Skip to main content

Posts

Showing posts from January, 2017

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சுகுமாரன் எனும் கடைசி நவீனத்துவர்

இவ்வருடத்துக்கான இயல் விருது பெறும் சுகுமாரனுக்கு வாழ்த்துக்கள்! தமிழின் எல்லா சிறந்த கவிஞர்களுக்கும் ஒரு தனித்துவமான மொழி உண்டு. ஆனால் இந்த மொழி வெறும் மொழி அல்ல. அது ஒரு அணுகுமுறை, வாழ்க்கைப்பார்வை, நிலைப்பாடு. தமிழின் இறுக்கமான குறியீட்டு, படிமக் கவிதை உலகில் சுகுமாரன் நேரடியான (plain) கவிதைகளுடன் தோன்றினார். எண்பதுகளின் இறுதியில் துவங்கி தொண்ணூறுகளில் மறைபொருளுடன், அரூபமான கேள்விகளுடன் திரிந்த கவிஞர்கள் மத்தியில் அவர் காட்டன் சேலையில் தோளில் சிறு தோல்பையுடன் சரியான சில்லறையை எண்ணியபடி பேருந்து நிலையத்தில் நிற்கும் நிற்கும் ஒரு பெண்ணைப் போல் தோற்றமளித்தார். தனது வெறுமையை, தனிமையை, இச்சையின் தீராத தகிப்பை, உண்மைத் தேடலை, அதற்கான முடிவற்ற தவிப்பை பற்றி தன்னிலையில், வாசகனை எதிர்முனையில் வைத்து பேசும் தோரணையுடன் எளிய சொற்களுடன் பேசினார்.

மனதுக்கு நெருக்கமான ஒரு வாசக கடிதம்

குவைத்தில் இருந்து ஒரு ஆஸாத் எனும் ஒரு வாசகர் அனுப்பிய கையெழுத்துக் கடிதம் இது. இது போன்ற கடிதங்களைக் கண்டு பல வருடங்கள் ஆகின்றன. தொண்ணூறுகளில் இது போல் எத்தனையோ கடிதங்களை கையால் எழுதியிருக்கிறேன். சு.ராவும், மனுஷ்ய புத்திரனும் அப்போது தபால் அட்டையில் எனக்கு எழுதிய அனுப்பிய கடிதங்களை இப்போதும் வைத்திருக்கிறேன். கையெழுத்து ஏனோ அவ்வளவு அணுக்கமாய் உணர வைக்கிறது. ஆஸாத்துக்கு என் நன்றிகள்!

நம் முகத்தில் காறித் துப்பும் மீடியா

நேற்று ஒரு வங்காளப் பத்திரிகையில் இருந்து ஒரு சப்-எடிட்டர் அழைத்து ஜல்லிக்கட்டு பற்றி கட்டுரை கேட்டார். அதை வங்காளத்தில் மொழியாக்கி வெளியிட அவர்களுக்கு உத்தேசம். ஆனால் ஒரு நிபந்தனை. ஜல்லிக்கட்டின் கலாச்சார பக்கம் – இலக்கியத்தில், கலைகளில், பண்பாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என – பற்றி மட்டும் எழுத வேண்டுமாம். அவரே எனக்கு எடுத்துக் கொடுத்தார். “உங்க சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பு உள்ளதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுதுங்கள். சமீபத்தில் ஒரு நாவல் சாகித்ய அகாதமி பரிசு வாங்கியதே. அதில் கூட ஜல்லிக்கட்டு பற்றி வரலாற்று குறிப்பு உள்ளதாய் சொன்னார்கள்”

