Skip to main content

கதையை கேட்பது

Image result for அசோகமித்திரன்

கதைகளை நாம் கண்களால் வாசிப்பது தான் வழக்கம். ஆங்கிலத்தில் ஒலி நூல்கள் பிரபலம். ஆனால் பழக்கம் காரணமாய் நான் எப்போதும் வாசிக்கவே பிரியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்த பின் அங்குள்ள சக ஆய்வாளர்களான நண்பர்கள் அருள், டேவிட் ஆகியோர் குழுவாய் சேர்ந்து ஒரு கதையை வாசித்து கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். எல்லா வெள்ளிக்கழமையும் சில நண்பர்கள் சேர்ந்து மெரீனா கடற்கரையில் படைப்புகளை வாசித்து கேட்டு அது குறித்து கலந்துரையாடுகிறார்கள். இந்த குழுவுக்கு Men Friday என பேரிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்துறை மாணவர்கள் என்பதால் ஆங்கிலப்பெயர் போல.


துறையில் இருக்கையில் எதேச்சையாய் ஏதாவது ஒரு கதையை பற்றி பேச்சு ஆரம்பித்து அதை கூட்டமாய் வாசிக்கவும் துவங்குவோம். அப்படித் தான் நான் போன வியாழக்கிழமை அசோகமித்திரனின் “விருந்து” கதை பற்றி அருளிடம் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன். அ.மியின் இரு மொத்த தொகுப்புகளும் எங்கள் நெறியாளரின் நூலகத்திலேயே இருந்ததால் உடனே எடுத்து வாசிக்க துவங்கினோம். விருந்து, பயணம், எலி, பூனை, புலிக்கலைஞன் ஆகிய ஐந்து கதைகளை நானும் டேவிட்டுமாய் வாசித்தோம். பெரும்பாலான கதைகளை டேவிட் அழகாய் ஏற்ற இறக்கங்களுடன் சரியான தொனி மாற்றங்களுடன் வாசித்தார். ஒரு கதையை கண்களால் வாசிப்பதை விட கேட்பது இன்னும் அதிகமாய் கற்பனையை தூண்டுகிறது என்பதை அனைவருமே உணர்ந்தோம். கேட்கையில் கதை கண் முன் காட்சிபூர்வமாய் நிகழ்கிறது. இது ஒரு அலாதியான அனுபவம்.

“பயணம்” எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான கதை. அக்கதையை அபௌதிகவாதம் மீதான பகடியாய் மட்டுமே இதுவரை புரிந்து வைத்திருந்தேன். கடினமான யோகா பயிற்சி மூலம் தன் உடலை முழுக்க கட்டுப்படுத்துபவராய், உடலின் எல்லைகளை விரிவுபடுத்தி அதைக் கடந்து பயணிப்பவராய் அதில் வருகிற குருநாதர் இருக்கிறார். அவருக்கு உடல் நலமில்லாமல் போக சீடன் அவரை காடு, மலைப் பாதைகளில் சுமந்து கொண்டு ஒரு கிராமத்துக்கு பயணிக்கிறான். அப்போது அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், தான் எப்படியும் ஒரு அற்ப உடல் தான் என குருநாதர் நிரூபிக்கும் இடங்கள், இறுதியில் குருவின் உடலை ஓநாய்கள் சீடனிடம் இருந்து பிடுங்கி புசிப்பது என கதை உடல் இம்மண்ணின் ஒரு பகுதி தான் என கூறுவதாய் கருதியிருந்தேன். ஆனால் அன்றைய வாசிப்பு எனக்கு இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. அதில் வருகிற குருநாதர் பெரிய சித்தர். அவர் சலனமின்றி மூச்சு விடக் கூடியவர். ஆனால் நோய்வாய்ப்படும் போது எளிய காரியங்கள் செய்வதற்கே அதிகம் சிரமப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மூச்சுக்காய் திணறும் இடம் வருகிறது. அப்போது நமக்கு பரிதாபம் வருகிறது. என்ன தான் சித்தர் என்றாலும் அற்ப மனிதப் பதர் தானே எனத் தோன்றுகிறது. பிறகு கதையில் இன்னொரு தளம் திறக்கிறது.

