முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழிந்து வரும் குமரி மாவட்டம்

குமுதம் லைப் இதழில் நான் தொடர்ந்து படிப்பது ப்ரியா தம்பியின் “மாயநதி” தொடர். இந்த வாரம் குமரி மாவட்டம் சந்தித்து வரும் ஒரு முக்கிய சவால் பற்றி பேசுகிறார். பருவநிலை மாற்றமும் அருகி வரும் விவசாய நிலங்களும்.

பெரும்பாலான நிலங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் காணாமல் போய் விட்டன. எங்கும் கட்டிடங்கள், நிலங்கள், இதன் விளைவான பருவச்சூழல் மாற்றம். மழை குறைந்து, வெக்கை அதிகமாகி விட்டது. பொதுவாக குமரி மாவட்டம் அதன் தண்மை, வளம், நீர்நிலைகள், தொடர்ந்து தூறும் மழை, எட்டுத்திக்கும் சூழ்ந்த மலைகள், பச்சைப்பசேல் என்ற கண்குளிர் காட்சிகளுக்காய் அறியப்படுவது. இந்த சித்திரம் தீயில் உருகும் பிளாஸ்டிக் போல் சிதைந்து வருகிறது.

ஆனால் குமரி மக்களை அறிந்தவர்களுக்கு இது பெரும் வியப்பை அளிக்காது. அம்மக்கள் தற்காலிக நோக்கம் மிக்கவர்கள். முன்பு ரப்பர் விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக இருந்த போது வாழை தோப்புகளை அழித்து ரப்பர் பயிரிட்டார்கள். இது ஒரு பக்கம் மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தது. அடித்தட்டு (குறிப்பாய் நாடார் இன மக்கள்) சமூகத்தில் மேலெழுந்து வர உதவியது. (இந்த இரு விசயங்களையும் இணைத்து ஜெயமோகன் தன் முதல் நாவலான “ரப்பர்” எழுதினார்.)
 மற்ற மாநிலத்தவரை போல் குமரியினர் நிலத்துடன் அறுக்க முடியாத பிணைப்பு கொண்டவர்கள் அல்ல. வாழ்க்கை நிலையை மேம்படுத்த அவர்கள் கல்வியை பெருமளவு நம்பி இருக்கிறார்கள். அதனால் தான் அங்கு கல்வி நிலையங்கள் அதிகம். அதே போல எந்தெந்த காலத்தில் எது எது லாபம் தருமே அதில் அவர்கள் யோசிக்காமல் குதித்து விடுவார்கள். பொறியியல் படிப்பு உச்சத்தில் இருந்த போது குமரி மாவட்டம் முழுக்க பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. கேரளா, வடமாநிலங்களில் இருந்தெல்லாம் மாணவர்களை அழைத்து வந்து வகுப்புகளையே பார்க்காதவர்களுக்கு கூட பொறியியல் பட்டங்கள் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் பி.ஏ பட்டத்தை விட பி.இ பட்டம் மலிவானது. கடந்த தி.மு.க ஆட்சியில் ரியல் எஸ்டேட் லாபம் கொழிக்கும் அடுத்த தொழிலாகியது. மக்கள் ரப்பரையும் பொறியியலையும் விட்டு ரியல் எஸ்டேட்டுக்கு தாவினார்கள். இத்தொழிலில் மக்கள் பெருமளவு பணம் ஈட்டினார்கள். இதற்கு மற்றொரு காரணம் அப்போதைய திமுக ஆட்சியில் கணிசமான கறுப்புப் பணம் நிலத்தில் முடக்கப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் மக்கள் இங்கு நிலம் வாங்க படையெடுத்தார்கள். அப்போது தான், ப்ரியா தம்பி குறிப்பிடும், குளங்களை நிரப்பாக்கி வீடு கட்டி விற்கும் அழிவு வேலைகள் பெருகின.
என்னுடைய அத்தான் ஆரம்பத்தில் விளம்பர பலகைகள் வைக்கும் வணிகம் செய்து வந்தார். அதில் அவர் வெற்றி பெற்று பணம் ஈட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில் விளம்பர பலகைகளுக்கு தடை கொண்டு வந்தார்கள். தன் தொழில் முடங்கிப் போவதை அவர் உணர்ந்தார். அப்போது தான் நான் முன்னே சொன்ன ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் ஏற்பட்டது. ஒரு சிறிய கதவு மூடினால் இன்னொரு பெரிய கதவு திறக்கும். அவர் தான் ஈட்டிய பணத்தை முழுக்க ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். சில வருடங்களில் பத்து மடங்கு பணம் ஈட்டினார். குமரி மாவட்ட மக்களின் சுபாவத்துக்கு என் அத்தான் ஒரு சரியான குறியீடு. காலத்தோடு ஒத்து வாழ் என்பது குமரி மாவட்ட தத்துவம். ஒரு பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் ஊர் மக்கள் அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க மாட்டார்கள். அப்பிரச்சனையின் ஊடே வேறேதாவது நல்வாய்ப்புகள் கிடைக்குமா என சிந்திப்பார்கள். அதைப் பற்றிக் கொண்டு மேலெழுவார்கள்.
 ஒரு பக்கம் மக்கள் கல்வி பெற்று வெளி ஊர்களிலோ அல்லது வெளிநாட்டிலோ சென்று வேலை பார்த்து பணம் ஈட்ட முனைகிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. முன்பு விவசாயத்தில் ஈடுபட்ட நாடார் சமூகத்தினர் பின்பு வியாபாரத்தில் முனைப்பு காட்டி கூடுதல் முன்னேற்றம் கண்டனர். ஆக, குமரியில் மக்களுக்கு நிலம் ஒரு பொருட்டு அல்ல. அதாவது மண்ணோடு பிணைந்த ஒரு நிரந்தர வாழ்க்கை அந்த மக்களுக்கு என்றும் இருந்ததில்லை. அவர்கள் அதனால் சூழலியல் மாற்றங்கள் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.
 வேறு மாவட்டங்களை விட குமரியில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம். திருமணங்களின் போது அவர்கள் தங்கமாகவும் ரொக்கமாகவும் செலவழிக்கிற பணத்தை கண்டால் மிரண்டு விடுவீர்கள். மணப்பெண்ணுக்கு வரதட்சணையாக இருபது, முப்பது லட்சங்கள் கொடுத்து ஒரு அரசு வேலை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அது முடியாவிட்டால் பத்து லட்சத்தை ஒரு கல்லூரிக்கு கொடுத்து ஒரு தற்காலிக பேராசிரிய வேலை வாங்கிக் கொடுப்பார்கள். லட்சங்கள் அங்கு ஆயிரங்கள் போல.
இந்த நிலைமையில் அவர்களிடம் சென்று நீங்கள் சூழல் அழிகிறது, மழை வராது என்றெல்லாம் அறிவுறுத்த முடியாது. ஆனால் இன்று ரியல் எஸ்டேட்டில் மந்தநிலை நிலவுகிறது. வேலை வாய்ப்புகளும் உலகளவில் குறைந்து விட்டன.
இந்நிலையில் குமரி மாவட்டத்துக்கு என இயற்கையோடு இயைந்த உற்பத்தி தொழில்களை ஏற்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இதுவும் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. குமரிக்கடல் வற்றினாலும் எங்கள் மக்கள் அதை வைத்து எப்படி லாபம் பார்ப்பது என யோசிப்பார்கள். அதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத கூலான எம்மக்கள் எதையும் சமாளிப்பார்கள். அவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...