முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதையை கேட்பது

Image result for அசோகமித்திரன்

கதைகளை நாம் கண்களால் வாசிப்பது தான் வழக்கம். ஆங்கிலத்தில் ஒலி நூல்கள் பிரபலம். ஆனால் பழக்கம் காரணமாய் நான் எப்போதும் வாசிக்கவே பிரியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்த பின் அங்குள்ள சக ஆய்வாளர்களான நண்பர்கள் அருள், டேவிட் ஆகியோர் குழுவாய் சேர்ந்து ஒரு கதையை வாசித்து கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். எல்லா வெள்ளிக்கழமையும் சில நண்பர்கள் சேர்ந்து மெரீனா கடற்கரையில் படைப்புகளை வாசித்து கேட்டு அது குறித்து கலந்துரையாடுகிறார்கள். இந்த குழுவுக்கு Men Friday என பேரிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்துறை மாணவர்கள் என்பதால் ஆங்கிலப்பெயர் போல.


துறையில் இருக்கையில் எதேச்சையாய் ஏதாவது ஒரு கதையை பற்றி பேச்சு ஆரம்பித்து அதை கூட்டமாய் வாசிக்கவும் துவங்குவோம். அப்படித் தான் நான் போன வியாழக்கிழமை அசோகமித்திரனின் “விருந்து” கதை பற்றி அருளிடம் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன். அ.மியின் இரு மொத்த தொகுப்புகளும் எங்கள் நெறியாளரின் நூலகத்திலேயே இருந்ததால் உடனே எடுத்து வாசிக்க துவங்கினோம். விருந்து, பயணம், எலி, பூனை, புலிக்கலைஞன் ஆகிய ஐந்து கதைகளை நானும் டேவிட்டுமாய் வாசித்தோம். பெரும்பாலான கதைகளை டேவிட் அழகாய் ஏற்ற இறக்கங்களுடன் சரியான தொனி மாற்றங்களுடன் வாசித்தார். ஒரு கதையை கண்களால் வாசிப்பதை விட கேட்பது இன்னும் அதிகமாய் கற்பனையை தூண்டுகிறது என்பதை அனைவருமே உணர்ந்தோம். கேட்கையில் கதை கண் முன் காட்சிபூர்வமாய் நிகழ்கிறது. இது ஒரு அலாதியான அனுபவம்.

“பயணம்” எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான கதை. அக்கதையை அபௌதிகவாதம் மீதான பகடியாய் மட்டுமே இதுவரை புரிந்து வைத்திருந்தேன். கடினமான யோகா பயிற்சி மூலம் தன் உடலை முழுக்க கட்டுப்படுத்துபவராய், உடலின் எல்லைகளை விரிவுபடுத்தி அதைக் கடந்து பயணிப்பவராய் அதில் வருகிற குருநாதர் இருக்கிறார். அவருக்கு உடல் நலமில்லாமல் போக சீடன் அவரை காடு, மலைப் பாதைகளில் சுமந்து கொண்டு ஒரு கிராமத்துக்கு பயணிக்கிறான். அப்போது அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், தான் எப்படியும் ஒரு அற்ப உடல் தான் என குருநாதர் நிரூபிக்கும் இடங்கள், இறுதியில் குருவின் உடலை ஓநாய்கள் சீடனிடம் இருந்து பிடுங்கி புசிப்பது என கதை உடல் இம்மண்ணின் ஒரு பகுதி தான் என கூறுவதாய் கருதியிருந்தேன். ஆனால் அன்றைய வாசிப்பு எனக்கு இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. அதில் வருகிற குருநாதர் பெரிய சித்தர். அவர் சலனமின்றி மூச்சு விடக் கூடியவர். ஆனால் நோய்வாய்ப்படும் போது எளிய காரியங்கள் செய்வதற்கே அதிகம் சிரமப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மூச்சுக்காய் திணறும் இடம் வருகிறது. அப்போது நமக்கு பரிதாபம் வருகிறது. என்ன தான் சித்தர் என்றாலும் அற்ப மனிதப் பதர் தானே எனத் தோன்றுகிறது. பிறகு கதையில் இன்னொரு தளம் திறக்கிறது.

