தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இரு நாவல்களில் ஒரு லட்சம் சொற்களைக் கடந்து விட்டேன். பெரும்பாலும் இந்த ஆண்டுக்குள் ஒரு நாவலை முடித்து அடுத்த ஆண்டு திருத்தங்கள் செய்து கொண்டு வருவேன் என நினைக்கிறேன். இதற்கு இடையே அடுத்த நாவலையும் முடிப்பதுதான் திட்டம். ஒரு நாவல் சமகால உலகம் குறித்த ஒரு மிகுபுனைவு. இதன் களம் புதுமையானது. யாரும் இதுவரை எனக்குத் தெரிந்து எழுதிப் பாராதது. மற்றொன்று மும்முனைக் காதல், ஆணுலகம், குத்துச்சண்டை, ஆண் நட்பு எனப் போகும் மற்றொரு சமகாலக் கதை.
மிகுபுனைவு நாவலை இந்த ஆண்டு ஆரம்பித்தேன். குத்துச்சண்டை நாவலை நான்காண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தேன். அதன் இறுதிப் பகுதியில் ஒரு சிக்கல் வந்ததும் அதை சரிசெய்த பின்னர் முடிக்கலாம் என்று எடுத்து வைத்து அடுத்த நாவலுக்குள் போனேன். அதன்பிறகு அவ்வப்போது எடுத்து வைத்துப் படித்து சில திட்டங்கள் போடுவேன். அப்படி இப்படி இரண்டு நாவல்களையும் மாற்றி மாற்றி எழுதத் தொடங்கினேன். ஜிம்மில் குத்துச்சண்டை பயிலும்போது அல்லது டிவியில் பார்க்கும்போது ஒரு ஐடியா வரும். எழுத ஆரம்பிப்பேன். அப்படியே உள்ளே புகுந்து கதையைத் திருத்துவது, புது அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருப்பேன். புதிய நாவலின் மொழியும் உணர்வும் வேறு என்பதால் அதிலிருந்து இது ஒரு புத்துணர்ச்சியான மாற்றமாக இருக்கும்.
எனக்குத் தெரிந்து நாவலை எழுதுவதை விட அதைச் 'சரியாக' வெளிப்படுத்துவது கடினம். என்னதான் நாம் திருத்தி எழுதினாலும், பலமுறைகள் முயன்றாலும், கதையமைப்பை வலுப்படுத்தினாலும் நாவலின் மையம் அரூபமான சில கருத்துக்களாலும் உணர்வுகளாலும் ஆனது. இன்னதென்று சொல்ல முடிவது நாவலின் கரு. இன்னதென சொல்லில் வடிக்க முடியாதது நாவலின் ஆன்மா. நாவலை எழுதுவது இந்த ஆன்மாவைத் தழாவி, கையால் பற்றிப் பிடித்து மீண்டும் மீண்டும் தவற விடுகிற காரியம். அதனாலே நாவலை முடித்து திருத்தும் வரையிலும் அது எப்படி வருகிறது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. அதுதான் நாவலின் சுவாரஸ்யமும். இதே காரணத்தால்தான் நான் நாவலின் சொல் அளவை (word length) வைத்து அதை முடித்ததாக நம்புவதில்லை. அதாவது இன்று ஆரம்பித்து மூன்று-ஆறு மாதங்களில் 180 பக்கங்களை எட்டினால் கதையை முடித்து வைத்து நாவல் முடிந்துவிட்டது என நான் நம்புவதில்லை. அது புறவடிவம் மட்டுமே. புறவடிவம் நாவல் அல்ல.
அதனாலே மேற்சொன்ன திட்டத்தையும் நான் நிபந்தனைக்குட்பட்டதாகவே இங்கு வைக்கிறேன்.
கருத்துகள்