முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட்சே ஆன்லைன் வகுப்பு

 


நீட்சே ஆன்லைன் வகுப்பு

"இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்" நூல் நீட்சேயின் புத்தகங்களில் மிகவும் கவித்துவமானது. அதனாலே அது மிகவும் பிரசித்தமானது. தமிழிலும் மொழியாக்கப்பட்டு வந்தபோது பரவலாகப் படிக்கப்பட்டது. ஆனால் ஒரு சிக்கல் எழுந்தது. மக்கள் அதிலுள்ள உருவகங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் ஒரு கதையைப் போலப் படித்துக் குழப்பிக் கொண்டனர். அதன் எதிர்-கருத்துக்கள், எகத்தாளமான அறிக்கைகள், தலைகீழாக்கம் மக்களுக்குப் பிடித்திருந்தன. மத-எதிர்ப்பாளர்கள், இறை மறுப்பாளர்களுக்கும் அவை பிடித்திருந்தன. ஆனால் அந்நூலின் ஆழமான பொருள் கணிசமானவர்களைப் போய்ச் சேரவில்லை. நீட்சேயின் பிற நூல்களைப் படித்தும், அவரைக் குறித்து ஆய்வாளர்கள் சொல்வதைத் தெரிந்து கொண்டும் அவரது உருவகங்களைப் பார்க்கையில் முற்றிலும் வேறொரு பொருள் புலப்படுகிறது. நீட்சேயை ஷோப்பன்ஹெர், ஹசர்ள், ஹைடெக்கரின் தத்துவத் தளத்தில் வைத்துப் படிப்பதும், இருத்தலியல் கோணத்தில் விரித்துப் புரிந்து கொள்வதும் நமக்கு பெரிய மனத்திறப்பை அளிக்கக் கூடியவை. இன்னொரு பக்கம், இந்திய தத்துவங்களில் ஆர்வமுள்ளோரும் நாம் மனித பிரக்ஞை, ஆன்மீகம், அக-விழைவு (will) குறித்து என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு அதை வைத்தும் நீட்சேயை ஆழமாகப் படிக்க இயலும். சும்மா கீதையைப் படித்துக் கொண்டு அதன் நீட்சியாகக் கூட "ஜாருதுஷ்டிரனை" ஒப்பீட்டு ஆய்வு செய்ய முடியும். அதன் பூர்வ நூலான பௌத்தத்தில் இருந்து ஒப்பிட்டு வாசிக்க இயலும். ஏனென்றால் நீட்சேயும் ஷோப்பன்ஹெரும் ஹசர்ளும், ஹைடெக்கரும் இந்திய தத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு வாசித்தவர்கள்.
இன்னொன்று, பின்னமைப்பியல், பின்நவீனத்துவம் சார்ந்தும் நீட்சேயைத் தீவிரமாக வாசிக்க இயலும்.
தமிழில் 40-80கள் வரையிலும் நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் நாம் தூய இலக்கியமாக எல்லாவற்றையும் படித்தோம். திருக்குறளைக் கூட வெறுங்கவிதையாகப் படித்து "இதில் கவித்துவமே இல்லையே" என்றவர்கள் நம்மவர்கள். இதன் விளைவாக பல்வேறு அறிவுப்புலங்கள் சார்ந்து இலக்கியத்தைப் படிக்கும் பரிச்சயம் அறுந்து போனது. அதனாலே மேற்கில் இருந்து எது நம்மிடம் வந்தாலும் அதைப் பின்புலமோ தத்துவக் கோணமோ அற்று அனுபவமாகப் படிக்கக் கூடிய மோசமான வழமை தோன்றியது. நீட்சேயும் அதற்குப் பலியானார்.

என் வாசிப்பை ஒட்டி நீட்சேயை இன்னும் ஆழமாகப் படித்துப் பகிர வேண்டும் எனும் விருப்பம் எனக்கு நீண்ட காலமாக உண்டு. அவரை அறிமுகப்படுத்தும் தொடரை முன்பு எழுதி (உடல் நலப்பிரச்சினையால்) முடிக்காமல் விட நேர்ந்தது. வருங்காலத்தில் அதைத் தொடரும் திட்டம் உண்டு. தற்போதைக்கு "இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்" நூலை மட்டும் யுடியூபில் நேரலையாக விளக்கலாம் என இருக்கிறேன். அதற்கு எழுதும் குறிப்புகளையும் தனியாகப் பிரசுரிக்கிறேன்.

