முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்: நாள் இரண்டு



இந்த டெஸ்ட் தொடரில் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பது ஆடுதளங்கள் தாம். அவை இங்கிலாந்தில் உள்ள வறட்சி காரணமாய் காய்ந்து தளர்ந்து போயுள்ளன.

 ஒரு நல்ல ஆடுதளத்துக்குள் மண் அடுக்குகள் உறுதியாய் இருக்க வேண்டும்; அவை நெகிழவோ தளரவோ கூடாது. அது ஆடுதளத்தை மிக மெத்தனமாக்கும்; பவுன்ஸ் இல்லாமல் பந்து ஊர்ந்து வரத் தொடங்கும். இதைத் தவிர்க்கவே இங்கிலாந்து ஆடுதள தயாரிப்பாளர்கள் கூடுதலாய் நீர் தெளிக்கிறார்கள். ஆனால் கடும் வெப்ப அலைகள் காரணமாய் நீரை தளங்கள் வேகமாய் உறிஞ்சுகின்றன. ஆடுதளம் வெடிக்காமல் இருக்கும் பொருட்டு தொடர்ந்து நீர் தெளிக்கிறார்கள். விளைவாக, ஆடுதளம் ஒரு பாதி ஈரமாயும் மறு பாதி காய்ந்து போய் வறண்டும் இருக்கும். மேலும் உறுதித்தன்மை கொடுக்க புற்களை அதிகம் மழிக்காமல் விட்டு வைப்பார்கள். இத்தகைய ஆடுதளங்களில் (புற்பரப்பு காரணமாய்) பந்து தொடர்ந்து ஸ்விங் ஆகும். ஆடுதளத்துக்குள் காயாத அடுக்குகள் மீது பந்து பட்டால் ஓவராய் பவுன்ஸ் ஆகும்; காய்ந்த அடுக்குகள் என்றால் பந்து முட்டிக்கு கீழே பம்மிப் போகும்.
இந்தியா மட்டையாடிய போது பந்து மெத்தனமாய் இருந்ததால் சமாளித்து விட்டார்கள். ஆனால் இன்று இங்கிலாந்து மட்டை ஆடிய போது வானம் மேகமூட்டமாய் இருந்திட பந்து நன்றாய் ஸ்விங் ஆனது. 161க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது உண்மையிலேயே ஆச்சரியம் என்றாலும், இன்றைய சீதோஷ்ண நிலையும் இதற்கு ஒரு காரணம்.
 நாளையும் மேகமூட்டமும் சாரலும் தொடரும். ஆகையால் நாளைக் காலை முதல் முப்பது ஓவர்களுக்குள் நிச்சயம் 3-4 இந்திய விக்கெட்டுகள் சரியும் என ஊகிக்கிறேன். அப்படியே நடந்தாலும் இந்தியாவுக்கு அதனால் பெரிய பாதிப்பு இராது. 400 சுமாருக்கு இலக்கு நிர்ணயித்தாலே நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்தால் அதை சுலபத்தில் தாண்ட முடியாது.
ஆனால், இங்கிலாந்துக்கு இரண்டு விசயங்கள் அனுகூலமானவை:
1)   நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் மழையோ மேகமூட்டமோ இன்றி சீதோஷ்ண நிலை மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும்
2)   அஷ்வினின் காயம்
அதேவேளை, கடைசி இரு நாட்கள் இந்த ஆடுதளம் இரு விதங்களில் மாற்றமடையலாம்.
1)   இங்கிலாந்து நாளை ஐந்துக்கு மேல் விக்கெட்டுகள் இழந்தால் நான்காவது நாள் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு வசதிப்படும் போது அதில் லாபம் கொய்ய முடியாது போகும்.
2)   ஆனால் ஒருவேளை இங்கிலாந்து நாளை நன்றாக மட்டையாடினால், நான்காவது நாள் வெயிலில் மட்டையாட்டம் சிறப்பாக அமையலாம். அப்போது அஷ்வின் காயத்தில் இருந்து மீளவில்லை எனில் நான்கு பவுலர்களைக் கொண்டு நூற்றுக்கு மேல் ஓவர்கள் வீசுவது சிரமமாகும். ஆடுதளம் நன்றாய் மாறும், பவுலர்கள் களைப்பாவார்கள். ஆட்டம் தலைகீழாய் மாறலாம்.
ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த நாள் இன்று. ஆட்டத்தை சீல் வைக்கும் நாள் நாளை. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இப்போதைக்கு 60-40.

கருத்துகள்

ஸ்ரீராம். இவ்வாறு கூறியுள்ளார்…
விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

ஆனால் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...