தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகப் பேசும் பாஜக கிறித்துவர்களை அகதிகளாக ஏற்க முடியாது என தம் தேர்தல் வாக்குறுதியில் கூறி விட்டு இப்போது அவர்களை சேர்த்துள்ளது பிரித்தாளும் சூழ்ச்சி என்றார். முதலில் இஸ்லாமியர்களை ஒழித்து விட்டு அடுத்து கிறித்துவர்களையும் நசுக்குவதும், அதன் பின் இந்தியாவை முழுமையாக ஒரு இந்து தேசமாக்குவதே அவர்களின் இலக்கு என சாடினார். இப்போது தமக்கு ஆதரவாக மசோதாவை இயற்றியுள்ள விதத்தை காணும் கிறித்துவ மக்கள் இதை “சாத்தான் வேதம் ஓதுவதாகவே” பார்ப்பார்கள் என்றார்.
இதைப் பற்றி ஒரு நண்பரிடன் உரையாடும் போது இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், குறிப்பாக விடுதலைக்கு முன்பான மூன்று பத்தாண்டுகளில், இந்துத்துவ கட்சிகள் நடந்து கொண்ட விதம் அவர்களின் இன்றைய நிலைப்பாட்டுடன் பொருந்திப் போகிறது என்றார். “புரியவில்லை” என்றேன். அவர் விளக்கினார்:
ஒத்துழையாமை இயக்கம் துவங்கி பல கிளர்ச்சிகளின் போது காந்திக்கு எதிராகவே இந்து மகாசபை உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்கள் இருந்தன. அவர்கள் பங்கேற்கவில்லை என்று மட்டுமில்லை, அவர்கள் யு-டர்ன் எடுத்து ஆங்கிலேய அரசை ஆதரிக்கவும் கிளர்ச்சிகளை அடக்க ஆங்கிலேய அரசின் காவலர்களுக்கு துணையாகவும் நின்றனர். இதற்கு அவர்கள் அளித்த விளக்கம் “காந்தியும் அவரது கட்சியினரும் இந்துப்பெரும்பான்மைக்கு எதிராக, சிறுபான்மை மதத்தவர்களுக்கு சார்பாக செயல்படுகிறார்கள், சுதந்திரம் கிடைத்தால் இந்த தேசத்தை அவர்கள் இஸ்லாமியர்களுக்கு தாரை வார்த்து விடுவார்கள்” என்பது. இந்துக்களுக்கு அப்போது காந்தி மீது ஏற்பட்ட பெரு மதிப்பும் ஆகர்ஷமும் வலதுசாரிகளை கடுமையாய் அச்சுறுத்தியது. அவர்கள் செய்ய நினைத்ததை காந்தி தனதான பாணியில் பிரம்மாண்டமான அளவில் செய்தார். அத்தோடு அவர் சிறுபான்மை மதத்தவரையும் தன் அணியில் சேர்த்துக் கொண்டார். இந்து மகாசபையினர் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களை திரட்ட நினைத்தால், அதே இந்துக்களை இந்த பிரிவினை இன்றியே காந்தி திரட்டினார். காந்தியின் இணக்க அரசியல், சமரசப் போக்கு, சமூகத்தில் அமைதியை விளைவிக்கும் என்பதைக் கண்ட இந்து மகாசபையினர் தமது செயல்திட்டம் தவிடு பொடியாகி விடும் என புரிந்து கொண்டனர். அப்போது தான் அவர்கள் ஆங்கிலேய அரசுடன் கைகோர்க்க முடிவு செய்தனர் (முழுக்க வேறு காரணங்களுக்காக பெரியாரும் அம்பேத்கரும் ஆங்கிலேய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர் - அதையும் இதையும் குழப்பக் கூடாது).
ஆங்கிலேய அரசின் செயல்திட்டமான பிரிவினை வன்முறையை முன்னெடுப்பதில் முஸ்லீம் லீக்குடன் இணைந்து செயல்பட்டது இந்துமகாசபையினர் தாம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் தம் மண்ணில் இருந்து பறித்தெறியப்பட்டனர, கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகி கடத்தி செல்லப்பட்டார்கள், குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். இந்தியர்களின் மனத்தில் ஒருபோதும் ஆறாத ஆழமான அசு ஏற்பட்டது. ஆனால் இதே இந்துத்துவர்கள் தாம் இப்போது குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றும் போது பிரிவினை செய்து தேசத்தை இரண்டாக உடைத்தது காங்கிரஸ் என பழியை திருப்பி, இந்த பிரிவினையால் அதிகம் பாதிப்படைந்த கட்சி மீதே, போட்டனர். சாவார்க்கர் தொடர்ந்து பிரிவினைக்கு ஆதரவாகப் பேசி அதை கடுமையாக எதிர்த்தவர் காந்தியும் அவரது ஆதரவாளர்களுமே. ஒருவேளை தேசப்பிரிவினை நிகழ்ந்திராவிடில் இந்துத்துவாவின் எதிர்காலமே இந்தியாவில் காணமல் போயிருக்கும்.
