Skip to main content

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்: நாள் இரண்டு



இந்த டெஸ்ட் தொடரில் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பது ஆடுதளங்கள் தாம். அவை இங்கிலாந்தில் உள்ள வறட்சி காரணமாய் காய்ந்து தளர்ந்து போயுள்ளன.

 ஒரு நல்ல ஆடுதளத்துக்குள் மண் அடுக்குகள் உறுதியாய் இருக்க வேண்டும்; அவை நெகிழவோ தளரவோ கூடாது. அது ஆடுதளத்தை மிக மெத்தனமாக்கும்; பவுன்ஸ் இல்லாமல் பந்து ஊர்ந்து வரத் தொடங்கும். இதைத் தவிர்க்கவே இங்கிலாந்து ஆடுதள தயாரிப்பாளர்கள் கூடுதலாய் நீர் தெளிக்கிறார்கள். ஆனால் கடும் வெப்ப அலைகள் காரணமாய் நீரை தளங்கள் வேகமாய் உறிஞ்சுகின்றன. ஆடுதளம் வெடிக்காமல் இருக்கும் பொருட்டு தொடர்ந்து நீர் தெளிக்கிறார்கள். விளைவாக, ஆடுதளம் ஒரு பாதி ஈரமாயும் மறு பாதி காய்ந்து போய் வறண்டும் இருக்கும். மேலும் உறுதித்தன்மை கொடுக்க புற்களை அதிகம் மழிக்காமல் விட்டு வைப்பார்கள். இத்தகைய ஆடுதளங்களில் (புற்பரப்பு காரணமாய்) பந்து தொடர்ந்து ஸ்விங் ஆகும். ஆடுதளத்துக்குள் காயாத அடுக்குகள் மீது பந்து பட்டால் ஓவராய் பவுன்ஸ் ஆகும்; காய்ந்த அடுக்குகள் என்றால் பந்து முட்டிக்கு கீழே பம்மிப் போகும்.
இந்தியா மட்டையாடிய போது பந்து மெத்தனமாய் இருந்ததால் சமாளித்து விட்டார்கள். ஆனால் இன்று இங்கிலாந்து மட்டை ஆடிய போது வானம் மேகமூட்டமாய் இருந்திட பந்து நன்றாய் ஸ்விங் ஆனது. 161க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது உண்மையிலேயே ஆச்சரியம் என்றாலும், இன்றைய சீதோஷ்ண நிலையும் இதற்கு ஒரு காரணம்.
 நாளையும் மேகமூட்டமும் சாரலும் தொடரும். ஆகையால் நாளைக் காலை முதல் முப்பது ஓவர்களுக்குள் நிச்சயம் 3-4 இந்திய விக்கெட்டுகள் சரியும் என ஊகிக்கிறேன். அப்படியே நடந்தாலும் இந்தியாவுக்கு அதனால் பெரிய பாதிப்பு இராது. 400 சுமாருக்கு இலக்கு நிர்ணயித்தாலே நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்தால் அதை சுலபத்தில் தாண்ட முடியாது.
ஆனால், இங்கிலாந்துக்கு இரண்டு விசயங்கள் அனுகூலமானவை:
1)   நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் மழையோ மேகமூட்டமோ இன்றி சீதோஷ்ண நிலை மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும்
2)   அஷ்வினின் காயம்
அதேவேளை, கடைசி இரு நாட்கள் இந்த ஆடுதளம் இரு விதங்களில் மாற்றமடையலாம்.
1)   இங்கிலாந்து நாளை ஐந்துக்கு மேல் விக்கெட்டுகள் இழந்தால் நான்காவது நாள் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு வசதிப்படும் போது அதில் லாபம் கொய்ய முடியாது போகும்.
2)   ஆனால் ஒருவேளை இங்கிலாந்து நாளை நன்றாக மட்டையாடினால், நான்காவது நாள் வெயிலில் மட்டையாட்டம் சிறப்பாக அமையலாம். அப்போது அஷ்வின் காயத்தில் இருந்து மீளவில்லை எனில் நான்கு பவுலர்களைக் கொண்டு நூற்றுக்கு மேல் ஓவர்கள் வீசுவது சிரமமாகும். ஆடுதளம் நன்றாய் மாறும், பவுலர்கள் களைப்பாவார்கள். ஆட்டம் தலைகீழாய் மாறலாம்.
ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த நாள் இன்று. ஆட்டத்தை சீல் வைக்கும் நாள் நாளை. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இப்போதைக்கு 60-40.

Comments

விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

ஆனால் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...