Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"பெரிய மனிதர்"

 


"பெரிய மனிதர்" க.நா.சுவின் குறுநாவல். அவரது நாவல்களைப் படிக்கையில் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறப்பான படைப்புகள் என்று தோன்றும். "பெரிய மனிதரும்" அப்படியான ஒன்றே. ஈவிரக்கம் இல்லாத ஒரு பணக்காரரின் நினைவுக் குறிப்புகள் என்று இதை வர்ணிக்கலாம். 45 வயதை எட்டிய நிலையில் தனக்கு ஒரு நிச்சயமின்மை, எதிலும் கசப்பு தோன்றுவதை அவர் உணர்கிறார். கசப்பு ஒரு பெரும் பந்தாக தன்னை நோக்கி உருண்டு வருவதாக அவருக்குத் தோன்றுகிரது. அவரிடம் மலைமலையாகப் பணம் உள்ளது. அவரது மனைவி, மக்கள் அவருடன் உள்ளனர். அவருக்குப் பல பங்களாக்களும் கார்களும் வேலையாட்களும் உண்டு. ஆனால் உள்ளார்ந்த துக்கம் அவரைச் சூழ்கிறது. அவர் தன் அந்தஸ்து, அடையாளம், வாழ்க்கை என ஒவ்வொன்றாகக் கசந்து சபித்துக் கொண்டும் மறுத்துக் கொண்டும் வருகிறார். அதற்காக அவர் இவற்றையெல்லாம் துறக்கப் போகிறார் என்றில்லை. அவர் தன் பணம், அந்தஸ்து, சாதனைகளைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டும் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடித்துக் கொண்டும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தன் துன்பத்துக்குக் காரணம் தன் வாழ்வில் அன்பு இல்லாததுதான், யாரும் தன்னை நேசிக்காமல் பணம் உற்பத்தி செய்யும் எந்திரமாக மட்டுமே நடத்துவதே எனத் தோன்றுகிறது. அன்புக்காகத் தான் ஏங்குவது யார் கண்ணுக்கும் படவில்லை என்று அவர் தவித்தாலும் அதைக் குறித்து அவர் ரொம்பவும் அலட்டிக் கொள்பவராகவும் அடுத்துத் தெரியவில்லை, அவர் அதைச் சரிசெய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அடிப்படையில் அவருக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. தன் அவநம்பிக்கையால் வரும் கசப்பை மட்டும் அவருக்கு விட்டுத் தொலைக்க வேண்டும். அது எப்படியென்று அவருக்குத் தெரியவில்லை.

அவர் அடுத்துப் பெண்களைக் குறித்துச் சிந்திக்கிறார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும் முன்பு அவர் இளைஞராக ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணிசெய்கிறார், இந்நிறுவனம் ஒரு வெள்ளைக்காரருக்குடையது. இந்த "துரை" ஒரு இளம் விதவையைக் கண்டு ஆசைப்பட்டு அவளை மணக்கும்படி இவரைக் கேட்டுக் கொள்கிறார். இதை நாவலில் க.நா.சு குறிப்புணர்த்திவிட்டுப் போகிறார். அவரும் சிரம் தாழ்ந்து இதைச் செய்கிறார். கல்யாணத்துக்கு அடுத்த நாள் அவருக்கு உதவி மேலாளர் பதவி உயர்வும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் துரை இங்கிலாந்துக்குத் திரும்ப நிறுவனத்தின் மொத்தப் பொறுப்பும் கதைசொல்லியிடம் வருகிறது. ஊரார் இதைக் குறித்து கேலி பேசினாலும் அவர் கவலைப்படுவதில்லை. பணமும் அந்தஸ்தும் அதிகாரமும் பெரும் கோட்டைச்சுவராக எழும்பி அவரை உலகிடம் இருந்து பாதுகாக்கிறது. கிட்டத்தட்ட 40-45வது பக்கங்களில் இது வருகிறது என நினைக்கிறேன். இக்குறிப்பு வந்ததும் நமக்கு கதைசொல்லியின் அடிப்படையான நெருக்கடி புரிகிறது. அவரிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவும் சொந்தமாக அவர் ஆதாரமாக உறவு பாராட்டும்படியாக இல்லை. அவருக்கும் தன் சொத்துக்கும் (தன் மனைவி, பிள்ளைகளையும் அவர் தன் சொத்தாகவே பாவிக்கிறார்) இடைவெளி அதிகமாக உள்ளது. முழுக்க அந்நியப்பட்ட வாழ்க்கை. அவரால் தன் மனைவியைக் காதலிக்க முடியவில்லை. இதை உணர்ந்த அவளும் அவரைப் பொருட்படுத்தாமல் தன் கடமையை மட்டும் ஆற்றுகிறாள். குழந்தைகளிடம் அவர் இப்படியே இருக்கிறார், அவர்களும் அப்படியே அவரை நடத்துகிறார்கள். நாவல் முடிவுக்கு வருவதற்கு முன்பு அவர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு கொலைக்குற்றத்தைக் குறிப்பிட்டு, அதனால் தான் அடையும் குற்றவுணர்வுக்கும் பயத்துக்கும் பரிகாரம் செய்ய திட்டமிட்டுள்ள விசயங்களைச் சொல்கிறார். அத்துடன் நாவல் முடிகிறது. கடைசி வரை இந்தப் பெரிய மனிதரின் சொற்களை நம்மால் தீர்மானமாக நம்ப முடியவில்லை, அதிலொரு நகைமுரண் இருந்துகொண்டே இருக்கிறது என்பதே இந்நாவலின் சிறப்பு.

