Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரவிச்சந்திரன் அஷ்வின் – தனி வழி!

Image result for ravichandran ashwin

ரவிச்சந்திரன் அஷ்வின் மிக குறைந்த ஆட்டங்களில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். அது மட்டுமல்ல 50, 100, 150 விக்கெட்டுகள் என ஒவ்வொரு மைல்கல்லையும் மிக குறைந்த டெஸ்ட் ஆட்டங்களில் சாதித்தவர் அஷ்வின். அவர் சீறிப் பாய்கிற வேகத்தை பார்த்தால் தன் முன்னோடியான ஹர்பஜனை அடுத்த ஐந்து வருடங்களில் தாண்டி சென்று விடுவார் எனத் தோன்றுகிறது. ஹர்பஜனின் விக்கெட் எண்ணிக்கை 417. அப்படியானால் அஷ்வின் ஓய்வு பெறும் போது அவர் இந்தியாவின் சிறந்த சுழலர்களில் அனில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக மட்டுமே இருப்பார். தாமதமாக சுழல் பந்தை தேர்ந்தெடுத்து ஆடத் துவங்கிய போது அஷ்வினே தான் இப்படியான சிகரங்களை தொட முடியும் என நம்பி இருக்க மாட்டார்.

அஷ்வின் பத்தொன்பது வயதில் தான் off spin பழகத் துவங்கினார் என்கிறார் அவரது பயிற்சியாளர் சுப்பிரமணியம். அதுவரை அவர் ஒரு துவக்க பேட்ஸ்மேனாக இருந்தார். இருபதாவது வயதில் தமிழக அணியில் ஆடத் துவங்கிய அஷ்வின் இந்தியாவுக்காக ஆடியது 25 வயதில். ஹர்பஜனோ பதினைந்து வயதிலேயே சுழலராக ஜொலிக்க துவங்கி விட்டார். 18 வயதில் அவர் இந்தியாவுக்காக ஆடினார். அஷ்வின் எவ்வளவு தாமதமாய் தன் கலையை பழகி அதில் சாதனைகள் படைக்க துவங்கினார் பாருங்கள்.
ஹர்பஜனுக்கும் அஷ்வினுக்குமான ஒப்பீடுகள் வேறு சுவாரஸ்யமான விசயங்களையும் சொல்கின்றன. ஹர்பஜன் பந்து வீச துவங்கிய போதே அவர் கிட்டத்தட்ட முழுமையான பவுலராக இருந்தார். அவரது சுழல் பந்துகளில் drift, loop, பவுன்ஸ் ஆகிய அம்சங்கள் 18 வயதிலேயே இருந்தன. அது மட்டுமல்ல தூஸ்ராவையும் அப்போதே வீசினார். ஆனால் அஷ்வின் தமிழகத்துக்கு வீச துவங்கிய போது அவரது off spinner அதிகமாய் திரும்பாது. அவர் இந்தியாவுக்காக ஆடிய போது கூட (இலங்கையின் அஜந்தா மெண்டிஸின் தாக்கத்தால் உருவாக்கிய) சுண்டு விரலால் நிமிண்டி வீசப்படும் சொடுக்குப் பந்துக்காக தான் அறியப்பட்டார். அதனுடன் arm ball எனப்படும் நேராக செல்லும் பந்தும் அவருக்கு உதவியது. கேப்டன் தோனியே இவ்வாறு அஷ்வினை மதிப்பிட்டார்: ”அஷ்வினை பார்க்கும் போது உடனே வாவ் என சொல்லத் தோன்றாது. அவர் பந்தை காற்றில் சுழற்றி மிதக்க விட மாட்டார். நேராய் தட்டையாய் வீசுபவர் போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவர் நுணுக்கமான சாமர்த்தியமான street smart (நடைமுறை விவேகம் மிக்க) பவுலர்”.
உள்ளூர் ஆட்டங்களில் சுழல் ஆடுதளங்களில் அவர் மலர் கொய்வது போல் விக்கெட்டுகளை கொத்துகொத்தாய் வீழ்த்தினாலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய தேசங்களில் பந்து வீசிய போது தன் போதாமைகளை அஷ்வின் உணர்ந்து கொண்டார். அப்போது மே.இ சுழலர் சுனில் நரைனின் பாணியில் கூட அஷ்வின் வீச துவங்கி இருந்தார். பலவித வெரைட்டி பந்துகளை முயன்று அவரது பவுலிங் ஆக்‌ஷன் கோளாறாகி போயிருந்தது. அஷ்வின் இப்போது கடுமையாய் பயிற்சி செய்து தன் ஆதார பந்தான பேட்ஸ்மேனை நோக்கி உள்திரும்பும் off spinnerஐ நன்றாய் வீச துவங்கினார். பந்தை வீசும் போது தோள் மட்டும் அல்லாமல் மொத்த உடலையும் பயன்படுத்த கற்றார். இது அவரது பந்துகளுக்கு drifஐ கொண்டு வந்தது.
Drift என்றால் பந்து பேட்ஸ்மேனுக்கு வெளியே சுழன்று போவதாய் மாயம் காட்டும். ஆனால் இறுதி நொடியில் சட்டென அது வெளியே செல்லாமல் உள்ளே வரும். இந்த பந்தைக் கொண்டு பல இடதுகை பேட்ஸ்மேன்களை அஷ்வின் LBW செய்தார். இதே பந்தை உள்ளே வருவதாய் காட்டி வெளியே திருப்பவும் அவரால் முடியும். கடந்த இலங்கை பயணத் தொடரில் அவர் தொடர்ந்து இலங்கை பேட்டிங் மேதையான சங்கக்காராவை இவ்வாறு தான் வெளியேற்றினார்.
பந்து வீச்சை இவ்வாறு மெருகேற்றியபின் அஷ்வினுக்கு இப்போது ஆடுதளத்தின் உதவி பெருமளவில் தேவைப்படுவதில்லை. தன் சூட்சுமங்கள், flight, drift மூலம் மட்டுமே அவரால் இன்று விக்கெட்டுகள் வீழ்த்த முடியும்.
அஷ்வின் ஒரு நடைமுறைவாத பவுலர். எதிரணி பேட்ஸ்மேன் எப்படி ஆடுகிறார், ஆடுதளத்தின் நிலை என்ன, அந்த நேரத்தில் எதை செய்தால் விக்கெட் விழும் ஆகிய விசயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குவார். தொடர்ந்து பந்தை சுழற்றி ஒரே இடத்தில் விழ வைத்தால் விக்கெட்டுகள் தானே விழும் என முனைபவர் அல்ல அவர். உதாரணமாய், சமீபமாய் நடந்து முடிந்த நியுசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் அஷ்வினின் பந்துகளை பின்னங்காலுக்கு சென்று சுலபத்தில் அடித்துக் கொண்டிருந்தார். அஷ்வின் இதை தடுக்க முனையவில்லை. தொடர்ந்து off stumpக்கு வெளியே வீசி அவரை உள்ளே வரும் பந்தை வெட்ட தூண்டினார். வில்லியம்சனும் தொடர்ந்து வெட்டி ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸில் அப்படியான பந்து ஒன்று உள்ளே வெகுவாய் திரும்பி வந்து வில்லியம்சனை பவுல்ட் ஆக்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியம்சன் அஷ்வினின் இதே பந்தில் LBW ஆகி வெளியேறினார். இரு பந்துகளும் drift மூலம் வெளியே செல்வதாய் பாவனை காட்டி பேட்ஸ்மேனை முறியடித்தது. இதுதான் எதிராளியின் கையை வாங்கி அவரையே அறையும் ஸ்டைல்.