ஜல்லிக்கட்டு போராட்டம் 2.0 – அப்பாவுக்கும் குழந்தைக்கும் இடையிலான உளவியல்

இந்தியாவில் சாமான்யர்கள் களத்தில் இறங்கி போராட தயங்குவதற்கு முதல் காரணம் போலீஸ் தாக்குதல், வழக்கு, அன்றாட வாழ்வில் ஏற்படும் இழப்புகள், பாதுகாப்பின்மை, இவை சேர்ந்து ஏற்படும் ஒட்டுமொத்தமான பயம். மெரீனா போராட்டத்தின் முதல் வாரத்தில் இவை எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே இதை மாணவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால் லட்சக்கணக்கில் குவிந்தார்கள். அவர்கள் என்னதான் மோடியையும் ஒ.பி.எஸ்ஸையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினாலும் போலீஸார் இணக்கம் காட்டும் வரை அது அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் ஆகாது. அதிகார வர்க்கத்தின் இசைவுடன் நிகழ்ந்த போராட்டம் தான். ஏனென்றால் போலிஸார் அரசு எந்திரத்தின் முகம். ஆனால் இரண்டாவது வாரம் தான் இப்போராட்டம் முதன்முறையாக “போராட்டம்” ஆகிறது. அதிகார வர்க்கம் போராட்டத்தை நிறுத்த சொல்கிறது. வெளியே மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா “போதும் வீட்டுக்குள்ள போ” என கண்டிப்பது போல இது. குழந்தை ஏற்க மறுத்தால் அப்பா பிரம்பெடுப்பார். அப்பாவின் உண்மையான முகம் இப்போது தான் குழந்தைக்கு தெரிய வரும். “நீ விளையாடும் போது என்ன தான் சுதந்திரமாய் இருந்தாலும் அந்த சுதந்திரம் நான் ...

பின்நவீனத்துவ மக்கள் போராட்டங்களின் டெம்பிளேட்

லட்சக்கணக்கானோர் உதைத்து போராடி கொண்டு வந்த பந்தை கடைசியில் கோல் அடித்தவர் ஒ . பி . எஸ் . நீங்கள் கோல் போஸ்ட் வரை கொண்டு வருவீர்கள் என அவருக்கு தெரியும் . அதுக்குத் தானே வியூகம் அமைத்து காத்திருந்தார் . இந்த சாமர்த்தியம் இல்லாமலா அவர் டீக்கடையில் இருந்து அரியணை வரை வந்திருக்கிறார் ! கடந்த தேர்தலில் ஜெயா மூன்றாவது அணி அமைத்து திமுகவின் ஓட்டுகளை கலைத்து நூலிழை வித்தியாசத்தில் ஜெயித்ததை இதனுடன் ஒப்பிடலாம் . ஆனால் மூன்றாவது அணி கூட ஜெயாவின் பி அணி என மக்கள் உடனே கண்டுபிடித்து கலாய்த்தார்கள் . இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலோ சூத்திரதாரி யார் நமக்கு கடைசிவரை புரியவே இல்லை . ஏனென்றால் ஒ . பி . எஸ்ஸின் சிரித்த முகமும் பணிவான உடல்மொழியும் கண்டவர்களுக்கு அவர் தந்திரசாலி என்றெல்லாம் தோன்றாது . ஆனால் மக்களுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாய் ஒரு தோற்றம் ஏற்படுத்தி திருப்தி கொடுத்து அவர்களை தனக்கு ஏற்றபடி பயன்படுத்தியது ஒரு அரசியல் master stroke. அடுத்து வரும் வருடங்களுக்கு என்று அவர் என்னவெல்லாம் சாணக்கி...

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்: ஒ.பி.எஸ்ஸின் முதல் வெற்றி

என்னதான் மக்கள் ஒ.பி.எஸ்ஸை டம்மி என கலாய்த்தாலும் எனக்கு அவர் மீது மதிப்புண்டு. பிரச்சனைகளை முன்கூறாக கணித்து புன்னகைத்தபடியே காய்நகர்த்தி அமைதியாக ஜெயித்து விடுவார். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் அவரது ராஜதந்திரத்துக்கான சிறந்த உதாரணம்.

தியாகம் எனும் போலித்தனம்

எப்போதும் எதையாவது தியாகம் செய்யும், துறக்கும், கைவிடும் அரசியல் மீது எனக்கு ஆழமான கசப்பு உண்டு. சுஜாதா ஒருமுறை மரணம் பற்றிய தன் சிந்தனைகளை எழுத வாசகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவரை போனில் அழைத்து “என் ஆயுசில் பாதியை உங்களுக்கு தருகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்” என சொன்னார்களாம். அதைப் பற்றி குறிப்பிடும் சுஜாதா இவ்வாறு சொன்னார் “அப்படி ஆயுசை தர முடியாது என்கிற நம்பிக்கையில் தான் இவ்வளவு வாக்குறுதிகள் தருகிறார்கள்?” உண்மை தான். ஒருவேளை ஒரு மனிதன் தன் ஆயுளில் ஒரு பாதியை இன்னொருவருக்கு தர முடியும் என்றால் ஒருத்தரும் அதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள்.

