ஏன் வாசிக்க வேண்டும்? - ஆர்.அபிலாஷ்
நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்த ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு புத்தகக் கடைக்குச் செல்வொம். அங்கே நுழைந்தவுடன் நாம் என்ன புத்தகத்தை வாங்க வேண்டும் என நினைத்தோமோ அந்தப் புத்தகத்தை மறக்க வைக்குமளவுக்கு இன்னும் நிறைய புத்தகங்கள், குறிப்பாக பல புதிய வெளியீடுகள் புத்தம் புதிய அட்டைப்படத்துடன் நம்மை வெகுவாக ஈர்க்கும். பின் அட்டையில் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பத்தி அப்புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என இழுக்கும். அதைப் போலவே இன்னும் பல புத்தகங்கள்.
அதையெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவோம். ஆனால் புத்தகங்களை கடையில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் இப்போது கொஞ்சம் வற்றிப்போயிருக்கும்.
இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் படிக்கலாம், இதோ ஆபிஸ் வேலையை முடித்துவிட்டுப் படிக்கலாம், இரவில் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகப் படிக்கலாம், அதிகாலையில் எழுந்தால் நன்கு ஊன்றிப் படிக்கலாம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்போம்.
நம்மேல் நமக்கே ஒரு எரிச்சல் வரும். ஏன் நம்மால் படிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை, அப்படியே படித்தாலும் சில நிமிடங்கள் கூட ஏன் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை என பல கேள்விகள்.
இக்கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கிறது இப்புத்தகம்.
ரீடர்ஸ் ப்ளாக் என்றால் என்ன, நேரங்காலம் பார்க்காமல் நம்மை எப்படி வாசிப்புக்குத் தயார்ப்படுத்துவது, வேகமாய் வாசிப்பது எப்படி,
இலக்கிய வாசிப்பில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் சிக்கல்கள், அதற்கான தீர்வு,
தத்துவ வாசிப்பை எதிலிருந்துத் துவங்குவது, உளவியல் வாசிப்பு என்றால் அதன் வகைகள், அதற்கான நூல்களை வாசிக்கும் தன்மை,
வாசிப்பின் மற்ற உள்ளார்ந்த பிரச்சினைகளை எப்படி சரிபண்ணுவது,
அவ்வளவு ஏன் கழிப்பறையில் கூட தீவிரமாக வாசிக்கும் மனநிலை என்ன என்பதையும் ஒரு அறிமுக வாசகன் முதல் தேர்ந்த வாசகர்கள் வரை அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றிற்கும் முடிந்தளவுக்கு விலாவரியாக, எளிமையாக விளக்கியுள்ளார் அபிலாஷ்.
ஏன் வாசிக்க வேண்டும், எதையெல்லாம் வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல்களுக்கான நல்ல புத்தகம்.
நன்றி
இளவரசன் காந்தி
Abilash Chandran #ஏன்வாசிக்கவேண்டும்
கருத்துகள்