருதுகள் இப்படி முன்தீர்மானமாகின்றன. சாகித்ய அகாடெமியில் கொஞ்சமாவது ஜனநாயகத்தன்மை உள்ளது, தனியாரில் சுத்தமாக இல்லை. ஒன்று நாம் இதை விமர்சிக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும்.
ஒப்பிடுகையில் வைரமுத்து vs இலக்கியவாதிகள் என்பது ஒரு மிகச்சின்ன பிரச்சினை. அது பூதாகரமாக்கப்படுவது இன்னும் சுவாரஸ்யமானது. அதில் ஒரு முக்கியமான சங்கதி உள்ளது - பொதுவாக அரசியல்வாதிகள் தாம் இத்தகைய இருமையைக் கட்டமைப்பார்கள். பூதாகரப்படுத்துவார்கள். அவர்களுக்கு ஒரு உத்தேசம் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து சிலரை அப்புறப்படுத்தி தம்மவர்களை அமர வைக்க வேண்டும் என நினைப்பார்கள். "அதோ பார் அவனை அடி, அல்லாவிட்டால் அவன் நம்மை அடித்துவிடுவான்" என்பார்கள். நம் மதம், நம் சாதி ஒழிந்துவிடும், அவர்களை நம்மை நசுக்குவார்கள் என்று பயத்தைக் கிளப்புவார்கள். கடைசியில் இதைவைத்து அவர்களே லாபமீட்டுவார்கள். யாரும் யாரையும் நசுக்கவோ ஒழிக்கவோ போவதில்லை என்பதைத் தாமதமாகப் புரிந்துகொள்வோம்.
அடுத்து, நமக்கென்று ஒரு தேசிய, சர்வதேசிய சந்தையே இல்லை. அங்கு வைரமுத்து போய்த்தான் நம் மானத்தை வாங்கப் போகிறாரா? அங்கு மானமே இல்லையே இழப்பதற்கு?
நமது முன்னோடிகள், சமகாலப் படைப்பாளிகள்ப் பற்றி நாம் ஆங்கில நாளிதழ்களில் பரவலாக எழுத வேண்டும். புத்தகங்கள் எழுத வேண்டும். அதைக் கல்விப் புலத்துக்குள் கொண்டு போக வேண்டும். சமகாலம் என்று நான் சொன்னது இளைஞர்களையும் சேர்த்துதான். 1950-60களில் பிறந்தவர்களை மட்டுமல்ல. வரவர தமிழில் சமகாலம் என்றாலே எதோ முதியோர் இல்லம் போல ஒரு பிம்பம் வருகிறது. நல்ல படைப்புகளைத் தரும் சமகாலப் படைப்பாளிகளை அவர்களுடைய வயதைப் பாராமல் பாராட்டி நாம் ஆங்கிலத்தில் எழுதி அதை கல்விப் புலத்துக்குள் கொண்டு போக வேண்டும். நான் இதற்காக முன்பு முயன்றிருக்கிறேன். ஆனால் கல்வித்திட்டத்துக்குள் கொண்டு போகலாம் என்றால் படைப்புகளுக்குச் சரியான மொழியாக்கம் இருக்காது, கல்விப்புலக் கட்டுரைகள் கிடைக்காது. நாம் செய்ய வேண்டிய இத்தகையப் பணிகளிலும் கூட லாபியிங், அரசியல், குழு நடவடிக்கை என்றே இயங்குகிறோம். சின்னச்சின்னக் குழுக்களில் இருந்தபடி நாங்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என்று நாம் கோரினால் உருப்படவே மாட்டோம்.
இருமைக் கட்டமைப்பு அரசியல்வாதியின் பணி. அதைச் செய்யாமல் நாம் சமத்துவமாக நடந்துகொண்டு உருப்படியான காரியங்களைச் செய்ய வேண்டும். நாம் இப்போது என்ன செய்கிறோம் என்றால் அரசியல்வாதியின் முறைமைகளை, தந்திரங்களைப் பின்பற்றுகிறோம். அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு நாமும் நெருக்கமாகிறோம். பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இணக்கமாகச் சிந்திக்கிறோம், அவர்களுடனே பழக விரும்புகிறோம், அதை விளம்பரப்படுத்தவும் செய்கிறோம். அவர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்ததும் நாமும் மௌனமாகி அடுத்து எங்கு போய் கடைவிரிக்கலாம் என யோசிக்கிறோம். நாம் ஒரு 'கிட்டத்தட்ட அரசியல்வாதியாகிறோம்'. அதாவது வைரமுத்துவும் சினிமாக்காரர்களும் போன பாதையிலே நம் இலக்கியப் படைப்பாளிகளும் இன்று போக முயல்கிறார்கள். மாநில அளவிலும் தேசிய அளவிலும். சர்வதேச அளவில் செய்தால் ஒரு அனுகூலம் நீங்கள் வெளிநாடு வாழ் ஆதரவாளர்களிடம் நிதி திரட்டி இன்னும் பெரிய அதிகார வட்டத்தை அமைக்கலாம் என்பது. இம்மாதிரி இரட்டைக் குதிரை சவாரி செய்வோர் முழுநேர அரசியலைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இது ஒரு வீழ்ச்சிதான். இத்தகைய சிந்தனையே வீழ்ச்சிதான்.
மீண்டும் சொல்கிறேன். கூட்டம் நடத்துவது, பரப்புரை செய்வது பிரச்சினை அல்ல. அரசியல்வாதியின் தந்திரங்களைப் பயன்படுத்துவதும் அதிகாரத்தைக் குவிப்பதும் மட்டுமே சிக்கல். ஸ்டாலினிய சோவிய ரஷ்யாவின் இலக்கிய நிலையைப் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியும், நமது இன்றைய இலக்கியச் சூழல் அதைப் போன்றே மாறி வருகிறது என்று. வைரமுத்து ஒரு பிரச்சினை இல்லை. நாம் நம்மவர்கள்-மற்றமையர் என மனதுக்குள் யோசித்து கருத்துக்களை யோசித்துப் பழகிக் கொள்வது நல்லதல்ல. மெல்லமெல்ல நம் மனம் அதற்கு ஏற்ப உருமாறி விடும். இதையெல்லாம் செய்ய ராஜாவும் அண்ணாமலையும் சீமானும் இன்னும் பல யுடியூபர்களும் இருக்கிறார்கள். நாம் அவர்களைப் பிரதியெடுத்து குட்டி ராஜாக்களாக, அண்ணாமலைகளாக, சீமான்களாக மாறக் கூடாது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...