ஜெயமோகன் அரவிந்தனுக்கு எழுதிய இழிவான அஞ்சலியைப் படித்தேன். இதைவிட இழிவான அஞ்சலியை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியவர் அவர். இவர்தான் தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வாழ வைக்க அவதாரம் எடுத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் பெருகிவிட்டார்கள். வைரமுத்துவைப் போலவே இலக்கியத்துக்கு ஆபத்தானவர் ஜெயமோகன். அவருடைய முன்னெடுப்புகளால் எவ்வளவுதான் அனுகூலங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் மடாலய முறையை, குருகுல முறையைக் கட்டமைக்கத்தான் பெரிதும் உதவும். அதனால்தான் அவரை எதிர்க்க வேண்டியிருக்கிறது.
தன்னை நிலைநிறுத்த, அதன் உப விளைவாகத் தன்னைச் சார்ந்தோரையும் நிலைநிறுத்த அவர் முன்னெடுக்கும் விஷயங்களை விமர்சனம் செய்தால் உடனே அவர்களைக் கையாலாகாதவர்கள், சோம்பேறிகள் என்பதற்குச் சிலர் கிளம்பிவிடுகிறார்கள். அம்பானி, அதானியும் பல நலத்திட்டங்கள் செய்யவே செய்கிறார்கள். அதற்காக அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு நம்மைக் கையாலாகாதவர்கள் என்று சொல்ல முடியுமா?
ஜெயமோகனின் முன்னெடுப்புகளால் நாலு பேருக்கு நல்லது நடந்தால் சரி என்ற வகையில் மட்டும் அவற்றை வரவேற்கிறேன். மற்றபடி தமிழ் இலக்கியத்துக்கு அவரது முன்னெடுப்புகளால் நன்மையை விட தீமைகளே அதிகம். பன்மைத்தன்மை, விமர்சன மனப்பான்மை போன்றவை அழிந்து ஒருபடித்தான நிலைக்கு இலக்கியம் செல்லக் கூடும். எதிர்க் குரல்கள் குறையக் கூடும். துதிபாடும் மனநிலை அதிகரிக்கக் கூடும். இலக்கியம் நிறுவனமயமாதலைவிட ஆபத்தானது மடாலயமயமாவது. அந்த ஆபத்து ஜெயமோகனால் நடக்கிறது. அதற்காகவே அவரை எதிர்க்க வேண்டும்.
- கவிஞர் ஆசைத்தம்பி
எனக்கு ஜெயமோகனின் நண்பர்கள் அவரது 'நற்பணிகளைப்' பாராட்டி அவரது கெடுதிகளை நியாயப்படுத்திப் பேசும்போதும் "நாயகன்" படத்தில் "நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதையும் செய்யலாம்" என்று வேலு நாயக்கராக கமல் சொல்வது நினைவுக்கு வரும். நாயக்கர் இப்படிச் சொல்லிச் சொல்லி கொலை, கைகால் ஒடிப்பது, பொருட்களைக் கடத்துவது எனப் பம்பரமாகச் செயல்படுவார். தான் கொலை செய்த போலீஸ்காரரின் மகனை வேறு எடுத்து வளர்ப்பார். ஜெயமோகன் ஒரு இலக்கிய வேலு நாயக்கர் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ?
- ஆர். அபிலாஷ்
Comments