முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் – ஜீவ கரிகாலன் விமர்சனம்

(எழுத்தாளர் ஜீவ கரிகாலனின் பிளாகில் இருந்து ஒரு மீள்பதிவு)
தினமும் CHILD ABUSE செய்திகள் தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் இந்நாவலை வாசித்தேன்.

அபிலாஷின் இந்தக் குறுநாவலை வெறுமனே க்ரைம் அல்லது டிடெக்டிவ் நாவல் என்று வகைப்படுத்த முடியவில்லை.


சமூகத்தின் இருண்ட பக்கங்களை தத்துவ ரீதியிலும், உளவியல் ரீதியிலும், துப்பறியும் நாவலாகவும் முக்கியமாக கதையின் தளமாக குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளை எடுத்துக் கொண்ட விதம் மிகத் துணிச்சலானது. அதை மிகக் கவனமாகவும் கையாண்டிருக்கிறார். 

சுவாரஸ்யத்திற்காக எழுதப்படும் மற்ற வகை துப்பறியும் நாவலாக வந்துவிடக்கூடாது என்பதற்காக NARRATIVEஐ கையாண்டிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. பாலியல் காட்சிகளை எழுதும்போது கூட அதை வெறுமனே சொல்லிவிட்டு நகர்வதாய் அமைந்திருப்பது பாராட்டிற்குரியது. துப்பறியும் நாவல் என்றாலே கிளுகிளுப்பாக எதாவது சொல்லனும் என்று கிளிஷேவாக ஏதும் முயற்சிக்கவில்லை.

அதே சமயம் கவிதைத்தனம் வந்துவிடக்கூடாது என்றும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அழுத்தமாக நிற்கிறது.

பெண்ணியம், தலித்தியம் தொடர்பாக தனது அரசியல் நிலைப்பாட்டைச் சொருகும் இடத்தில் மட்டுந்தான் எனக்கு சுஜாதாவின் ஞாபகம் வந்தது. 

மற்றபடி, சுவாரஸ்யம், கவிதைத்தனம் இவற்றோடு சுஜாதாத்தனமும் அந்நியப்படவேண்டும் என்று மெனக்கெட்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சர்ரியலிஸ்டிக்காக வரும் நீல நீள உருவம் வழியாக கதாப்பாத்திரங்களின் மனநிலையை எனக்கு கடத்தியது, இந்த நாவலின் சிறப்பாக இந்த நீல உருவம் வரும் இடங்களை நான் கருதுகிறேன்.

என்னடா யாரைப்பார்த்தாலும் ஒரே மன அழுத்தமும், பாலியல் துன்புறுத்தல்களும், PERVERSIONகளுமே கதை முழுக்கக் கட்டப்பட்டிருக்கிறதே என்று பார்த்தால். அது ஜார்ஜ் எனும் ஒரு போலீஸ் அதிகாரியின் மனநிலையில் இருந்து சொல்லப்படும் நாவல், ஒரு காவல்துறையைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதிருக்கும் குருதி வாடையாக JUSTIFY பண்ண முடிகிறது.

 ‘முண்டா’ தன் கதையைக் கூறும் இடத்தில் உண்மையில் நம்மை நடுங்க வைக்கிறது, அது போல் தமிழ்ச்செல்வனின் ஆசிரிய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும். எனது நண்பர் ஒருவர் இதே துறையில் எழுதுவதற்காக நிறைய தகவல்களை சேமித்துக் கொண்டிருக்கிறார். மேற்சொன்ன அப்பகுதிகளை வாசிக்கும் பொழுது என் நண்பர் சொன்ன விஷயங்கள் எத்தனை தூரம் உண்மை என அச்சுறுத்துகிறது. இது போன்ற விஷயங்களை தினமும் நாளிதழ்களில் பார்க்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் இருள் பற்றியோ ஒளி பற்றியோ கண்களைத் திறக்கும் வரை நமக்கு ஒன்னும் தெரியாது.

கட்டுரையாளர் அபிலாஷாக – ஐ.ஐ.டி உரை நிகழ்த்தும் தமிழ்செல்வனின் வாயிலாக ஆசிரியரை கவனிக்க முடிகிறது, ஐரோப்பியத் தத்துவியலைப் பற்றி தனது பார்வையை கதைக்குத் தகுந்த உரையாகப் பேசும் இடங்கள் ஈர்க்கின்றன. வழக்கமான துப்பறியும் நாவல்களில் வருவது போல், ஜார்ஜ் திடமானவராகவோ வலிமையானவராகவோ சித்தரிக்கப்படவில்லை.

மோகனின் தனிமையும், ஜார்ஜின் தனிமையும் அதை அவர்கள் எதிர்கொண்டு வரும் விதமும் கூட உண்மையில் GREY AREA தான்.ஜார்ஜ் நாவல் முழுதும் வலிமையற்றவனாக, பதட்டப்படுபவனாக,மனச்சிதைவில் அல்லாடுகிறான் இதுவும் மற்ற துப்பறியும் கதைகளில் இருந்து இந்நாவலை வெகு தொலைவில் விலகி நிற்க உதவுகிறது, இதையும் பாசிடிவான அனுகுமுறையாகத் தான் பார்க்கிறேன்.

 அபிலாஷின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.



கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.

உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் 102
விலை : 100/-

- ஜீவ கரிகாலன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...