Skip to main content

அழிந்து வரும் குமரி மாவட்டம்

குமுதம் லைப் இதழில் நான் தொடர்ந்து படிப்பது ப்ரியா தம்பியின் “மாயநதி” தொடர். இந்த வாரம் குமரி மாவட்டம் சந்தித்து வரும் ஒரு முக்கிய சவால் பற்றி பேசுகிறார். பருவநிலை மாற்றமும் அருகி வரும் விவசாய நிலங்களும்.

பெரும்பாலான நிலங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் காணாமல் போய் விட்டன. எங்கும் கட்டிடங்கள், நிலங்கள், இதன் விளைவான பருவச்சூழல் மாற்றம். மழை குறைந்து, வெக்கை அதிகமாகி விட்டது. பொதுவாக குமரி மாவட்டம் அதன் தண்மை, வளம், நீர்நிலைகள், தொடர்ந்து தூறும் மழை, எட்டுத்திக்கும் சூழ்ந்த மலைகள், பச்சைப்பசேல் என்ற கண்குளிர் காட்சிகளுக்காய் அறியப்படுவது. இந்த சித்திரம் தீயில் உருகும் பிளாஸ்டிக் போல் சிதைந்து வருகிறது.

ஆனால் குமரி மக்களை அறிந்தவர்களுக்கு இது பெரும் வியப்பை அளிக்காது. அம்மக்கள் தற்காலிக நோக்கம் மிக்கவர்கள். முன்பு ரப்பர் விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக இருந்த போது வாழை தோப்புகளை அழித்து ரப்பர் பயிரிட்டார்கள். இது ஒரு பக்கம் மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தது. அடித்தட்டு (குறிப்பாய் நாடார் இன மக்கள்) சமூகத்தில் மேலெழுந்து வர உதவியது. (இந்த இரு விசயங்களையும் இணைத்து ஜெயமோகன் தன் முதல் நாவலான “ரப்பர்” எழுதினார்.)
 மற்ற மாநிலத்தவரை போல் குமரியினர் நிலத்துடன் அறுக்க முடியாத பிணைப்பு கொண்டவர்கள் அல்ல. வாழ்க்கை நிலையை மேம்படுத்த அவர்கள் கல்வியை பெருமளவு நம்பி இருக்கிறார்கள். அதனால் தான் அங்கு கல்வி நிலையங்கள் அதிகம். அதே போல எந்தெந்த காலத்தில் எது எது லாபம் தருமே அதில் அவர்கள் யோசிக்காமல் குதித்து விடுவார்கள். பொறியியல் படிப்பு உச்சத்தில் இருந்த போது குமரி மாவட்டம் முழுக்க பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. கேரளா, வடமாநிலங்களில் இருந்தெல்லாம் மாணவர்களை அழைத்து வந்து வகுப்புகளையே பார்க்காதவர்களுக்கு கூட பொறியியல் பட்டங்கள் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் பி.ஏ பட்டத்தை விட பி.இ பட்டம் மலிவானது. கடந்த தி.மு.க ஆட்சியில் ரியல் எஸ்டேட் லாபம் கொழிக்கும் அடுத்த தொழிலாகியது. மக்கள் ரப்பரையும் பொறியியலையும் விட்டு ரியல் எஸ்டேட்டுக்கு தாவினார்கள். இத்தொழிலில் மக்கள் பெருமளவு பணம் ஈட்டினார்கள். இதற்கு மற்றொரு காரணம் அப்போதைய திமுக ஆட்சியில் கணிசமான கறுப்புப் பணம் நிலத்தில் முடக்கப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் மக்கள் இங்கு நிலம் வாங்க படையெடுத்தார்கள். அப்போது தான், ப்ரியா தம்பி குறிப்பிடும், குளங்களை நிரப்பாக்கி வீடு கட்டி விற்கும் அழிவு வேலைகள் பெருகின.
என்னுடைய அத்தான் ஆரம்பத்தில் விளம்பர பலகைகள் வைக்கும் வணிகம் செய்து வந்தார். அதில் அவர் வெற்றி பெற்று பணம் ஈட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில் விளம்பர பலகைகளுக்கு தடை கொண்டு வந்தார்கள். தன் தொழில் முடங்கிப் போவதை அவர் உணர்ந்தார். அப்போது தான் நான் முன்னே சொன்ன ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் ஏற்பட்டது. ஒரு சிறிய கதவு மூடினால் இன்னொரு பெரிய கதவு திறக்கும். அவர் தான் ஈட்டிய பணத்தை முழுக்க ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். சில வருடங்களில் பத்து மடங்கு பணம் ஈட்டினார். குமரி மாவட்ட மக்களின் சுபாவத்துக்கு என் அத்தான் ஒரு சரியான குறியீடு. காலத்தோடு ஒத்து வாழ் என்பது குமரி மாவட்ட தத்துவம். ஒரு பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் ஊர் மக்கள் அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க மாட்டார்கள். அப்பிரச்சனையின் ஊடே வேறேதாவது நல்வாய்ப்புகள் கிடைக்குமா என சிந்திப்பார்கள். அதைப் பற்றிக் கொண்டு மேலெழுவார்கள்.
 ஒரு பக்கம் மக்கள் கல்வி பெற்று வெளி ஊர்களிலோ அல்லது வெளிநாட்டிலோ சென்று வேலை பார்த்து பணம் ஈட்ட முனைகிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. முன்பு விவசாயத்தில் ஈடுபட்ட நாடார் சமூகத்தினர் பின்பு வியாபாரத்தில் முனைப்பு காட்டி கூடுதல் முன்னேற்றம் கண்டனர். ஆக, குமரியில் மக்களுக்கு நிலம் ஒரு பொருட்டு அல்ல. அதாவது மண்ணோடு பிணைந்த ஒரு நிரந்தர வாழ்க்கை அந்த மக்களுக்கு என்றும் இருந்ததில்லை. அவர்கள் அதனால் சூழலியல் மாற்றங்கள் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.
 வேறு மாவட்டங்களை விட குமரியில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம். திருமணங்களின் போது அவர்கள் தங்கமாகவும் ரொக்கமாகவும் செலவழிக்கிற பணத்தை கண்டால் மிரண்டு விடுவீர்கள். மணப்பெண்ணுக்கு வரதட்சணையாக இருபது, முப்பது லட்சங்கள் கொடுத்து ஒரு அரசு வேலை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அது முடியாவிட்டால் பத்து லட்சத்தை ஒரு கல்லூரிக்கு கொடுத்து ஒரு தற்காலிக பேராசிரிய வேலை வாங்கிக் கொடுப்பார்கள். லட்சங்கள் அங்கு ஆயிரங்கள் போல.
இந்த நிலைமையில் அவர்களிடம் சென்று நீங்கள் சூழல் அழிகிறது, மழை வராது என்றெல்லாம் அறிவுறுத்த முடியாது. ஆனால் இன்று ரியல் எஸ்டேட்டில் மந்தநிலை நிலவுகிறது. வேலை வாய்ப்புகளும் உலகளவில் குறைந்து விட்டன.
இந்நிலையில் குமரி மாவட்டத்துக்கு என இயற்கையோடு இயைந்த உற்பத்தி தொழில்களை ஏற்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இதுவும் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. குமரிக்கடல் வற்றினாலும் எங்கள் மக்கள் அதை வைத்து எப்படி லாபம் பார்ப்பது என யோசிப்பார்கள். அதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத கூலான எம்மக்கள் எதையும் சமாளிப்பார்கள். அவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...