Skip to main content

ஜெயமோகனின் தீரா ஆற்றல்


Image result for ஜெயமோகன்

சில மாதங்களுக்கு முன் பாவண்ணனுடன் உரையாடுகையில் ஜெயமோகனின் வற்றாத ஆற்றலைப் பற்றி பேச்சு வந்தது. தனிப்பட்ட வாழ்வின் அலைகழிப்புகள் மென்னியை நெரிக்காத எழுத்தாளனே இல்லை; அதனால் களைத்து கரை ஒதுங்காத படைப்பாளியே இல்லை. தமிழின் பெரும்படைப்பாளிகள் எப்படியோ இப்படி கண்ணில் மணலை வாரி அடித்து நிலைகுலைக்கும் வாழ்க்கை பிரச்சனைகளை லகுவாய் சமாளிக்கிறார்கள்; அல்லது எதனாலும் எழுத்தை வாழ்க்கை குலையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்களில் ஜெயமோகன் ஒரு ஹை வோல்டேஜ் மின்கம்பி.

 மனிதர் எப்படி ஓய்வில்லாமல் சுழன்று கொண்டே இருக்கிறார் என வியப்பு தோன்றும்? இன்று நாம் அப்படி சுழல்கிறோம், பெரும்பாலானோர், ஆனால் பேஸ்புக்கில், கேளிக்கைகளில்.
 இலக்கியம் போன்று அக உணர்ச்சிகளை குவிக்க வேண்டுகிற, ஆவேசமான உணர்ச்சிநிலைகளை ஏற்படுத்தி தக்க வைக்கிற, மூளை உழைப்பை கடுமையாய் கோருகிற துறையில் அப்படி தொடர்ந்து இயங்குவது மிக மிக சிரமம். அன்றாட வாழ்வின் நெடுந்தொலைவு அலைச்சல்களுக்குப் பிறகு இலக்கிய கூட்டங்களில் அமர்வது தனக்கு மிகவும் ஆசுவாசமான் புத்துணர்வூட்டும் அனுபவம் என பாவண்ணன் குறிப்பிட்டார். அப்போது தான் ஜெயமோகன் பற்றி மேற்கண்டவாறு உரையாடினோம்.
ஜெ.மோவுக்கு இலக்கிய உரையாடல்களைப் பொறுத்த வரையில் இரவு பகல் என இல்லை; எப்போது தீராத ஆற்றல் அவருக்குள் ஒளிச்சுடராய் எரிந்து கொண்டே இருக்கிறது என்றார். நான் தொண்ணூறுகளில் அவரை முதலில் சந்தித்த போது இதைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் பலமுறை என் நண்பர்களிடத்து சொல்லி சொல்லி அலுக்காத ஒரு நிகழ்ச்சி இது. ஒரு மாலையில் அவரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவரது பேச்சு துவங்கியது. நான் இப்படி திகட்ட திகட்ட இவ்வளவு அறிவார்த்தமாய் ஆழமாய் பேசுகிறவரை முன்பு கண்டதில்லை. ஆனால் விசயம் அதுவல்ல. இரவு மணி எட்டரைக்கு மின்சாரம் போனது. அவர் வீட்டில் அப்போது வேறு யாரும் இல்லை. ஜெ.மோ மிக சுவாரஸ்யமாய் தல்ஸ்தாய் பற்றி பேசிக் கொண்டிருந்தார். யாரென்றாலும் அந்த நொடி பேச்சை நிறுத்தி விளக்கை தேடுவார்கள். ஆனால் ஜெ.மோ பேசிக் கொண்டே போனார். இருளின் ஊடாய் அவரது குரலை மட்டும் பின் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இலக்கிய உரையாடலுக்கு எதுவும் தேவையில்லை, தவிக்கும் இதயத்தைத் தவிர என நான் உணர்ந்து கொண்டேன் அப்போது.
 கன்னிமை கழியாத ஒரு இளைஞனை காமம் அலைகழிப்பது போல் இலக்கியமும் கலையும் அறிவுத் தேடலும் இந்த மனிதனை போட்டுத் தாக்குகிறது என எனக்குத் தோன்றியது. நான் அன்று வீட்டுக்கு சென்ற பின் நள்ளிரவு வரை இதையே யோசித்துக் கொண்டிருந்தேன். தூங்க செல்லும் முன் ஒருநாள் நானும் எழுத்தாளன் ஆவேன் என நினைத்துக் கொண்டேன். எழுதும் ஆர்வத்தினால் அல்ல; புத்தகங்கள் பிரசுரிக்க, புகழ் பெற, விருது வாங்க உத்தேசித்து அல்ல. ஜெ.மோவைப் போல் இவ்வளவு பித்தாக ஒரே விசயத்தில் இருப்பதற்காக. என் வாழ்வை திசைமாற்றிய சம்பவம் அது.
