Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)

Image result for charu nivedita
சாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது. அவரது ஆளுமையின் நீட்சியே (அல்லது பகர்ப்பே) அவரது எழுத்து. சாரு தனித்துவமானவர், ஆக அவரது எழுத்தும் ஒரு அதிசயப் பிறவி என நினைத்து வந்தேன். கதைகளின் வடிவம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பொறுத்தமட்டில், மேற்கத்திய பின்நவீனத்துவ, எதிர்க்கலாச்சார எழுத்தாளர்களின் பாணியை அவர் பின்பற்றுகிறார் தான். ஆனால் அவர் எழுத்தின் தொனி, வாழ்க்கை நம்பிக்கைகள் (அல்லது நம்பிக்கையின்மை), அவரது குழந்தைமை, எதிலும் ஒட்டாத, விளிம்புநிலை சிந்தனை, status quoவை மறுப்பது, அல்லது அதை ஏற்று முன்னுக்கு பின்னாய் பேசி அதையே காலி செய்வது என பல விசயங்கள் சாருவின் இயல்பான ஆளுமைக் கூறுகள். இவையே அவரது எழுத்தின் பிரதான அம்சங்கள். ஆகஇப்படியே நான் சாருவை வகுத்துக் கொண்டிருந்தேன்.
சமீபத்தில் ஆதவனின்என் பெயர் ராமசேஷன்படித்துக் கொண்டிருக்கையில் சட்டென பொறி தட்டியது. ஆம் சாரு தன் பாணியை ஆதவனிடம் இருந்து தான் வரித்துக் கொண்டிருக்கிறார். “என் பெயர் ராமசேஷன்நாவலின் மனநிலை, வடிவம், நுண்ணுணர்வு ஆகியவற்றை தான் சாரு தனது ஆளுமை வழி தன் எழுத்தில் மீள்நிகழ்த்துகிறார்.
ராமசேஷன் மத்திய வர்க்க வாழ்வை சேர்ந்தவன். அவன் அதை வெறுக்கிறான். சதா பழிக்கிறான். மேற்கத்திய நண்பர்களை அமைத்துக் கொள்கிறான். மேற்தட்டு வாழ்வின் பல்வேறு சாத்தியங்கள், சுதந்திரங்கள், களிப்பு அவனை ஈர்க்கிறது. சாருவின் பெரும்பாலான நாவல்களில் கதைசொல்லி இப்படித் தான் இருக்கிறான். அவனது மேற்தட்டு, எலைட் நண்பர்களுடனான சந்திப்புகளும் சின்ன சின்ன விபத்துகளும் தாம் சாரு நாவல்களின் களன்.

 சாருவின் கதைசொல்லி ஒரு நாடக மேடையில் இருக்கிறான் என வையுங்கள். ஒவ்வொரு புது ஆளாக மேடையில் ஏறி அவனிடம் உரையாடுகிறார்கள். அப்போது விளையும் விசயங்களே கதையை நகர்த்தும். கதைசொல்லிக்கு என்று ஒரிஜினலாக கதை ஒன்றும் இருக்காது.
இந்த கதைசொல்லிக்கு என்று சொந்தமாய் நம்பிக்கைளும் உணர்வுகளும் இருக்காது. ராமசேஷனுக்கும் அப்படித் தான். அவன் மத்திய வர்க்க வாழ்க்கையில் உழலும் போது அதை பழித்து வெறுக்கிறான். தன் சொந்த அம்மா, அப்பா, அக்கா பண்ணுவதெல்லாம் அவனுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் பண்ணுவது போல் இருக்கிறது. அவர்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பது போல் அவன் இருக்கிறான். அவன் அடுத்து எலைட் வாழ்க்கைக்குள் நுழைந்து எட்டிப் பார்க்கிறான். அங்கும் அவன் ஒட்டுவதில்லை. அங்கு மனம் திளைக்கும் போதும் அது தன் வாழ்க்கையல்ல என உணர்கிறான். அவ்வாழ்க்கை மற்றும் அதிலுள்ள மனிதர்கள் மீதும் அவனுக்கு விமர்சனங்களும் எரிச்சலும் ஏமாற்றங்களும் உண்டாகின்றன. அப்படி என்றால் அவனுக்கான உன்னத வாழ்க்கை எது? அவன் எதை நோக்கி செல்ல விரும்புகிறான்? அவனது லட்சியம் என்ன?
எதுவுமில்லை. அவன் மனம் இன்பத்தை நோக்கித் தாவுகிறது. ஆனால் இன்பமயமான இடங்களிலும் அவன் தாமரை இலை நீர்த்துளி போலே இருக்கிறான். ஏன்?
இதற்கான நேரடியான விடையை ஆதவன் அளிப்பதில்லை. ஆனால் ராமசேஷனின் அப்பாவின் மத்திய வர்க்க அடிமை வாழ்க்கை, அம்மாவின் ஆதிக்கம், அம்மாவின் மீதும், அம்மா வயதொத்த பெண்களின் மீதும் அவன் கொள்ளும் ஈர்ப்பில் இதற்கு ஒரு விடை இருக்கலாம்.
 ராமசேஷனின் இயல்பான ஆளுமையே அப்படி எதனோடும் ஒட்ட முடியாத விட்டேந்தியானதாக இருக்கலாம். அவன் வாழும் எண்பதுகள் அப்படி லட்சியங்கள் குழிதோண்டி புதைக்கப்பட்ட, அமெரிக்க ஹிப்பி பண்பாட்டின் மீதும், இன்னொரு புறம் சிவப்பு நக்ஸலிய சிந்தனைகளின் பாலும் இளைஞர்கள் ஈர்க்கப்பட்ட காலம் என்பது இதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் (”என் பெயர் ராமசேஷன்நாவலில் தொடர்ந்து மார்க்ஸியமும் எலைட் கொண்டாட்ட வாழ்க்கையும் மத்திய வர்க்க வாழ்வின் அபத்தமும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் எது ஒருவர் பின்பற்றத் தக்கது எனும் தெளிவின்றி, அனைத்தையும் நிராகரிக்கும் மனநிலையில் இவை விவாதிக்கப்படுகின்றன.).
