Skip to main content

"பெரிய மனிதர்"

 


"பெரிய மனிதர்" க.நா.சுவின் குறுநாவல். அவரது நாவல்களைப் படிக்கையில் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறப்பான படைப்புகள் என்று தோன்றும். "பெரிய மனிதரும்" அப்படியான ஒன்றே. ஈவிரக்கம் இல்லாத ஒரு பணக்காரரின் நினைவுக் குறிப்புகள் என்று இதை வர்ணிக்கலாம். 45 வயதை எட்டிய நிலையில் தனக்கு ஒரு நிச்சயமின்மை, எதிலும் கசப்பு தோன்றுவதை அவர் உணர்கிறார். கசப்பு ஒரு பெரும் பந்தாக தன்னை நோக்கி உருண்டு வருவதாக அவருக்குத் தோன்றுகிரது. அவரிடம் மலைமலையாகப் பணம் உள்ளது. அவரது மனைவி, மக்கள் அவருடன் உள்ளனர். அவருக்குப் பல பங்களாக்களும் கார்களும் வேலையாட்களும் உண்டு. ஆனால் உள்ளார்ந்த துக்கம் அவரைச் சூழ்கிறது. அவர் தன் அந்தஸ்து, அடையாளம், வாழ்க்கை என ஒவ்வொன்றாகக் கசந்து சபித்துக் கொண்டும் மறுத்துக் கொண்டும் வருகிறார். அதற்காக அவர் இவற்றையெல்லாம் துறக்கப் போகிறார் என்றில்லை. அவர் தன் பணம், அந்தஸ்து, சாதனைகளைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டும் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடித்துக் கொண்டும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தன் துன்பத்துக்குக் காரணம் தன் வாழ்வில் அன்பு இல்லாததுதான், யாரும் தன்னை நேசிக்காமல் பணம் உற்பத்தி செய்யும் எந்திரமாக மட்டுமே நடத்துவதே எனத் தோன்றுகிறது. அன்புக்காகத் தான் ஏங்குவது யார் கண்ணுக்கும் படவில்லை என்று அவர் தவித்தாலும் அதைக் குறித்து அவர் ரொம்பவும் அலட்டிக் கொள்பவராகவும் அடுத்துத் தெரியவில்லை, அவர் அதைச் சரிசெய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அடிப்படையில் அவருக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. தன் அவநம்பிக்கையால் வரும் கசப்பை மட்டும் அவருக்கு விட்டுத் தொலைக்க வேண்டும். அது எப்படியென்று அவருக்குத் தெரியவில்லை.

அவர் அடுத்துப் பெண்களைக் குறித்துச் சிந்திக்கிறார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும் முன்பு அவர் இளைஞராக ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணிசெய்கிறார், இந்நிறுவனம் ஒரு வெள்ளைக்காரருக்குடையது. இந்த "துரை" ஒரு இளம் விதவையைக் கண்டு ஆசைப்பட்டு அவளை மணக்கும்படி இவரைக் கேட்டுக் கொள்கிறார். இதை நாவலில் க.நா.சு குறிப்புணர்த்திவிட்டுப் போகிறார். அவரும் சிரம் தாழ்ந்து இதைச் செய்கிறார். கல்யாணத்துக்கு அடுத்த நாள் அவருக்கு உதவி மேலாளர் பதவி உயர்வும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் துரை இங்கிலாந்துக்குத் திரும்ப நிறுவனத்தின் மொத்தப் பொறுப்பும் கதைசொல்லியிடம் வருகிறது. ஊரார் இதைக் குறித்து கேலி பேசினாலும் அவர் கவலைப்படுவதில்லை. பணமும் அந்தஸ்தும் அதிகாரமும் பெரும் கோட்டைச்சுவராக எழும்பி அவரை உலகிடம் இருந்து பாதுகாக்கிறது. கிட்டத்தட்ட 40-45வது பக்கங்களில் இது வருகிறது என நினைக்கிறேன். இக்குறிப்பு வந்ததும் நமக்கு கதைசொல்லியின் அடிப்படையான நெருக்கடி புரிகிறது. அவரிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவும் சொந்தமாக அவர் ஆதாரமாக உறவு பாராட்டும்படியாக இல்லை. அவருக்கும் தன் சொத்துக்கும் (தன் மனைவி, பிள்ளைகளையும் அவர் தன் சொத்தாகவே பாவிக்கிறார்) இடைவெளி அதிகமாக உள்ளது. முழுக்க அந்நியப்பட்ட வாழ்க்கை. அவரால் தன் மனைவியைக் காதலிக்க முடியவில்லை. இதை உணர்ந்த அவளும் அவரைப் பொருட்படுத்தாமல் தன் கடமையை மட்டும் ஆற்றுகிறாள். குழந்தைகளிடம் அவர் இப்படியே இருக்கிறார், அவர்களும் அப்படியே அவரை நடத்துகிறார்கள். நாவல் முடிவுக்கு வருவதற்கு முன்பு அவர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு கொலைக்குற்றத்தைக் குறிப்பிட்டு, அதனால் தான் அடையும் குற்றவுணர்வுக்கும் பயத்துக்கும் பரிகாரம் செய்ய திட்டமிட்டுள்ள விசயங்களைச் சொல்கிறார். அத்துடன் நாவல் முடிகிறது. கடைசி வரை இந்தப் பெரிய மனிதரின் சொற்களை நம்மால் தீர்மானமாக நம்ப முடியவில்லை, அதிலொரு நகைமுரண் இருந்துகொண்டே இருக்கிறது என்பதே இந்நாவலின் சிறப்பு.

