Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜெயமோகனின் தீரா ஆற்றல்


Image result for ஜெயமோகன்

சில மாதங்களுக்கு முன் பாவண்ணனுடன் உரையாடுகையில் ஜெயமோகனின் வற்றாத ஆற்றலைப் பற்றி பேச்சு வந்தது. தனிப்பட்ட வாழ்வின் அலைகழிப்புகள் மென்னியை நெரிக்காத எழுத்தாளனே இல்லை; அதனால் களைத்து கரை ஒதுங்காத படைப்பாளியே இல்லை. தமிழின் பெரும்படைப்பாளிகள் எப்படியோ இப்படி கண்ணில் மணலை வாரி அடித்து நிலைகுலைக்கும் வாழ்க்கை பிரச்சனைகளை லகுவாய் சமாளிக்கிறார்கள்; அல்லது எதனாலும் எழுத்தை வாழ்க்கை குலையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்களில் ஜெயமோகன் ஒரு ஹை வோல்டேஜ் மின்கம்பி.

 மனிதர் எப்படி ஓய்வில்லாமல் சுழன்று கொண்டே இருக்கிறார் என வியப்பு தோன்றும்? இன்று நாம் அப்படி சுழல்கிறோம், பெரும்பாலானோர், ஆனால் பேஸ்புக்கில், கேளிக்கைகளில்.
 இலக்கியம் போன்று அக உணர்ச்சிகளை குவிக்க வேண்டுகிற, ஆவேசமான உணர்ச்சிநிலைகளை ஏற்படுத்தி தக்க வைக்கிற, மூளை உழைப்பை கடுமையாய் கோருகிற துறையில் அப்படி தொடர்ந்து இயங்குவது மிக மிக சிரமம். அன்றாட வாழ்வின் நெடுந்தொலைவு அலைச்சல்களுக்குப் பிறகு இலக்கிய கூட்டங்களில் அமர்வது தனக்கு மிகவும் ஆசுவாசமான் புத்துணர்வூட்டும் அனுபவம் என பாவண்ணன் குறிப்பிட்டார். அப்போது தான் ஜெயமோகன் பற்றி மேற்கண்டவாறு உரையாடினோம்.
ஜெ.மோவுக்கு இலக்கிய உரையாடல்களைப் பொறுத்த வரையில் இரவு பகல் என இல்லை; எப்போது தீராத ஆற்றல் அவருக்குள் ஒளிச்சுடராய் எரிந்து கொண்டே இருக்கிறது என்றார். நான் தொண்ணூறுகளில் அவரை முதலில் சந்தித்த போது இதைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் பலமுறை என் நண்பர்களிடத்து சொல்லி சொல்லி அலுக்காத ஒரு நிகழ்ச்சி இது. ஒரு மாலையில் அவரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவரது பேச்சு துவங்கியது. நான் இப்படி திகட்ட திகட்ட இவ்வளவு அறிவார்த்தமாய் ஆழமாய் பேசுகிறவரை முன்பு கண்டதில்லை. ஆனால் விசயம் அதுவல்ல. இரவு மணி எட்டரைக்கு மின்சாரம் போனது. அவர் வீட்டில் அப்போது வேறு யாரும் இல்லை. ஜெ.மோ மிக சுவாரஸ்யமாய் தல்ஸ்தாய் பற்றி பேசிக் கொண்டிருந்தார். யாரென்றாலும் அந்த நொடி பேச்சை நிறுத்தி விளக்கை தேடுவார்கள். ஆனால் ஜெ.மோ பேசிக் கொண்டே போனார். இருளின் ஊடாய் அவரது குரலை மட்டும் பின் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இலக்கிய உரையாடலுக்கு எதுவும் தேவையில்லை, தவிக்கும் இதயத்தைத் தவிர என நான் உணர்ந்து கொண்டேன் அப்போது.
 கன்னிமை கழியாத ஒரு இளைஞனை காமம் அலைகழிப்பது போல் இலக்கியமும் கலையும் அறிவுத் தேடலும் இந்த மனிதனை போட்டுத் தாக்குகிறது என எனக்குத் தோன்றியது. நான் அன்று வீட்டுக்கு சென்ற பின் நள்ளிரவு வரை இதையே யோசித்துக் கொண்டிருந்தேன். தூங்க செல்லும் முன் ஒருநாள் நானும் எழுத்தாளன் ஆவேன் என நினைத்துக் கொண்டேன். எழுதும் ஆர்வத்தினால் அல்ல; புத்தகங்கள் பிரசுரிக்க, புகழ் பெற, விருது வாங்க உத்தேசித்து அல்ல. ஜெ.மோவைப் போல் இவ்வளவு பித்தாக ஒரே விசயத்தில் இருப்பதற்காக. என் வாழ்வை திசைமாற்றிய சம்பவம் அது.
