முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவம் ஓட்டேரி நரி


 

டிவீஷா ஷர்மா எனும் நடிகையின் கொலை வழக்கு குறித்த செய்தி அறிக்கையை ஹிந்துவில் பார்த்தேன். அதில் "வரதட்சிணைக் கொலைக்கு உள்ளாகும் மகள்கள்" எனும் தொடரை தலைப்பாக வைத்திருந்தார்கள்.

இத்தகைய குற்றங்களைக் கண்டிக்கும் அதே சமயம் இதைக் குறித்த ஒரு சட்டத்திருத்தம் இன்று அவசியமென்றும் வலியுறுத்த வேண்டியுள்ளது - கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக வரதட்சிணை மிரட்டி அழுத்தம் கொடுத்துப் பெறுவதாக இன்று இல்லை. மாறாக பணக்கார குடும்பங்களிலும் மத்திய வர்க்க குடும்பங்களிலும் ஒருசேர 'வரதட்சிணை' சொந்த மகளுக்காக பெற்றோர் கொடுக்கிற சொத்தாக மாறிவிட்டது. பெரும்பாலும் மகள்களே இதைக் கேட்டுப் பெறுகிறார்கள். இன்றைய பெண்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் -அவர்கள் திருமணத்தின்போது வரதட்சிணை வேண்டும் என்று கேட்கிறார்கள். சில டிவி நிகழ்ச்சிகளில் இளம்பெண்கள் வரதட்சிணைக்காக தம் பெற்றோரைத் தொந்தரவு பண்ணி கடனுக்குள் தள்ளுகிற சம்பவங்களும் பேசப்பட்டுள்ளன. ஒரே நிபந்தனை அப்பணமும் நகையும் தம் வசம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். பெற்றோரும் இது தம் மகளுக்கான பாதுகாப்பு என நினைக்கிறார்கள். ஆகையால் நம் சட்டமும் வரதட்சிணை ஒரு 'பரிசாக' இருக்கும்பட்சத்தில் குற்றமில்லை என்கிறது.
இது சிலநேரங்களில் கணவர் குடும்பத்துக்கு உதவுகிறது - கணவருக்கு நெருக்கடி வரும்போது மனைவி தன் நகையை வைத்துக் கொடுக்கிறார். இன்று அரிதாகத்தான் மனைவியின் நகை, பணத்தை கணவர் வீட்டார் அபகரிப்பது நடக்கிறது. மனைவி வேலைக்குப் போய் சம்பாதிப்பவர் என்றால் இப்படி அடகு வைக்க வேண்டிய அவசியமும் வருவதில்லை. மாறாக வீடு வாங்கும்போது நகையை விற்றுக் கொள்கிறார்கள். புத்திசாலிப் பெண்கள் தம் பெயரிலும் சமமாக வீட்டைப் பதிவு செய்யக் கேட்கிறார்கள். இந்த அட்ஜெஸ்ட்மென்ட் ஒரு பிரச்சினை ஆவதில்லை. ஆனால் இருவருக்கும் இடையில் அதிருப்தி நிலவிக் கொண்டிருக்கும். போய் விடலாம் என மனைவி யோசித்துக் கொண்டிருப்பார். அப்போது பார்த்து எதாவது பிரச்சினை வெடிக்கும். இந்த வரதட்சிணைச் செலவுகளை ஒரு குற்றமாகப் பாவித்து மனைவி விவாகரத்து தொடுக்கும்போது மனுவில் எழுதுவார். இப்போது சட்டென எல்லாம் 360 பாகை மாறிவிடும். திருமணத்தின் போது நகையும் பணமும் வரதட்சிணையாகக் கோரப்பட்டு அதில் திருப்தி இல்லாமல் தொடர்ந்து மனைவி துன்புறுத்தப்பட்டு வதைக்கப்பட்டதாக தனி வழக்கு கோருவார்கள். அப்பிரிவில் உள்ளே போனால் பிணை இல்லை. அதை வைத்து பேரம் பேசுவார்கள். வரதட்சிணைப் பணத்துடன் கணவரின் சேமிப்புப் பணம், சொத்து ஆகியவையும் தரப்பட வேண்டும் என்பார்கள். இன்றைய சூழலில் வரதட்சிணை எனும் பெயரில் 10 லட்சம் நகையாகக் கொடுத்தால் 20 லட்சமாவது செட்டில்மெண்டாகப் பெற்றுவிடலாம். இதுவே இன்று நடைமுறை.
சிலநேரங்களில் துரதிஷ்டவசமாக கணவன் மனைவியிடையே பிரச்சினை வெடித்து வாக்குவாதம் வன்முறையாகி கொலையில் முடிகிறது. மனைவியும் விஷம் வைத்தும் ஆள் வைத்தும் கணவரைக் கொல்வதுண்டு. ஆனால் கணவர் தரப்பில் கொலை செய்தால் மட்டும் அதை ஓட்டேரி நரி பேரில் எழுது என்பதைப் போல வரதட்சிணைக் கொடுமைக் குற்றமாக எழுதிவிடுகிறார்கள். ஏனென்றால் (1) இதைக் குடும்பப் பிரச்சினையினால் விளைந்த குற்றமாகப் பாவித்தால் அந்தரங்கமான தகவல்கள் வெளியே வரும். இதை மனைவியின் தரப்பினர் விரும்புவதில்லை. (2) வரதட்சிணைக்காகக் கொலையென்றால் அது திட்டமிட்ட படுகொலை. அதற்கு தண்டனை அதிகம். உணர்ச்சிவயப்பட்டு நடக்கும் கொலையெனும்போது குற்றவாளி மீது இரக்கம் வரலாம். இதில் இரக்கமே இல்லை. ஊரே திரட்டு இவர்களை அடித்துக் கொல் என்று கோரும்.
