முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதையை கேட்பது

Image result for அசோகமித்திரன்

கதைகளை நாம் கண்களால் வாசிப்பது தான் வழக்கம். ஆங்கிலத்தில் ஒலி நூல்கள் பிரபலம். ஆனால் பழக்கம் காரணமாய் நான் எப்போதும் வாசிக்கவே பிரியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்த பின் அங்குள்ள சக ஆய்வாளர்களான நண்பர்கள் அருள், டேவிட் ஆகியோர் குழுவாய் சேர்ந்து ஒரு கதையை வாசித்து கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். எல்லா வெள்ளிக்கழமையும் சில நண்பர்கள் சேர்ந்து மெரீனா கடற்கரையில் படைப்புகளை வாசித்து கேட்டு அது குறித்து கலந்துரையாடுகிறார்கள். இந்த குழுவுக்கு Men Friday என பேரிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்துறை மாணவர்கள் என்பதால் ஆங்கிலப்பெயர் போல.


துறையில் இருக்கையில் எதேச்சையாய் ஏதாவது ஒரு கதையை பற்றி பேச்சு ஆரம்பித்து அதை கூட்டமாய் வாசிக்கவும் துவங்குவோம். அப்படித் தான் நான் போன வியாழக்கிழமை அசோகமித்திரனின் “விருந்து” கதை பற்றி அருளிடம் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன். அ.மியின் இரு மொத்த தொகுப்புகளும் எங்கள் நெறியாளரின் நூலகத்திலேயே இருந்ததால் உடனே எடுத்து வாசிக்க துவங்கினோம். விருந்து, பயணம், எலி, பூனை, புலிக்கலைஞன் ஆகிய ஐந்து கதைகளை நானும் டேவிட்டுமாய் வாசித்தோம். பெரும்பாலான கதைகளை டேவிட் அழகாய் ஏற்ற இறக்கங்களுடன் சரியான தொனி மாற்றங்களுடன் வாசித்தார். ஒரு கதையை கண்களால் வாசிப்பதை விட கேட்பது இன்னும் அதிகமாய் கற்பனையை தூண்டுகிறது என்பதை அனைவருமே உணர்ந்தோம். கேட்கையில் கதை கண் முன் காட்சிபூர்வமாய் நிகழ்கிறது. இது ஒரு அலாதியான அனுபவம்.

“பயணம்” எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான கதை. அக்கதையை அபௌதிகவாதம் மீதான பகடியாய் மட்டுமே இதுவரை புரிந்து வைத்திருந்தேன். கடினமான யோகா பயிற்சி மூலம் தன் உடலை முழுக்க கட்டுப்படுத்துபவராய், உடலின் எல்லைகளை விரிவுபடுத்தி அதைக் கடந்து பயணிப்பவராய் அதில் வருகிற குருநாதர் இருக்கிறார். அவருக்கு உடல் நலமில்லாமல் போக சீடன் அவரை காடு, மலைப் பாதைகளில் சுமந்து கொண்டு ஒரு கிராமத்துக்கு பயணிக்கிறான். அப்போது அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், தான் எப்படியும் ஒரு அற்ப உடல் தான் என குருநாதர் நிரூபிக்கும் இடங்கள், இறுதியில் குருவின் உடலை ஓநாய்கள் சீடனிடம் இருந்து பிடுங்கி புசிப்பது என கதை உடல் இம்மண்ணின் ஒரு பகுதி தான் என கூறுவதாய் கருதியிருந்தேன். ஆனால் அன்றைய வாசிப்பு எனக்கு இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. அதில் வருகிற குருநாதர் பெரிய சித்தர். அவர் சலனமின்றி மூச்சு விடக் கூடியவர். ஆனால் நோய்வாய்ப்படும் போது எளிய காரியங்கள் செய்வதற்கே அதிகம் சிரமப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மூச்சுக்காய் திணறும் இடம் வருகிறது. அப்போது நமக்கு பரிதாபம் வருகிறது. என்ன தான் சித்தர் என்றாலும் அற்ப மனிதப் பதர் தானே எனத் தோன்றுகிறது. பிறகு கதையில் இன்னொரு தளம் திறக்கிறது.

