Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கதையை கேட்பது

Image result for அசோகமித்திரன்

கதைகளை நாம் கண்களால் வாசிப்பது தான் வழக்கம். ஆங்கிலத்தில் ஒலி நூல்கள் பிரபலம். ஆனால் பழக்கம் காரணமாய் நான் எப்போதும் வாசிக்கவே பிரியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்த பின் அங்குள்ள சக ஆய்வாளர்களான நண்பர்கள் அருள், டேவிட் ஆகியோர் குழுவாய் சேர்ந்து ஒரு கதையை வாசித்து கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். எல்லா வெள்ளிக்கழமையும் சில நண்பர்கள் சேர்ந்து மெரீனா கடற்கரையில் படைப்புகளை வாசித்து கேட்டு அது குறித்து கலந்துரையாடுகிறார்கள். இந்த குழுவுக்கு Men Friday என பேரிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்துறை மாணவர்கள் என்பதால் ஆங்கிலப்பெயர் போல.


துறையில் இருக்கையில் எதேச்சையாய் ஏதாவது ஒரு கதையை பற்றி பேச்சு ஆரம்பித்து அதை கூட்டமாய் வாசிக்கவும் துவங்குவோம். அப்படித் தான் நான் போன வியாழக்கிழமை அசோகமித்திரனின் “விருந்து” கதை பற்றி அருளிடம் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன். அ.மியின் இரு மொத்த தொகுப்புகளும் எங்கள் நெறியாளரின் நூலகத்திலேயே இருந்ததால் உடனே எடுத்து வாசிக்க துவங்கினோம். விருந்து, பயணம், எலி, பூனை, புலிக்கலைஞன் ஆகிய ஐந்து கதைகளை நானும் டேவிட்டுமாய் வாசித்தோம். பெரும்பாலான கதைகளை டேவிட் அழகாய் ஏற்ற இறக்கங்களுடன் சரியான தொனி மாற்றங்களுடன் வாசித்தார். ஒரு கதையை கண்களால் வாசிப்பதை விட கேட்பது இன்னும் அதிகமாய் கற்பனையை தூண்டுகிறது என்பதை அனைவருமே உணர்ந்தோம். கேட்கையில் கதை கண் முன் காட்சிபூர்வமாய் நிகழ்கிறது. இது ஒரு அலாதியான அனுபவம்.

“பயணம்” எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான கதை. அக்கதையை அபௌதிகவாதம் மீதான பகடியாய் மட்டுமே இதுவரை புரிந்து வைத்திருந்தேன். கடினமான யோகா பயிற்சி மூலம் தன் உடலை முழுக்க கட்டுப்படுத்துபவராய், உடலின் எல்லைகளை விரிவுபடுத்தி அதைக் கடந்து பயணிப்பவராய் அதில் வருகிற குருநாதர் இருக்கிறார். அவருக்கு உடல் நலமில்லாமல் போக சீடன் அவரை காடு, மலைப் பாதைகளில் சுமந்து கொண்டு ஒரு கிராமத்துக்கு பயணிக்கிறான். அப்போது அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், தான் எப்படியும் ஒரு அற்ப உடல் தான் என குருநாதர் நிரூபிக்கும் இடங்கள், இறுதியில் குருவின் உடலை ஓநாய்கள் சீடனிடம் இருந்து பிடுங்கி புசிப்பது என கதை உடல் இம்மண்ணின் ஒரு பகுதி தான் என கூறுவதாய் கருதியிருந்தேன். ஆனால் அன்றைய வாசிப்பு எனக்கு இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. அதில் வருகிற குருநாதர் பெரிய சித்தர். அவர் சலனமின்றி மூச்சு விடக் கூடியவர். ஆனால் நோய்வாய்ப்படும் போது எளிய காரியங்கள் செய்வதற்கே அதிகம் சிரமப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மூச்சுக்காய் திணறும் இடம் வருகிறது. அப்போது நமக்கு பரிதாபம் வருகிறது. என்ன தான் சித்தர் என்றாலும் அற்ப மனிதப் பதர் தானே எனத் தோன்றுகிறது. பிறகு கதையில் இன்னொரு தளம் திறக்கிறது.

