
நூலனுபவம் (28)
தான் எடுத்துக்கொண்ட களத்தை முழுவதுமாக ஆராய்ந்து எழுதுவது அபிலாஷின் பாணி. நாவல் எழுதும் கலை நூலிலும் அதனையே செய்திருக்கிறார். நாவலாசிரியரின் மனநிலை, உளவியல், நாவலின் வகைகள், நாவலின் உத்திகள், பிரசுரம் என விரிவான தலைப்புகளுடன் எழுதியுள்ளார். நாவலின் வரலாற்றையும் நாவலினை எழுதும் போதும். எழுதிய பிறகும் ஒரு நாவலாசிரியர் அடையும் உளச்சிக்கல்கள் என விரிகிறது நூல். ஒரு நாவலாசிரியராக இருப்பதன் சாதகங்களை முதலில் பேசி இருக்கிறார். உண்மைதான் ஒரு படைப்பாளியாக தன் படைப்புக்குள் நுழையும் அவன் புற உலகின் சிடுக்குகளை கவனம் கொள்வதில்லை. தன் படைப்பின் சிக்கல்களை பேசுவதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அதனாலயே மிகுந்த மனமகிழ்வும் மனத்துன்பமும் அடைகிறான். இம் மனஉணர்வுகள் ஒரு படைப்பாளியால் மட்டுமே அடைய முடிபவை. பிறகு வாசகன் அதன் பலனை அனுபவிக்கிறான்.
நாவலின் அடிப்படைகளாக காலம், சொல்லடுக்குகள், நம்பகத்தன்மையான வசனங்கள், எல்லாவற்றிலும் முதன்மையாக கதையின் உண்மைத்தன்மையின் இருக்க வேண்டும் என கூறுகிறார். நூல் முழுக்கவே ஆசிரியர் வலியுறுத்தும் செய்தி, எழுதுங்கள். அதன் மூலமே அக்கதையில் நீங்கள் திருத்தம் செய்ய ஏதாவது இருக்குமென்கிறார். அதேபோல் நாவலை எழுதிய பின்பு திருத்தம் செய்வது மிக முக்கியம் என்கிறார். அது நாவலில் உள்ள தேவையற்ற பிசிறுகளை வெளியேற்றும் என்கிறார்.
எனக்கு வியப்பளித்த விஷயம் நாவல் என்றால் கதை, அதனைக் கொண்டு விரியும் கதைகளும். இறுதியாக சுபம் என்றிருந்தேன். ஆனால் நாவல் என்பதன் சுவாரசியம் கதையில் இல்லை; சிறு சிறு சம்பவங்களை தகவல்களைக் கொண்டு விரித்து எழுதுவதில் உள்ளது என்று விளக்குகிறார். அதேபோன்று கதைக்கான மொழியே வேண்டுமென்கிறார்.
போலவே சிறு சிறு சம்பவங்களை ஒன்றிலிருந்து இன்னொன்று தூண்டுவதாய் அமையாமல் ஒவ்வொன்றுக்குள்ளும் ஆழமாய் உறைய வைப்பது நாவலாசிரியரின் பணி என்கிறார்.
நூலின் வியப்பான விஷயம் அபிலாஷ் தமிழ், ஆங்கிலம் என கலந்து கட்டி எண்ணற்ற நாவல்களை வாசித்திருப்பது. 'மோகமுள்' அவருக்குள் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அவர் நூலில் அந் நாவலை சிலாகிப்பதைக் கொண்டு உணர முடிகிறது. ஆனால் பெருமாள் முருகனின் ஒரு நாவல் கூட இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமே.
அபிலாஷிடம் எனக்குள்ள பிரச்சனை அவர் நூல்களை இருமுறை வாசிக்க வைத்து விடுகிறார். ஒரு தரமான வாசிப்பின்பத்தை அனுபவிக்க அவை தேவைதான் போலும்.
என்னதான் நாவல்களைப் பற்றி, அதை எழுதுவதைப் பற்றி பேசினாலும் புத்தகத்தின் நீளம் சற்று அதிகமோ எனப்படுகிறது. கூடவே எழுத்தாளனின் ஞாபகம் மறதி இதில் நாவலாசிரியனின் ஞாபக மறதியாக படி எடுக்கிறது.
எப்படி ஆயினும் நாவல் எழுதுவோர் எத்தனிப்போர், எழுதியோர் என எல்லோருக்குமான ஒரு நூலாக ஆசிரியர் இதை படைத்திருக்கிறார். நூலின் இறுதியில் ஆசிரியர் சொல்லி இருப்பது நாவலாசிரியர் ஆகும் எல்லோருக்கும் பயன்படும். "இன்று நாம் செய்ய வேண்டியது சோம்பித் திரியாமல் தன்னொழுக்கத்துடன், ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதுவதும் செயல்படுவதுமே; இன்று பலருக்கும் எழுத நேரமில்லை. ஏனென்றால் நேர மேலாண்மை செய்ய தெரியவில்லை அத்திறனையும் ஒரு இளம் நாவலாசிரியர் வளர்த்துக் கொண்டால் வெற்றி படிக்கட்டுகள் அவன் முன் புலப்படுவது நிச்சயம்."
நூல் : நாவல் எழுதும் கலை
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
வகை : துறைசார் நூல்
பக்கங்கள் : 324
வாங்குவதற்கு: https://www.panuval.com/novel-ezhuthum-kalai-10025667?srsltid=AfmBOoolRoUkM8dS-zHK-xGr5UJpLhz5eUEIOng8nPhThVxuXCa8Ixr6
கருத்துகள்