Skip to main content

சி.சு செல்லப்பா நினைவோடை



எனக்கு நினைவோடைகளில் படிப்பதில் ஒரு தனி ஆர்வம். இலக்கியச் சூழல் என்றைக்குமே சில விசயங்களில் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்பதால் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் படிப்பது கூட பயனளிக்கும், எழுத்தாளர்களை, குழுக்களை, அவர்களின் நடத்தை, மனப்போக்குகளை அணுக்கமாகப் புரிந்துகொள்ள. மேலும் அபூர்வமானதொரு இன்பமும் இத்தகைய நினைவுக் குறிப்புகளில் உண்டு. பழைய காலப் படங்களில் மாரில் பாய்ந்த கத்தியை உருவி விட்டு ரத்தம் வழியவழியப் பேசுவார்களே அதைப் பார்ப்பது போல.

சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன் சி.சு செல்லப்பா குறித்து நேர்காணல் எடுத்து அதை அப்படியே பிரசுரித்ததே இந்தப் புத்தகம். அதனாலே துண்டுத்துண்டாய் நினைவுகள் முன்னுக்குப் பின்னாய் பாய்கிற தோரணையில் அமைந்திருக்கிறது. செல்லப்பாவைக் குறித்த பகுதிகளைவிட க.நா.சுவைக் குறித்த பகுதிகள் அபாரமாய் வந்திருக்கின்றன. தருமு சிவராமு எனப்படும் பிரமிளின் ஆளுமையும் முக்கியமாக வருகிறது. அதைப் படிக்கையில் தமிழ்ச்சூழலில் அவர் ஏற்படுத்திய கசப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு ஒரு பைட்டர் மீனை வளர்த்தேன். எனக்கு மீன் வளர்ப்பு குறித்த அறிவு இல்லை. ஆகையால் அதன் வர்ண எழிலைப் பார்த்து வாங்கி வந்து மற்ற மீன்களுடன் சேர்த்துப் போட்டேன். அது எந்த மீனுடனும் சேரவில்லை என்பதைக் கவனித்தேன். அது ஒரு பக்கமும் மற்ற மீன்கள் கூட்டமாய் இன்னொரு பக்கமும் நிற்கும். சரி, முரட்டுப் பீஸ் போல என நினைத்து விட்டேன். ஒவ்வொரு நாளும் அது ஒரு மீனைப் போட்டுத் தள்ளியது. சற்றே பெரிய மீன்களைச் சிறுகச்சிறுகக் கடித்து துன்புறுத்தியது. ஒருநாள் நான் எட்டிப் பார்த்தால் அது மட்டுமே தனியே நீந்திக் கொண்டிருந்தது. பிரமிள் இப்படிப் பலரைக் கடித்திருக்கிறார். தனியாகச் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். சி.சு செல்லப்பாவை மட்டுமே அவர் அதிகமாகத் துன்புறுத்தவில்லை என்று சு.ரா சொல்கிறார். மென்மையாகச் சாடுகிறார். அதற்கு சி.சு செல்லப்பா பிரமிள் மீது அபாரமான நம்பிக்கையும் வாஞ்சையும் கொண்டிருந்தது ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. அவர் எவ்வளவு முதுகில் குத்தினாலும் செல்லப்பா அவர் மீது வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. பைட்டர் மீன்களுக்கு தம்மைப் பொறுத்துக்கொண்டு நம்பிக்கை வைப்பவர்களைப் பிடிக்கும்.

மௌனியின் கதைகளின் முக்கியத்துவத்தை தமிழ் வாசகர்களுக்குப் புரிய வைத்து இலக்கியப் புலத்தில் அவரை நிறுவ வேண்டும் எனும் நோக்கில் சி.சு செல்லப்பா "எழுத்தில்" எழுதிய கட்டுரைத் தொடர் குறித்த தகவல் எனக்கு முக்கியம் எனத் தோன்றியது. மௌனி "என்னை விட இவன் பல மடங்கு என் கதைகளைப் பற்றி எழுதுகிறான்" எனும் நக்கலுடன் இதைக் கடக்கிறார். பொதுவாகப் படைப்பாளிகளுக்குத் தம் புனைவு பகுப்பாய்வு செய்யப்படுவது பிடிக்காது. அது வேறு விசயம். செல்லப்பாவை எது செலுத்தியது? வாசகர்களோ விமர்சகர்களோ ஒரு அபூர்வமான சாதனையைக் கவனிக்கவில்லையே எனும் வருத்தம். ஆனால் அப்படி ஒன்றை எந்த விமர்சகராலும் செய்ய முடியாது - விமர்சனம் டார்ச் அடிப்பதைப் போலத்தான். பார்க்கிறவர்களுக்கு சில விசயங்கள் தெரியும். ஆனால் அதனால் எதையும் மாற்ற முடியாது. சிலநேரங்களில் ஒரு தற்செயலான பாராட்டு வாசகத்தையோ பகடியையோ வாசகர்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பர். வாசிப்பு எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பேராறு. அதை யாரும் திருத்தக் கூடாது. நாம் என்ன சொன்னாலும் அது ஒரு போக்கில்தான் ஓடிக் கொண்டிருக்கும்.

