வாசு முருகவேலின் "அன்னாவில்" மரித்துப் போனவரின் நினைவுக்குள் உலவுகிற பகுதிகள் அபாரமானவை. அதுவும் எதார்த்தமான மினிமனிஸ்டிக்கான மொழியில் எந்த தோரணைகளும் இல்லாமல் எழுதப்பட்ட அப்படைப்பில் இப்படி ஒரு விசயம் நடந்திருப்பதே ஏதோ கனவில் சொல்லப்படும் ரகசியத்தைப் போலவிருக்கும். எனக்கு அந்நாவல் நினைவில் தோன்றும்போதெல்லாம் தமிழில் நாவல் வடிவுக்குள் நாம் நாம் நம் பிரக்ஞையைப் பின்தொடராமல் நடந்த நடக்கிற சம்பவங்களை வெறுமனே தொகுத்தெழுதுவது ஒரு துரதிஷ்டம் என்று ஒரு எண்ணம் எழும். "அன்னா" அந்த எதார்த்தவாத டெம்பிளேட்டை கடக்க முயன்றது என்பதே அதன் சிறப்பு. எனக்கு அந்நாவல் யுவான் ரூல்போவின் "பெட்ரோ பரோமாவை" நினைவுபடுத்தியது. வாசுவிடம் பேசும்போது அவர் அதை யுவான் ரூல்போவின் காவியத்துக்குப் பக்கத்தில் கொண்டு சென்றிருக்க பல சாத்தியங்கள் அதில் இருந்தது, அதைச் சடுதியில் முடித்திருக்கக் கூடாது என்றேன்.
அடுத்து ஒரு முக்கியமான விசயம்: ஒரு நாவலானது அது எதைச் சொல்கிறது என்பதல்ல. ஒன்றை எப்படிச் சொல்கிறது, அச்சொல்முறையின் வழியாக அது 'எதைச் சித்தரிக்கிறது' என்பதே அதைச் சிறந்த நாவலாக்குகிறது. ஒரு நீர்க்குமிழியைப் பார்த்து நீர்க்குமிழாக சித்தரிப்பது சிறப்பல்ல. நீர்க்குமிழி ஒரு நாவலென்றால் அதன் மீது நடனமாடும் பிரதிபலிப்புகளே நம் பிரக்ஞை, அதைச் சொல்வதற்கானதே அந்நாவலின் குறியீட்டுத்தளம். அது நமக்குள் எப்படி ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்பதே வாசிப்பு. "அன்னாவை" அதனாலே ஈழப்பிரச்சினை, அகதிப் பிரச்சினை பற்றிய நாவல் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் நாவல் என்பது தினத்தந்தி பேப்பர் அல்ல. அது அதையும் தாண்டிச் சென்று எந்த அரசியலுக்குள்ளும் அதிகாரத்துக்குள்ளும் பட்டுவிடாமல் தன்னை நிலைத்து வைத்திருக்க பிரயத்தனிக்கும் பெண்ணின் இருத்தல் அவ்வாறே வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் நடுவே தன்னை நிறுத்திக் கொள்வதைப் பேசுகிறது.
கருத்துகள்