முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுத யாராவது கற்பிக்க முடியுமா சொல்லுங்கள்?


எங்கள் கல்லூரியில் மாலை வேளை நடக்கும் எலெக்டிவ் வகுப்பில் நான் இரண்டாம் வருடமாக நாவல் எழுதும் கலையை கற்பிக்கிறேன். கடந்த வருடம் 17 மாணவர்கள். இவ்வருடம் 45ஆக உயர்ந்து விட்டது. பெரிய வகுப்புகளின் சௌகரியங்கள் 45இல் ஐந்து பேராவது ஒரு நாவலை அரை கல்வியாண்டுக்குள் முடித்து விடுவார்கள் என்பது. கடந்த முறை ஒருவரே முடித்தார். இந்த முறை 12 அத்தியாயங்கள், அத்தியாயத்துக்கு 5-7 பக்கங்கள் என ஒரு இலக்கை கொடுத்திருக்கிறேன். ஆகையால் இம்முறை நாவலை எழுதி முடிப்பது சற்று சுலபமாக அமையும் என கணிக்கிறேன்.

மாணவர்களை தினமும் நாவலை எழுத வைப்பதே என் பிரதான நோக்கம். ஏனென்றால் இத்தகைய வகுப்புகளுக்கு வருவோருக்கு அதுவே பெரும் சவால் - அவர்களால் எழுத முடியும், அவர்களுக்கு மொழித்திறனும், வாசிப்பும் உண்டு, ஆனால் தினம் தினம் ஒரே புத்தகத்தில் வேலை செய்வது கடினம். அந்த பயிற்சியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும். இன்றைய முதல் வகுப்பில் அதை பற்றியே முக்கியமாக பேசினேன். 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உண்டு, அது எழுதப்படாமலே பல சமயம் போய் டுகிறது என்பது என் நம்பிக்கை. அது இலக்கிய நாவலோ, வெகுஜன நாவலோ, எளிய துப்பறியும் நாவலோ, பதின் வயதினருக்கான ரொமான்ஸ் நாவலோ - ஒவ்வொன்றும் ஒரு வகையான சவால்.

இம்முறை திரைக்கதை கலை குறித்த புத்தகங்களில் இருந்து எடுத்துக்  நிறைய விசயங்களை (ராபர்ட் மெக்கீயின் Story போன்ற புத்தகங்கள்) நாவலுக்கும் பொருத்திக் கொண்டு கற்பிக்கலாம் என நினைக்கிறேன்.  

நாவல் கலையை கற்பிக்கும் வகுப்புகளில் பொதுவாக சில சட்டகங்களை, வரையறைகளை, எளிய சூத்திரங்களை அளிப்பார்கள். அதை கவனித்தால் இவ்வளவு ஈஸியா என மூக்கில் விரல் வைப்போம். ஆனால் வீட்டுக்குப் போய் எழுதினால் அது அவ்வளவு சுலபமல்ல எனப் புரியும். எழுத்தைப் பொறுத்தமட்டில் எனக்கு கோட்பாடுகளில் நம்பிக்கை குறைவு. எளிய தவறுகள் சிலவற்றை தவிர்க்க உதவுமே ஒழிய அவை தரும் போலி நம்பிக்கை ஆபத்தானது. 

 தொடர்ந்து இத்தகைய பட்டறைகளில் கலந்து கொண்டு எப்படி நாவல் எழுதுவது என வக்கணையாகப் பேச மட்டும் கற்றுக் கொள்ளும், ஆனால் ஒரு அத்தியாயம் கூட ஒழுங்காக எழுதியிராத, பலரை எனக்குத் தெரியும். நீங்கள் கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள செல்லும் போது ஒரு பயிற்சியாளர் உங்களை அமர வைத்து forward defense பற்றி கோட்பாட்டு வகுப்பெடுக்க மாட்டார். பாட்டுக் கற்க போகும் போது அங்கு குரு ஸ்வர வரிசையை குறிப்புகள் தருவார், ஆனால் அதோடு விடாமல் பாட வைப்பார். ஆடியே விளையாட்டை கற்கிறோம்; பாடியே பாட்டைக் கற்கிறோம். ஆக எழுத்தை மட்டும் எப்படி பேசியே கற்க முடியும், எப்படி அதை மட்டும் விவாதித்து கற்க முடியும்?

ஆனால் அதற்காக மாணவரின் கையைப் பற்றி எழுத வைக்கவும் முடியாது. அவர்களாகவே எழுத வேண்டும். இப்படித் தான் எழுதுவது என செய்து காட்டவும் முடியும். இதெல்லாம் எழுத்துக் கலையைப் பற்றி பேசுவதன், பேசிக் கற்பிப்பதன் சிக்கல்கள்.

நான் இந்த சிக்கலுக்கு ஒரு சுலபத் தேர்வை இன்னும் காணவில்லை என்பதே ஒரு குற்றவுணர்வை, ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது. சில நாட்களில் எதற்கு இந்த தேவையில்லாத வேலை, எழுதுவதே என் பணி, எழுத்தைக் கற்பிப்பதல்ல என நினைப்பேன். ஆனால் ஒரு திறமையான புது எழுத்தாளனை கண்டடையலாமே, எழுதுவது குறித்து உரையாடலாமே, நிறைய பேர்களை ஊக்கப்படுத்தலாமே என ஒரு சபலம் தோன்ற மீண்டு விடுவேன்.

 இந்த வகுப்புகள் ஒரு எழுத்தாளனாகவும் ஆசிரியனாகவும் எனக்கு அளிக்கும் உற்சாகமும் ஆற்றலும் அளப்பரியது. அதை வைத்து (கடந்து இரு வருடங்களாக எழுதி வரும்) வரும் என் நாவலையும், மாணவர்கள் தம் நாவலை நிறைவு செய்து சமர்ப்பிக்கும் போது, என்னால் முடிக்க இயன்றால் முத்தாய்ப்பாக இருக்கும்! அதுவே என் கனவு! 

கருத்துகள்

சிந்து இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு நாவல் எழுத ஆரம்பிக்கிறது எப்படி அதுக்கு முதலில் நோட்ஸ் ஏதாச்சும் எடுக்கலாமா இல்ல நமது மனதில் தோன்றுவதை எழுத ஆரம்பிக்கலாமா oru நாவல் அப்படி எனும் போது தொடக்கமும் முடிவும் எவ்வாறு இருப்பது சிறப்பாக வரும்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
சிறிது திட்டமிடல் நல்லது. சிந்து, உங்களுக்கு ராபர்ட் மெக்கீயின் Story புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...