இரவில் குருவின் உடலை ஒரு ஓநாயிடம் இருந்து சீடன் காப்பாற்றுகிறான். மறுநாள் அவர் இறந்து விட்டதை உணர்கிறான். அவர் உடலை எப்படியாவது கிராமத்துக்கு கொண்டு போய் முறைப்படி புதைத்து விட வேண்டும். ஆனால் இரவுக்குள் அவனால் மலையை கடக்க இயலவில்லை. இரவு வருகிறது. கூடவே ஓநாய்க் கூட்டமும். அவற்றை விரட்டி பிணத்தை பாதுகாக்கையில் அவனுக்கு தானும் அந்த ஓநாய்களில் ஒருவனோ என குழப்பம் ஏற்படுகிறது. ஓநாய்கள் பல திசைகளில் இருந்தும் அவனைத் தாக்கி குலைத்து அதிரடியாய் பிணத்தை பிடுங்க முயல்கின்றன. அவன் தொடர்ந்து ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் ஓநாய்கள் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்றன. மறுநாள் குருநாதரின் சிதைந்து போன பிணத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான். தலையை காணவில்லை. ஆனால் ஒரு கையில் ஒரு ஓநாயின் பிய்ந்த கை இருக்கிறது. கதை முடிகிறது. இம்முடிவு எனக்கு இது குருநாதர் மற்றும் சீடனின் மனதின் பயணமாகவும் இருக்கலாம் என நினைக்க தூண்டியது.
ஓநாய்களுடனான போராட்டம் அச்சீடனின் மனப்போராட்டத்தின், குருவுடனான அகமோதலின் குறியீடாய் இருக்கலாம். நோயின் விளிம்பில் தன் உடம்பில் இருந்து வெளியேறும் குருநாதர் தன் அபார கட்டுப்பாடு காரணமாய் ஓநாய்கள் தன் உடலை குதறுகையில் மீண்டும் வந்து விடுகிறார். அப்போது அவர் தன் உடலுக்காய் போராடுகிறார். மிருகத்தோடு மிருகமாய் சண்டையிட்டு ஓநாயின் கையை பிய்த்து எடுக்கிறார். ஒரு கட்டத்தில் குருநாதரும் சீடனும் கானகத்தின் மத்தியில் மிருக நிலையை அடைந்து போராடுகிற சித்திரத்தை நான் அன்று கதை கேட்கையில் மனதில் உருவாக்கினேன். ஆன்மாவின் உச்சத்தை நாடி பயிலும் இருவர் தம்முள் உள்ள மிருகநிலையின் உச்சத்தை அடைவதைக் காட்டும் கதையாய் ஒரு புது பார்வை கிடைத்தது. நல்ல கதைகளின் குணம் இது. அவை எவ்வளவு முறை வாசித்தாலும் எப்போதும் ஒரு புது ஜன்னலைத் திறந்து எதிர்பாராத காட்சியை காட்டும்.
“பயணம்” மாந்திரிக தன்மை கொண்டது. கவித்துவமானது. அசோகமித்திரன் பாணி கதையே அல்ல. புதுமைப்பித்தன் விளையாடுகிற கதைக் களம் இது (கபாடபுரம்). இக்கதை எனக்கு ஹெமிங்வேயின் படைப்புகளையும் நினைவுபடுத்தியது.


கருத்துகள்

Jjkk இவ்வாறு கூறியுள்ளார்…
அபாரம். உங்கள் men Friday குழு போன்ற குழுவில் சேர்ந்து இது போன்ற கதைகளை வாசிக்கவும் கேட்கவும் ஆர்வமாக உள்ளது. தமிழில் சிறந்த கதைகள் ஒலி நூல்களாக வந்தால் வாசகர்களின் எண்ணிக்கை கூடும் என்பது என் கருத்து.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...