இந்நூலுக்கு இந்த வாரம் மட்டுமே ஆச்சரியமாக இருவர் விரிவாக விமர்சனம் செய்துள்ளார்கள். ஒருவர் என் நீண்டகால நண்பர். சக-எழுத்தாளர். திகட்டத் திகட்டப் பாரட்டித் தள்ளிவிட்டார். அரைமணிநேரம் போனில் புத்தகத்தை இரண்டு முறைகள் தான் படித்ததையும், அது தந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்னும் நிறைய பேரைப் படிக்கச் சொல்லப் போகிறேன் என்றார். நிறைய எழுத வேண்டும் எனும் உற்சாகம் பாராட்டுக்களில் இருந்தே கிடைக்கின்றன. அவர் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.
அடுத்தது மா. அண்ணாமலையின் விரிவான நேர்மையான விமர்சனம். அவருக்கும் என் அன்பு.
நான் இன்னொன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் - எழுதுவது குறித்து, எழுத்தாளராக இருப்பது குறித்து எனக்கு இப்போதுள்ள கேள்விகளும் கவலைகளும் முற்றிலும் வேறாக மாறி வருவதை உணர்கிறேன். எழுத்துக்கும் மரணத்துக்குமான, எழுத்துக்கும் இல்லாமல் போவதற்கும், தன்னையே அழிப்பதற்குமான தொடர்பு என்னவென்று சிந்திக்கிறேன். காலம் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. ஆச்சரியமாக என் நண்பரான ஒரு அயல்மொழிக் கவிஞரும் இதே கவலையுடன் சதா இருப்பார். நான் அவரைக் கிண்டல் செய்வேன். இப்போது அது என்னையும் தொற்றிக் கொண்டது. முன்பு இருந்த தெளிவு போய் மனம் மிகவும் மூட்டமாக இருக்கிறது. சில உறுதிப்பாடுகள் லகுவானதில் என்னால் சில விசயங்களுக்கு உடனடியாகப் பதில் தேட இயலவில்லை. ஒருவேளை நான் இப்போது தீவிரமாக எழுதி வரும் நாவலின் விளைவாக இருக்கலாம். ஒரு எழுத்தாளராக என்னைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை எனத் தோன்றுகிறது.
அதனாலே இந்நூல் என்னுடைய இன்னொரு மனதில் இருந்து வந்தது, அது என்னுடையது அல்லவென்று தோன்றுகிறது. யாராவது இதைப் பாராட்டுகையில் இதிலுள்ள என் அடையாளமும், அதன் வழியாக கிடைக்கும் இன்பமும் மகிழ்ச்சி தருகிறது.
Comments