முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பையில் நம் ஆட்டநாயகர்கள்


-    (இரு வாரத்துக்கு முன்பான “கல்கி” இதழில் வெளியான கட்டுரை. உலகக் கோப்பை அரை இறுதிக்கு முன்பு எழுதியது)

 Image result for india 2015 worldcup

ஆஸ்திரேலியா, நியுசிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பையில் இந்தியா தன் ஆறு ஆட்டங்களையும் நிறைவான முறையில் வென்று தனது குழுவில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஏறுமுகத்துக்கு காரணமான நட்சத்திரங்கள் யார் யார் எனப் பார்ப்போம்.


விராத் கோலி:
இந்திய பொருளாதாரத்துக்கு பெட்ரோல் விலை போன்றது விராத் கோலியின் ஆட்டம் இந்திய அணிக்கு. கோலி தொடர்ந்து ஓட்டங்கள் குவிப்பதே இந்தியா அரை இறுதிக்கு செல்ல ஒரே வாய்ப்பு என நிபுணர்கள் கணித்தனர். ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு சற்று முன்பு முத்தரப்பு தொடரில் கோலியில் ஆட்டநிலை தரை தட்டியது. அவருக்கும் தோனிக்கும் அதிகாரப் போட்டி என கூறப்பட்டது. இதோடு கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்குமான காதல் பற்றின கிசுகிசுக்கள் பத்திரிகை செய்திகளில் லெக் பீஸ் போல் ஆனது. எப்போதெல்லாம் அனுஷ்கா பற்றி பேச்செழுந்ததோ அப்போதெல்லாம் கோலியின் ரத்தம் கொதித்தது. விளைவாக அவர் ஒரு பத்திரிகையாளரை தவறாக அடையாளம் புரிந்து கொண்டு வசைபாடினார். இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கடுமையாக கண்டித்தது. இவ்வளவு குழப்படிகளுக்கு மத்தியிலும் கோலி தன் நிதானத்தையும் முதிர்ச்சியையும் ஆட்டத்தில் இழக்கவில்லை என்பது ஆச்சரியம். மட்டையுடன் களத்தில் இறங்கும் போது தனது கோப ஆற்றலையெல்லாம் ஆட்டத்தில் குவித்து எந்திரம் போல் ஓட்டங்களை குவிக்கும் அபார திறமை கோலிக்கு உண்டு. மைதானத்துக்குள் அவர் ஒரு கமல், வெளியே சிம்பு என்றாலும். பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் அவர் அடித்த சதம் (107) அவரது புத்திசாலித்தனத்துக்கும் கவனத்துக்கும் சான்று. கோலிக்கு தேவையெல்லாம் ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் தாம். முதல் நாற்பது ஓட்டங்களை அவ்வாறு பெற்று விட்டால் பிறகு அவர் சதம் அடிப்பதில் இருந்து அவரே நினைத்தாலும் தடுக்க முடியாது. போஸ்டர்களையும் எச்சில் இலைகளையும் தின்று வாழும் சென்னையின் பசுமாடுகளை போன்றவர் அவர். ஆட்டநிலை அவருக்கு பொருட்டே அல்ல. சாமர்த்தியமாக காய்நகர்த்தி எந்த ரிஸ்கும் இன்றி சதம் அடிக்கும் விதம் அவர் ஒருநாள் ஆட்டத்தை ஒரு கலையாக மாற்றி விட்டார்.