இரவில் குருவின் உடலை ஒரு ஓநாயிடம் இருந்து சீடன் காப்பாற்றுகிறான். மறுநாள் அவர் இறந்து விட்டதை உணர்கிறான். அவர் உடலை எப்படியாவது கிராமத்துக்கு கொண்டு போய் முறைப்படி புதைத்து விட வேண்டும். ஆனால் இரவுக்குள் அவனால் மலையை கடக்க இயலவில்லை. இரவு வருகிறது. கூடவே ஓநாய்க் கூட்டமும். அவற்றை விரட்டி பிணத்தை பாதுகாக்கையில் அவனுக்கு தானும் அந்த ஓநாய்களில் ஒருவனோ என குழப்பம் ஏற்படுகிறது. ஓநாய்கள் பல திசைகளில் இருந்தும் அவனைத் தாக்கி குலைத்து அதிரடியாய் பிணத்தை பிடுங்க முயல்கின்றன. அவன் தொடர்ந்து ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் ஓநாய்கள் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்றன. மறுநாள் குருநாதரின் சிதைந்து போன பிணத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான். தலையை காணவில்லை. ஆனால் ஒரு கையில் ஒரு ஓநாயின் பிய்ந்த கை இருக்கிறது. கதை முடிகிறது. இம்முடிவு எனக்கு இது குருநாதர் மற்றும் சீடனின் மனதின் பயணமாகவும் இருக்கலாம் என நினைக்க தூண்டியது.
ஓநாய்களுடனான போராட்டம் அச்சீடனின் மனப்போராட்டத்தின், குருவுடனான அகமோதலின் குறியீடாய் இருக்கலாம். நோயின் விளிம்பில் தன் உடம்பில் இருந்து வெளியேறும் குருநாதர் தன் அபார கட்டுப்பாடு காரணமாய் ஓநாய்கள் தன் உடலை குதறுகையில் மீண்டும் வந்து விடுகிறார். அப்போது அவர் தன் உடலுக்காய் போராடுகிறார். மிருகத்தோடு மிருகமாய் சண்டையிட்டு ஓநாயின் கையை பிய்த்து எடுக்கிறார். ஒரு கட்டத்தில் குருநாதரும் சீடனும் கானகத்தின் மத்தியில் மிருக நிலையை அடைந்து போராடுகிற சித்திரத்தை நான் அன்று கதை கேட்கையில் மனதில் உருவாக்கினேன். ஆன்மாவின் உச்சத்தை நாடி பயிலும் இருவர் தம்முள் உள்ள மிருகநிலையின் உச்சத்தை அடைவதைக் காட்டும் கதையாய் ஒரு புது பார்வை கிடைத்தது. நல்ல கதைகளின் குணம் இது. அவை எவ்வளவு முறை வாசித்தாலும் எப்போதும் ஒரு புது ஜன்னலைத் திறந்து எதிர்பாராத காட்சியை காட்டும்.
“பயணம்” மாந்திரிக தன்மை கொண்டது. கவித்துவமானது. அசோகமித்திரன் பாணி கதையே அல்ல. புதுமைப்பித்தன் விளையாடுகிற கதைக் களம் இது (கபாடபுரம்). இக்கதை எனக்கு ஹெமிங்வேயின் படைப்புகளையும் நினைவுபடுத்தியது.


கருத்துகள்

Jjkk இவ்வாறு கூறியுள்ளார்…
அபாரம். உங்கள் men Friday குழு போன்ற குழுவில் சேர்ந்து இது போன்ற கதைகளை வாசிக்கவும் கேட்கவும் ஆர்வமாக உள்ளது. தமிழில் சிறந்த கதைகள் ஒலி நூல்களாக வந்தால் வாசகர்களின் எண்ணிக்கை கூடும் என்பது என் கருத்து.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.