எனக்கு மைசூர்வாசிகளிடம் ஒரு விசயம் பிடிக்கும் - அவர்கள் இங்கு வரவிருக்கிற சோ கால்ட் வளர்ச்சித் திட்டங்களை மைசூர் ஒரு பாரம்பரிய நகரம், இங்குள்ள மரபான சின்னங்கள் அழிந்துவிடும் எறு சொல்லி நீண்ட காலமாகவே எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தடுக்க முடியாதபடி வளர்ச்சி எனும் டினோசர் ஓடி வந்துகொண்டே இருக்கிறது. இங்குள்ள அழகான சாலைகள், மரங்கள் எல்லாம் விரைவில் அழிக்கப்பட்டு ஏகப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு இது ஒரு புழுதிப்படலமாக மாறும். குப்பைகள் சாலை ஓரங்களில் குவியும். வருவாய் அதிகமாகும். ஆனால் அதற்குக் கொடுக்கிற கூலி மிகப்பெரியதாக இருக்கும்.
வளர்ச்சியின் முக்கியமான பிரச்சினை அது முறைப்படுத்தப்பட்டதாக இருக்காது என்பதே - நகரத்திற்குள் எத்தனை வீடுகள் கட்டலாம், விவசாய நிலங்களை விற்கலாமா, நீர்நிலைகளை கட்டிடமாக்க அழிக்கலாமா என்பது குறித்து அரசுக்கு எந்தத் தீர்மானமும் இருக்காது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று திறந்து விட்டுவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு விதிமுறைகள் இருந்தாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள் (அமைச்சர்களே ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களாக, டெண்டர் வாங்குவோராக இருப்பதால்). அடுத்து, ஒரு பெருநகரம் உருவாவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்த மாட்டார்கள். சாலை வசதி, பாலங்கள், இயற்கையுடன் இணைந்த கட்டிடங்கள் எனத் திட்டமிட்டு கட்டிவிட்டு இத்தனை மக்கள் வரப் போகிறார்கள், அவர்களுக்கான வசதிகளை இவ்வளவு கொடுத்துவிட்டோமா எனச் சோதித்துவிட்டு முதலீடுகளை அனுமதிக்க மாட்டார்கள். முதலில் தனியார் முதலீடு, அதையொட்டி தானாகவே அமைய வேண்டும் கட்டமைப்பு என்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குள் எவ்வளவு சுருட்டலாம் என்பதைத் தாண்டி அரசுக்கு எந்த அக்கறையும் இருக்காது.
நகரங்களில் வேலை தேடி வருவோரும் குடிபெயர்வோரும் (நல்ல தண்ணீர், இடம், காற்று என) அடிப்படை வசதிகளற்றுத் தவிப்பதும், அதிகமான செலவீனங்களில் சிக்கி ஒரு மத்திய வர்க்க வாழ்க்கைக்கே ஏதோ உயர்வர்க்கம் போலச் செலவு செய்யும் நிலை வருவதுமே நடக்கிறது. ஏனென்றால் நம் நாட்டில் இவ்வளவு கோளாறுகளுக்கும் அப்பால் வாழ உயர்வர்க்கத்தினரால் மட்டுமே முடியும். ஆகையால் அடிப்படை வசதிக்கே எல்லாரும் பணக்காரர் ஆகத் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. நகரமயமாக்கலால் கிடைத்த ஒரே நல்ல விசயம் பசியாற்ற முடியும் என்பதுதான். அரசின் கேண்டீனுக்குச் சென்று ஐந்து ரூபாய்க்குத் தின்ன முடியும். அதைத் தாண்டி எந்த உத்தரவாதமும் இல்லை.
இதையே தொழில்வளர்ச்சியை சின்னச்சின்ன தொழில்பேட்டைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் எல்லா கிராமங்களிலும் அடிப்படை வசதிகளைப் பெருக்குவதன் வழியாக அரசு பரவலாக்க முடியும். தனியார் முதலீடு இல்லாத பட்சத்தில் அரசே முதலீடு செய்து ஆரம்பிக்கலாம். விவசாயத்திலும் அரசு முதலீடு செய்து விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுக்கலாம். விவசாயிகளுக்கு நிரந்தர சம்பளம் கொடுக்கலாம். உள்ளூர் உற்பத்தி சார்ந்து மட்டுமே நுகர்வு இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டால் ஓரளவுக்கு காய்கறி விலையைக் கட்டுப்படுத்தி விவசாயிகள் நட்டப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 30% காய்கறிகளை நாம் வருடத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதுவேதான் அரிசிக்கும் நடக்கிறது - 36%. அரசே வேளாண்மையையும் கொள்முதலையும் வினியோகத்தையும் எடுத்து நடத்தினால் இதைக் குறைக்க முடியும். இடைத்தரகர்கள் இல்லாததால் விலை கணிசமாகக் குறையும். நீர்வளத்தையும் அரசே சரிசெய்கிற கட்டாயம் விளையும். ஒவ்வொரு தொழிலுக்கும் இதைச் செய்தால் பரவலான வளர்ச்சியும் தரமான வாழ்க்கையும் சாத்தியமாகும். ஏற்றத்தாழ்வு குறையும். சாராய ஆலைத் தொழிலதிபர்களும் லாட்டரி முதலாளிகளும் நம்மை ஆளும் நிலை மாறும்.
இதை வெற்றிகரமாகச் செய்ய மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தொழில்களின் வளர்ச்சி லாபத்தையும் வைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆளும் காலத்தை தீர்மானிக்கிறபடி சட்டம் வரவேண்டும்.
நவீன அரசுகளுக்கு பொருளாதார அணுகுமுறை உள்ளதைப் போல நகரக்கட்டமைப்புக் கொள்கைகள் இல்லை. மேற்சொன்ன மாதிரியான சட்டங்களும் நம்மிடம் இல்லை. நம்மை ஆள்வோருக்குச் சிந்திக்கும் திறனும் இல்லை.
கருத்துகள்