முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவர்: ஒளிப்பதிவு சொல்லும் உளப்பாங்கு (2)



இனி வரும் தாழ் கோண தூர காட்சியும் (low angle long shot) “செவன் சாமுராயில்வருவதே.




செவன் சாமுராயில்இந்த சமாதி காட்சியின் எழுச்சியில்-இருந்து-வீழ்ச்சிஇறுதியில்-வெறுமை எனும் போக்கு தான் கடைசி காட்சி வரை தொடரும். இதே போல் ஒரு சமாதிக் காட்சியுடன் படம் முடியும். சாமுராய் தலைவர் கம்பெய் தன் சகாக்களிடம் சொல்கிறார்: “நாம் மற்றொரு சமரில் தோற்று விட்டோம். இந்த வெற்றி நமதல்ல, விவசாயிகளுக்கானதே”. அவர் ஏன் தோற்று விட்டோம் என்கிறார், அதுவும் கொள்ளையர்களை முழுக்க கொன்றொழித்த பின்? 1) அந்த சமர் முடிந்ததும் சாமுராய்களின் இடம், அவர்களுக்கான தேவை இல்லாமல் ஆகிறது. அதற்கு மேல் விவசாயிகள் சாமுராய்களுக்கு உணவளித்து கவனித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வாய் சோற்றுக்காக சாமுராய்கள் மீண்டும் அலைய வேண்டும். 2) கொள்ளையர்களை கொன்றதற்கு இணையாய் சாமுராய்களும் கொல்லப்பட்டார்கள். இரு தரப்புக்கும் இழப்புகள். விவசாயிகள் மட்டுமே பெரிய இழப்புகள் இன்றி தப்பித்துக் கொண்டார்கள்.


பாரதப் போர் முடிந்த பின்னர் பாண்டவர்களிடம் காந்தாரி கேட்டாளாம்: “விதவைகளும் பிணங்களும் எஞ்சிய இந்த தேசத்தை, சொந்த பிள்ளைகள் இன்றி, உறவினர்கள் இன்றி, நண்பர்கள் இன்றி நீங்கள் இனி மகிழ்ச்சியாய் ஆள முடியுமா?”. பாணடவர்கள் வென்றதும் கௌரவர்கள் தோற்றதும் ஒன்று தான் என மகாபாரதம் அவதானிக்கிறது. போர் முடிவில் பாண்டவர்கள் வெறுமையை எதிர்கொள்கிறார்கள்வெற்றியின் புளகாங்கிதத்தை அல்ல. ”செவன் சாமுராயின்முடிவும் இப்படியான ஒரு இன்மையையே தொட்டுணர்த்துகிறது.
இருவர்இந்தளவுக்கு ஒரு கசப்பான அர்த்தமின்மையை சுட்டவில்லை என்றாலும் தொடர்ந்து விதியால் கைவிடப்படுகிற ஒரு கையாலாகாத துன்பியல் நாயகனின் கதையாகவும் அது உள்ளது. மனைவியை இழந்த பின் ஆனந்தனுக்கு மீண்டும் அதிர்ஷ்டம். அவனது நின்று போன படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு அது நன்றாக ஓடி அவன் பெரிய ஹீரோ ஆகிறான். அடுத்து அவன் திராவிட கட்சியில் முக்கிய தலைவன் ஆகிறான். தமிழ்ச்செல்வனை முதல்வர் ஆக்குவதற்கான திரைமறைவு வேலைகளை ஆனந்தன் செய்கிறான். ஆனால் தமிழ்ச்செல்வன் ஆனந்தன் தன் நண்பன் அல்ல அரசியல் போட்டியாளன் என அஞ்சுகிறான். இது உள்ளூர பகைமையை வளர்க்கிறது. தொடர்ந்து ஆனந்தன் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறான். படத்தில் அவன் அழுகிற மூன்றாவது தருணம் இது. ஆனாலும் அவன் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர போராடுகிறான். புதுக்கட்சி ஆரம்பித்து நண்பனை தேர்தலில் முறியடிக்கிறான். ஆனால் அதுவும் அவனுக்கு முழுமையான வெற்றி அல்ல என்பதை நண்பனுடனான அரசியல் மோதல்களில் அவனுக்கு முழு திருப்தியோ உவப்போ இல்லை என்பதில் நமக்கு தெரிய வருகிறது. அது மட்டுமல்ல அவனது காதலி கல்பனா விபத்தில் மாண்டு போகிறாள். தமிழ்ச்செல்வனுக்கு ஆட்சி எப்படி அதிருப்தியும் கவலையும் நிறைந்ததாக இருக்கிறதோ ஆனந்தனுக்கும் அப்படியே. இருவருமே ஊழலுக்கும் சமூக தீமைகளுக்கும் எதிராய் பேசி ஆட்சிக்கு வந்து அதே சீரழிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அவற்றை தம்மால் முறியடிக்க முடியாது என தோல்வியை ஏற்கிறார்கள்.
 அடுத்த தேர்தலுக்கு முன் ஆனந்தன் இறந்து போக அச்செய்தி தமிழ்ச்செல்வனை எட்டுகிறது. இனி தமிழ்ச்செல்வனுக்கு யாரும் போட்டி இல்லை. அவனே நீண்ட காலம் ஆட்சிக்கட்டிலில் இருக்கலாம். ஆனால் அவன் மகிழ்ச்சியாய் இல்லை. தனது அதுவரையிலான அரசியல் வியூகங்கள் மீது கசப்பும் இழப்புணர்வும் தோன்ற அவன் தளர்ந்து போகிறான். தன் நண்பனைப் பற்றின நினைவுகளில் அலைகழிகிறான். அதாவது தமிழ்ச்செல்வனின் வெற்றி இனிமேல் முழுமையான வெற்றியாக இருக்காது. படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை யாருக்கும் எதுவும் முழுமையாய் கிடைப்பதில்லை. ஒருவித சாய்ந்தாடி (seesaw) ஆட்டமாக வாழ்க்கை இருக்கிறது.
இருவரில்இந்த சாய்ந்தாட்டத்தை பாத்திரங்களின் வளர்ச்சி, மாற்றம், எழுச்சி, வீழ்ச்சியை ஒட்டி எப்படி திரைமொழி சித்தரிக்கிறது என பார்ப்போம்.
ஆனந்தன் தமிழ்ச்செல்வனை முதலில் சந்திப்பது திரைப்பட செட்டில். பெரிய அரண்மனை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரியணை. ஆனந்தன் அதில் அமர்ந்து பார்க்கிறேன், மிகுந்த தயக்கத்துடன். அடுத்து தனக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள கத்தியை எடுத்து வீசிப் பழகுகிறான். பார்வையாளர்களை நோக்கிபடத்தில் பார்வையாளர்களை நோக்கி அவன் செய்யும் ஒரே சைகை இது மட்டுமே. இனி தான் எதிர்கொள்ளப் போகும் வாழ்க்கையை இப்படித் தான் அடித்து நொறுக்கப் போகிறான் என சொல்கிறானோ? ஆனால் அவனது இந்த தன்னம்பிக்கையும் முழுமையானது அல்ல. செட்டில் ஒரு கல்விளக்கைக் காண்கிறான். உடனே பணிந்து வணங்குகிறான். அடுத்து மதவழமைகளை கேலி செய்து கவிதை பாடியபடி தமிழ்ச்செல்வன் அங்கு வருகிறான். ஆனந்தன் அவனது திசை நோக்கி திரும்புகிறான். இக்காட்சி முழுக்க ஆனந்தன் தமிழ்ச்செல்வனுக்கு பணிந்து அடிபணிந்து செல்கிறவனாக வருவான். தன்னை தமிழ்ச்செல்வனின் ரசிகன் என்றே அறிமுகப்படுத்துவான். ஆனந்தனின் இந்த பலவீனமான உடல்மொழியை குறிப்புணர்த்தும்படியே கீழ் வரும் காட்சியில் foregroundஇல் உள்ள தீபங்கள் நெகிழ்ந்து சாய்வதைப் பாருங்கள்.