இதே ஆட்டத்தில் பந்து குறைவாகவே திரும்பியது. பந்தை திருப்பி பேட்ஸ்மேனை வெளியேற்றுவது சிரமம். Rough எனப்படும் ஆடுதளத்தின் தளர்வான மண் கொண்ட பகுதி off stumpக்கு வைடாக வெளியிலோ பேட்ஸ்மேனுக்கு வெளியிலும் இருந்தது. அங்கு விழுந்தால் மட்டுமே பந்து அதிகமாய் திரும்பியது. இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் நியுசிலாந்தின் இஷ் சோதிக்கு ஒரு பந்தை off stumpக்கு வைடாக வீசி பெருமளவு திரும்ப வைத்தார். அதுவரை அழகாய் தடுத்தாடி வந்த சோதி சற்று பயந்து போனார். உள்ளே திரும்பும் பந்துக்கு அவுட் ஆகக் கூடாது என அதைத் தடுக்க ஸ்டம்புக்கு குறுக்கே வந்தார். அஷ்வின் இப்போது நேராக செல்லும் ஆர்ம் பந்தை வீசி பேட்ஸ்மேனை பவுல்ட் ஆக்கி வெளியேற்றினார். ஆடுதள சூழலை நன்கு உணர்ந்து கொண்டு அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்துவதில் அஷ்வின் ஒரு நிபுணர் எனலாம்.
நன்றி: கல்கி

Comments

Unknown said…
Ashwin is an intelligent bowler
he is never tired of producing unplayable balls.
he learns the batsmans defects very early...
he will create a world record definetely..

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...