Skip to main content

தமிழ்நாட்டின் சுதேசி "மோடி" ஆட்சிக்கட்டில் ஏறினால் என்னவாகும்?

விஜய் பதவியேற்பு எப்போது? நொடிக்கு நொடி மாறும் தமிழக அரசியல் களம்


1) இதுவரையிலான தாமதத்துக்கும் குழப்பங்களுக்கும் காங்கிரஸ் செய்த அரசியல் ஒரு காரணமென்றால் அதிமுக ஆட்சியமைக்க முயன்றது இன்னொரு காரணம். ஏனோ திமுக கூட்டணி அதைப் பரிசீலித்தது என்று இப்போது தெரிகிறது. அதேநேரம் எடப்பாடியால் அவர்களுடன் உடன்படிக்கைக்கு வர இயலவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் விசிக உள்ளிட்ட கட்சிகள் தாமதித்துக் கொண்டே இருந்தன. தவெகவும் ஒன்றிரண்டு இடங்களுக்காக மழைக்காக டீக்கடை வாசலில் ஒதுங்கி நிற்பவர்களைப் போல காத்திருக்க நேர்ந்தது. அதிமுகவின் மனத்தில் யாரோ உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான கனவினாலும் பாஜகவை தவெக விரோதித்ததாலும் விஜய் ஏதோ பள்ளி மாணவனைப் போல திரும்பத்திரும்ப ஆளுநரைச் சந்திக்கவும் திரும்ப வெறுங்கையுடன் அனுப்பப்படவும் நேர்ந்தது. அதிமுக இதற்கு மேல் கனவு காண முடியாது என்று விழித்துக் கொண்டதும், எடப்பாடியார் வாழ்த்தி அறிக்கை விட்டதும், விசிக, ஐயுஎமெல் ஆகியவையும் தவெக பக்கம் வந்துவிட்டன. நாடகம் முடிந்தது.

2) ஒருவிதத்தில் தவெக ஆட்சியமைப்பதும் நல்லதுதான். விஜய் நேர்மையான முறையில் 108 இடங்களைப் பெற்றாரோ இல்லையோ நடந்ததை மாற்ற முடியாது. இப்போதைக்குச் சாத்தியமானது அனைவரும் அவர் ஆட்சியமைப்பதை ஆதரிப்பதுதான். ஆளுநர் ஆட்சி, மறுதேர்தல் எல்லாம் இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

3) திமுக கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறுவார்களா இல்லையா என்பது அவர்கள் கூட்டணிக்குள் இருக்கிறார்களா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தி விடும். அமைச்சரவையில் இடம்பெற்றால் விஜய் ஆட்சியின் குழப்பங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆம், இந்த ஆட்சி அப்படித்தான் இருக்குமென நான் கணிக்கிறேன்.

4) செய்தியே வாசிக்காத, மாநில அரசியல், பொருளாதாரம், சமூக நிலை குறித்து எந்த அக்கறையும் இல்லாத தன்னலமான குருட்டுத்தனமான ஒரு குழு உருவாகி இருக்கிறது. அவர்கள் விஜய் ஒரு நடிகர் என்பதால் மட்டுமே அவரைக் காண்பதற்காகத் தவிக்கிறது. பதவி ஏற்பின்போதும் அவர்களே திரண்டு கூக்குரல் இடப் போகிறார்கள். ஒவ்வொரு முறையும் விஜய் காரில் போகும்போது வழியில் நின்று கத்தப் போகிறார்கள். இவர்களும் வேறு ஏதோ சில தேர்தல் மோசடிகளும் சேர்ந்தே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீள்வார்கள் என நம்புகிறேன்.

5) ஒன்றிய அரசு இதற்கு மேல் முட்டுக்கட்டையிடாமல் விஜய் ஆட்சியமைத்த பிறகும்கூட விஜய் பெரும்பாலும் எதற்கும் பதில் சொல்லாமல், மக்களுடன் உரையாடாமல் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இருந்தே ஆட்சி செய்வார். அவரது ஆலோசகர்கள் யாரென்று பாருங்கள் - அவர்களுக்கும் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றியது, லாட்டரிக் கம்பெனி, ரியல் எஸ்டேட் தொழில் செய்தது, கட்சிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்துக் கொடுத்தது ஆட்சி நடத்துவதற்கோ ஆலோசனைச் சொல்வதற்கோ ஆன தகுதி அல்ல. முழுநேரக் கொள்ளை மட்டுமே நடக்கும்.