அவர் தனித்து “சொல் புதிது” நடத்திய போதும், ஊட்டி கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்த போது இப்படியான பைத்திய முனைப்பை கண்டிருக்கிறேன். தனியாக ஒவ்வொரு வேலையையும் செய்து முடிப்பார். இப்படி செய்கிற படைப்பாளிகளின் எழுத்துப் பணி தடைபடும்; ஆனால் ஜெமோ இக்கட்டத்தில் கூடுதலாக எழுதுவார்.
எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என ஒருமுறை அவரிடம் வினவினேன். “நான் தேவையில்லாத விசயங்களை தவிர்க்கிறேன். டிவியில் கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. வெட்டி அரட்டைகள் இல்லை…” என்றார்.
ஆனால் இவற்றை மட்டும் கத்தரித்து எறிந்தால் போதுமா? போதாது. எவை தேவையில்லாதவை? இலக்கியத்துக்கு, அறிவு விருத்திக்கு, வாழ்வை அறிவதற்கு தொடர்பில்லாதவை அனைத்தும் தேவையில்லாதவை. எழுத்தாளனாக இருந்தாலும் நாம் செய்ய வேண்டிய அன்றாட காரியங்கள் நிறைய உள்ளன. ஆனால் எழுத்துக்காக அவற்றில் எதையும் எப்போதும் தூக்கிப் போட நாம் துணிய வேண்டும். அப்படி என்றால் எழுத நேரம் நிறைய நிறைய கிடைக்கும். பல சமயம் நம்மால் தவிர்க்க முடிகிற, ஆனால் நாம் தவிர்க்க துணியாத சின்ன சின்ன வேலைகளில் தாம் நம் காலம் விரயமாகிறது. இதை நான் ஜெ.மோவிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.
இப்போதெல்லாம் நான் காலை எழுகையில் இன்று எதை எப்போது எழுத வேண்டும் என முதலில் திட்டமிடுகிறேன். எனது நாள் முழுக்க எழுத்தை நோக்கி முடுக்கி விடப்படுகிறது. எழுத்துக்கு தொடர்பில்லாத பல காரியங்களை செய்தாலும் அவற்றில் என் மன ஆற்றலை செலுத்தாமல் தேக்கி வைக்கிறேன். நான் ஒன்றில் இருப்பேன், ஆனால் உண்மையில் இருக்க மாட்டேன். எழுத்தில் மட்டுமே முழுக்க உண்மையாய் இருப்பேன். மற்ற இடங்களில் இருப்பது போல் பாவனை செய்வேன். அது யாருக்கும் தெரியாத விதம் நன்றாய் நடிப்பேன் – ஒரு புன்னகை, ஒரு தலையசைப்பு போதும், மக்கள் நம்பி விடுவார்கள். என்னை நன்றாய் தெரிந்தவர்களிடம் “இதுவே நான், மாற்றிக் கொள்ள மாட்டேன்” என துணிந்து சொல்ல தயங்க மாட்டேன்.
கடந்த முறை விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது ஜெ.மோ சற்றும் மாறியிருக்கவில்லை எனக் கண்டேன். அவரது பொங்கி நுரைக்கும் மிகை ஆற்றலை தாள முடியாமல் விழா ஒருங்கிணைப்பாளர்கள் துவங்குவதை கவனித்தேன். அவரிடம் இருந்து எப்போதெல்லாம் கண்ணில் படாமல் விலகி இருக்க வேண்டும், எப்போது அவரிடம் பேச வேண்டும், எப்படி அவரை சமாளிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படி கச்சிதமாய் இயங்க வைக்கும் மின்கலன் ஜெ.மோ தான் – சார்ஜ் செய்ய தேவையில்லாத மின்கலன்.


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...