முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (2)


அன்றாடத்தின் கவனச்சிதறல்களில் இருந்து, வேலையின் அலைகழிப்பில் இருந்து, அபத்தமான மனிதர்களிடம் இருந்து ஒரு எழுத்தாளன் தப்பிப்பது எப்படி? என எனக்கு கீழ்வரும் விசயங்கள் தோன்றுகின்றன:
1)   அன்றாட விசயங்களில், தினசரி சகமனித உரையாடல்களில், சந்திப்புகளில் (நமக்கு பயன்படாது எனத் தோன்றும் சமாச்சாரங்களில்) உணர்ச்சியை வீணடிக்காமல் இருப்பது.

2)   முடிந்த வரை பட்டும்படாமல் நடந்து கொள்வது. எல்லாரிடமும் நடிப்பது. இது போலித்தனமோ பாசாங்கோ அல்ல. இது ஒரு சிறந்த கலை. நீங்கள் ஒருவரிடம் சிரிக்கிறீர்கள். ஆனால் சிரிக்கிறீர்கள் எனும் உணர்வு உங்களுக்குள் உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டை, அலுவலகத்தை, ஒரு பொதுவெளியை ஒரு நாடக அரங்காக பயன்படுத்துகிறீர்கள். இதில் ஒரு தனி சந்தோசம் உள்ளது. முயன்று பாருங்கள். நீங்கள் இயல்பாக உண்மையாக வெளிப்படையாக எல்லா இடங்களிலும் இருப்பது நல்லதல்ல. விரைவில் களைத்து விடுவீர்கள். பொய் அழகானது.
3)   கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எழுதுவது.
4)   எழுதும் போது நமக்காக ஆற்றலை வளர்த்துக் கொள்வது. இது பயிற்சியின் விளைவாக தானே நிகழும். நான் எழுதி பாதி வாக்கியத்தின் நடுவே லேப்டாப் கீபோர்டில் என்னையறியாது சாய்ந்து உறங்கி இருக்கிறேன். அவ்வளவு கடும் களைப்பிலும் என்னால் இப்போது எழுத முடிகிறது. எழுத கை வைத்ததும் வயாக்ரா உண்ட ஆண்குறி போல் நான் விரைத்துக் கொள்கிறேன், எப்போதும்.
5)   எழுதும் போது மிக உற்சாகமாய், துடிப்பாய் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பிரமை தான். ஆனால் தொடர்ந்து பயின்றால் நாம் எழுதும் போதே தனி உயிர்ப்புடன் இருப்பதை அறிய முடியும். இதை நான் ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவரை முன்பு அலுவலகத்துக்கு பார்க்க போவதுண்டு. மதியம் குட்டித் தூக்கம் போடுவார். நான் அவர் அருகில் காத்திருப்பேன். அவர் விழித்துக் கொண்டதும் ஸ்விட்ச் போட்ட பொம்மை போல் என்னிடம் இலக்கியம், எழுத்து, வாழ்க்கை என மிகுந்த உற்சாகத்துடன் உரையாட ஆரம்பிப்பார். Lag என்று நாம் இன்று காணொளிகள், மின்கருவிகளுக்கு சொல்வோமே. ஒரு எழுத்தாளன் எனும் கிரீடத்தை அணியும் போது ஜெயமோகனிடம் அரைவினாடி lag கூட இராது. எழுத்தாளன் சோர்வாக இருக்கக் கூடாது, எதிர்மறை சிந்தனைகளை வளர்க்கக் கூடாது என அவர் என்னிடம் வலியுறுத்துவார். தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகள் நம் எழுத்தை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்பார். ஒரு தேநீர் அருந்துவதைக் கூட அவர் எழுத்தை சுற்றியே திட்டமிடுவார். நம் சூழலில் எழுத்தாளனாய் இப்பண்பு மிக அவசியம்!
6)   இறுதியாக, முழுநேர எழுத்தாளனாய் இருப்பது மேற்குறிப்பிட்ட அல்லல்களில் இருந்து தப்பிக்க நிச்சயம் உதவும். ஆனால் வாழ்க்கையில் ஏதாவது அன்றாட தொந்தரவுகள், குறுக்கீடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். கொசுவிடம் இருந்து தப்பித்தாலும் அதன் ரிங்காரம் நம்மை விடாது. ஆனால் முழுநேர எழுத்து மிகப்பெரிய சௌகரியமே. அது வாய்க்காதவர்கள் வேறுவகையில் வாழ்க்கையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நிறைய பொருள் ஈட்டி நிலைப்பெற்ற பின் எழுதலாமே?
1)   ஆனால் பத்து வருடங்கள் கழித்து நமக்கு எழுதும் ஆர்வம், தேவை, ஆற்றல் இருக்குமா?
2)   பத்து வருடங்கள் கழித்து நாம் உயிருடன் தான் இருப்போமா?
3)    மேலும் இந்த பத்து வருடங்கள் நான் எழுத்தில் இழக்கப் போவதை எப்படி ஈடுகட்டுவது?
இக்கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. ஆகையால், நான் எதிர்காலத்தில் அமையப் போகும் ஒரு கற்பனையான எழுத்து வாழ்வுக்காக எனது “இன்றை” நடைமுறைத் தேவைகளின் பலிபீடத்தில் வெட்டி சாய்க்க மாட்டேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...