6) தவெக மேம்போக்காக திமுகவைப் போலச் செய்யவே முயலும் - மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூக வலைதளப் பிரச்சாரம், விஜய்யை ஒரு மக்கள் நாயகன் என முன்னிலைப்படுத்திக் கொண்டே இருந்துவிட்டு அவரைத் திருவுருவாக்கி அவருக்குப் பின்னால் இவர்கள் கொள்ளையடிப்பார்கள். விஜய்க்கும் பங்குபோகும். அவர் அதற்காக யாரை நிறுவப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. அதாவது அடுத்த ஐந்தாண்டுகளில் விஜய்யை ஒரு கலக நாயகனில் இருந்து, தூய சக்தியில் இருந்து திருவுருவாக மாற்றப் போகிறார்கள். பாஜக மோடியை வைத்துச் செய்ததை தவெக விஜய்யை வைத்துச் செய்யும். அவருடைய மர்மமான குணம் இதற்கு ஓரளவுக்கு உதவும் என நினைக்கிறேன்.

7) விஜய்யின் ஆட்சியில் பெரும்பாலும் எந்த அமைச்சர்களும் 'பெரிய தலைக்கட்டுகளாக' அறியப்பட மாட்டார்கள். எது நடந்தாலும் அது விஜய்யால் செய்யப்பட்டது என்றே சித்தரிப்பார்கள். அமைச்சர்களும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்பது அவர்களுடைய இப்போதைய நடத்தையை வைத்தே தெரிகிறது. ஆகையால் இது பொம்மை ஆட்சியாக இருக்காது, திருவுரு ஆட்சியாக இருக்கும்.

8. ஆட்சி மீது என்ன குற்றச்சாட்டு வந்தாலும் அது தன் மீதுள்ள வெறுப்பினால் சொல்லப்படுபவை என்று விஜய் சொல்வார். பிறரும் விஜய் விமர்சனங்களுக்கு அப்பாலானவர் என்றே பேசுவர். அதாவது எல்லா குற்றச்சாட்டுகளையும் விலக்கித் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.

9) விஜய் இனி அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக சவால் விடுவார் என்றும், அதன் மூலம் தன்னை தமிழ்ப் பெருமையின் அடையாளமாக கட்டமைக்க முயல்வார் என்றும் கணிக்கிறேன். திமுகவை இனி பழிக்க இயலாது. ஊழல், குடும்ப அரசியல், அங்கிள், சார் என்றெல்லாம் வசனம் பேச முடியாது. வேண்டுமென்றால் திமுக மீது ஊழல் வழக்குப் போடலாம். அதை வைத்தே ஓட்ட முடியாது. மோடியைப் போன்றே விஜய்க்கும் சதா ஒரு எதிரி தேவை. மேலும் காங்கிரஸும் இணைந்துள்ளதால் அடுத்த மக்களவைத் தேர்தலில் தவெக-காங்கிரஸ் கூட்டணியை மதவாத எதிர்ப்புக் கூட்டணியாகச் சித்தரிக்க முயல்வார்கள். ஆனால் முழுமையான எதிர்ப்பரசியலும் செய்ய மாட்டார்கள் - பூடகமாக சில வசனங்களைப் பேசி அதை வைரலாக்கி விட்டு பிரச்சினை வரும்போதெல்லாம் காலில் பணிந்து விடுவார்கள். வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு 'தமிழ் மோடியை', ஒரு கட்டமைக்கப்பட்ட நாயகனை எப்படிக் கையாளப் போகிறது என்பது கவனிக்கத்தக்கது. குஜராத்தில் ஆரம்பித்த ஒரு பரிசோதனையைப் போல இது தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட பரிசோதனை. அப்பரிசோதனை இந்தியாவின் தலைவிதியை மாற்றியது. இது என்ன செய்யப் போகிறது?
10) பாஜக இக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகளை வெளியேற்றி அதிமுகவை இணைய வைக்க என்னவெல்லாம் செய்யப் போகிறது, எடப்பாடி-விஜய் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...