நான் ஒரு தத்துவ ஆய்வாளரோ தத்துவ மாணவரோ அல்லன். நான் தத்துவத்தில் ஆர்வம் உள்ள ஒரு எழுத்தாளர். ஆகையால் என்னுடைய அணுகுமுறை ஆய்வுக் கருத்துக்களின் தொகுப்பு, மேற்கோள்களின் அடிப்படையிலான விளக்கம் என்று வகுப்பறை விரிவுரையாக இருக்காது. என் வாசிப்பு, புரிதல், என் கற்பனை என்றுதான் போகும். நான் எங்கிருந்து சில புரிதல்களைப் பெற்றேன் என்பதை மேற்கோள் காட்டுவேன். நீட்சேயைப் படிப்பது ஒரு வாழ்நாள் பணி. ஆயிரக்கணக்கான நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டும் எழுதப்பட்டுக் கொண்டும் வருகின்றன. நான் அங்கிருந்து சிறு துளியை எடுத்துக் கொண்டு வந்து பகிர்கிறேன். அவ்வளவுதான். என் இலக்கு என்னைப் போன்ற தத்துவ ஆர்வம் கொண்ட இலக்கிய வாசகர்களிடம் பகிர்வதுதான். எழுத்தாளர்களுக்கு பல்வேறு துறைகளில் ஆர்வமிருக்கும்; ஆனால் அவர்கள் துறைசார் நிபுணர்கள் அல்லர். நிபுணர்களால் சொல்ல முடியாத ஒரு தரப்பும் பார்வையும் எழுத்தாளர்களிடம் இருக்கும் என ஜெயமோகன் ஓரிடத்தில் சொன்னதை இங்கு நினைவுபடுத்துவது பயனுள்ளது. என்னுடைய வாசிப்பும் அப்படியானதே.

இனி விசயத்துக்கு வருகிறேன் - நேரலையை மாலையில் நடத்தவே திட்டம். 6-7, 7-8, 8-9 ஆகிய நேரங்களில் எது சரியாக வரும்? உங்கள் கருத்துக்களை இங்கு பகிருங்கள். புத்தகத்தை ஓரளவுக்குப் படித்து விட்டு நேரலையில் கலந்து கொள்வது பயனளிக்கும். இல்லாவிட்டால் ஒன்றும் புரியாது. நான் பவாவைப் போல கதை சொல்லப் போவதில்லை. விளக்கம் மட்டுமே. அதனால் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அந்நூலை மேம்போக்காகப் படித்தாலே 10 நாட்களில் முடிக்கலாம். என் நேரலை ஆரம்பிக்கும் முன்பு முதல் 10 அத்தியாயங்களைப் படித்தால் கூட போதும். நேரலையில் பார்வையாளராக நீங்கள் வருவதன் அனுகூலம் பின்னூட்டத்தில் நீங்கள் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர முடியும், அதற்கு நான் பதிலளித்து உரையாட முடியும் என்பது. வெறும் பதிவு பண்ணப்பட்ட காணொளிகளில் அது சாத்தியப்படாது. ஒரு சின்ன குழுவொன்று தொடர்ந்து என்னுட கலந்து கொண்டாலே போதும். தொடர்ச்சியாக வாரம் ஒருமுறை படித்து முடித்துவிடலாம். உற்சாகமாக என்னால் நேரலையைத் தொடர முடியும். யாரும் வராவிட்டால் நேரலையை பாதியில் விட்டுவிடுவேன்.

ஆகையால் கலந்து கொள்ள விருப்பமுள்ளோரும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

தமிழாக்க நூலின் தொடுவழியைப் பகிர்கிறேன். வாங்கிப் படியுங்கள்: https://www.panuval.com/jarathshtra-ivaru-kurinar-10004221?srsltid=AfmBOopZO_jf-z6NDlVyE_se_rYgkVNjB8TrpoOp8pCIowVgeaYAjmcw

நேரடியாக ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு
https://ia601704.us.archive.org/5/items/thusspakezarathu00niet/thusspakezarathu00niet.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...