முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சி.சு செல்லப்பா நினைவோடை



எனக்கு நினைவோடைகளில் படிப்பதில் ஒரு தனி ஆர்வம். இலக்கியச் சூழல் என்றைக்குமே சில விசயங்களில் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்பதால் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் படிப்பது கூட பயனளிக்கும், எழுத்தாளர்களை, குழுக்களை, அவர்களின் நடத்தை, மனப்போக்குகளை அணுக்கமாகப் புரிந்துகொள்ள. மேலும் அபூர்வமானதொரு இன்பமும் இத்தகைய நினைவுக் குறிப்புகளில் உண்டு. பழைய காலப் படங்களில் மாரில் பாய்ந்த கத்தியை உருவி விட்டு ரத்தம் வழியவழியப் பேசுவார்களே அதைப் பார்ப்பது போல.

சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன் சி.சு செல்லப்பா குறித்து நேர்காணல் எடுத்து அதை அப்படியே பிரசுரித்ததே இந்தப் புத்தகம். அதனாலே துண்டுத்துண்டாய் நினைவுகள் முன்னுக்குப் பின்னாய் பாய்கிற தோரணையில் அமைந்திருக்கிறது. செல்லப்பாவைக் குறித்த பகுதிகளைவிட க.நா.சுவைக் குறித்த பகுதிகள் அபாரமாய் வந்திருக்கின்றன. தருமு சிவராமு எனப்படும் பிரமிளின் ஆளுமையும் முக்கியமாக வருகிறது. அதைப் படிக்கையில் தமிழ்ச்சூழலில் அவர் ஏற்படுத்திய கசப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு ஒரு பைட்டர் மீனை வளர்த்தேன். எனக்கு மீன் வளர்ப்பு குறித்த அறிவு இல்லை. ஆகையால் அதன் வர்ண எழிலைப் பார்த்து வாங்கி வந்து மற்ற மீன்களுடன் சேர்த்துப் போட்டேன். அது எந்த மீனுடனும் சேரவில்லை என்பதைக் கவனித்தேன். அது ஒரு பக்கமும் மற்ற மீன்கள் கூட்டமாய் இன்னொரு பக்கமும் நிற்கும். சரி, முரட்டுப் பீஸ் போல என நினைத்து விட்டேன். ஒவ்வொரு நாளும் அது ஒரு மீனைப் போட்டுத் தள்ளியது. சற்றே பெரிய மீன்களைச் சிறுகச்சிறுகக் கடித்து துன்புறுத்தியது. ஒருநாள் நான் எட்டிப் பார்த்தால் அது மட்டுமே தனியே நீந்திக் கொண்டிருந்தது. பிரமிள் இப்படிப் பலரைக் கடித்திருக்கிறார். தனியாகச் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். சி.சு செல்லப்பாவை மட்டுமே அவர் அதிகமாகத் துன்புறுத்தவில்லை என்று சு.ரா சொல்கிறார். மென்மையாகச் சாடுகிறார். அதற்கு சி.சு செல்லப்பா பிரமிள் மீது அபாரமான நம்பிக்கையும் வாஞ்சையும் கொண்டிருந்தது ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. அவர் எவ்வளவு முதுகில் குத்தினாலும் செல்லப்பா அவர் மீது வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. பைட்டர் மீன்களுக்கு தம்மைப் பொறுத்துக்கொண்டு நம்பிக்கை வைப்பவர்களைப் பிடிக்கும்.

மௌனியின் கதைகளின் முக்கியத்துவத்தை தமிழ் வாசகர்களுக்குப் புரிய வைத்து இலக்கியப் புலத்தில் அவரை நிறுவ வேண்டும் எனும் நோக்கில் சி.சு செல்லப்பா "எழுத்தில்" எழுதிய கட்டுரைத் தொடர் குறித்த தகவல் எனக்கு முக்கியம் எனத் தோன்றியது. மௌனி "என்னை விட இவன் பல மடங்கு என் கதைகளைப் பற்றி எழுதுகிறான்" எனும் நக்கலுடன் இதைக் கடக்கிறார். பொதுவாகப் படைப்பாளிகளுக்குத் தம் புனைவு பகுப்பாய்வு செய்யப்படுவது பிடிக்காது. அது வேறு விசயம். செல்லப்பாவை எது செலுத்தியது? வாசகர்களோ விமர்சகர்களோ ஒரு அபூர்வமான சாதனையைக் கவனிக்கவில்லையே எனும் வருத்தம். ஆனால் அப்படி ஒன்றை எந்த விமர்சகராலும் செய்ய முடியாது - விமர்சனம் டார்ச் அடிப்பதைப் போலத்தான். பார்க்கிறவர்களுக்கு சில விசயங்கள் தெரியும். ஆனால் அதனால் எதையும் மாற்ற முடியாது. சிலநேரங்களில் ஒரு தற்செயலான பாராட்டு வாசகத்தையோ பகடியையோ வாசகர்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பர். வாசிப்பு எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பேராறு. அதை யாரும் திருத்தக் கூடாது. நாம் என்ன சொன்னாலும் அது ஒரு போக்கில்தான் ஓடிக் கொண்டிருக்கும்.