அதாவது குற்றம் வேறு, ஆனால் குற்றத்திற்கான அடையாளமும், குற்றப் பிரிவும் பொருத்தமற்றவை.
இன்றைய சமூகச் சூழலில் உள்ள சிக்கல்களையும் சட்டம் பரிசீலித்து அதற்கு ஏற்ப மாற வேண்டும் - (1) இன்று பெண்களில் சிலருக்கு திருமணம் கட்டாயம் அல்ல. வலியுறுத்தியே கல்யாணத்துக்குள் தள்ளுகிறார்கள். இயல்பாகவே பிரிவு நடக்கும். அதையும் ஓட்டேரி நரி பெயரிலே எழுதுகிறார்கள். (2) திருமண பந்தத்தின் மீது இன்று கடும் அழுத்தம் வைக்கப்படுகிறது. எப்போதுமே இன்ப மயமாக, வேலையே இல்லாத சொகுசாக அது நடக்க வேண்டும் என்கிறார்கள். அது சாத்தியமல்ல. உணர்வு ரீதியான திருப்தி என இதை அழைக்கிறார்கள். இது காதலிலே கூட இன்று கிடைப்பதில்லை. இந்த அழுத்தமெல்லாம் இன்று ஆண்கள் மீதுதான் விழுகிறது. தினமும் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். வீட்டுக்கு வந்ததும் மனைவியின் உணர்வுகளையும் திருப்திப் படுத்தும் படி காதலைப் பொழிய வேண்டும் எனில் சாத்தியமல்ல. மேலும் ஆண்களின் தேவைகளும் வேறு - அதையும் நாம் பேச வேண்டும். அவர்களுக்கு முதலில் தேவை நல்ல உணவு, உடலுறவு, ஓய்வு, அடுத்துதான் உணர்வுரீதியான திருப்தி. இதையும் பெண்கள் பரிசீலிக்க வேண்டும். ஊடகங்களில் பரவலாக இது பேசப்பட வேண்டும். இன்று பல குடும்பங்கள் உடைவதற்கு இந்தப் போதமைகள் ஒரு காரணம். சும்மா உணர்வுரீதியாகத் திருப்திப்படுத்துவதில்லை, கவனம் கொடுப்பதில்லை என்று பெண்கள் தரப்பில் இருந்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. (3) இணையம் காரணமாகவும் நகர்மயமான சூழலின் விளைவாகவும் ஆணும் பெண்ணும் சுதந்திரமாகச் சந்திக்கவும் உரையாடவும் இன்று சாத்தியங்கள் முன்பை விட அதிகம். ஆகையால் திருமண உறவு உடையத்தான் செய்யும். இப்படி உடைந்து பிரச்சினை வந்தால் (டிவீஷா ஷர்மா விசயத்தில் அவருக்கு திருமணத்துக்கு வெளியே உறவிருந்ததாக அவரது கணவர் தரப்பு சந்தேகப்படுகிறது) அதையும் ஓட்டேரி நரி பெயரிலே எழுதக் கூடாது. கூச்சப்படாமல் ஒப்புக் கொண்டு விலகி விட வேண்டும். கொலைக் குற்றம் நடந்தால் காரணத்தை சரியாகப் பதிவு பண்ண வேண்டும்.
அடுத்து நீதிமன்றமும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்: வரதட்சிணை வழக்கை அதற்குரிய ஆதாரங்கள் இல்லாதபோது பரிசீலிக்கக் கூடாது. திருமணத்தின்போதே வரதட்சிணை ஆவணம் ஒன்றைத் தயாரித்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறை வரவேண்டும். அதற்கு மேல் வரதட்சிணை கேட்கிறார்கள் என்றால் பெண் தரப்பு ஆடியோ வீடியோ ஆதாரம் கொடுக்கட்டும். இன்று இது மிக மிக சுலபமாகி விட்டது: பட்டன் சைசுக்கெல்லாம் வீடியொ காமெரா கிடைக்கிறது. போனில் எதையும் ரகசியமாகப் பதிவு பண்ணலாம். திருமணம் கசக்க ஆரம்பிக்கும்போதே கணவரும் மனைவியும் ஆதாரம் திரட்டத் தொடங்கும்படி சட்டம் கோர வேண்டும். ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
ஓட்டேரி நரி பாவம். 40-50 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகளை இன்னும் அவர் மீது எழுதாதீர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...