அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு ,
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களின் "இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும்" கட்டுரைகளை படித்தேன். பொதுவாசகன் பற்றிய உங்கள் அலசல் அருமை. உங்கள் கட்டுரைகளின் சிறப்புகளில் ஒன்று, ஒரு தலைப்பை அதன் தரப்பு கேள்வி மற்றும் எதிர்தரப்பு கேள்விகளின் மூலம் விளக்க முயற்சிப்பதும் அந்த உரையாடலில் வாசகனையும் இணைத்துக்கொள்வதும் ஒரு புதிய மனதிறப்பையும் கோணத்தையும் வாசகனுக்கு தருகிறது.
பொதுவாசகன் பற்றிய எனக்கு எழுந்த கேள்விகளையும் என் அனுபவத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பொதுவாசகன் என்று நவீனத்துவாதிகள் யாரை நம்பினார்கள். சார்பு அற்று ஒரு வாசகனால் இருக்க முடியாதா?
என் பள்ளி கல்லூரி காலங்களில் வாரஇதழ்களில் சினிமா செய்திகள் தவிர எதுவும் படித்தது கிடையாது. இலக்கியம் பற்றியோ எழுத்தாளர்கள் பற்றியோ எதுவும் அறிந்திருக்கவில்லை. வேலைக்கு சேர்ந்தபின் ஒரு நாள் எதையோ கூகுள் செய்யும்போது விரல்தடுக்கி ஒரு வலைத்தளத்தில் விழுந்தேன். அதில் சுஜாதாவின் சில சிறுகதைகள் இருக்கவே அதை படிக்க துவங்கினேன். அதற்கு முன் சுஜாதாவை சினிமா வசனகர்த்தாவாகவே தெரியும். அந்த கதைகள் எனக்கு புது உலகத்தையும் நான் பார்க்காத புது மனிதர்களையும் காட்டியது. அதற்கு பின் சுஜாதாவின் மற்ற எழுத்துக்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்.
இலக்கியம் பற்றியும் சுஜாதா பற்றியும் தெரியாத நன் அவரை தேடிப்படிக்க ஆரம்பித்த அந்த தருணம் வரை சார்பு அற்றுதானே இருந்தேன். பொது வாசகத்தன்மை என்பது முதலிரவு போன்றதா. ஒரு புது வாசகனைத்தான் பொதுவாசகன் என்று நம்பினார்கள் என்று நினைக்கிறேன். என்னைப்போன்ற புதியவர்களை வாசகர்களாக்கும் பொருட்டு பொதுவாசகன் என்னும் "பட்டம்" தர முனைந்திருக்கலாம். அந்த முதல் படைப்பை கடந்து போக தேடல் தொடங்கும்போது பொதுவாசகத்தன்மை தொலைந்துபோகிறது என்று நினைக்கிறேன்.
அப்படியானால் என்னால் திரும்பவும் பொதுவாசகன் ஆகமுடியாதா? எதிர்காலத்தில் எழுத்தாளர் பெயர் தெரியாத தலைப்பு தெரியாத ஒரு கவிதை தொகுப்பை வாசிக்கநேர்ந்தால் அந்த கவிதை அதன் உலகிற்குள் என்னை உள்ளிழுத்து சகபடைப்புகளை என்னை தேடத்தூண்டினால், அந்த தேடல் ஆரம்பிக்கும்வரை ஒரு பொது புது வாசகனாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.
நன்றி,
பிரபு
அன்புள்ள பிரபு
உங்கள் விளக்கமும் கருத்துக்களும் என்னை கவர்ந்தன. பொதுவாசகன் என்பவன் தொடர்ந்து மாறக் கூடிய fluid ஆன ஒரு பிரகிருதி தான்.
இலக்கியம், தத்துவம், அரசியல் என ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து படிக்காத, பொதுவாக எல்லாவற்றையும் மேயும் வாசகர்களையும் பொதுவாசகர்கள் என்கிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பாக நிபுணத்துவம் கொண்ட வாசகர்கள் இருந்தார்கள். இன்று மெல்ல மெல்ல இந்த இருமை அழிந்து வருகிறது என நினைக்கிறேன். முன்பு சுஜாதா, பாலகுமாரனில் ஆரம்பித்து, தி.ஜாவுக்கு வந்து, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என பயணித்து நகுலன், மௌனி என வருவார்கள். வந்த பின் தம்மை ஒரு வேறுவகையான ஆள் என கருதுவார்கள். புதிதாக மதம் மாறியவரைப் போன்று தம் பழைய வாசிப்பு பழக்கத்தை வெறுத்து மறப்பார்கள். கடிவாளம் கட்டியது போல் குறிப்பிட்ட வகை இதழ்களையும் நூல்களையும் மட்டுமே நுணுகி படிப்பார்கள்.
இன்று அந்த வளைந்த பாதையை யாரும் தேர்வதில்லை. முகநூலில் எதேச்சையாய் பலருக்கும் நவீன / தீவிர இலக்கியம் அறிமுகமாகிறது. போகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் முகநூலில் சுவாரஸ்யமாக லகுவாக எழுதுகிறார்கள். தீவிர இலக்கியவாதியைக் கண்டு யாரும் இன்று தெறித்து ஓடுவதில்லை. இப்படி படிக்க ஆரம்பிக்கிறவர்கள் வெகுஜன இதழ்களை இன்று வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. ஒரே சமயம் ஒரு தீவிர கதை, ஒரு தத்துவக் கட்டுரை, வெகுஜன அரசியல் கட்டுரை, செய்தி அலசல், முகநூல் சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என கலந்து படிக்கிறார்கள். இன்றைய வாசகன் ஒரு கண்ணாகிக் கோப்பை போல் இருக்கிறான். அவனில் நிறைகிற விசயம் அவனை தீர்மானிக்கிறது; அவனது வண்ணம் அவனில் ஊற்றப்படும் திரவத்தின் வண்ணமாக இருக்கிறது.
பொதுவாசகன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்துடன் நான் உடன்படுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் உரையாடுவோம்.
நன்றி
அன்புடன்
ஆர். அபிலாஷ்
கருத்துகள்
உண்மை... கடிதக் கேள்வியும் அதற்கான பதிலும் அருமை.