இந்த வரலாற்றை வைத்தே நண்பர் சொன்னார்: இந்துத்துவர்கள் எப்போதும் தாம் சொல்வதற்கு நேரெதிராகவே செயல்படுவார்கள்; இரட்டை நாக்கு அவர்களின் ஆதார சுபாவம். அண்மையில் ‘தேசத்துரோகம்’ எனும் சொல்லை மிக அதிகமாய் தம் விரோதிகள் மீது ஏவிய கட்சி பாஜக. ஆனால் வரலாற்றில் மோசமான தேசத்துரோகத்தை செய்தது அக்கட்சியின் தாய்க்கழகங்கள் தாம். இது வினோதமானது - இந்திய தேசம் விடுதலை அடைவதை ஏற்காத கட்சிகள் அன்றும் இருந்தன. ஆனால் அவர்கள் அதை நேர்மையாக ஒத்துக் கொண்டனர். ஆனால் பாஜக மட்டுமே மிகத்தீவிரமாய் இந்திய விடுதலைக்கு எதிராக செயல்பட்டு விட்டு இப்போது தொடர்ந்து தேச விடுதலைப் போராட்டத்துக்காக நற்பெயரை தட்டிப் போக முயல்கிறார்கள். கிறித்துவ மதமாற்றம் குறித்து மிகையான பிரச்சாரங்களை மேலெடுத்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, இப்போது யு-டர்ன் கிறித்துவர்கள் வெளிநாட்டில் ஒடுக்கப்பட்டால் அவர்களுக்கு இந்தியா புகலிடம் அளிக்கும் எனச் சொல்லி அவர்களை தடவிக் கொடுப்பது போல பாவனையும் பண்ணுகிறது. இதைத் தான் மாறன் “சாத்தான் வேதம் ஓதுகிறது” என்றார்.
தேசத்துரோகம் என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்தோமானால் ஆங்கிலேய அரசு அதை பயன்படுத்திய விதத்துக்கும் இன்று பாஜகவினர் அதை கையாள்வதற்கும் ஒரு தொடர்பு உள்ளது: சிப்பாய் கிளர்ச்சி துவங்கி தொடர்ந்து தமக்கெதிராக கிளர்ந்தவர்கள் அனைவரையும் ஆங்கிலேய அரசு தேசத்துரோகியாகக் கண்டது. அப்போது தேசம் என்பது ஆங்கிலேய அரசு எனும் பொருள் கொண்டிருந்தது. நீங்கள் இந்தியாவுக்காக போராடினாலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடுவதால் அது தேசத்துக்கு எதிராக செயல்படுவதாகும் என ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அர்த்தப்படுத்தினார்கள். இன்று நாம் தேசப்பிதாக்களாக கொண்டாடும் பலரும் அன்று ஆங்கிலேய அரசுக்கு தேசத்துரோகிகள் தாம். அதன் பிறகு தேசபக்தியின் பொருள் சற்று விரிவடைந்தது. தேசத்தின் வளர்ச்சிடன், அமைதியுடன் இணங்கிப் போகிறவர்கள் (ஓரளவுக்கு காங்கிரசின் அயலுறவுக் கொள்கையுடன் ஒத்துப் போகிறவர்கள்) தேசப்பற்றாளர்களள் ஆனார்கள். இப்போது பாஜக தொடர்ந்து இரண்டாம் முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தேசத்துரோகத்தின் பொருளே ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது போல ஆகி விட்டது.
இன்று தேசம் = பாஜக = இந்துத்துவா. (இந்துத்துவா எனும் சொல்லை நேரடியாக பயன்படுத்தத் தயங்குவதால் பாஜக அதை “இந்துக்கள்” எனச் சொல்லுகிறார்கள்) இன்று யார் பாஜகவின் கொள்கைகளை எதிர்த்தாலும் அவர்கள் தேசத்துரோகிகளே. தேசத்துரோகத்தின் பொருளை இவர்கள் இப்படி தலைகீழாக மாற்றி விட்டதால் அது அரசின் விமர்சகர்களை, எதிர்ப்பாளர்களை முழுக்க குழப்பி விட்டது. தம்மை எதிர்ப்பவர்களை இந்து மதத்தை, தேசத்தை எதிர்ப்பவர்கள் என பொய்ச்சாயம் பூசி பாஜக தாக்கும் போது, வழக்குகள் தொடுத்து ஜெயிலில் தள்ளும் போது “தேசத்துரோகிகளுக்கு” பெரும் குழப்பம் ஏற்படுகிறது. அவர்கள் வாயை மூடிக் கொண்டு திக்குத்தெரியாமல் திகைக்கிறார்கள். (இதை ராமாயணத்தில் ராமன் வாலியை பின்னிருந்து தாக்கிக் கொன்றதுடன் ஒப்பிடலாம்.) எதிர்காலத்தில் இந்து மதத்தை பின்பற்றாதவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் எனும் சட்டமொன்றை பாஜக இயற்றும் என்பதே என் கணிப்பு!

Comments