Skip to main content

விபத்து ராசி


சில வருடங்களுக்கு ஒரு நண்பர் தான் ஸ்கூட்டர் ஓட்டுவதை முழுசாய் நிறுத்தியதற்கு ஒரு காரணம் சொன்னார்: “ஓவர் ஸ்பீடில் எங்கேயாவது போய் இடிச்சிட்றேன்.” எனக்கு அது கேட்க ஆச்சரியமாக இருந்தது. அவர் ஓவர் ஸ்பீட் என்றதை நான் 70-80 கி.மீ வேகம் என நினைத்துக் கொண்டேன். குறைந்தது 60 கி.மீ. அதுவும் எந்த வாகனமும் வந்து மோதாது இவராகவே எதாவது ஒரு இடத்தில் போய் மோதி விழுந்து விடுவார். ஒருவேளை அவருக்கு வேகத்தில் ஒரு த்ரில் இருக்கும் என ஊகித்தேன். ஆனால் 45 கி.மீ வேகத்தில் போனால் கூட கட்டுப்பாடில்லாமல் விபத்தாகலாம் என்பதை சமீபத்தில் ஹாண்டா ஆக்டிவா வாங்கி ஓட்ட ஆரம்பித்த பின்பு தான் உணர்ந்தேன்.
 கடந்த ஆறு மாதங்களில் மூன்று விபத்துகள்.

 மூன்று முறையும் வண்டிக்கு பலமான அடி. பக்க சக்கரங்கள், அவற்றை மூடியுள்ள மட் கார்ட் வளைந்தன. சற்று முன் என் மூன்றாவது விபத்து நிகழ்ந்தது. இப்போது கூடுதலாய் முன் சக்கரத்தின் fork வளைந்து விட்டது. வண்டியை நேராக ஓட்டலாம். திருப்ப முடியாது. எப்படியோ சமாளித்து வீடு வந்து சேர்ந்தேன்.
 நான் 15 வயதில் வண்டி ஓட்ட ஆரம்பித்தேன். முதலில் கைனடிக் ஹோண்டா. அதன் பிறகு ஸ்கூட்டி. இந்த இரண்டு வண்டிகளிலும் எனக்கு ஒருமுறை கூட விபத்தானதில்லை. ஆனால் ஆக்டிவா வாங்கிய பின் விபத்து ராசி அமோகமாய் இருக்கிறது.
என்னுடைய குடியிருப்பில் ஒரு சின்ன பையன் இருக்கிறான். ரெண்டு வயதிருக்கும். அவனுக்கு என்னைப் பார்த்தால் பீதி. நான் எதிர்பட்டால் அவன் பயத்தில் ஸ்தம்பித்து விடுவான். நானும் அவனிடம் இனிமையாய் சிரித்து கொஞ்சி பேசி பார்த்து விட்டேன். என்னைப் பார்த்தாலே ஏதோ சிங்கம் புலி பார்த்தது போல் உறைந்து போய் விடுகிறான். நின்ற இடத்திலேயே அழுவான். அவன் அம்மா அழைத்தாலும் ஒரு இஞ்ச் நகர மாட்டான். அவனை யாராவது தூக்கித் தான் போக வேண்டும். அப்படி தூக்கப்பட்டு போகும் போதும் என்னைப் பார்த்தபடி தலையை என் திசையில் இருந்து திருப்பாமலே அலறியபடி இருப்பான். விபத்துக்கு முன்பான சில நொடிகளில் நானும் இந்த பையனைப் போல் ஆகி விடுகிறேன். பயத்தில் ஸ்தம்பித்து என்ன செய்வதென அறியாமல் அம்மா என்று கத்தியபடி ஹேண்டில் பாரில் இருந்து கைகளை எடுத்து விடுகிறேன். வண்டி அடுத்து கட்டுபாட்டை இழந்து பக்கவாட்டில் வழுக்கிச் சென்று சுவரிலோ நடைபாதைக் கல்லிலோ மோதி நிற்கும். நான் இருக்கையில் இருந்து வழுக்கி உருண்டு ஒன்று சாலையிலோ நடைபாதையிலோ கிடப்பேன். ஒவ்வொரு முறையும் இப்படித் தான். பிரேக் போட்டு வண்டியை நிறுத்த எனக்குத் தோன்றுவதில்லை.
முதல் முறை ஹாண்டா ஆக்டிவா வாங்கிய புதுசில் நான் நங்கநல்லூரில் இருந்து ஆதம்பாக்கம் வழி என் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். சாலை காலியாக இருந்தது. ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தேன். ஒருவர் தன் குடும்பத்துடன் பைக்கை நடைபாதையில் இருந்து ரிவர்ஸ் எடுத்து சாலைக்கு நடுவில் வந்தார். பாதி சாலையை அடைந்தவர் என்னைப் பார்த்ததும் அவர் பயத்தில் வண்டியை அப்படியே நிறுத்தி விட்டார். நான் அவரைப் பார்த்த பயத்தில் பிரேக்கை பிடிக்க மறந்து வண்டியை திசை திருப்ப முயன்று அதுவும் முடியாமல் என் கைகளை எடுத்து விட்டேன். உருண்டி நடைபாதையில் போய் விழுந்தேன். கிடந்தபடி நான் “ஐயய்யோ என் வண்டிக்கு என்னாச்சோ” என்று தான் கத்தினேன். ஆனால் வண்டி ஓரளவு தான் சேதாரமானது. அவரிடம் “ஏங்க நடு ரோட்டில வந்து பிளாக் பண்ணி நிக்கிறீங்க?” என்று கத்தினேன். “ரோட்டில யாருமே இல்லென்னு நினைச்சு ரிவர்ஸ் எடுத்தேன்” என்றார். எனக்கு தோளில் பலத்த அடி. குணமாக பத்து நாட்கள் ஆயின. இனிமேல் மெதுவாகத் தான் ஓட்டணும் என உறுதி எடுத்துக் கொண்டேன்.
ஆனால் அடுத்த முறை கடுமையான மழையில் சாலையில் ஓட்டி வரும் போது சனியன் வேறொரு வடிவில் வந்தது. இந்த முறை எனக்கு சாலை தெளிவாய் தெரியவில்லை. ஒரு திருப்பத்தில் டிவைடர் வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் மட்டும் பாதி இடிந்து போய் இருக்கும். அதனால் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியாது. வழக்கமாய் கவனமாய் பார்த்து வருவேன். மழை எரிச்சலில் என்னை அறியாமல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தேன். டிவைடரை மோதப் போகும் போது தான் கவனித்தேன். வழக்கம் போல் கைகளை விடுத்து உருண்டு விழுந்தேன். இம்முறை சிராய்ப்பு, கால் முட்டியில் பலத்த அடி. வண்டியின் சேதாரங்களை சரி பண்ணவும் ஆயிரம் ரூபாய் காலியானது.
மூன்றாவது முறையாய் இன்று. இன்றும் சாலை கிட்டத்தட்ட காலி. ஆழ்வார்பேட்டையில் நாரதகான சபா இருக்கும் சாலை. ஏதோ நினைவில், சாலை காலியாக இருக்கும் நம்பிக்கையில் ஆக்சிலெட்டரை லேசாய் திருகினேன். அவ்வளவு தான். எனக்கு வேறெதுவும் நினைவில்லை. எனக்கு முன்பு ஒரு பெரிய வெள்ளை கார் நின்றிருந்தது. அது நகர்ந்து கொண்டிருப்பதாகவே எனக்கு முதலில் தோன்றியது. பக்கத்தில் போனதும் தான் அது பிரேக் போட்டு சாலை நடுவே நின்றிருப்பது புலனானது. இம்முறை காரில் இடித்து என் வண்டி ஒரு பக்கம் சிதறி ஓட நான் கார் பக்கத்தில் விழுந்து விட்டேன். தோளில், கை மணிக்கட்டில், முதுகில் அடி. நிறைய பேர் உதவிக்கு வந்தார்கள். அவர்களாகவே வண்டியை ரிப்பேர் செய்ய ஆளை அழைத்து வந்தார்கள். ஓரமாய் நாற்காலி போட்டு அமர வைத்தார்கள்.
 ஏன் அந்த கார் பிரேக் போட்டு நின்றது என்பதை பிறகு தான் அறிந்து கொண்டேன். அந்த காருக்கு முன்பாக போய்க் கொண்டிருந்த ஸ்கூட்டர் பங்க்சராகி அதில் இருந்த இரு பெண்கள் விழுந்து விட்டனர். வேகமாய் வந்த காரோ எப்படியோ உடனடியாய் பிரேக் போட்டு நின்று விட்டது. அவர் வண்டியை ரிவர்ஸ் எடுத்திருந்தால் கூட அந்த அசைவை கவனித்து நான் சுதாரித்திருப்பேன். ஆனால் அவரும் அதிர்ச்சியில் அப்படியே சில கணங்கள் நின்று விட்டார்.
மருந்தகத்துக்கு வலிநிவாரணி மாத்திரை வாங்க சென்றேன். அங்கிருந்தவரிடம் விபத்தை வர்ணித்தேன். அவர் கேட்டார் “ஸ்கூட்டர் என்ன ஆக்டிவாவா?
”ஆமாங்க”
“எனக்கு கூட ஆக்டிவா ஓட்டி போன மாசம் விபத்து ஆயிடுச்சு. காலில் நல்ல அடி””
ஓ இது ஒரு சீரியல் கில்லர் ஸ்கூட்டர் போல என புரிந்து கொண்டேன். மற்ற ஸ்கூட்டர்களை விட இதில் பிக் அப் அதிகம். என் பழைய ஸ்கூட்டரை நான் வேகம் கூட்டினால் அது மெல்ல மெல்ல தான் நாற்பதுக்கு சென்று அங்கிருந்து ஐம்பதுக்கு வரும். ஆனால் இந்த வண்டி ஒரு நொடியில் ஐம்பதைத் தொட்டு விடுகிறது. அதுவும் ஆக்ஸிலேட்டரை லேசாய் திருகினால் போதும். திருகுவது கூட தேவையில்லை. சின்னதாய் மணிக்கட்டை அசைத்தால் போதும், சீறுகிறது. இதன் வேகத்துக்கு பழகாதது தான் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என அந்த நண்பர் சொன்னார்.
இதை ஓட்டும் போது வேகம் கூடாதபடி மிகுந்த பிரக்ஞையுடன் இருக்க வேண்டும். என் பழைய வண்டியில் வேகம் அதிகரிக்கும் போது வண்டி சற்று இரையும். நான் உடனே மட்டுப்படுத்துவேன். ஆனால் இந்த வண்டியில் வேகம் அதிகரிப்பது எனக்கு சற்றும் தெரிவதில்லை. விழுந்த பிறகு தான் ஓ வேகமாய் வந்தேனா என யோசிக்கிறேன். அதுவும் என்னை வேடிக்கை பார்த்தவர்கள் ”ஓவர் ஸ்பீடா வந்தீங்க” எனும் போது நம்பத் தோன்றவில்லை.
இதற்கே நானெல்லாம் இந்த கதி என்றால் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டுபவர்களை நினைத்தால் வயிறு கலங்குகிறது. ஒருவேளை அவர்கள் பிரேக் பிடித்து சரியாக நின்று விடுவார்களாக இருக்கும். எனக்கு தான் அங்கே கண்டம் இருக்கிறதே!