இரவில் குருவின் உடலை ஒரு ஓநாயிடம் இருந்து சீடன் காப்பாற்றுகிறான். மறுநாள் அவர் இறந்து விட்டதை உணர்கிறான். அவர் உடலை எப்படியாவது கிராமத்துக்கு கொண்டு போய் முறைப்படி புதைத்து விட வேண்டும். ஆனால் இரவுக்குள் அவனால் மலையை கடக்க இயலவில்லை. இரவு வருகிறது. கூடவே ஓநாய்க் கூட்டமும். அவற்றை விரட்டி பிணத்தை பாதுகாக்கையில் அவனுக்கு தானும் அந்த ஓநாய்களில் ஒருவனோ என குழப்பம் ஏற்படுகிறது. ஓநாய்கள் பல திசைகளில் இருந்தும் அவனைத் தாக்கி குலைத்து அதிரடியாய் பிணத்தை பிடுங்க முயல்கின்றன. அவன் தொடர்ந்து ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் ஓநாய்கள் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்றன. மறுநாள் குருநாதரின் சிதைந்து போன பிணத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான். தலையை காணவில்லை. ஆனால் ஒரு கையில் ஒரு ஓநாயின் பிய்ந்த கை இருக்கிறது. கதை முடிகிறது. இம்முடிவு எனக்கு இது குருநாதர் மற்றும் சீடனின் மனதின் பயணமாகவும் இருக்கலாம் என நினைக்க தூண்டியது.
ஓநாய்களுடனான போராட்டம் அச்சீடனின் மனப்போராட்டத்தின், குருவுடனான அகமோதலின் குறியீடாய் இருக்கலாம். நோயின் விளிம்பில் தன் உடம்பில் இருந்து வெளியேறும் குருநாதர் தன் அபார கட்டுப்பாடு காரணமாய் ஓநாய்கள் தன் உடலை குதறுகையில் மீண்டும் வந்து விடுகிறார். அப்போது அவர் தன் உடலுக்காய் போராடுகிறார். மிருகத்தோடு மிருகமாய் சண்டையிட்டு ஓநாயின் கையை பிய்த்து எடுக்கிறார். ஒரு கட்டத்தில் குருநாதரும் சீடனும் கானகத்தின் மத்தியில் மிருக நிலையை அடைந்து போராடுகிற சித்திரத்தை நான் அன்று கதை கேட்கையில் மனதில் உருவாக்கினேன். ஆன்மாவின் உச்சத்தை நாடி பயிலும் இருவர் தம்முள் உள்ள மிருகநிலையின் உச்சத்தை அடைவதைக் காட்டும் கதையாய் ஒரு புது பார்வை கிடைத்தது. நல்ல கதைகளின் குணம் இது. அவை எவ்வளவு முறை வாசித்தாலும் எப்போதும் ஒரு புது ஜன்னலைத் திறந்து எதிர்பாராத காட்சியை காட்டும்.
“பயணம்” மாந்திரிக தன்மை கொண்டது. கவித்துவமானது. அசோகமித்திரன் பாணி கதையே அல்ல. புதுமைப்பித்தன் விளையாடுகிற கதைக் களம் இது (கபாடபுரம்). இக்கதை எனக்கு ஹெமிங்வேயின் படைப்புகளையும் நினைவுபடுத்தியது.


Comments

Jjkk said…
அபாரம். உங்கள் men Friday குழு போன்ற குழுவில் சேர்ந்து இது போன்ற கதைகளை வாசிக்கவும் கேட்கவும் ஆர்வமாக உள்ளது. தமிழில் சிறந்த கதைகள் ஒலி நூல்களாக வந்தால் வாசகர்களின் எண்ணிக்கை கூடும் என்பது என் கருத்து.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...