தவெக ஆட்சியை ஏன் இப்படிச் சாடுகிறீர்கள், உங்களுக்கு எப்படி அப்படி வெறுப்பு என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "எனக்கு தவெக ஆட்சி மெல் எந்த வெறுப்பும் இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஆட்சியே இல்லை. என் பிரச்சினை தவெக அல்ல, என் பிரச்சினை தவெகவே இல்லை என்பதே. நான் சொல்வது நிஜம். யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம்.
இங்கு நடப்பது லாட்டரி மார்ட்டின் ஆட்சி. 25 நாட்களில் 5000 கோடிக்கு மேல் கனிம வள முதலாளிகளிடம் இருந்து கமிஷன் வாங்கி மார்ட்டினின் தொழில் முதலீட்டுக்காக அனுப்புகிறார்கள் எனும் குற்றச்சாட்டைப் பாருங்கள். அதில் ஒரு பங்கை தவெக தலைமைக்கும் கொடுத்திருப்பார்கள். நான் மறுக்கவில்லை. அதனாலே அது தவெக தலைமை ஆட்சி செய்வதாக ஆகாது. தவகவை வைத்து மார்ட்டின் ஆள்கிறார் என்பதே பொருள் ஆகும். மார்ட்டின் பல மோசடிகள் வழியாக சம்பாதித்த பணத்தை ("காட்பாதர்" படத்தில் வருவதைப் போல) நேரடியாக வணிகத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார். கூடவே மோசடித் தொழிலையும் தொடர்ந்தார். அவருக்கு அது போதவில்லை. அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்து பாதுகாப்புத் தேடுவதை விட கட்சி தொடங்கலாம் என நினைத்து ஆதவை அனுப்பினார். அவர் பல கட்சிகளில் புகுந்து புறப்பட்டு விஜய்யை அடைந்தார். அப்படி நிகழ்ந்ததே தவெக. தவெகவை வைத்து வெறுமனே பேரம் பேசி கமிஷனை ஈட்டி இன்னொரு பக்கம் தன் தொழிலை விருத்தி செய்கிறார். இப்பணத்தை நாளை அவர் தன் கட்சியில் கூட முதலீடு பண்ண மாட்டார். இம்முறை பாஜகவுக்கு விஜய் தேவைப்பட்டதைப் போல அடுத்த தேர்தலில் பயன்படவில்லை என்றால் வாக்குப்பதிவு எந்திரம் மக்கர் பண்ணும். அப்படி நிகழ்ந்தால் மார்ட்டின் மொத்த கமிஷன் வருமானத்தையும் (லட்சம் கோடிகளில்) அள்ளியெடுத்து இன்னொரு மாநிலத்தில் முதலீடு பண்ணுவார். லாட்டரி, அது இதுவென பொதுமக்கள் இந்தியா முழுக்க சுரண்டப்படுவர்.
மார்ட்டின் மட்டுமல்ல, விஜய்யை வைத்து வேறு சில மோசடி தொழிலதிபர்களும் இங்கு கொள்ளையடிக்கிறார்கள்.
முன்பெல்லாம் கமிஷன் இருக்கும். ஆட்சியும் பண்ணுவார்கள். இப்போது ஆட்சியோ நிர்வாகமோ இல்லை. ஏனென்றால் இது கட்சியே அல்ல. இவர்கள் ஒரு தோற்றம் மட்டுமே.
நாளை இவர்கள் மீது விசாரணை நடத்தவும் முடியாது. மார்ட்டின் தனக்கும் இந்த கட்சிக்கும் சம்மந்தமே இல்லை என்பார். விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட பிறரும் அவ்வாறே கையை விரிப்பார்கள். அமைச்சர்களிடமும் கேட்க முடியாது. அவர்களுக்குத் தம் துறையே என்னவென்று தெரியாது. அவர்களும் பெரிதாக அடிக்க முடியாது. கீழே விழுபவற்றைப் பொறுக்கவே முடியும். முதலமைச்சருக்கு எம்.எல்.ஏவா அமைச்சரா ஒன்றுமே தெரியாது. சந்தேகமிருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்கள். அதனாலே அவரால் எந்தப் பிரச்சினைக்கும் தெளிவாக நடைமுறைத் தீர்வு சொல்ல முடிவதில்லை.
உங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரிய வேண்டும் என்றால் கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் வி.டி சதீஷன் பேசுவதைக் கேட்டு அதை விஜய்யின் பேச்சுடன் ஒப்பிடுங்கள். அவர் தன் முடிவுகளை நியாயப்படுத்துவதைப் பாருங்கள். புள்ளிவிபரங்களுடன் சட்டசபையில் நேராகவே விவாதிக்கிறார். சரியோ தவறோ அவர்களுக்கு ஆட்சியில் நடக்கிற விசயங்கள் தெரிகின்றன.
தவெகவுக்கு உள்ளது ஒரு ஸ்டார்ட்டிங் டிரபிள், முதிர்ச்சியின்மை என்று நான் நினைக்கவில்லை. நடப்பது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு நாடகம். நாடகத்தை வைத்து பின்னால் நடக்கும் கொள்ளை. முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணத்தை திரும்ப முறைகேடாக பல மடங்குகளில் எடுக்கிற ஆவேசமான முயற்சிகள். போகப் போக இவர்களுக்கு முதிர்ச்சியும் நேர்த்தியும் வராது. நாடகம் போடுவதில் முதிர்ச்சி அதிகரிக்கும். அவ்வளவுதான்.
எனக்கு இதைப் பார்த்துதான் கோபம். எனக்கு மார்ட்டின் மீதும், ஆதவ் மீதும், வேறு 'முதலீட்டாளர்கள்' மீதும்தான் கோபம். இதையெல்லாம் நாம் விஜய், தவெக என திசைதிருப்புவதைப் பார்த்து கோபம். இல்லாத நபர்களை, கட்சியை வைத்து எனக்கு கோபம் இல்லை.
எனக்குத் தெரிந்து முதல்வரே இல்லாத, ஆளுங்கட்சியே இல்லாத ஒரே ஆட்சி தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. அதைப் பார்த்து கோபம்!
சாலையில் ஒரு உடல் நடந்து போகிறது. அதற்கு தலையே இல்லை. அது தாறுமாறாக நடக்கிறது. ஆனால் தைரியமாக நடக்கிறது. தன் பெயர் தமிழ்நாடு என்கிறது. அதைப் பார்த்து கோபம்."
கருத்துகள்