ஜெயமோகனின் குறள் உரை

ஜெயமோகனை இன்னவகையான அறிஞர் என அடையாளப்படுத்த இயலாது. பெரும்பாலான அறிவுத்துறைகள், அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளில் அவருக்கு அளப்பரிய ஆர்வம் உண்டு. அவருக்கு மரபில் மிகுந்த பிடிப்பு உண்டென நமக்குத் தெரியும். அதேவேளை நவீன ஐரோப்பிய கோட்பாடுகளையும் ஆர்வமாய் கற்றவர் (அப்படியான பிம்பம் அவருக்கு இல்லை எனிலும்). அவரது ”தேவதேவனை முன்வைத்து” நூலின் இணைப்பாய் வரும் கோட்பாட்டு சுருக்கங்கள் சிறப்பானவை. முதுகலை கல்லூரி மாணவனாய் இருக்கையில் அவற்றை மட்டும் படித்தே நான் முதல் மதிப்பெண் வாங்கினேன். அவரது அறிவு என்பது பயிற்சியில் இருந்து அல்ல, பரந்துபட்ட அவதானிப்பில் இருந்து திரண்டு வருவது.  நூற்றுக்கணக்கான பொம்மைகளை பரப்பி வைத்து ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்து, களைக்கும் வரை விளையாடும் குழந்தை போன்றவர் அவர் என எனக்கு அவரை முதலில் சந்தித்த போது தோன்றியது. இப்படி போகும் வழியெங்கும் பூக்களை கிள்ளி தன் கூடையில் சேர்க்கும் ஒரு சிறுமி போல் அவர் இருப்பதால் தான் ஓயாமல் பேசுகிறார். மணிக்கணக்காய் அல்ல நாட்கணக்காய் அவரால் ஆர்வம் குன்றாது பேச முடியும். ஈகோ அல்ல தீராத பகிர்தலின் ஆர்வம் தான் அவரது விசையின்...

வலியும் பரிவும்

வலியை எனது இரண்டாம் பிரக்ஞை என்பேன். அது எனக்குள் ஒற்றைக்கண்ணாய் சதா திறந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்ததுமே பலருக்கும் அங்கு பார்க்கப்போகும் அபாரமான நூல்கள், எதிர்கொள்ளப் போகும் நண்பர்கள், கூட்டத்தின் சலசலப்பு, அழகிய இளம்பெண்கள், குதூகலம் குறித்து ஒரு சித்திரம் கண்முன் எழும். எனக்கு நேர்மாறாக இவ்வளவு தூரம் நடந்தால் கால் எவ்வளவு வலிக்கும், உடம்பில் எப்படியான அசதி ஏற்படும் எனும் எண்ணமே முதலில் ஏற்படும். அது குறித்த அலுப்புடனே முதல் அடியை எடுத்து வைப்பேன். அங்கு போக வேண்டும் என திட்டமிட்டவுடனே என் உடல் அலுத்துக் கொள்ளும் வலியை கற்பனை பண்ணிக் கொள்ளும். ஆனால் உள்ளே சென்று வேடிக்கை பார்க்க துவங்கியதும் மனம் குதூகலத்தில் எல்லாவற்றையும் மறந்து விடும்.

ஜல்லிக்கட்டு போராட்டமும் முடிவும்: கிளைமேக்ஸை மாற்றிய ஒ.பி.எஸ்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசியல், சமூக, கலாச்சார உணர்வுகள் சார்ந்து மக்கள் திரள்வதற்கான துவக்கப் புள்ளி என்றால் எனக்கு மகிழ்ச்சியே.அதேவேளை இந்த போராட்டம் அடுத்து வரும் நாட்களில் என்னவாகப் போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முன் மதுவுக்கு எதிராக இப்படியான உணர்வெழுச்சி போராட்டங்கள் நடந்தன. அதற்கு முன்பு ஈழப்போரை முன்னிட்டு இதை விட உக்கிரமான ஆவேசத்துடன் இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் மக்கள் உணர்ச்சிகளுக்கான வடிவாலாக அவை முடிந்து போயின. எந்த கட்சிகளும் இப்போராட்டங்களை வடிவமைக்கவில்லை. சொல்லப் போனால் இளைஞர் கூட்டத்தை ஒரு அமைப்பாக, அரசியல் சக்தியாக மாற்றுவதில் கட்சிகளுக்கு அதிக ஆர்வமில்லை என தோன்றுகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா பூரா உள்ள நிலை தான். நிர்பயா விசயத்தில் திரண்ட பெரும் எதிர்ப்பை, ரோஹித் வெமுலா மரணத்தை ஒட்டின போராட்டங்களை எதிர்க்கட்சியால் ஒருமுகப்படுத்தி பயன்படுத்த முடியவில்லை. இளைஞர்களை, குறிப்பாய் மாணவர்களை, எப்படியான வாக்காளர் குழுவாய் கட்டமைப்பது என்பதில் கட்சிகளுக்கு குழப்பம...

