முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் புதிய உத்தி



அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறுவதான சேதியும் அவர் புது கட்சி ஆரம்பிப்பதான சேதிகளும் சுவரொட்டிகளும் அவராகப் பணம் கொடுத்துப் பரப்புவதுதான். அவர் எப்போதுமே ஊடகங்களுக்கு நிறைய செலவு செய்பவர்.

இது நிகழுமெனில் பாஜக தவெகவை நேரடியாக எதிர்க்க தான் மட்டும் போதாது, அண்ணாமலையையும் ஒரு மாற்று விஜய்யாக வைத்து ஒரு மாற்றுக் கட்சியை உருவாக்கி பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்து தப்பிக்கலாம் எனக் கருதுகிறது எனப் பொருள். அதாவது இனி தவெக எனும் பாஜக (திமுக எதிர்ப்பு), தவெக எனும் திமுக (பாஜக எதிர்ப்பு), அண்ணாமலையின் கட்சியான மாற்று பாஜக, நிஜ பாஜக என பல கட்சிகள் களமாடும். மிகுதியான தகவல்கள், உணர்வுத் தூண்டுதலைத் தரும் பிம்பங்கள், காணொளிகளைக் கொண்டு மக்களின் மூளையை நிரப்பி சிந்திக்க விடாமல் பண்ணுவதும், அரசியல் மாய்மாலங்களால் கவனத்தைத் தொடர்ந்து திருப்பி திராவிட அரசியல் இல்லை எனும் பிரமையை ஏற்படுத்துவதும், விஜய் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதுமே அவர்களுடைய உத்தேசமாக இருக்கும்.
முக்கியமாக, இங்குள்ள பாஜக ஆதரவு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் ஐடி விங் கூட்டத்தினரும் தீவிரமாக அண்ணாமலையின் கட்சியை ஆதரிப்பர்.
விஜய்யைப் போல இன்னொரு விஜய்யை இங்கு உருவாக்குவது சுலபம். அதற்கான டூல் கிட் தயாராக உள்ளது.
முதலில் ஊடகங்கள் மூலமாக ஒரு தலைவருக்குப் பெரும் ஆதரவு உள்ளதாகக் காட்ட வேண்டும்.
அடுத்து அவரைக் கொண்டு ஆளும் அரசை நேரடியாக எதிர்க்க வைக்க வேண்டும்.
அவர் ஊழலற்றவர், தூய்மையானவர், அதிரடியானவர், மக்கள் ஆதரவு கொண்டவர், பாஜக அவரை ஏமாற்றிவிட்டது எனப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மேற்சொன்ன ஊடக பிரமை, திரட்டப்பட்ட கூட்டம், ஐடி விங் பரபரப்பைக் கொண்டு போலி மக்கள் ஆதரவு பிம்பத்தைக் கட்டமைத்த பின், அவருக்கு அடுத்த மாநிலத் தேர்தலில் 30-40 இடங்களை வாக்கு எந்திரத்தை டியூன் செய்து வைத்துக் கொடுத்து விடுவார்கள். இந்த இடங்கள் அதிமுக திமுகவுக்கான இடங்களாக இருக்கும். இதை ஏற்க வைத்துவிட்டால் அவர்களால் அதற்கடுத்த தேர்தலில் இந்தப் புதிய கட்சிக்கு 120 இடங்களைக் கொடுத்து ஆட்சியமைக்க வைக்க முடியும்.
இப்போது இவையெல்லாம் ஹேஷ்யம்தான். அவ்வப்போதுள்ள சூழலைப் பொறுத்து முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் நான்கு விசயங்கள் நிச்சயம்:
1) விஜய்க்கு மட்டும் வாக்கு எந்திர சொகுசால் வாக்குகளை அள்ளிக் கொடுத்து ஆட்சிக்குக் கொண்டு வந்தது அண்ணாமலையின் ஆசையையும் தூண்டிவிட்டது. தான் உருவாக்கிய அலையை விஜய் பயன்படுத்தி வென்றுவிட்டார் என்று கூட அவர் நம்பலாம். பாஜக தலைமையிடம் இதைக் குறித்து ஏதோ ஒரு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
2) பாஜக ஆதரவாளர்கள் சட்டென பாஜக தலைமை அண்னாமலையை ஏமாற்றியது தவறு, அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், அவர்கள் ஒரு உள்ளூர் தலைவர் வலுவாக உருவாகி வருவதை வெறுக்கிறார்கள் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். பாஜகவுக்கு எதிர்முகமாக அவர்கள் அண்ணாமலையைக் கட்டமைப்பார்கள். இன்னொரு பக்கம் அவர் தவெகவையும் கடுமையாக எதிர்ப்பார். அதே சமயம் அவர் பாஜகவின் அரசியலையோ கொள்கையையோ எதிர்க்க மாட்டார்.
3) பாஜக தன்னை நேரடியாக 'ஆட்சிக்குக் கொண்டு வர' உத்தேசிக்கவில்லை. அதற்கான எதிர்ப்பு கடுமையாக உள்ளது எல்லாருக்கும் தெரியும். அதற்குப் புதுத் தலைமைகள் எனும் பல பொய் முகங்கள் தேவையுள்ளன. இத்தலைமைகள் உள்ளூர் பிரபல முகங்களாக, கறுப்பான தோற்றம் கொண்டவர்களாக, மத்திய சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் பின்னணி, வரலாறு இருக்கக் கூடாது. கறைபடியாதவர் என்பதே இவர்களின் பிரதான வசீகரமாக இருக்கும். இதன் மூலம் பாஜக, இந்துத்துவா, மோடி எதிர்ப்பு எனும் கதையாடலைத் தகர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள்.
4) மேற்சொன்ன அசைவுகளை விஜய் விரும்பவில்லை. அதனாலே அவர் சண்டை தனக்கும் திமுகவுக்கும் மட்டும்தான் என திருச்சியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...