க.நா.சுவின் பிற நாவல்களில் போல இதிலும் ஷேக்ஸ்பியரின் சாயல் உண்டு. குறிப்பாக "கிங் லியர்".

இத்தகைய படைப்புகளை ஒப்புதல் வாக்குமூல இலக்கியம் என்பார்கள். மேற்கில் இது பிரசித்தம். இதில் நாம் ஒரு பாத்திரத்தின் (கதைசொல்லியின்) குரலை மட்டுமே கேட்க இயலும். அவரது வர்ணனைகளிலும் வசனங்களிலும் நினைவுகளிலும் கருத்துக்களிலும் தீர்மானங்களிலும் உள்ள முரண்பாடுகள் நகைமுரணைத் தோற்றுவிக்கும். நகைமுரணே பிரதான தொனியாகும்போது நம்மால் கதைசொல்லியின் குரலை நம்ப முடியாத நிலையும் அவரை நாம் நேசிக்கிற நிலையும் ஒரே சமயம் ஏற்படும். அதனாலே இந்த வடிவம் க.நா.சுவின் "பெரிய மனிதர்" கதைக்குப் பொருத்தமாக உள்ளது எனக் கூறலாம். அதேசமயம் இத்தகைய படைப்புகளில் பிற பாத்திரங்கள், எதிர்த்தரப்பு ஆகியோரின் வர்ணனைகள், மனச்சித்திரங்கள், வாக்குமூலங்களை, கதைசொல்லியின் குழப்பமான நினைவுகள், கனவுகளையும் கொண்டு வந்தால் மொழி இன்னும் அடர்த்தியாகும். க.நா.சு இதை முயலவில்லை என்பதாலே வழக்கம்போல இது சரியாக எழுதி முடிக்கப்படாத பிரதி எனும் உணர்வு வருகிறது.

இந்நாவலின் மேலும் இரண்டு பலவீனங்களில் ஒன்று க.நா.சு சில முக்கியமான பாத்திரங்களை, காட்சிகளை நம் கண்முன் எழுந்து வரும்படி காட்சிபூர்வமாகவோ உணர்ச்சிகரமாகவோ எழுதுவதில்லை என்பது. அடுத்த பலவீனம் கதைசொல்லி ஒவ்வொரு தீர்வாகக் கண்டையும்போதும் அதற்குத் தடையாக மற்றொரு சம்பவம் தோன்றி அதிகச் சிக்கலை ஏற்படுத்துவதில்லை என்பது.

நான் இத்தகைய நாவல்களை 'முன்-நாவல்கள்' என்று அழைக்க விரும்புவேன். இவற்றைப் படித்து நாவலாசிரியர்கள் உத்வேகம் கொண்டு இவற்றை மேம்படுத்தி வளர்த்தெடுத்து வேறு சில படைப்புகளை எழுத முடியும்.

Comments

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...