அவர் தனித்து “சொல் புதிது” நடத்திய போதும், ஊட்டி கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்த போது இப்படியான பைத்திய முனைப்பை கண்டிருக்கிறேன். தனியாக ஒவ்வொரு வேலையையும் செய்து முடிப்பார். இப்படி செய்கிற படைப்பாளிகளின் எழுத்துப் பணி தடைபடும்; ஆனால் ஜெமோ இக்கட்டத்தில் கூடுதலாக எழுதுவார்.
எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என ஒருமுறை அவரிடம் வினவினேன். “நான் தேவையில்லாத விசயங்களை தவிர்க்கிறேன். டிவியில் கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. வெட்டி அரட்டைகள் இல்லை…” என்றார்.
ஆனால் இவற்றை மட்டும் கத்தரித்து எறிந்தால் போதுமா? போதாது. எவை தேவையில்லாதவை? இலக்கியத்துக்கு, அறிவு விருத்திக்கு, வாழ்வை அறிவதற்கு தொடர்பில்லாதவை அனைத்தும் தேவையில்லாதவை. எழுத்தாளனாக இருந்தாலும் நாம் செய்ய வேண்டிய அன்றாட காரியங்கள் நிறைய உள்ளன. ஆனால் எழுத்துக்காக அவற்றில் எதையும் எப்போதும் தூக்கிப் போட நாம் துணிய வேண்டும். அப்படி என்றால் எழுத நேரம் நிறைய நிறைய கிடைக்கும். பல சமயம் நம்மால் தவிர்க்க முடிகிற, ஆனால் நாம் தவிர்க்க துணியாத சின்ன சின்ன வேலைகளில் தாம் நம் காலம் விரயமாகிறது. இதை நான் ஜெ.மோவிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.
இப்போதெல்லாம் நான் காலை எழுகையில் இன்று எதை எப்போது எழுத வேண்டும் என முதலில் திட்டமிடுகிறேன். எனது நாள் முழுக்க எழுத்தை நோக்கி முடுக்கி விடப்படுகிறது. எழுத்துக்கு தொடர்பில்லாத பல காரியங்களை செய்தாலும் அவற்றில் என் மன ஆற்றலை செலுத்தாமல் தேக்கி வைக்கிறேன். நான் ஒன்றில் இருப்பேன், ஆனால் உண்மையில் இருக்க மாட்டேன். எழுத்தில் மட்டுமே முழுக்க உண்மையாய் இருப்பேன். மற்ற இடங்களில் இருப்பது போல் பாவனை செய்வேன். அது யாருக்கும் தெரியாத விதம் நன்றாய் நடிப்பேன் – ஒரு புன்னகை, ஒரு தலையசைப்பு போதும், மக்கள் நம்பி விடுவார்கள். என்னை நன்றாய் தெரிந்தவர்களிடம் “இதுவே நான், மாற்றிக் கொள்ள மாட்டேன்” என துணிந்து சொல்ல தயங்க மாட்டேன்.
கடந்த முறை விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது ஜெ.மோ சற்றும் மாறியிருக்கவில்லை எனக் கண்டேன். அவரது பொங்கி நுரைக்கும் மிகை ஆற்றலை தாள முடியாமல் விழா ஒருங்கிணைப்பாளர்கள் துவங்குவதை கவனித்தேன். அவரிடம் இருந்து எப்போதெல்லாம் கண்ணில் படாமல் விலகி இருக்க வேண்டும், எப்போது அவரிடம் பேச வேண்டும், எப்படி அவரை சமாளிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படி கச்சிதமாய் இயங்க வைக்கும் மின்கலன் ஜெ.மோ தான் – சார்ஜ் செய்ய தேவையில்லாத மின்கலன்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...