முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழிந்து வரும் குமரி மாவட்டம்

குமுதம் லைப் இதழில் நான் தொடர்ந்து படிப்பது ப்ரியா தம்பியின் “மாயநதி” தொடர். இந்த வாரம் குமரி மாவட்டம் சந்தித்து வரும் ஒரு முக்கிய சவால் பற்றி பேசுகிறார். பருவநிலை மாற்றமும் அருகி வரும் விவசாய நிலங்களும்.

பெரும்பாலான நிலங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் காணாமல் போய் விட்டன. எங்கும் கட்டிடங்கள், நிலங்கள், இதன் விளைவான பருவச்சூழல் மாற்றம். மழை குறைந்து, வெக்கை அதிகமாகி விட்டது. பொதுவாக குமரி மாவட்டம் அதன் தண்மை, வளம், நீர்நிலைகள், தொடர்ந்து தூறும் மழை, எட்டுத்திக்கும் சூழ்ந்த மலைகள், பச்சைப்பசேல் என்ற கண்குளிர் காட்சிகளுக்காய் அறியப்படுவது. இந்த சித்திரம் தீயில் உருகும் பிளாஸ்டிக் போல் சிதைந்து வருகிறது.

ஆனால் குமரி மக்களை அறிந்தவர்களுக்கு இது பெரும் வியப்பை அளிக்காது. அம்மக்கள் தற்காலிக நோக்கம் மிக்கவர்கள். முன்பு ரப்பர் விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக இருந்த போது வாழை தோப்புகளை அழித்து ரப்பர் பயிரிட்டார்கள். இது ஒரு பக்கம் மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தது. அடித்தட்டு (குறிப்பாய் நாடார் இன மக்கள்) சமூகத்தில் மேலெழுந்து வர உதவியது. (இந்த இரு விசயங்களையும் இணைத்து ஜெயமோகன் தன் முதல் நாவலான “ரப்பர்” எழுதினார்.)
 மற்ற மாநிலத்தவரை போல் குமரியினர் நிலத்துடன் அறுக்க முடியாத பிணைப்பு கொண்டவர்கள் அல்ல. வாழ்க்கை நிலையை மேம்படுத்த அவர்கள் கல்வியை பெருமளவு நம்பி இருக்கிறார்கள். அதனால் தான் அங்கு கல்வி நிலையங்கள் அதிகம். அதே போல எந்தெந்த காலத்தில் எது எது லாபம் தருமே அதில் அவர்கள் யோசிக்காமல் குதித்து விடுவார்கள். பொறியியல் படிப்பு உச்சத்தில் இருந்த போது குமரி மாவட்டம் முழுக்க பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. கேரளா, வடமாநிலங்களில் இருந்தெல்லாம் மாணவர்களை அழைத்து வந்து வகுப்புகளையே பார்க்காதவர்களுக்கு கூட பொறியியல் பட்டங்கள் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் பி.ஏ பட்டத்தை விட பி.இ பட்டம் மலிவானது. கடந்த தி.மு.க ஆட்சியில் ரியல் எஸ்டேட் லாபம் கொழிக்கும் அடுத்த தொழிலாகியது. மக்கள் ரப்பரையும் பொறியியலையும் விட்டு ரியல் எஸ்டேட்டுக்கு தாவினார்கள். இத்தொழிலில் மக்கள் பெருமளவு பணம் ஈட்டினார்கள். இதற்கு மற்றொரு காரணம் அப்போதைய திமுக ஆட்சியில் கணிசமான கறுப்புப் பணம் நிலத்தில் முடக்கப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் மக்கள் இங்கு நிலம் வாங்க படையெடுத்தார்கள். அப்போது தான், ப்ரியா தம்பி குறிப்பிடும், குளங்களை நிரப்பாக்கி வீடு கட்டி விற்கும் அழிவு வேலைகள் பெருகின.
என்னுடைய அத்தான் ஆரம்பத்தில் விளம்பர பலகைகள் வைக்கும் வணிகம் செய்து வந்தார். அதில் அவர் வெற்றி பெற்று பணம் ஈட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில் விளம்பர பலகைகளுக்கு தடை கொண்டு வந்தார்கள். தன் தொழில் முடங்கிப் போவதை அவர் உணர்ந்தார். அப்போது தான் நான் முன்னே சொன்ன ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் ஏற்பட்டது. ஒரு சிறிய கதவு மூடினால் இன்னொரு பெரிய கதவு திறக்கும். அவர் தான் ஈட்டிய பணத்தை முழுக்க ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். சில வருடங்களில் பத்து மடங்கு பணம் ஈட்டினார். குமரி மாவட்ட மக்களின் சுபாவத்துக்கு என் அத்தான் ஒரு சரியான குறியீடு. காலத்தோடு ஒத்து வாழ் என்பது குமரி மாவட்ட தத்துவம். ஒரு பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் ஊர் மக்கள் அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க மாட்டார்கள். அப்பிரச்சனையின் ஊடே வேறேதாவது நல்வாய்ப்புகள் கிடைக்குமா என சிந்திப்பார்கள். அதைப் பற்றிக் கொண்டு மேலெழுவார்கள்.
 ஒரு பக்கம் மக்கள் கல்வி பெற்று வெளி ஊர்களிலோ அல்லது வெளிநாட்டிலோ சென்று வேலை பார்த்து பணம் ஈட்ட முனைகிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. முன்பு விவசாயத்தில் ஈடுபட்ட நாடார் சமூகத்தினர் பின்பு வியாபாரத்தில் முனைப்பு காட்டி கூடுதல் முன்னேற்றம் கண்டனர். ஆக, குமரியில் மக்களுக்கு நிலம் ஒரு பொருட்டு அல்ல. அதாவது மண்ணோடு பிணைந்த ஒரு நிரந்தர வாழ்க்கை அந்த மக்களுக்கு என்றும் இருந்ததில்லை. அவர்கள் அதனால் சூழலியல் மாற்றங்கள் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.
 வேறு மாவட்டங்களை விட குமரியில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம். திருமணங்களின் போது அவர்கள் தங்கமாகவும் ரொக்கமாகவும் செலவழிக்கிற பணத்தை கண்டால் மிரண்டு விடுவீர்கள். மணப்பெண்ணுக்கு வரதட்சணையாக இருபது, முப்பது லட்சங்கள் கொடுத்து ஒரு அரசு வேலை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அது முடியாவிட்டால் பத்து லட்சத்தை ஒரு கல்லூரிக்கு கொடுத்து ஒரு தற்காலிக பேராசிரிய வேலை வாங்கிக் கொடுப்பார்கள். லட்சங்கள் அங்கு ஆயிரங்கள் போல.
இந்த நிலைமையில் அவர்களிடம் சென்று நீங்கள் சூழல் அழிகிறது, மழை வராது என்றெல்லாம் அறிவுறுத்த முடியாது. ஆனால் இன்று ரியல் எஸ்டேட்டில் மந்தநிலை நிலவுகிறது. வேலை வாய்ப்புகளும் உலகளவில் குறைந்து விட்டன.
இந்நிலையில் குமரி மாவட்டத்துக்கு என இயற்கையோடு இயைந்த உற்பத்தி தொழில்களை ஏற்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இதுவும் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. குமரிக்கடல் வற்றினாலும் எங்கள் மக்கள் அதை வைத்து எப்படி லாபம் பார்ப்பது என யோசிப்பார்கள். அதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத கூலான எம்மக்கள் எதையும் சமாளிப்பார்கள். அவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.