முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் முகத்தில் காறித் துப்பும் மீடியா

Image result for police burning auto + chennai violence

நேற்று ஒரு வங்காளப் பத்திரிகையில் இருந்து ஒரு சப்-எடிட்டர் அழைத்து ஜல்லிக்கட்டு பற்றி கட்டுரை கேட்டார். அதை வங்காளத்தில் மொழியாக்கி வெளியிட அவர்களுக்கு உத்தேசம். ஆனால் ஒரு நிபந்தனை. ஜல்லிக்கட்டின் கலாச்சார பக்கம் – இலக்கியத்தில், கலைகளில், பண்பாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என – பற்றி மட்டும் எழுத வேண்டுமாம். அவரே எனக்கு எடுத்துக் கொடுத்தார். “உங்க சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பு உள்ளதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுதுங்கள். சமீபத்தில் ஒரு நாவல் சாகித்ய அகாதமி பரிசு வாங்கியதே. அதில் கூட ஜல்லிக்கட்டு பற்றி வரலாற்று குறிப்பு உள்ளதாய் சொன்னார்கள்”

”காவல்கோட்டமா?”
”ஆமா ஆமா. அதைப் பற்றியும் எழுதுங்கள். ஏனென்றால் இங்கே வங்காளத்தில் யாருக்கும் ஜல்லிக்கட்டு பற்றி தெரியாது.”
என்னிடம் யாராவது எழுத வழிமுறைகள் சொன்னால் கடுப்பாகி விடுவேன். ஆனாலும் அவர் எந்த அளவுக்கு போகிறார் என அறிந்து கொள்ள விரும்பினேன். ஜல்லிக்கட்டு வெறும் பண்பாட்டு அடையாளம் அல்ல, அதன் அரசியல் சமூக பரிமாணங்களை தவிர்த்து பேச முடியாது. மேலும் மக்களின் உணர்வுகள் திரண்டு வெளிப்பட அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்ததே அன்றி அது தமிழரின் ஒட்டுமொத்த அடையாளம் அல்ல என்றேன். அவர் கேட்டு விட்டு “உங்க விருப்பப்படி எழுதுங்கள். நாங்கள் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்க மாட்டோம். ஆனால் சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி அதிக கவனம் செலுத்துங்கள்” என்றார். இவர் என்னடா தேய்ந்த ரெக்கார்டாக இருக்கிறாரே என வெறுத்துப் போனேன். போனை வைத்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியபடியே இருந்தார். வங்காளத்தில் லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகை தம்முடையது என்று தற்பெருமை வேறு. நான் பிடிவாதமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் ”சரி உங்க விருப்பப்படி எழுதுங்கள்,” என்றார். ஆனால் என்ன நடந்ததோ சற்று நேரத்தில் அழைத்து “நாங்கள் இந்த வாரம் ஜல்லிக்கட்டில் கவனம் செலுத்தப் போவதில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். அதனால் எழுத வேண்டாம்” என்றார். நல்லது, விட்டது சனியன் என நினைத்துக் கொண்டேன்.
இதை எதற்கு குறிப்பிட்டேன் என்றால் ஜல்லிக்கட்டு அரசியல் பற்றி இந்திய மீடியாவும் இந்திய அறிவுஜீவிகள், மனித உரிமை போராளிகளும் அறியாமையில் இருப்பதாய் நான் நம்பவில்லை. அவர்கள் அப்படியான ஒரு பாவனையை கொடுக்கிறார்கள். இந்த போராட்ட அரசியல், அதன் மீது அரச பயங்கரவாதம் செலுத்தும் ஒடுக்குமுறை பற்றி வேண்டுமென்றே பாராமுகமாய் இருக்கிறார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் நம் தமிழ் வெகுஜன மீடியா தமிழர்களை ஒட்டுமொத்தமாய் அவமதித்து விட்டது.
பெரும்பாலான பத்திரிகைகள், சேனல்கள் போராட்டத்தின் முடிவில் மக்கள் மீது காவல்துறை அவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறையை மீடியா சித்தரித்த விதம் கடும் ஏமாற்றத்தை, கசப்பை ஏற்படுத்தியது. எப்போதும் முற்போக்காக தன்னை எப்போதும் காட்டிக் கொள்ளும் ஆங்கில ஹிந்து பத்திரிகை போலீஸ் துறையை பாதிக்கப்பட்ட தரப்பாக சித்தரித்தது. காவல்துறையினர் ஆட்டோவை கொளுத்தும் படத்தை பெரும்பாலான பத்திரிகைகள் மட்டுமல்ல ஆங்கில செய்தி இணையதளங்கள் கூட வெளியிடவில்லை. தமிழில் ரிப்போர்ட்டர், தந்தி போன்ற பத்திரிகைகள் காவல்துறை கலவரங்கள் நடத்தும் முன்னரே “தேசவிரோத கும்பல் காவல்துறை மீது தாக்குதல்” என தலைப்பு செய்தியை தயாரித்து விட்டன. காவல்துறையின் திட்டமிட்ட வன்முறை அம்பலமான பின்னரும் தம் பழைய திரைக்கதையை கைவிட பத்திரிகை முதலாளிகள் தயாராகவில்லை. இப்பத்திரிகைகளில் பணி செய்பவர்களே இதையெல்லாம் நமப மாட்டார்கள் என சொல்வேன். அப்படியென்றால் யாரை நம்ப வைக்க, ஏமாற்ற இப்படியொரு நாடகம்? மீடியா மக்களையே செருப்பால் அடிக்கலாமா?
மனித உரிமைகள் மீதும், சிவில் சமூகம் மீது நம்பிக்கை கொண்டோர் மீது இந்த மீடியா காறித் துப்பி விட்டது. நீங்கள் இந்த அளவுக்கு சென்றிருக்க வேண்டாம். சோரம் போகலாம். ஆனால் அம்மணமாக தெருவில் ஓட வேண்டிய தேவையில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...