செக்ஸ் திளைப்பும் ஒட்டாமையும்
சாருவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்நாவலின் துவக்கத்தில் கதைசொல்லி தனியாக, சரியான உணவோ பராமரிப்போ இன்றி இருப்பான். அதற்காக அவன் வறுமையில் இருக்கிறான் என்றில்லை. அவன் வறுமையை பழிப்பதோ வறுமைக்குக் காரணமான சமூகக் காரணிகளை அலசுவதோ, அதன் தீர்வு நோக்கி அவன் நகர்வதோ இல்லை. ஏனென்றால் அவ்வறுமைதனதானதுஅல்ல என அவன் நினைக்கிறான். அவன் வறுமைக்குள் பிறக்கவில்லை. வேறுவழியின்றி வறுமையில் இல்லை அவன். மாறாக, அவன் வறுமையை தற்காலிகமாய் தேர்ந்திருக்கிறான். (வறுமை அவனை தேர்ந்தெடுக்கவில்லை.) அவன் வறுமையில் இருக்கிறான்”. ஒரு கண்ணாடிக் கோப்பையில் சிவப்பு வைன் போல வறுமை அவனுள் இருக்கிறது. ஆனால் வறுமையின் சிவப்பு நிறம் தனதல்ல எனும் உணர்வு அவனுக்கு உண்டு. ஒரு துறவி வனாந்தரத்தில் இருப்பது போல் அவன் தனியாய் ஒரு அறையில் சில ரொட்டித் துண்டுகளை மட்டும் தின்று நொடிந்து போய் இருக்கிறான்.
பெண்கள் உடனான அவன் உறவும் இதே போலத் தான். தில்லி பேருந்துகளில் கையில்லாத ரவிக்கை அணிந்த பெண்கள் அவனுக்கு ஆசூயை ஏற்படுத்துகிறார்கள். ஏன்? அவர்கள் பேருந்துக் கம்பியை பிடிக்க கையை தூக்கும் போது அவர்களின் மயிரடர்ந்த அக்குள் அவன் பார்வையில் படுகிறது. அவனுக்கு அது பெண்குறியை நினைவுபடுத்துகிறது. அவனுக்கு அருவருப்பு ஏற்படுகிறது.
 பெண்குறியில் அருவருப்பாய் ஒன்றுமில்லையே! அவன் பெண்ணுடலை, பாலுறவை கொண்டாடுபவன் தான். அதில் திளைப்பவன் தான். ஆனாலும் அதன் மீது அவனுக்கு அசூயையும் ஏற்படுகிறது. ஏனென்றால் பெண்ணின் பாலியலுடன் அவன் தன்னை அடையாளப்படுத்துவதில்லை. பெண்ணுடன் சல்லாபிக்கையில் தான்அங்குஉண்மையில் இல்லை எனும் உணர்வு அவனுக்கு ஏற்படுகிறது.
 இதை சாருவின் அத்தனை ஆண் பாத்திரங்களுக்கும் பொதுவான மனநிலை எனலாம். இந்த விலகல் மனநிலை அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமது உண்மையான பாலியல் அடையாளம் என்ன, எது தம்மை முழுமையான மகிழ்ச்சிக்கு நோக்கி செலுத்தும், தாம் ஈர்க்கப்படும் உடல்கள் மீதும் ஏன் ஈர்ப்பின்மையும் ஒரே சமயம் ஏற்படுகிறது என பல கேள்விகள் எழுகின்றன.
 இந்த அகச்சிக்கல் சாருவின் ஆண் பாத்திரங்களை சிலநேரம் பெண்களை வெறுக்கவும் பழிக்கவும் வைக்கிறது. பெண்களைப் பற்றி சதா கனவுலகில் திளைக்கவும் மிகை கற்பிதங்களில் மூழ்கவும் செய்கிறது. அக்குள் பெண்குறியாய் தெரிவதும் (விசித்திர கற்பிதம்), இதனாலே பெண்குறி மீது கசப்பு ஏற்படுவதும் நிகழ்கிறது. அதாவது பெண் குறி மீதான ஆதி கசப்பு அக்குள் மீது ஏற்றப்படுகிறது. இப்பெண்கள் ஏன் சதா தம் மழிக்கப்படாத அக்குளை காட்ட பிரயத்தனிக்கிறார்கள் எனஎக்ஸிஸ்டென்ஷியலிசமும்…” நாவலின் கதைசொல்லி விசனிக்கிறான். இதை இப்பெண்கள் ஏன் தமது பாலியலை பிரகடனப்படுத்த எத்தனிக்கிறார்கள் என இன்னும் எளிமையாக்கலாம்.
இப்பெண்கள் எனப்படுபவர்கள் 30-40 வரையிலான வயதுக்குட்பட்ட பெண்கள். ராமசேஷனின் மொழியில் அக்கிரகாரத்துமாமிகள்மற்றும் ராவ் போன்ற பணக்கார வர்க்க ஆண்களின் தாய்கள். சாருவின் கதைசொல்லிக்கு தில்லியின் படித்த, மேல்மத்திய வர்க்க சுதந்திரப் பெண்கள்.
இப்பெண்கள் தம் பாலுடலை வெளிக்காட்டுவது இந்த ஆண்களுக்கு ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்குகிறது? ஒழுக்க மனநிலையா? இல்லை.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...