இரவில் குருவின் உடலை ஒரு ஓநாயிடம் இருந்து சீடன் காப்பாற்றுகிறான். மறுநாள் அவர் இறந்து விட்டதை உணர்கிறான். அவர் உடலை எப்படியாவது கிராமத்துக்கு கொண்டு போய் முறைப்படி புதைத்து விட வேண்டும். ஆனால் இரவுக்குள் அவனால் மலையை கடக்க இயலவில்லை. இரவு வருகிறது. கூடவே ஓநாய்க் கூட்டமும். அவற்றை விரட்டி பிணத்தை பாதுகாக்கையில் அவனுக்கு தானும் அந்த ஓநாய்களில் ஒருவனோ என குழப்பம் ஏற்படுகிறது. ஓநாய்கள் பல திசைகளில் இருந்தும் அவனைத் தாக்கி குலைத்து அதிரடியாய் பிணத்தை பிடுங்க முயல்கின்றன. அவன் தொடர்ந்து ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் ஓநாய்கள் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்றன. மறுநாள் குருநாதரின் சிதைந்து போன பிணத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான். தலையை காணவில்லை. ஆனால் ஒரு கையில் ஒரு ஓநாயின் பிய்ந்த கை இருக்கிறது. கதை முடிகிறது. இம்முடிவு எனக்கு இது குருநாதர் மற்றும் சீடனின் மனதின் பயணமாகவும் இருக்கலாம் என நினைக்க தூண்டியது.
ஓநாய்களுடனான போராட்டம் அச்சீடனின் மனப்போராட்டத்தின், குருவுடனான அகமோதலின் குறியீடாய் இருக்கலாம். நோயின் விளிம்பில் தன் உடம்பில் இருந்து வெளியேறும் குருநாதர் தன் அபார கட்டுப்பாடு காரணமாய் ஓநாய்கள் தன் உடலை குதறுகையில் மீண்டும் வந்து விடுகிறார். அப்போது அவர் தன் உடலுக்காய் போராடுகிறார். மிருகத்தோடு மிருகமாய் சண்டையிட்டு ஓநாயின் கையை பிய்த்து எடுக்கிறார். ஒரு கட்டத்தில் குருநாதரும் சீடனும் கானகத்தின் மத்தியில் மிருக நிலையை அடைந்து போராடுகிற சித்திரத்தை நான் அன்று கதை கேட்கையில் மனதில் உருவாக்கினேன். ஆன்மாவின் உச்சத்தை நாடி பயிலும் இருவர் தம்முள் உள்ள மிருகநிலையின் உச்சத்தை அடைவதைக் காட்டும் கதையாய் ஒரு புது பார்வை கிடைத்தது. நல்ல கதைகளின் குணம் இது. அவை எவ்வளவு முறை வாசித்தாலும் எப்போதும் ஒரு புது ஜன்னலைத் திறந்து எதிர்பாராத காட்சியை காட்டும்.
“பயணம்” மாந்திரிக தன்மை கொண்டது. கவித்துவமானது. அசோகமித்திரன் பாணி கதையே அல்ல. புதுமைப்பித்தன் விளையாடுகிற கதைக் களம் இது (கபாடபுரம்). இக்கதை எனக்கு ஹெமிங்வேயின் படைப்புகளையும் நினைவுபடுத்தியது.


Comments

Jjkk said…
அபாரம். உங்கள் men Friday குழு போன்ற குழுவில் சேர்ந்து இது போன்ற கதைகளை வாசிக்கவும் கேட்கவும் ஆர்வமாக உள்ளது. தமிழில் சிறந்த கதைகள் ஒலி நூல்களாக வந்தால் வாசகர்களின் எண்ணிக்கை கூடும் என்பது என் கருத்து.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...