Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இன்றைய வாசகன் ஒரு கண்ணாடிக் கோப்பையை போன்றவன்

 Image result for reading

அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு ,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்தங்களின் "இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும்" கட்டுரைகளை படித்தேன். பொதுவாசகன் பற்றிய உங்கள் அலசல் அருமை. உங்கள் கட்டுரைகளின் சிறப்புகளில் ஒன்று, ஒரு தலைப்பை அதன் தரப்பு கேள்வி மற்றும் எதிர்தரப்பு கேள்விகளின் மூலம் விளக்க முயற்சிப்பதும் அந்த உரையாடலில் வாசகனையும் இணைத்துக்கொள்வதும் ஒரு புதிய மனதிறப்பையும் கோணத்தையும் வாசகனுக்கு தருகிறது.

பொதுவாசகன் பற்றிய எனக்கு எழுந்த கேள்விகளையும் என் அனுபவத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


பொதுவாசகன் என்று நவீனத்துவாதிகள் யாரை நம்பினார்கள். சார்பு அற்று ஒரு வாசகனால் இருக்க முடியாதா
என் பள்ளி கல்லூரி காலங்களில் வாரஇதழ்களில் சினிமா செய்திகள் தவிர எதுவும் படித்தது கிடையாது. இலக்கியம் பற்றியோ எழுத்தாளர்கள் பற்றியோ எதுவும் அறிந்திருக்கவில்லை. வேலைக்கு சேர்ந்தபின் ஒரு நாள் எதையோ கூகுள் செய்யும்போது விரல்தடுக்கி ஒரு வலைத்தளத்தில் விழுந்தேன். அதில் சுஜாதாவின் சில சிறுகதைகள் இருக்கவே அதை படிக்க துவங்கினேன். அதற்கு முன் சுஜாதாவை சினிமா வசனகர்த்தாவாகவே தெரியும். அந்த கதைகள் எனக்கு புது உலகத்தையும் நான் பார்க்காத புது மனிதர்களையும் காட்டியது. அதற்கு பின் சுஜாதாவின் மற்ற எழுத்துக்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்
இலக்கியம் பற்றியும் சுஜாதா பற்றியும் தெரியாத நன் அவரை தேடிப்படிக்க ஆரம்பித்த அந்த தருணம் வரை சார்பு அற்றுதானே இருந்தேன். பொது வாசகத்தன்மை  என்பது முதலிரவு போன்றதா. ஒரு புது வாசகனைத்தான் பொதுவாசகன் என்று நம்பினார்கள் என்று நினைக்கிறேன். என்னைப்போன்ற புதியவர்களை வாசகர்களாக்கும் பொருட்டு பொதுவாசகன் என்னும் "பட்டம்" தர முனைந்திருக்கலாம். அந்த முதல் படைப்பை கடந்து போக தேடல் தொடங்கும்போது பொதுவாசகத்தன்மை தொலைந்துபோகிறது என்று நினைக்கிறேன்.

அப்படியானால் என்னால் திரும்பவும் பொதுவாசகன் ஆகமுடியாதா? எதிர்காலத்தில் எழுத்தாளர் பெயர் தெரியாத தலைப்பு தெரியாத ஒரு கவிதை தொகுப்பை வாசிக்கநேர்ந்தால் அந்த கவிதை அதன் உலகிற்குள் என்னை உள்ளிழுத்து சகபடைப்புகளை என்னை தேடத்தூண்டினால், அந்த தேடல் ஆரம்பிக்கும்வரை ஒரு பொது புது வாசகனாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.

நன்றி,
பிரபு  

அன்புள்ள பிரபு
உங்கள் விளக்கமும் கருத்துக்களும் என்னை கவர்ந்தன. பொதுவாசகன் என்பவன் தொடர்ந்து மாறக் கூடிய fluid ஆன ஒரு பிரகிருதி தான்.

இலக்கியம், தத்துவம், அரசியல் என ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து படிக்காத, பொதுவாக எல்லாவற்றையும் மேயும் வாசகர்களையும் பொதுவாசகர்கள் என்கிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பாக நிபுணத்துவம் கொண்ட வாசகர்கள் இருந்தார்கள். இன்று மெல்ல மெல்ல இந்த இருமை அழிந்து வருகிறது என நினைக்கிறேன். முன்பு சுஜாதா, பாலகுமாரனில் ஆரம்பித்து, தி.ஜாவுக்கு வந்து, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என பயணித்து நகுலன், மௌனி என வருவார்கள். வந்த பின் தம்மை ஒரு வேறுவகையான ஆள் என கருதுவார்கள். புதிதாக மதம் மாறியவரைப் போன்று தம் பழைய வாசிப்பு பழக்கத்தை வெறுத்து மறப்பார்கள். கடிவாளம் கட்டியது போல் குறிப்பிட்ட வகை இதழ்களையும் நூல்களையும் மட்டுமே நுணுகி படிப்பார்கள்.

இன்று அந்த வளைந்த பாதையை யாரும் தேர்வதில்லை. முகநூலில் எதேச்சையாய் பலருக்கும் நவீன / தீவிர இலக்கியம் அறிமுகமாகிறது. போகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் முகநூலில் சுவாரஸ்யமாக லகுவாக எழுதுகிறார்கள். தீவிர இலக்கியவாதியைக் கண்டு யாரும் இன்று தெறித்து ஓடுவதில்லை. இப்படி படிக்க ஆரம்பிக்கிறவர்கள் வெகுஜன இதழ்களை இன்று வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. ஒரே சமயம் ஒரு தீவிர கதை, ஒரு தத்துவக் கட்டுரை, வெகுஜன அரசியல் கட்டுரை, செய்தி அலசல், முகநூல் சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என கலந்து படிக்கிறார்கள். இன்றைய வாசகன் ஒரு கண்ணாகிக் கோப்பை போல் இருக்கிறான். அவனில் நிறைகிற விசயம் அவனை தீர்மானிக்கிறது; அவனது வண்ணம் அவனில் ஊற்றப்படும் திரவத்தின் வண்ணமாக இருக்கிறது.
பொதுவாசகன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்துடன் நான் உடன்படுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் உரையாடுவோம்.
நன்றி
அன்புடன்
ஆர். அபிலாஷ்


Comments

//இன்றைய வாசகன் ஒரு கண்ணாகிக் கோப்பை போல் இருக்கிறான். அவனில் நிறைகிற விசயம் அவனை தீர்மானிக்கிறது; அவனது வண்ணம் அவனில் ஊற்றப்படும் திரவத்தின் வண்ணமாக இருக்கிறது//

உண்மை... கடிதக் கேள்வியும் அதற்கான பதிலும் அருமை.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...