”உழைப்பாளி” படத்தில் ரஜினி வயதான கெட்டப்பில் வந்து கவுண்டமணியிடம் தன் 16 வயது மனைவி பற்றி வர்ணித்து வெறுப்பேற்றுவார்: “பகலெல்லாம் சீதாவா இருப்பா. ஆனால் ராத்திரியானா சிலுக்கு ஆயிடுவா. கையை பிடி காலை பிடின்னு என்னை ஒரு வழி பண்ணிடுவா….” ஆளில்லாத சாலையில், தனியான சுகமான பொழுதில், ஆக்டிவாவின் சிலுக்கு அவதாரத்தை எப்படி கையாள்வது என்றுதான் எனக்கு தெரியவில்லை.

Comments

Unknown said…
ஆக்டிவாவில் உள்ள ஒரு அமைப்பு சிக்கல், அதன் பிக்கப் சமமில்லா சிறிய சக்கரங்கள். ஒரு TVS 50 சக்கரம் ஒரு மீட்டரை கடக்க 3 முறை சூழல ஆக்டிவாவோ 6 முறை சூழலும். அதன் பிரேக் இந்த RPM மை கட்டுக்குள் வைக்கும் அளவுக்கு EQUIP ஆனதும் இல்லை. மேலும் கால்களை இரண்டு பக்கமும் பரப்பி உக்காரும் வண்டிகளின் ஈர்ப்பு மையம் ஆக்டிவாவை விடவும் BALANCE ஆனது.

எனக்கு ஒரு அண்ணண் பல வருடங்களுக்கு BIKE ஓட்ட சொல்லி தரும்போது ஒன்றை சொன்னார். "உன்வழியில் முன்னே செல்லும் வாகன வேகத்தை கணிக்க சக்கரத்தை தவிர எதையும் பார்க்க கூடாது". ஏன் என்றதற்கு. உடனே அவர் "கிரிக்கெட்டில் காரம் பந்தை (அஜந்தா மெண்டிஸ் புகழ்) எப்படி ஆடுகிறார்கள்? பௌலரின் மூஞ்சைப்பாத்தா? இல்லைடா பந்தின் சுழலைப்பார்த்துதான் என்றார்."

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...