அபிலாஷ் மொழிபெயர்த்து தொடர்ந்து இங்கு பதிந்துவரும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைக் கவனித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. சிறப்பான மொழிபெயர்ப்பு. மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் லயத்தைப் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்ப்பது ஒரு சுகானுபவம். மொழிபெயர்ப்பிலும் அவை முழுமை குன்றாத பிரதிகளாக வருவதைக் காண்பது நிறைவு. இதனால் இம்மொழிபெயர்ப்புகள் எளிதானவை எனப் பொருளாகாது. மனுஷ்யபுத்திரனின் ‘சிக்னேச்சர்’ தமிழ்ப் பதங்களுக்கு நேரான ஆங்கில வார்த்தைகளுக்காக சிலநேரம் நின்று தவமிருக்க வேண்டியிருக்கும். மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு செம்பதிப்பாக இந்திய அளவில் கொண்டு செல்லப்படுமானால் தமிழ்க்கவிதைகளின் செறிவானதொரு பக்கத்தை இந்திய இலக்கிய உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். பாராட்டுகள் அபிலாஷ்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments