ஃபேஸ்புக்கில் திரு அபிலாஷ் அவர்களின் பதிவுகளை அவ்வப்போது மட்டுமே பார்த்து வந்த நான், அவரது சிந்தனைகளை பலமுறை ரசித்திருக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சிக்கல்கள், அதை ஆராயும் ஆழம், அவரது பார்வையின் தனித்துவம்—இவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் சிந்திக்கும் விதம் எப்போதும் வேறுபட்டதும் தீவிரமானதும்.
அபிலாஷ் சந்திரன் அவர்களின் “கால்கள்” நாவல் ஏப்ரல் 6ஆம் தேதி கிண்டிலில் வெளியாகியதாகத் தெரிந்துகொண்டேன், அவருடன் தொடர்ந்த தொடர்பில் இருக்கும் நண்பர் மஹேஷ் மூலமாக. மற்ற எதையும் யோசிக்காமல், உடனே அந்த நாவலை டவுன்லோட் செய்து, அன்றிரவு வாசிக்கத் தொடங்கினேன்.
அதற்கு முந்தைய நாள் நான் "நிழல் பொம்மை" நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் "கால்கள்" கிடைத்தவுடன், நீண்ட நாட்களாக காத்திருந்த ஏக்கத்தில், "நிழல் பொம்மை"யை இடைநிறுத்திவிட்டேன்.
மது — இந்த கதையின் கதாநாயகி, மாற்றுத்திறனாளிகளின் உள்ளத்தை நேரடியாக நெஞ்சோடு இணைக்கும் ஒரு பாத்திரம்.
அவளது உலகம், சவால்கள், மனவுரைகள், காதலையும் காமத்தையும் பற்றிய எண்ணங்கள் — இவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார்.
அவளது பெற்றோர், அவளது நிலை மாறும் என நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் சிகிச்சைகள், பெற்றோர்களின் விழிப்புணர்வற்ற மற்றும் அவளது நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உழலும் மனப்போக்கை வெளிக்கொணர்கின்றன.
கார்த்திக் மற்றும் பாலு — இவர்களுடனான மதுவின் உரையாடல்கள் சுவாரஸ்யமானவை. ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துகளுடன் இருந்தாலும், மதுவுடன் இணைக்கும் பாசப் பிணைபாடுகள் வாசகருக்குள் ஆழமான உணர்வை ஏற்படுத்துகின்றன.
மதுவின் தாயார் அவளை “சவம்” என அழைக்கும் வேளைகள் மனதைக் கலங்க வைக்கின்றன. இதைப் படிக்கும் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் வாழ்வில் எதிர்கொண்ட வலிகளை மிக நேரடியாகக் காணக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின்றன. பெற்றோரது ஆதங்கமும் இயலாமையும் இயல்பாக புதினத்தில் இழைந்தோடுகிறது.
பவித்ரா எனும் பாத்திரம் தன்னம்பிக்கையுடன் கதையில் வளைய வருவதாக அழகாக சித்தரிக்கப்படுகிறார். கதையில் இடம்பிடிக்கும் ஒவ்வொரு பாத்திரமும் நம்மை அந்தக் கிராமத்தில் வாழ்வதைப் போல உணர வைக்கும் வகையில் நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன.
மருத்துவமனை காட்சிகள், மதுவின் உளவுருக்கங்கள், தந்தையின் வேதனைகள், அன்னையின் ஆற்றாமைகள் — அனைத்தும் வாசகரை நெகிழ வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
பலமுறை மதுவின் உள்ளத்தில் கேள்விகள் எழுகின்றன, ஆனால் அவை வெளிப்படுவதில்லை.
அந்த தருணங்கள் எனக்கு ஒரு ஆழமான எண்ணத்தை நினைவூட்டின:
“ஒரு ஆடை எனக்காகத் தைக்கப்படுகிறதா? இல்லை, ஏற்கனவே யாருக்காகவோ தைக்கப்பட்ட ஆடையில் என் உடலை வெட்டிச் சேர்க்க வேண்டிய நிலையா?”
அதேபோல், மதுவும் தனது கேள்விகளை வெளிப்படுத்த முடியாமல் போராடுகிறாள்.
டாக்டர் அப்ரஹாம் கதாப்பாத்திரம் மனோதத்துவம் மற்றும் இறை நம்பிக்கையின் வழியே மதுவை தேற்ற முற்படுகிறார்.
31 வயதிலேயே இப்படியான ஆழமான, உணர்வுப்பூர்வமான எழுத்து எழுத முடிந்திருப்பது, திரு அபிலாஷ் வாழ்வின் பல அனுபவங்களின் பின் வந்த வாசிப்பு பயணத்தின் பிரதிபலிப்பாகத் தெரிகிறது. அவரது எழுத்து நம்மை உணர்வுச் சுழலில் இழுத்துச் செல்கிறது.
நாவலின் பாரம் இன்னும் என் இதயத்தில் கனமாய், ரனமாய். சில இடங்களில் என் சொற்கள் நின்றுவிடுகின்றன. உணர்வுகளை முழுமையாக விவரிக்க முடியாமல் போகிறது.
அபிலாஷ் சார், நாவலை கிண்டிலில் வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். என் போன்ற, மகேஷ் போன்ற பார்வைச் சவாலைச் சந்திக்கும் நண்பர்கள், இப்படியொரு ஆழமான படைப்பை வாசிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றோம். கிண்டிலில் இது வெளியாகவில்லை என்றால், இது எம்மை எட்டியிருக்காது.
---
## கால்கள் – நம்முள் ஒலிக்கும் மனக்குரல்களின் பயணம்...
“வாசிக்கக்கூடிய புத்தகங்கள் இருக்கின்றன. சில புத்தகங்கள் நம்மை வாசிக்கின்றன. ‘கால்கள்’ இரண்டாம் வகையைச் சேர்ந்தது.”
Comments