சு.ராவைப் படிக்கிறவர்களுக்கு அவருக்கும் அவரது தகப்பனாருக்குமுள்ள கசப்பான உறவைப் பற்றித் தெரியும். அப்பா என்பவர் காப்காவின் படைப்புகளில் போல இதிலும் ஒருவித சமூக அதிகாரக் குறியீடு. வீடு ஒரு படிநிலைச் சமூகம். மீறுகிற தனிமனிதரைக் கண்காணித்து வேட்டையாடிச் சதா தலைகுனிய வைக்கும் கொட்டடிதான் குடும்பம். இதை ஒரு பதின்வயதினரின் மனநிலையில் இருந்து அவர் சதா பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பல கதைகளில் அப்பா வெவ்வேறு ரூபங்களெடுத்து வருவார். இந்தச் சிறிய நூலில் அவர் தனக்கு சி.சு செல்லப்பா மீதிருந்த தன்னிசையான கசப்பை, பிடிப்பின்மயைப் பற்றிச் சொல்லும்போது அதற்கு ஒரு காரணம் செல்லப்பாவின் மரபான மனோபாவம் என்கிறார். செல்லப்பா சதா தன்னை அடுத்தவர்களுக்கு மேலே ஒரு இடத்தில் வைத்துக் கேலி செய்வதாக, அறிவுரைப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. க.நா.சுவோ ஒருவித பதின்வயதுக் கலகக்காரரின் மனநிலையைக் கொண்டிருக்கிறார். சு.ரா தனது (இடது தாராளவாத) நம்பிக்கைகள் காரணமாய் இத்தகைய மரபான மனிதர்களைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததாகச் சொல்கிறார். செல்லப்பாவிடம் அவர் தனது தந்தையையே கண்டதாக எனக்குத் தோன்றுகிறது. செல்லப்பாவின் இடத்தில் இருந்து உலகை அவரால் காண முடியாதது இதனால்தான் என நினைக்கிறேன். அப்படிச் செய்தால் சு.ரா தன் மனதுக்குள் சுமந்த அந்த இளைஞனை மறுக்க வேண்டியிருக்கும். தன்னை, தன் தீமையை நோக்கி, தன் கீழ்மைகளை நோக்கி அவர் பயணிக்க வேண்டியிருந்திருக்கும். இது எந்த எழுத்தாளருக்கும் கடினமானது. நாம் இருமைகளைக் கட்டமைத்து நம் கதைகளை அவற்றின் மீது ரத்தமும் சதையுமாய் உருவாக்கி வளர்க்கிறோம். ஒருவர் இதை உடைக்கும்போது அவர் தன் எழுத்து வாழ்வை முழுக்க மாற்றியமைக்க வேண்டியிருக்கும். புறமிருந்து உள் நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். சு.ரா அதைக் கடைசி வரை விரும்பவில்லை எனத் தோன்றுகிறது.

இந்நூலை அதன் இறுதிப் பகுதியை ஆரம்பத்தில் கொடுத்து, ஆரம்பப் பகுதியை இறுதியாக்கி சில பகுதிகளை வெட்டி ஒட்டியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமான மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையோட்டத்தை அது பெற்றிருக்கும். அதாவது சி.சு செல்லப்பாவின் சிறப்புகளைப் பற்றி முதலில் பேசிவிட்டு அவரிடம் தனக்குப் பிடிக்காதவற்றைச் சொல்லும்போது உயரத்தைக் காட்டி பள்ளத்தில் சென்று முடிவதாக, எழுச்சியில் இருந்து வீழ்ச்சிக்குப் போவதாக இருக்கும். ஏனோ சு.ரா அதை விரும்பியிருக்கவில்லை எனத் தெரிகிறது.

கடைசியாக, அட்டையில் மருதுவின் அந்த ஓவியம் எவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. கசங்கலாக, வரலாற்றில் பாதி அழிந்தும் தேய்ந்து அழிய மறுக்கிற ஒரு மனிதராக சி.சு செல்லப்பாவின் சித்திரத்துக்கு அவ்வளவு பொருத்தமாக.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...