இந்த டெஸ்ட் தொடரில் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பது ஆடுதளங்கள்
தாம். அவை இங்கிலாந்தில் உள்ள வறட்சி காரணமாய் காய்ந்து தளர்ந்து போயுள்ளன.
ஒரு நல்ல ஆடுதளத்துக்குள்
மண் அடுக்குகள் உறுதியாய் இருக்க வேண்டும்; அவை நெகிழவோ தளரவோ கூடாது. அது ஆடுதளத்தை
மிக மெத்தனமாக்கும்; பவுன்ஸ் இல்லாமல் பந்து ஊர்ந்து வரத் தொடங்கும். இதைத் தவிர்க்கவே
இங்கிலாந்து ஆடுதள தயாரிப்பாளர்கள் கூடுதலாய் நீர் தெளிக்கிறார்கள். ஆனால் கடும் வெப்ப
அலைகள் காரணமாய் நீரை தளங்கள் வேகமாய் உறிஞ்சுகின்றன. ஆடுதளம் வெடிக்காமல் இருக்கும்
பொருட்டு தொடர்ந்து நீர் தெளிக்கிறார்கள். விளைவாக, ஆடுதளம் ஒரு பாதி ஈரமாயும் மறு
பாதி காய்ந்து போய் வறண்டும் இருக்கும். மேலும் உறுதித்தன்மை கொடுக்க புற்களை அதிகம்
மழிக்காமல் விட்டு வைப்பார்கள். இத்தகைய ஆடுதளங்களில் (புற்பரப்பு காரணமாய்) பந்து
தொடர்ந்து ஸ்விங் ஆகும். ஆடுதளத்துக்குள் காயாத அடுக்குகள் மீது பந்து பட்டால் ஓவராய்
பவுன்ஸ் ஆகும்; காய்ந்த அடுக்குகள் என்றால் பந்து முட்டிக்கு கீழே பம்மிப் போகும்.
இந்தியா மட்டையாடிய போது பந்து மெத்தனமாய் இருந்ததால் சமாளித்து
விட்டார்கள். ஆனால் இன்று இங்கிலாந்து மட்டை ஆடிய போது வானம் மேகமூட்டமாய் இருந்திட
பந்து நன்றாய் ஸ்விங் ஆனது. 161க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது உண்மையிலேயே ஆச்சரியம்
என்றாலும், இன்றைய சீதோஷ்ண நிலையும் இதற்கு ஒரு காரணம்.
நாளையும் மேகமூட்டமும்
சாரலும் தொடரும். ஆகையால் நாளைக் காலை முதல் முப்பது ஓவர்களுக்குள் நிச்சயம் 3-4 இந்திய
விக்கெட்டுகள் சரியும் என ஊகிக்கிறேன். அப்படியே நடந்தாலும் இந்தியாவுக்கு அதனால் பெரிய
பாதிப்பு இராது. 400 சுமாருக்கு இலக்கு நிர்ணயித்தாலே நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்தால்
அதை சுலபத்தில் தாண்ட முடியாது.
ஆனால், இங்கிலாந்துக்கு இரண்டு விசயங்கள் அனுகூலமானவை:
1) நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் மழையோ மேகமூட்டமோ
இன்றி சீதோஷ்ண நிலை மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும்
2) அஷ்வினின் காயம்
அதேவேளை, கடைசி இரு நாட்கள் இந்த ஆடுதளம் இரு விதங்களில்
மாற்றமடையலாம்.
1) இங்கிலாந்து நாளை ஐந்துக்கு மேல் விக்கெட்டுகள்
இழந்தால் நான்காவது நாள் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு வசதிப்படும் போது அதில் லாபம்
கொய்ய முடியாது போகும்.
2) ஆனால் ஒருவேளை இங்கிலாந்து நாளை நன்றாக மட்டையாடினால்,
நான்காவது நாள் வெயிலில் மட்டையாட்டம் சிறப்பாக அமையலாம். அப்போது அஷ்வின் காயத்தில்
இருந்து மீளவில்லை எனில் நான்கு பவுலர்களைக் கொண்டு நூற்றுக்கு மேல் ஓவர்கள் வீசுவது
சிரமமாகும். ஆடுதளம் நன்றாய் மாறும், பவுலர்கள் களைப்பாவார்கள். ஆட்டம் தலைகீழாய் மாறலாம்.
ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த நாள் இன்று. ஆட்டத்தை சீல்
வைக்கும் நாள் நாளை. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இப்போதைக்கு 60-40.
Comments
ஆனால் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.