எனக்கு விஜய்யிடம் பிடித்த ஒரு விசயம் உண்டு:
தனக்குத் தெரியாத ஒன்றைக் கூட நம்பிக்கையாகச் செய்கிறார். எவ்வளவுதான் சொதப்பினாலும் தைரியமாக மேடையில் வந்து நின்று லட்சக்கணக்கான மக்களை நோக்கி (யுடியூபில் பார்ப்பவர்களையும் சேர்த்து) பேசுகிறார். ஆட்சியே இல்லாத ஒரு ஆட்சியைச் செய்கிறார். மெத்தப் படித்த, அனுபவம் மிக்க அதிகாரிகளிடம் பிளேஸர் அணிந்து கொண்டு அமர்ந்து என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் ஆணையிடுகிறார். வழிநடத்துகிறார்.
சமய சந்தப்பர்ப்பம், நிதிமுதலீடு, மூளைசச்சலவை எப்படி அவருக்குப் பயன்பட்டது, இவையெல்லாம் அவருக்குப் பலன் தருமா என்பதெல்லாம் வேறு விசயம். பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் அந்த இருக்கைக்குப் போக வேண்டுமா, நான் செய்யும் ஒவ்வொரு செயலும் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுமோ எனக் கவலைப்படுவார்கள். ஒரு சாதாரண நேர்முகத்துக்காக வாரக்கணக்காய் படித்து டென்ஷனாகி சொதப்புவோர் உண்டு. எழுத்தாளர்களிலேயே எழுத உத்தேசித்த கதையை அது சரியாக வராமல் போனால் திட்டுவார்களோ என எண்ணி எழுதாததவர்கள் உண்டு. இப்படி எத்தனையோ விசயங்களை நாம் விமர்சனங்களையும், மதிப்பீட்டாளர்களையும் எண்ணி பயந்து கைவிடுகிறோம். ஒட்டுமொத்த உலகமும் இப்படித்தான் நடக்காத விசயங்களின் மீது அமர்ந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் விஜய் ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கம், ஒரு பேராசான் - நமக்கு ஒன்றுமே தெரியாவிட்டாலும் தைரியமாக தன்னம்பிக்கையாக நினைத்ததை நினைத்தது போல் செய்தால் போதும். ஆம், சொதப்பும், சொதப்ப மட்டும்தான் செய்யும். அதற்கென்ன சொதப்புவதற்கும் இந்த உலகில் இடமுண்டு. சொதப்பினாலும்கூட, எதையும் உருப்படியாகச் செய்யாவிட்டாலும் கூட நம்மால் வெல்ல முடியும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் அப்படி நினைத்துக் கொள்ள முடியும். நம்மை யார் தடுக்கப் போகிறார்கள்?
காலையில் எழுந்ததும் எதைக் குறித்து தயக்கம் வந்தாலும், அச்சம் எழுந்தாலும் நான் விஜய்யை நினைத்துக் கொள்கிறேன். உடனே அபாரமான ஒரு ஆற்றல் வந்து என்னை ஆட்கொள்கிறது. வரவர, தைரியமாகச் சொதப்புவோருக்கு மட்டுமே உலகில் இடமுண்டு எனத் தோன்றுகிறது. கச்சிதத்தை, உன்னதத்தை ரொம்ப அதிகமாகக் கொண்டாடி விட்டோம். இனிமேல், ஒன்றுமே தெரியாமல் இருப்பதைக் கொண்டாடுவோம்.
விஜய் ஒரு தப்பான வாக்கியம் பேசினால் ஆயிரம் மீம்கள் போடுகிறார்கள். நாம் அதைவிட படுசொதப்பலான ஒன்றைச் செய்தால் யாருமே கவனிக்கப் போவதில்லை. மீம் போடப் போவதில்லை.
என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என உற்சாகமாக இருப்போம். நாம் பார்த்துக்காவிட்டாலும் அது நடக்கத்தானே போகிறது. உற்சாகம்தான் முக்கியம்.
தப்பித்தவறி நாம் ஜெயித்துவிட்டாலும் - அப்படி ஜெயிக்கிற காலமும் ஒருநாள் வரும் - அப்போதும் நாம் தோற்றுக்கொண்டே இருப்பதாக நம்பி, யாரையாவது திட்டிக்கொண்டு "எங்க எங்கிட்டயா வச்சுக்கிறது" என்று உதார் விடவேண்டும். அப்போது தொடர்ந்து வெல்ல வேண்டிய அழுத்தமும் போய்விடும். தொடர்ந்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பதற்றமாக இருப்போர் நம்மைக் காறித் துப்புவார்கள். அவர்கள் தம் மீதே துப்புகிறார்கள். அது நம் மீது படாது. படவே படாது.
நம்மிடம் கொஞ்சம் பிசிறும் கோமாளித்தனமும் இருக்க வேண்டும். இயல்பிலே நாம் அப்படியானவர்கள் எனில் சாலச் சிறந்தது. எதிரிகள் நம்மை வேடிக்கையாகக் கடந்து போகவும் பிறர் நம்மை ரசிக்கவும் இது உதவும். எல்லாவற்றிலும் கச்சிதத்தை நாடும் விரைப்பானவர்களை விட உலகம் கோமாளிகளையே கொண்டாடுகிறது. தப்புத்தப்பாய், குளறுபடியாய் அதேநேரம் நினைத்ததில் ரொம்ப தீவிரமாக இருப்பவர்கள் வசீகரமானவர்கள்.
முக்கியமாக, நாம் நம்மைக் கண்ணாடியில் பார்த்துவிடக் கூடாது. பார்த்தால் சிரிப்பு வரும். அதை மட்டும் ஒருபோதும் செய்யக் கூடாது.
பின்குறிப்பு: என்ன பயம் வந்தாலும் உடனே நாம் சொல்லிக்க வேண்டியது: "அவரே ஜெயிச்சிட்டார், நம்மால ஏன் முடியாது?"
கருத்துகள்