விபத்து ராசி

சில வருடங்களுக்கு ஒரு நண்பர் தான் ஸ்கூட்டர் ஓட்டுவதை முழுசாய் நிறுத்தியதற்கு ஒரு காரணம் சொன்னார்: “ஓவர் ஸ்பீடில் எங்கேயாவது போய் இடிச்சிட்றேன்.” எனக்கு அது கேட்க ஆச்சரியமாக இருந்தது. அவர் ஓவர் ஸ்பீட் என்றதை நான் 70-80 கி.மீ வேகம் என நினைத்துக் கொண்டேன். குறைந்தது 60 கி.மீ. அதுவும் எந்த வாகனமும் வந்து மோதாது இவராகவே எதாவது ஒரு இடத்தில் போய் மோதி விழுந்து விடுவார். ஒருவேளை அவருக்கு வேகத்தில் ஒரு த்ரில் இருக்கும் என ஊகித்தேன். ஆனால் 45 கி.மீ வேகத்தில் போனால் கூட கட்டுப்பாடில்லாமல் விபத்தாகலாம் என்பதை சமீபத்தில் ஹாண்டா ஆக்டிவா வாங்கி ஓட்ட ஆரம்பித்த பின்பு தான் உணர்ந்தேன்.  கடந்த ஆறு மாதங்களில் மூன்று விபத்துகள்.

அழிந்து வரும் குமரி மாவட்டம்

குமுதம் லைப் இதழில் நான் தொடர்ந்து படிப்பது ப்ரியா தம்பியின் “மாயநதி” தொடர். இந்த வாரம் குமரி மாவட்டம் சந்தித்து வரும் ஒரு முக்கிய சவால் பற்றி பேசுகிறார். பருவநிலை மாற்றமும் அருகி வரும் விவசாய நிலங்களும். பெரும்பாலான நிலங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் காணாமல் போய் விட்டன. எங்கும் கட்டிடங்கள், நிலங்கள், இதன் விளைவான பருவச்சூழல் மாற்றம். மழை குறைந்து, வெக்கை அதிகமாகி விட்டது. பொதுவாக குமரி மாவட்டம் அதன் தண்மை, வளம், நீர்நிலைகள், தொடர்ந்து தூறும் மழை, எட்டுத்திக்கும் சூழ்ந்த மலைகள், பச்சைப்பசேல் என்ற கண்குளிர் காட்சிகளுக்காய் அறியப்படுவது. இந்த சித்திரம் தீயில் உருகும் பிளாஸ்டிக் போல் சிதைந்து வருகிறது.

எஸ்.பி.பியின் பேட்டி

இந்த வார குமுதம் லைஃபில் எஸ்.பி.பியின் பேட்டி படித்தேன். மிக நேர்மையாக வெளிப்படையாக தயக்கமின்றி பேசியிருக்கிறார். அதற்கு ஒரு தன்னம்பிக்கை வேண்டும். உதாரணமாய், “எனக்கு இருக்கிற மிகச்சிறிய ஞானத்துக்கு எவ்வளவு புகழை கொடுத்திருக்கிறார் இறைவன். அதனால் வாழ்க்கையில் எனக்கு அதிருப்தி என்பதே கிடையாது”.

ஏன் சில புத்தகங்கள் (புரொமோஷன் இன்றியே) பரவலாய் பேசப்படுகின்றன?

இது என் கடந்த பதிவின் தொடர்ச்சி புரொமோஷன் இல்லாமலே அதிகம் கவனம் பெறும் புத்தகங்கள் இல்லையா ? உண்டு . ஆனால் இது விதிவிலக்கே . ( பெரும்பாலான நூல்களுக்கு புரொமோஷன் இன்று அவசியம் .) ஏன் விதிவிலக்காய் இவை கவனம் பெறுகின்றன ? இரண்டு காரணங்கள் .

ஏன் என் புத்தகம் பேசப்படவில்லை?

