முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய வாசகன் ஒரு கண்ணாடிக் கோப்பையை போன்றவன்

 Image result for reading

அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு ,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்தங்களின் "இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும்" கட்டுரைகளை படித்தேன். பொதுவாசகன் பற்றிய உங்கள் அலசல் அருமை. உங்கள் கட்டுரைகளின் சிறப்புகளில் ஒன்று, ஒரு தலைப்பை அதன் தரப்பு கேள்வி மற்றும் எதிர்தரப்பு கேள்விகளின் மூலம் விளக்க முயற்சிப்பதும் அந்த உரையாடலில் வாசகனையும் இணைத்துக்கொள்வதும் ஒரு புதிய மனதிறப்பையும் கோணத்தையும் வாசகனுக்கு தருகிறது.

பொதுவாசகன் பற்றிய எனக்கு எழுந்த கேள்விகளையும் என் அனுபவத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


பொதுவாசகன் என்று நவீனத்துவாதிகள் யாரை நம்பினார்கள். சார்பு அற்று ஒரு வாசகனால் இருக்க முடியாதா
என் பள்ளி கல்லூரி காலங்களில் வாரஇதழ்களில் சினிமா செய்திகள் தவிர எதுவும் படித்தது கிடையாது. இலக்கியம் பற்றியோ எழுத்தாளர்கள் பற்றியோ எதுவும் அறிந்திருக்கவில்லை. வேலைக்கு சேர்ந்தபின் ஒரு நாள் எதையோ கூகுள் செய்யும்போது விரல்தடுக்கி ஒரு வலைத்தளத்தில் விழுந்தேன். அதில் சுஜாதாவின் சில சிறுகதைகள் இருக்கவே அதை படிக்க துவங்கினேன். அதற்கு முன் சுஜாதாவை சினிமா வசனகர்த்தாவாகவே தெரியும். அந்த கதைகள் எனக்கு புது உலகத்தையும் நான் பார்க்காத புது மனிதர்களையும் காட்டியது. அதற்கு பின் சுஜாதாவின் மற்ற எழுத்துக்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்
இலக்கியம் பற்றியும் சுஜாதா பற்றியும் தெரியாத நன் அவரை தேடிப்படிக்க ஆரம்பித்த அந்த தருணம் வரை சார்பு அற்றுதானே இருந்தேன். பொது வாசகத்தன்மை  என்பது முதலிரவு போன்றதா. ஒரு புது வாசகனைத்தான் பொதுவாசகன் என்று நம்பினார்கள் என்று நினைக்கிறேன். என்னைப்போன்ற புதியவர்களை வாசகர்களாக்கும் பொருட்டு பொதுவாசகன் என்னும் "பட்டம்" தர முனைந்திருக்கலாம். அந்த முதல் படைப்பை கடந்து போக தேடல் தொடங்கும்போது பொதுவாசகத்தன்மை தொலைந்துபோகிறது என்று நினைக்கிறேன்.

அப்படியானால் என்னால் திரும்பவும் பொதுவாசகன் ஆகமுடியாதா? எதிர்காலத்தில் எழுத்தாளர் பெயர் தெரியாத தலைப்பு தெரியாத ஒரு கவிதை தொகுப்பை வாசிக்கநேர்ந்தால் அந்த கவிதை அதன் உலகிற்குள் என்னை உள்ளிழுத்து சகபடைப்புகளை என்னை தேடத்தூண்டினால், அந்த தேடல் ஆரம்பிக்கும்வரை ஒரு பொது புது வாசகனாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.

நன்றி,
பிரபு  

அன்புள்ள பிரபு
உங்கள் விளக்கமும் கருத்துக்களும் என்னை கவர்ந்தன. பொதுவாசகன் என்பவன் தொடர்ந்து மாறக் கூடிய fluid ஆன ஒரு பிரகிருதி தான்.

இலக்கியம், தத்துவம், அரசியல் என ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து படிக்காத, பொதுவாக எல்லாவற்றையும் மேயும் வாசகர்களையும் பொதுவாசகர்கள் என்கிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பாக நிபுணத்துவம் கொண்ட வாசகர்கள் இருந்தார்கள். இன்று மெல்ல மெல்ல இந்த இருமை அழிந்து வருகிறது என நினைக்கிறேன். முன்பு சுஜாதா, பாலகுமாரனில் ஆரம்பித்து, தி.ஜாவுக்கு வந்து, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என பயணித்து நகுலன், மௌனி என வருவார்கள். வந்த பின் தம்மை ஒரு வேறுவகையான ஆள் என கருதுவார்கள். புதிதாக மதம் மாறியவரைப் போன்று தம் பழைய வாசிப்பு பழக்கத்தை வெறுத்து மறப்பார்கள். கடிவாளம் கட்டியது போல் குறிப்பிட்ட வகை இதழ்களையும் நூல்களையும் மட்டுமே நுணுகி படிப்பார்கள்.

இன்று அந்த வளைந்த பாதையை யாரும் தேர்வதில்லை. முகநூலில் எதேச்சையாய் பலருக்கும் நவீன / தீவிர இலக்கியம் அறிமுகமாகிறது. போகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் முகநூலில் சுவாரஸ்யமாக லகுவாக எழுதுகிறார்கள். தீவிர இலக்கியவாதியைக் கண்டு யாரும் இன்று தெறித்து ஓடுவதில்லை. இப்படி படிக்க ஆரம்பிக்கிறவர்கள் வெகுஜன இதழ்களை இன்று வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. ஒரே சமயம் ஒரு தீவிர கதை, ஒரு தத்துவக் கட்டுரை, வெகுஜன அரசியல் கட்டுரை, செய்தி அலசல், முகநூல் சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என கலந்து படிக்கிறார்கள். இன்றைய வாசகன் ஒரு கண்ணாகிக் கோப்பை போல் இருக்கிறான். அவனில் நிறைகிற விசயம் அவனை தீர்மானிக்கிறது; அவனது வண்ணம் அவனில் ஊற்றப்படும் திரவத்தின் வண்ணமாக இருக்கிறது.
பொதுவாசகன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்துடன் நான் உடன்படுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் உரையாடுவோம்.
நன்றி
அன்புடன்
ஆர். அபிலாஷ்


கருத்துகள்

'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
//இன்றைய வாசகன் ஒரு கண்ணாகிக் கோப்பை போல் இருக்கிறான். அவனில் நிறைகிற விசயம் அவனை தீர்மானிக்கிறது; அவனது வண்ணம் அவனில் ஊற்றப்படும் திரவத்தின் வண்ணமாக இருக்கிறது//

உண்மை... கடிதக் கேள்வியும் அதற்கான பதிலும் அருமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...