கவிஞர் பிரான்சிஸ் கிருபா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மரணத்துடன் போராடும் ஒருவருக்கு உதவப் போய் கொலைப்பழியை சுமந்து பின்னர் விடுதலையான கதையை அறிந்திருப்பீர்கள். அதன் பின்னர் அவர் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தில் ஒரு கண் முழுதாய் வீங்கி மூடிய நிலையில் இருந்தது. அதைக் கண்ட போது நான் காவல்துறையினரே தாக்கி இருக்க வேண்டும் என எண்ணி மிகவும் கலங்கிப் போனேன். ஆனால் நந்தன் ஶ்ரீதரன் எழுதிய பேஸ்புக் பதிவில் கிருபாவைத் தாக்கியது பேருந்து நிலையத்தில் கூடிய பொதுமக்கள் தான் என தெரிய வந்தது. இதை ஒட்டியோ அல்லது மறைமுகமாக குறிப்பிட்டோ ராஜன்குறை கிருஷ்ணன் பேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவு முக்கியமானது.
தர்ம அடி விழைவு ஒரு தண்டிக்கும் மனப்பான்மை எனும் போக்கில் அவர் அவதானித்திருந்திருந்தார். இதையெல்லாம் யோசிக்க எனக்கு மற்றொரு கேள்வி எழுந்தது. ஒரு ஆவேசத்தில் ஒரு மக்கள் கூட்டம் ஒரு தனிமனிதனை வளைத்துப் போட்டு சாத்தும் போது அவர்களுக்கு அதில் ஒரு கிளர்ச்சி, இன்பம் இருக்கிறதா? ஒரு கிருபாவையோ பிள்ளை பிடிக்கிறவர்கள் என நம்பி மற்றொருவரையோ கும்பல் மொத்தும் போது அவர்கள் அவரைத் தான் அடிக்கிறார்களா அல்லது அவர் வழி தமக்குள் வெளிப்படாமல் தேங்கி நிற்கும் வன்முறை ஆற்றலுக்கு வடிகால் தேடுகிறார்களா?
சுமார் இருபது வயது வரை ஊரில், கிராமத்தில், கழித்து விட்டு சென்னை வந்த எனக்கு ஒரு விசயம் அந்நேரம் சென்னை மக்களிடம் வித்தியாசமாய் பட்டது. அது அங்கே சதா வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு போல ஒரு ஆத்திரம் கனன்று கொண்டிருப்பது; சின்ன சந்தர்பம் கிடைத்தாலும் மக்கள் சதா வசை பொழிவது. சாலையில் இரு வண்டிகள் உரசிக் கொண்டால் போதும் அங்கேயே பிரேக் போட்டு ரெண்டு பேரும் தம் அத்தனை வேலைகளையும் மறந்து பரஸ்பரம் ஏசுவார்கள். சூளுரைப்பார்கள்; சவால் விடுப்பார்கள். ஆனால் ஒருத்தர் கூட இறங்கி வந்து கை வைக்க மாட்டார்கள். பார்த்து விட்டு கலையும் வாகனங்களும் தலையிடாது. ஆனால் என் ஊரில், மாறாக, மக்கள் கோபத்தில் பரஸ்பரம் கன்னத்தில் அறைவது, உதைப்பது, மூக்கை உடைப்பது, தெருவில் புழுதியில் புரண்டு அடிப்பது சாதாரணம். ஊரில் அனைவரும் வீரர்கள் என கூறவில்லை. அடிதடி பற்றி ரொம்ப கவலைப்பட மாட்டார்கள். ஒருவரை அறைவது ஒருவரை தோளை அணைப்பது போல ஒரு இயல்பான காரியம். என் அப்பா ஓமப்பொடி போல இருப்பார்; அவரே தெருவில் ஒரு நண்பரை அடித்திருக்கிறார் - நான் பிறப்பதற்கு முன்பு. அதன் பின்பு ஒரு சின்ன பிரச்சனையில் அவர் அடிவாங்கி விட்டு வந்திருக்கிறார். அவர் அப்போது வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் - அதற்காக, அடி கொடுப்பதிலும் வாங்குவதிலும் நாகரிகம் பார்க மாட்டார். ரெண்டு பேரும் இதை பெரிது படுத்திக் கொண்டு போலீஸ், ரவுடி என பஞ்சாயத்துக்கு அழைத்து வர மாட்டார்கள். ஆனால் நகரங்களில் நிலைமை வேறு (என் ஊரிலும் தான் தான் இப்போது.). இன்று வன்முறை நம் வாழ்க்கையையே கலைத்து விடுமோ எனும் அச்சம் எல்லாருக்குள்ளும் உள்ளது. இந்த நகர்ப்புற கார்ப்பரேட் காந்தியம் டவுன்கள், கிராமங்களில் கூட பரவி வருகிறது. ஆகையால், கோபம் தலைக்கு மேல் ஏறினால் ஏய் ஏய் என சீறிக் கொண்டு வாலைச் சுருட்டிக் கொண்டு போய் விடுகிறோம்.
இந்த அணுகுமுறை நம்மை வன்முறை வறட்சி கொண்டவர்களாக்குகிறது. செக்ஸுக்கு இணையாக மிகப்பெரிய கிளர்ச்சி தருவது அடிதடி. அது ஒரு உச்சந்தலைக்கு ஏறும் கிக்கை அளிக்கிறது. ஆனால் நேருக்கு நேர் மோதுவது அநாகரிகம் என இன்றைய கார்ப்பரேட் அரசியல் நமக்கு கற்றுத் தருகிறது. ஒவ்வொரு சகமனிதனும் ஒரு மனித வளம், ஒரு ஏணி, அவனை பயன்படுத்தி ஏறி வாழ்க்கையில் மேலே போக வேண்டும். ஆகையால் அனைவரிடமும் ஹி ஹி என சிரித்துக் கொண்டு அம்மாஞ்சியாய் வாழ்வதே நமது கதியாகி விட்டது. கும்பலோடு கை நீட்டி சிக்கினவனை சிதைப்பதே நமக்கு பாதுகாப்பானது. அப்போது நாம் மிக பாதுகாப்பாக இருக்கிறோம், அதிகபட்ச இன்பமும் கிடைக்கிறது, நமக்குள் அணைபோட்டு வைத்திருக்கும் குரோத ஆற்றலுக்கும் வடிகால் கிடைக்கிறது, செக்ஸ் உச்சகட்டம் போல ஒரு சுகம் வாய்க்கிறது.
நம் வாழ்க்கை அநீதிகள் நிறைந்தது எனும் பரவலான எண்ணமும் இன்று எல்லா மட்டங்களிலும் உள்ளது. காரணமற்ற அதிருப்தி இதனால் விளைகிறது. அநீதி யாரால் தோன்றுகிறது என யாரும் அறியோம். ஆக, மற்றமையாய் நாம் காணும் ஒருவர் - தாடி வளர்த்து அழுக்காய் ஆடை அணிந்து தெரிகிற ஒருவர் - மாட்டினால் அவரை நம் அத்தனை கோபங்களுக்கு இலாக்காக்கிறோம்.
இதை விட மேல் நன்கு தெரிந்தவருடன் சண்டை போட்டு தெருவில் கட்டி புரள்வது.
கருத்துகள்
I needs to spend some time learning more or understanding more.
Thanks for wonderful info I was looking for this info for my mission.