மேலே உள்ள காட்சிகள் தாழ் கோண மிட் (low angle mid) ஷாட்கள். இரண்டிலும் கோபுர முகடுகளை, அதைத் தாண்டி விரியும் அந்தி வானை சந்தோஷ் சிவன் சட்டகத்துள் கொண்டு வந்துள்ள விதம் அபாரமானது. தமிழ்ச்செல்வன் ஒரு கோயில் முகட்டில் நின்று கடவுள் மறுப்பு பேசுகிறான் என்பதில் ஒரு நகைமுரண் உள்ளது (வசனங்கள் நடுவே கோயில் மணி ஓசை வேறு சன்னமாய் கேட்கிறது). அதை விட முக்கியமாய், தாழ் கோணத்தில் இருவரையும் விஞ்சி கோயில் முகடுகளும் அவற்றை விஞ்சி ஆகாயமும் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் கூட்டங்கள் நடக்கும் நாயக்கர் மஹாலும் இப்படத்தில் இவ்வாறே காட்டப்படுகிறது. வரலாற்றை மாற்றி அமைப்பேன் எனும் மனிதனின் அகந்தையை அதே வரலாறு சிறு கேலியுடன் அமைதியாய் நோக்குவது போல் இதே தாழ் கோணத்தில் தனித்த பிரம்மாண்ட கட்டிடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குள் தனியே அலையும் ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் பாரதப்போர் முடிந்த பின் குருஷேத்திர களத்தில் திரியும் பாண்டவர்களை நினைவுபடுத்துகிறார்கள். மேலே தரப்பட்ட காட்சிகளில் தமிழ்ச்செல்வனின் அரசியல் உறுதிப்பாடும் ஆனந்தனுக்கு அவன் மீதுள்ள பற்றும் தெரிய வந்தாலும் இருவரின் காலத்தின் முன் வெறும் தூசு எனும் அவதானிப்பும் நுணுக்கமாய் வருகிறது. சந்தோஷ் சிவனின் படைப்பூக்கமிக்க காட்சிமொழி வெளிப்படும் இடம் இது.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
very nice analysis
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice alalysis

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...