க.நா.சுவின் பிற நாவல்களில் போல இதிலும் ஷேக்ஸ்பியரின் சாயல் உண்டு. குறிப்பாக "கிங் லியர்".

இத்தகைய படைப்புகளை ஒப்புதல் வாக்குமூல இலக்கியம் என்பார்கள். மேற்கில் இது பிரசித்தம். இதில் நாம் ஒரு பாத்திரத்தின் (கதைசொல்லியின்) குரலை மட்டுமே கேட்க இயலும். அவரது வர்ணனைகளிலும் வசனங்களிலும் நினைவுகளிலும் கருத்துக்களிலும் தீர்மானங்களிலும் உள்ள முரண்பாடுகள் நகைமுரணைத் தோற்றுவிக்கும். நகைமுரணே பிரதான தொனியாகும்போது நம்மால் கதைசொல்லியின் குரலை நம்ப முடியாத நிலையும் அவரை நாம் நேசிக்கிற நிலையும் ஒரே சமயம் ஏற்படும். அதனாலே இந்த வடிவம் க.நா.சுவின் "பெரிய மனிதர்" கதைக்குப் பொருத்தமாக உள்ளது எனக் கூறலாம். அதேசமயம் இத்தகைய படைப்புகளில் பிற பாத்திரங்கள், எதிர்த்தரப்பு ஆகியோரின் வர்ணனைகள், மனச்சித்திரங்கள், வாக்குமூலங்களை, கதைசொல்லியின் குழப்பமான நினைவுகள், கனவுகளையும் கொண்டு வந்தால் மொழி இன்னும் அடர்த்தியாகும். க.நா.சு இதை முயலவில்லை என்பதாலே வழக்கம்போல இது சரியாக எழுதி முடிக்கப்படாத பிரதி எனும் உணர்வு வருகிறது.

இந்நாவலின் மேலும் இரண்டு பலவீனங்களில் ஒன்று க.நா.சு சில முக்கியமான பாத்திரங்களை, காட்சிகளை நம் கண்முன் எழுந்து வரும்படி காட்சிபூர்வமாகவோ உணர்ச்சிகரமாகவோ எழுதுவதில்லை என்பது. அடுத்த பலவீனம் கதைசொல்லி ஒவ்வொரு தீர்வாகக் கண்டையும்போதும் அதற்குத் தடையாக மற்றொரு சம்பவம் தோன்றி அதிகச் சிக்கலை ஏற்படுத்துவதில்லை என்பது.

நான் இத்தகைய நாவல்களை 'முன்-நாவல்கள்' என்று அழைக்க விரும்புவேன். இவற்றைப் படித்து நாவலாசிரியர்கள் உத்வேகம் கொண்டு இவற்றை மேம்படுத்தி வளர்த்தெடுத்து வேறு சில படைப்புகளை எழுத முடியும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...