நேற்று இரவில் இருந்தே தொலைபேசியிலும், குறுந்தகவல்கள், மெஸஞ்சர் மூலமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்தினார்கள். பெரும்பாலானோருடன் பேஸ்புக் மூலமாய் சன்னமான தொடர்பு தான். நிறைய பேரிடம் நான் அரட்டை அடித்தது கூட இல்லை. ஆனால் எழுத்து மூலமாய் ஏதோ ஒரு அளவில் அவர்களுடன் உரையாடி வந்திருக்கிறேன். அத்தனை பேரின் வாழ்த்துக்களும் வெறும் சொற்கள் அல்ல. நூற்றுக்கணக்கான கரங்கள் என் தோளை அணைப்பதாகவே உணர்ந்தேன். சமூக வலைதள காலத்தின் வரப்பிரசாதம் இது. அல்லாவிட்டால் என்னைப் போன்ற தனிமை விரும்பிகளுக்கு இந்த பிரியம் சாத்தியப்பட்டிருக்காது. நன்றிகள்! உங்கள் அன்பின் ஒளி என் உள்ளங்கைகளுக்குள் சுடர்ந்து கொண்டிருக்கும்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்