சு.ராவைப் படிக்கிறவர்களுக்கு அவருக்கும் அவரது தகப்பனாருக்குமுள்ள கசப்பான உறவைப் பற்றித் தெரியும். அப்பா என்பவர் காப்காவின் படைப்புகளில் போல இதிலும் ஒருவித சமூக அதிகாரக் குறியீடு. வீடு ஒரு படிநிலைச் சமூகம். மீறுகிற தனிமனிதரைக் கண்காணித்து வேட்டையாடிச் சதா தலைகுனிய வைக்கும் கொட்டடிதான் குடும்பம். இதை ஒரு பதின்வயதினரின் மனநிலையில் இருந்து அவர் சதா பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பல கதைகளில் அப்பா வெவ்வேறு ரூபங்களெடுத்து வருவார். இந்தச் சிறிய நூலில் அவர் தனக்கு சி.சு செல்லப்பா மீதிருந்த தன்னிசையான கசப்பை, பிடிப்பின்மயைப் பற்றிச் சொல்லும்போது அதற்கு ஒரு காரணம் செல்லப்பாவின் மரபான மனோபாவம் என்கிறார். செல்லப்பா சதா தன்னை அடுத்தவர்களுக்கு மேலே ஒரு இடத்தில் வைத்துக் கேலி செய்வதாக, அறிவுரைப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. க.நா.சுவோ ஒருவித பதின்வயதுக் கலகக்காரரின் மனநிலையைக் கொண்டிருக்கிறார். சு.ரா தனது (இடது தாராளவாத) நம்பிக்கைகள் காரணமாய் இத்தகைய மரபான மனிதர்களைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததாகச் சொல்கிறார். செல்லப்பாவிடம் அவர் தனது தந்தையையே கண்டதாக எனக்குத் தோன்றுகிறது. செல்லப்பாவின் இடத்தில் இருந்து உலகை அவரால் காண முடியாதது இதனால்தான் என நினைக்கிறேன். அப்படிச் செய்தால் சு.ரா தன் மனதுக்குள் சுமந்த அந்த இளைஞனை மறுக்க வேண்டியிருக்கும். தன்னை, தன் தீமையை நோக்கி, தன் கீழ்மைகளை நோக்கி அவர் பயணிக்க வேண்டியிருந்திருக்கும். இது எந்த எழுத்தாளருக்கும் கடினமானது. நாம் இருமைகளைக் கட்டமைத்து நம் கதைகளை அவற்றின் மீது ரத்தமும் சதையுமாய் உருவாக்கி வளர்க்கிறோம். ஒருவர் இதை உடைக்கும்போது அவர் தன் எழுத்து வாழ்வை முழுக்க மாற்றியமைக்க வேண்டியிருக்கும். புறமிருந்து உள் நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். சு.ரா அதைக் கடைசி வரை விரும்பவில்லை எனத் தோன்றுகிறது.

இந்நூலை அதன் இறுதிப் பகுதியை ஆரம்பத்தில் கொடுத்து, ஆரம்பப் பகுதியை இறுதியாக்கி சில பகுதிகளை வெட்டி ஒட்டியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமான மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையோட்டத்தை அது பெற்றிருக்கும். அதாவது சி.சு செல்லப்பாவின் சிறப்புகளைப் பற்றி முதலில் பேசிவிட்டு அவரிடம் தனக்குப் பிடிக்காதவற்றைச் சொல்லும்போது உயரத்தைக் காட்டி பள்ளத்தில் சென்று முடிவதாக, எழுச்சியில் இருந்து வீழ்ச்சிக்குப் போவதாக இருக்கும். ஏனோ சு.ரா அதை விரும்பியிருக்கவில்லை எனத் தெரிகிறது.

கடைசியாக, அட்டையில் மருதுவின் அந்த ஓவியம் எவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. கசங்கலாக, வரலாற்றில் பாதி அழிந்தும் தேய்ந்து அழிய மறுக்கிற ஒரு மனிதராக சி.சு செல்லப்பாவின் சித்திரத்துக்கு அவ்வளவு பொருத்தமாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...