அபிலாஷ் மொழிபெயர்த்து தொடர்ந்து இங்கு பதிந்துவரும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைக் கவனித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. சிறப்பான மொழிபெயர்ப்பு. மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் லயத்தைப் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்ப்பது ஒரு சுகானுபவம். மொழிபெயர்ப்பிலும் அவை முழுமை குன்றாத பிரதிகளாக வருவதைக் காண்பது நிறைவு. இதனால் இம்மொழிபெயர்ப்புகள் எளிதானவை எனப் பொருளாகாது. மனுஷ்யபுத்திரனின் ‘சிக்னேச்சர்’ தமிழ்ப் பதங்களுக்கு நேரான ஆங்கில வார்த்தைகளுக்காக சிலநேரம் நின்று தவமிருக்க வேண்டியிருக்கும். மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு செம்பதிப்பாக இந்திய அளவில் கொண்டு செல்லப்படுமானால் தமிழ்க்கவிதைகளின் செறிவானதொரு பக்கத்தை இந்திய இலக்கிய உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். பாராட்டுகள் அபிலாஷ்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments