Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சி.சு செல்லப்பா நினைவோடை



எனக்கு நினைவோடைகளில் படிப்பதில் ஒரு தனி ஆர்வம். இலக்கியச் சூழல் என்றைக்குமே சில விசயங்களில் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்பதால் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் படிப்பது கூட பயனளிக்கும், எழுத்தாளர்களை, குழுக்களை, அவர்களின் நடத்தை, மனப்போக்குகளை அணுக்கமாகப் புரிந்துகொள்ள. மேலும் அபூர்வமானதொரு இன்பமும் இத்தகைய நினைவுக் குறிப்புகளில் உண்டு. பழைய காலப் படங்களில் மாரில் பாய்ந்த கத்தியை உருவி விட்டு ரத்தம் வழியவழியப் பேசுவார்களே அதைப் பார்ப்பது போல.

சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன் சி.சு செல்லப்பா குறித்து நேர்காணல் எடுத்து அதை அப்படியே பிரசுரித்ததே இந்தப் புத்தகம். அதனாலே துண்டுத்துண்டாய் நினைவுகள் முன்னுக்குப் பின்னாய் பாய்கிற தோரணையில் அமைந்திருக்கிறது. செல்லப்பாவைக் குறித்த பகுதிகளைவிட க.நா.சுவைக் குறித்த பகுதிகள் அபாரமாய் வந்திருக்கின்றன. தருமு சிவராமு எனப்படும் பிரமிளின் ஆளுமையும் முக்கியமாக வருகிறது. அதைப் படிக்கையில் தமிழ்ச்சூழலில் அவர் ஏற்படுத்திய கசப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு ஒரு பைட்டர் மீனை வளர்த்தேன். எனக்கு மீன் வளர்ப்பு குறித்த அறிவு இல்லை. ஆகையால் அதன் வர்ண எழிலைப் பார்த்து வாங்கி வந்து மற்ற மீன்களுடன் சேர்த்துப் போட்டேன். அது எந்த மீனுடனும் சேரவில்லை என்பதைக் கவனித்தேன். அது ஒரு பக்கமும் மற்ற மீன்கள் கூட்டமாய் இன்னொரு பக்கமும் நிற்கும். சரி, முரட்டுப் பீஸ் போல என நினைத்து விட்டேன். ஒவ்வொரு நாளும் அது ஒரு மீனைப் போட்டுத் தள்ளியது. சற்றே பெரிய மீன்களைச் சிறுகச்சிறுகக் கடித்து துன்புறுத்தியது. ஒருநாள் நான் எட்டிப் பார்த்தால் அது மட்டுமே தனியே நீந்திக் கொண்டிருந்தது. பிரமிள் இப்படிப் பலரைக் கடித்திருக்கிறார். தனியாகச் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். சி.சு செல்லப்பாவை மட்டுமே அவர் அதிகமாகத் துன்புறுத்தவில்லை என்று சு.ரா சொல்கிறார். மென்மையாகச் சாடுகிறார். அதற்கு சி.சு செல்லப்பா பிரமிள் மீது அபாரமான நம்பிக்கையும் வாஞ்சையும் கொண்டிருந்தது ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. அவர் எவ்வளவு முதுகில் குத்தினாலும் செல்லப்பா அவர் மீது வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. பைட்டர் மீன்களுக்கு தம்மைப் பொறுத்துக்கொண்டு நம்பிக்கை வைப்பவர்களைப் பிடிக்கும்.

மௌனியின் கதைகளின் முக்கியத்துவத்தை தமிழ் வாசகர்களுக்குப் புரிய வைத்து இலக்கியப் புலத்தில் அவரை நிறுவ வேண்டும் எனும் நோக்கில் சி.சு செல்லப்பா "எழுத்தில்" எழுதிய கட்டுரைத் தொடர் குறித்த தகவல் எனக்கு முக்கியம் எனத் தோன்றியது. மௌனி "என்னை விட இவன் பல மடங்கு என் கதைகளைப் பற்றி எழுதுகிறான்" எனும் நக்கலுடன் இதைக் கடக்கிறார். பொதுவாகப் படைப்பாளிகளுக்குத் தம் புனைவு பகுப்பாய்வு செய்யப்படுவது பிடிக்காது. அது வேறு விசயம். செல்லப்பாவை எது செலுத்தியது? வாசகர்களோ விமர்சகர்களோ ஒரு அபூர்வமான சாதனையைக் கவனிக்கவில்லையே எனும் வருத்தம். ஆனால் அப்படி ஒன்றை எந்த விமர்சகராலும் செய்ய முடியாது - விமர்சனம் டார்ச் அடிப்பதைப் போலத்தான். பார்க்கிறவர்களுக்கு சில விசயங்கள் தெரியும். ஆனால் அதனால் எதையும் மாற்ற முடியாது. சிலநேரங்களில் ஒரு தற்செயலான பாராட்டு வாசகத்தையோ பகடியையோ வாசகர்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பர். வாசிப்பு எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பேராறு. அதை யாரும் திருத்தக் கூடாது. நாம் என்ன சொன்னாலும் அது ஒரு போக்கில்தான் ஓடிக் கொண்டிருக்கும்.

சு.ராவைப் படிக்கிறவர்களுக்கு அவருக்கும் அவரது தகப்பனாருக்குமுள்ள கசப்பான உறவைப் பற்றித் தெரியும். அப்பா என்பவர் காப்காவின் படைப்புகளில் போல இதிலும் ஒருவித சமூக அதிகாரக் குறியீடு. வீடு ஒரு படிநிலைச் சமூகம். மீறுகிற தனிமனிதரைக் கண்காணித்து வேட்டையாடிச் சதா தலைகுனிய வைக்கும் கொட்டடிதான் குடும்பம். இதை ஒரு பதின்வயதினரின் மனநிலையில் இருந்து அவர் சதா பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பல கதைகளில் அப்பா வெவ்வேறு ரூபங்களெடுத்து வருவார். இந்தச் சிறிய நூலில் அவர் தனக்கு சி.சு செல்லப்பா மீதிருந்த தன்னிசையான கசப்பை, பிடிப்பின்மயைப் பற்றிச் சொல்லும்போது அதற்கு ஒரு காரணம் செல்லப்பாவின் மரபான மனோபாவம் என்கிறார். செல்லப்பா சதா தன்னை அடுத்தவர்களுக்கு மேலே ஒரு இடத்தில் வைத்துக் கேலி செய்வதாக, அறிவுரைப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. க.நா.சுவோ ஒருவித பதின்வயதுக் கலகக்காரரின் மனநிலையைக் கொண்டிருக்கிறார். சு.ரா தனது (இடது தாராளவாத) நம்பிக்கைகள் காரணமாய் இத்தகைய மரபான மனிதர்களைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததாகச் சொல்கிறார். செல்லப்பாவிடம் அவர் தனது தந்தையையே கண்டதாக எனக்குத் தோன்றுகிறது. செல்லப்பாவின் இடத்தில் இருந்து உலகை அவரால் காண முடியாதது இதனால்தான் என நினைக்கிறேன். அப்படிச் செய்தால் சு.ரா தன் மனதுக்குள் சுமந்த அந்த இளைஞனை மறுக்க வேண்டியிருக்கும். தன்னை, தன் தீமையை நோக்கி, தன் கீழ்மைகளை நோக்கி அவர் பயணிக்க வேண்டியிருந்திருக்கும். இது எந்த எழுத்தாளருக்கும் கடினமானது. நாம் இருமைகளைக் கட்டமைத்து நம் கதைகளை அவற்றின் மீது ரத்தமும் சதையுமாய் உருவாக்கி வளர்க்கிறோம். ஒருவர் இதை உடைக்கும்போது அவர் தன் எழுத்து வாழ்வை முழுக்க மாற்றியமைக்க வேண்டியிருக்கும். புறமிருந்து உள் நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். சு.ரா அதைக் கடைசி வரை விரும்பவில்லை எனத் தோன்றுகிறது.

இந்நூலை அதன் இறுதிப் பகுதியை ஆரம்பத்தில் கொடுத்து, ஆரம்பப் பகுதியை இறுதியாக்கி சில பகுதிகளை வெட்டி ஒட்டியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமான மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையோட்டத்தை அது பெற்றிருக்கும். அதாவது சி.சு செல்லப்பாவின் சிறப்புகளைப் பற்றி முதலில் பேசிவிட்டு அவரிடம் தனக்குப் பிடிக்காதவற்றைச் சொல்லும்போது உயரத்தைக் காட்டி பள்ளத்தில் சென்று முடிவதாக, எழுச்சியில் இருந்து வீழ்ச்சிக்குப் போவதாக இருக்கும். ஏனோ சு.ரா அதை விரும்பியிருக்கவில்லை எனத் தெரிகிறது.

கடைசியாக, அட்டையில் மருதுவின் அந்த ஓவியம் எவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. கசங்கலாக, வரலாற்றில் பாதி அழிந்தும் தேய்ந்து அழிய மறுக்கிற ஒரு மனிதராக சி.சு செல்லப்பாவின் சித்திரத்துக்கு அவ்வளவு பொருத்தமாக.

Comments

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...