அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறுவதான சேதியும் அவர் புது கட்சி ஆரம்பிப்பதான சேதிகளும் சுவரொட்டிகளும் அவராகப் பணம் கொடுத்துப் பரப்புவதுதான். அவர் எப்போதுமே ஊடகங்களுக்கு நிறைய செலவு செய்பவர்.
இது நிகழுமெனில் பாஜக தவெகவை நேரடியாக எதிர்க்க தான் மட்டும் போதாது, அண்ணாமலையையும் ஒரு மாற்று விஜய்யாக வைத்து ஒரு மாற்றுக் கட்சியை உருவாக்கி பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்து தப்பிக்கலாம் எனக் கருதுகிறது எனப் பொருள். அதாவது இனி தவெக எனும் பாஜக (திமுக எதிர்ப்பு), தவெக எனும் திமுக (பாஜக எதிர்ப்பு), அண்ணாமலையின் கட்சியான மாற்று பாஜக, நிஜ பாஜக என பல கட்சிகள் களமாடும். மிகுதியான தகவல்கள், உணர்வுத் தூண்டுதலைத் தரும் பிம்பங்கள், காணொளிகளைக் கொண்டு மக்களின் மூளையை நிரப்பி சிந்திக்க விடாமல் பண்ணுவதும், அரசியல் மாய்மாலங்களால் கவனத்தைத் தொடர்ந்து திருப்பி திராவிட அரசியல் இல்லை எனும் பிரமையை ஏற்படுத்துவதும், விஜய் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதுமே அவர்களுடைய உத்தேசமாக இருக்கும்.
முக்கியமாக, இங்குள்ள பாஜக ஆதரவு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் ஐடி விங் கூட்டத்தினரும் தீவிரமாக அண்ணாமலையின் கட்சியை ஆதரிப்பர்.
விஜய்யைப் போல இன்னொரு விஜய்யை இங்கு உருவாக்குவது சுலபம். அதற்கான டூல் கிட் தயாராக உள்ளது.
முதலில் ஊடகங்கள் மூலமாக ஒரு தலைவருக்குப் பெரும் ஆதரவு உள்ளதாகக் காட்ட வேண்டும்.
அடுத்து அவரைக் கொண்டு ஆளும் அரசை நேரடியாக எதிர்க்க வைக்க வேண்டும்.
அவர் ஊழலற்றவர், தூய்மையானவர், அதிரடியானவர், மக்கள் ஆதரவு கொண்டவர், பாஜக அவரை ஏமாற்றிவிட்டது எனப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மேற்சொன்ன ஊடக பிரமை, திரட்டப்பட்ட கூட்டம், ஐடி விங் பரபரப்பைக் கொண்டு போலி மக்கள் ஆதரவு பிம்பத்தைக் கட்டமைத்த பின், அவருக்கு அடுத்த மாநிலத் தேர்தலில் 30-40 இடங்களை வாக்கு எந்திரத்தை டியூன் செய்து வைத்துக் கொடுத்து விடுவார்கள். இந்த இடங்கள் அதிமுக திமுகவுக்கான இடங்களாக இருக்கும். இதை ஏற்க வைத்துவிட்டால் அவர்களால் அதற்கடுத்த தேர்தலில் இந்தப் புதிய கட்சிக்கு 120 இடங்களைக் கொடுத்து ஆட்சியமைக்க வைக்க முடியும்.
இப்போது இவையெல்லாம் ஹேஷ்யம்தான். அவ்வப்போதுள்ள சூழலைப் பொறுத்து முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் நான்கு விசயங்கள் நிச்சயம்:
1) விஜய்க்கு மட்டும் வாக்கு எந்திர சொகுசால் வாக்குகளை அள்ளிக் கொடுத்து ஆட்சிக்குக் கொண்டு வந்தது அண்ணாமலையின் ஆசையையும் தூண்டிவிட்டது. தான் உருவாக்கிய அலையை விஜய் பயன்படுத்தி வென்றுவிட்டார் என்று கூட அவர் நம்பலாம். பாஜக தலைமையிடம் இதைக் குறித்து ஏதோ ஒரு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
2) பாஜக ஆதரவாளர்கள் சட்டென பாஜக தலைமை அண்னாமலையை ஏமாற்றியது தவறு, அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், அவர்கள் ஒரு உள்ளூர் தலைவர் வலுவாக உருவாகி வருவதை வெறுக்கிறார்கள் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். பாஜகவுக்கு எதிர்முகமாக அவர்கள் அண்ணாமலையைக் கட்டமைப்பார்கள். இன்னொரு பக்கம் அவர் தவெகவையும் கடுமையாக எதிர்ப்பார். அதே சமயம் அவர் பாஜகவின் அரசியலையோ கொள்கையையோ எதிர்க்க மாட்டார்.
3) பாஜக தன்னை நேரடியாக 'ஆட்சிக்குக் கொண்டு வர' உத்தேசிக்கவில்லை. அதற்கான எதிர்ப்பு கடுமையாக உள்ளது எல்லாருக்கும் தெரியும். அதற்குப் புதுத் தலைமைகள் எனும் பல பொய் முகங்கள் தேவையுள்ளன. இத்தலைமைகள் உள்ளூர் பிரபல முகங்களாக, கறுப்பான தோற்றம் கொண்டவர்களாக, மத்திய சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் பின்னணி, வரலாறு இருக்கக் கூடாது. கறைபடியாதவர் என்பதே இவர்களின் பிரதான வசீகரமாக இருக்கும். இதன் மூலம் பாஜக, இந்துத்துவா, மோடி எதிர்ப்பு எனும் கதையாடலைத் தகர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள்.
4) மேற்சொன்ன அசைவுகளை விஜய் விரும்பவில்லை. அதனாலே அவர் சண்டை தனக்கும் திமுகவுக்கும் மட்டும்தான் என திருச்சியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசுகிறார்.
கருத்துகள்