புத்தகம் வெளியிட்டிருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த ஆவலாதி இருக்கும். நம்மை பிறர் வேண்டுமென்றே கவனிக்கவில்லை, திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள், நம்மிட நியாயமாக நடந்து கொள்ளவில்லை, இதெல்லாம் ஏன், இதற்கு பின் ஒரு சதித்திட்டம் உள்ளது என்று கூடத் தோன்றும். சில நண்பர்களின் புத்தகங்கள் வெளியானதும் ஒரு பரபரப்பு தோன்றும். குறிப்பாய், சமூக வலைதளங்களில். யாராவது அதைக் குறிப்பிட்டு எழுதலாம். ஒரு நாளிதழில் ஒரு குறிப்பு வரலாம். அப்போது நம் வயிறு எரியும். ஆனால் இந்த எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வயிற்றெரிச்சல், தர்ம் ஆவேசம் எல்லாம் நம் கற்பனையால் விளைகிறவை என்பது நமக்கு சில வருடங்களில் புரிந்து விடும்.

எழுத்தாளனின் கலாச்சார அதிகாரம்

நேற்று நண்பர் சர்வோத்தமனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் எழுத்தாளர்களின் கலாச்சார அதிகாரம் பற்றி குறிப்பிட்டார். எழுத்தில் பெரும் சமூக அங்கீகாரமோ பணமோ இல்லை. சொல்லப் போனால் இத்தனை பேர் வருடாவருடம் மலைக்கு மாலை போடுவது போல் நிறைய விரதங்கள் இருந்து எழுதி புத்தகம் போட்டு, அவர்களில் சிலர் கூடுதலாய் செலவு செய்து புத்தகத்தை புரமோட் செய்வது எல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் அபத்தமாய் உள்ளது. இதில் இருந்து அவர்களுக்கு கிடைப்பது என்ன? கலாச்சார அதிகாரம் என்றார் சர்வோத்தமன். இதையே என் நண்பர் ஒருவர் வாசகர்களின் பேரன்பு என்பார். இன்னொருவர் தோழமை என்பார். மற்றொருவர் பிரியம் என்பார். கலாச்சார அதிகாரம் என்ற சொல் எனக்கு சரியாகப் படுகிறது. அதாவது ஒரு கூட்டத்தில் யாரென்றே தெரியாத பத்து பேர் உங்களை தேடி வந்து கைகுலுக்கும் போது, புத்தகத்தில் கையெழுத்து வாங்கும் போது ஒரு கிளுகிளுப்பு ஏற்படுகிறது. அல்லது மற்றொரு எழுத்தாளனை பத்து பேர் சூழ்ந்து பேரன்பை காட்டும் போது நமக்கு பொறாமை ஏற்படுகிறது. உங்கள் சொல்லுக்கு என்று ஒரு மதிப்பு, அதைப் படிக்க, கேட்க என ஆட்கள். எவ்வளவு குறைவான எண்ணிக்கை என்றாலும் இது ஒரு...

டொனால்ட் டிரம்பின் alt-right கொள்கையும் இந்தியாவின் மாற்று-இந்துத்துவாவும்

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் ஏதோ கடவுளே மரித்துப் போனது போல் முற்போக்கு நண்பர்கள் பலர் தளர்ந்து போனார்கள். மிகுந்த கசப்புடன் அச்சத்துடன் “இனி என்னாகுமோ?” என கேள்வி கேட்டு பல ஆங்கில கட்டுரைகள் எழுதப்பட்டன. தம் வேலை பறிபோகுமோ என பயந்த தமிழ் ஐ.டி நண்பர்கள் கூட டிரம்பை எதிர்த்தனர். ஆனால் இன்னும் எந்த பூகம்பமும் நேரவில்லை. அமெரிக்காவில் கறுப்பர்களோ, ஆசியர்களோ தாக்கப்படவோ துரத்தப்படவோ இல்லை. இன்னும் நம் ஐ.டி வேலைகள் பறிபோகவில்லை. இது ஒன்றை காட்டுகிறது: ஒரு கட்சியும் அதன் தலைவரும், அவர்கள் பிரதிநுத்துவப்படுத்தும் அரசியலும் வெறும் குறியீடுகள் தாம். கொள்கைகள், நிலைப்பாடுகள், வன்முறை ஆகியவற்றை பொருளாதாரம் தான் தூண்டுகிறது, வழிநடத்துகிறது, தீர்மானிக்கிறது. நாம் அளிக்கும் மலிவான ஐ.டி உழைப்பு அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அவசியம். அதை அவர்கள் கைவிட முடியாது. இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் அல்லாதோரும் பல்வேறு நிலைகளில் பங்களிக்கும் ஒரு சிக்கலான அமைப்பு தான் அமெரிக்கா. அங்கு வெள்ளையர்கள் மட்டுமே வாழ்வதென்றால் அந்த அமைப்பு நொறுங்கிப் போகும்.