ஷிக்கர் தவன்
2013இல் ஷிக்கர் தவன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் தன் முதல் ஆட்டத்தில் 187 அடித்த போது அவரை அதுவரை கவனித்து வந்த பலராலும் நம்ப முடியவில்லை. ஒன்பது வருடங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் துணை நடிகராக இருந்து வந்தவர் அன்று முதல் இந்திய அணியின் மீசை முறுக்கிய முதன்மை நாயகன் ஆனார். தவன் இது போல் தன் ரசிகர்களை அடிக்கடி அதிர வைப்பார். டெஸ்டுகளில் மோசமான ஆட்டநிலையில் இருப்பார். கடுமையாய் அவர் விமர்சிக்கப்படுவார். திடீரென ஒருநாள் ஆட்டங்களில் அபாரமாய் ஆடி கவனம் பெறுவார். அவருக்கு வெளிநாட்டில் ஆடவராது என கூறினார்கள். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பையில் இங்கிலாந்திலும், பின்னர் நியுசிலாந்தில் டெஸ்டுகளில் அபாரமாய் சதங்கள் அடித்தார். தவன் அடிக்கடி ஸ்டார்டிங் டிரபிள் கொண்ட ஒரு பார்முலா ஒன் கார். ஓடத்தொடங்கினால் பிறகு பிடிக்க முடியாது. உலகக்கோப்பைக்கு சற்று முன் வரை அக்கார் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஆனால் உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அரைசதத்தின் போது சட்டென இக்கார் சீறிக் கிளம்பியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் அடித்து அனைவரையும் முந்தி முன்னிலைக்கு போனது. தவனின் இந்த சதத்தின் சிறப்புகள் பவர் பிளே முடிந்த பிறகான மத்திய ஓவர்களில் அவர் ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சாமர்த்தியமாய் எடுத்த பாங்கு, இரண்டாவது பவர் பிளேயில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களை காக்காய் விரட்டுவது போல் சிதறடித்த கம்பீரம், அதன் பிறகும் கவனம் இழக்காமல் கிட்டத்தட்ட இறுதி வரை நின்று ஆடிய நிதானம் ஆகியவை. தவன் மற்றொரு ஆட்டத்தில் ஐயர்லாந்துக்கு எதிராய் எண்பது சொச்சம் பந்துகளில் 100 அடித்தார். புயலைப் போல் அவர் சுழன்றடித்த வேகத்தில் அன்று ஐயர்லாந்தின் குடிசை வீட்டு பந்து வீச்சாளர்களின் கூரைகள் காணாமல் போயின. அவ்வாட்டத்திலும் தவன் தான் ஆட்டநாயகன்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா மற்றொரு பார்முலா ஒன் கார். அவரது பிரச்சனை ஆனால் வேறு. அவருக்கு முதல், இரண்டாவது கியர்கள் போடத் தெரியாது. எடுத்த உடனே வேகம் தான். முட்டி விபத்தாகி பல சமயம் ரெய்னா சீக்கிரமே வெளியேறி விடுவார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 92க்கு 4 விக்கெட்களை இழந்து உலகக்கோப்பை லீக் போட்டிகளில் தன் முதல் தோல்விக்கான தயார்நிலையில் இருந்தது. தோனியும் ரெய்னாவும் இணைந்து 196 ஓட்டங்களை ஒரு இந்திய மத்தியர் வர்க்க அப்பா பெண்ணுக்கு நகை சேர்ப்பதை போல் அக்கறையாய், கவனமாய் சேர்த்தனர். இதில் ரெய்னாவின் 110 ஓட்டங்கள் தனிச்சிறப்பானது. அன்று அவர் தன் ஈகோவை அடக்கிக் கொண்டு இரண்டாவது கியரில் பொறுமையாக ஓட்டினார். எப்போதெல்லாம் புது பொம்மை வாங்கின குழந்தை போல் பந்து நோக்கி உணர்ச்சிவசப்பட்டு அடித்தாரோ அப்போதெல்லாம் தோனி அவரை அமைதிப்படுத்தினார். சரியான ஆட்டநிலையில் இல்லாத போதும் தன் உழைப்பு, கவனம் மூலம் ரெய்னா எடுத்த இச்சதம் அவருக்கு தனது இன்னொரு பரிமாணத்தை காட்டிக் கொடுத்தது. சற்றே கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டால் அவரால் இது போல் பல சதங்களை அடிக்க முடியும் என உணர்ந்து கொண்டார்.

அஷ்வின்
கடந்த இரண்டு வருடங்களாக அஷ்வினின் ஆட்டநிலை மோசமாய் தான் இருந்து வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் கட்டுப்பாடோ கூர்மையோ ஒன்றி வீசினார். ஆனால் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அஷ்வினின் பந்து வீச்சு மேம்பட்டது. ஆஸ்திரேலியாவிலும் அவர் நன்றாக வீச ஆரம்பித்தார். உலகக்கோப்பையில் இந்தியாவின் மிக முக்கிய வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். குறிப்பாக யு.ஏ.இ அணிக்கு எதிராக 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா சுலபமாய் அவ்வாட்டத்தை வெல்ல உதவினார். அஷ்வினின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தன் வேகத்தை தொடர்ந்து மாற்றுவது, இரண்டு விரல்களுக்கு இடையில் பந்தைப் பிடித்து வீசும் ஆர்ம் பந்தை பயன்படுத்தும் புத்திசாலித்தனம் மற்றும் அவர் தைரியமாய் பந்தை காற்றில் மிதக்க விடுவது (flight). அஷ்வின் இந்த ஆட்டத்தில் ஆட்டநாயக விருதைப் பெற்று இந்தியாவின் உலகக்கோப்பை எழுச்சியில் பந்து வீச்சாளர்களின் பங்கு அளப்பரியது என நிறுவினார்.

முகமது ஷாமி

ஷாமி இந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் முதன்மை ஏவுகணை. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்தவர் இவர் தான். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து எதிரணியை கோழியை போல் தண்ணீருக்குள் முக்கி மூர்ச்சையடைய வைத்தார். ஆஸ்திரேலிய ஆடுதளங்களில் சற்றே குறைநீளத்தில் வீசக் கற்றுக் கொண்டதும், நியுசிலாந்தில் முழுநீளத்துக்கு வீசி தன்னை தகவமைத்துக் கொள்ள முடிந்ததும் ஷாமியின் சிறப்பான வீச்சுக்கு காரணங்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...