முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன் எனும் பேரலை (5)


 Image result for balakumaran
பாலகுமாரனின் தனிச்சிறப்பு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட ந்த உணர்வுவேகமும் அதில் தன்னை இழந்து கரைந்து ஒன்றிலிருந்து அதற்கு முற்றிலும் மாறுபட்ட இன்னொன்றாகிப் போகும் லாவகமுமே, அப்படி ஆவதற்கு தன்னையே முரண் கொள்வதாகும் என்பது குறித்த துணிச்சல் வேண்டும். பாலகுமாரனிடம் அத்துணிச்சல் நிறைய இருந்தது.

சுயமுரண்களையும், நேர்த்தியாய் தொகுக்க முடியாத மனத்தின் பாய்ச்சல்களையும் பாலகுமாரன் வடிகட்டுவதோ தர்க்க வடிவுக்குள் கொண்டு வருவதோ இல்லை. தமிழின் உன்னதமான இலக்கிய படைப்பாளிகள் கூட இப்படி துணிச்சலாய் பாதாளம் நோக்கி கண்ணை மூடிப் பாய்ந்ததில்லை. (இப்படியான இருளில் விளக்கின்றி நடக்கும் மொழியை பிரஞ்சு தத்துவஞானியும் பின்அமைப்பியல் பெண்ணியவாதியுமான சிக்ஸு பெண் மொழி என்றார். மனத்தை வகிடெடுக்காமல் கலைந்த கூந்தலாய் காட்டுவது, தான் சொன்னதை தயக்கமின்றி அடுத்த நொடி மீறிச் செல்லும் விதமாய் ஒரு பாத்திரத்தை பேச அனுமதிப்பதே படைப்பூக்கமிக்க மொழி, அதுவே பெண்ணின் இயல்பான மொழி என்றார் சிக்ஸு. பாலகுமாரனின் புனைவுகளில் பல இடங்களில் இந்த மொழி முகம் காட்டுகிறது.)
இந்த பிரவாகமான மொழியை பாலகுமாரன் விட்டேந்தியாய் நின்று மனிதர்களை விவாதிக்கவும் சித்தரிக்கவும் பயன்படுத்தவில்லை. கதாகாலட்சேப பாணியை அவர் பின்பற்றினார். தொடர்ந்து நாவலுக்குள் பேசிக் கொண்டே போனார். பாலகுமாரனுக்குள் இருந்த தெளிவான அறிவு முதிர்ந்த ஆண் விழிக்கும் போது இந்த பேச்சு அலுப்பூட்டியது; ஆனால் அவருக்குள் ஆர்ப்பரித்து அடங்கும் பெண்மை விழிக்கும் போது இந்த பேச்சு ஆர்வமூட்டியது; உண்மைக்கு வெகுஅருகில் அவர் கதைகளை இது நகர்த்தியது.
பாலகுமாரன் தன் நாவல்களில் தன் பாத்திரங்கள் வழியாக நம்மிடம் மட்டும் பேசவில்லை; சிலநேரம் ஒரு பாத்திரம் மூலம் இன்னொரு பாத்திரத்திடம் பேசினார். தடுக்கி விழப் போகிறவரை தாங்கி நிறுத்தினார்; ஆறுதல் செய்தார்; அறிவுரைத்தார். ஆனால் இது வெறும் உபன்யாசக் கதையாகவும் அவர் நாவல்களை மாற்றவில்லை.
அவரது வாழ்க்கைப் பார்வையை அவர் நம் காதுவலிக்க திரும்ப திரும்ப நாவலில் சொல்வார். ஆனால் அதற்கு நேர்மாறான கருத்துக்களையும் தன்னையறியாமல் சித்தரிப்புகளினூடே வலியுறுத்துவார். “நீ இனி குழம்பக் கூடாது; இப்படியே உணர்வலையில் தட்டுத்தடுமாறி உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கக் கூடாது. நிதானம் கொள்.” என பாத்திரங்களை நோக்கி சொல்வார். ஒரு பாத்திரத்தைக் கொண்டு இன்னொரு பாத்திரத்துக்கு அறிவுரை சொல்வார். அப்பாத்திரமே தனக்குத் தானே அறிவுரைக்கும்.
மெர்க்குரிப் பூக்களில்தகாத உறவு கேடானது எனும் சேதி உள்ளது. திருமணமான சியாமிளியுடன் ரகசிய காதலுறவில் இருக்கிறான் சங்கர். இந்த உறவு சாத்தியப்படாது என புரிந்ததும் இருவரும் பிரிகிறார்கள். அதுவே ஆரோக்கியமானது என பேசுகிறார்கள்; பாலகுமாரனும் அதை நேரடியாய் வலியுறுத்துகிறார்தாம்பத்யம் நிலையானது; உறுதியானது என்கிறார். சங்கர் தன்னைப் பிரிந்து வெறுத்து ஒதுக்கும் போது சியாமிளி எனக்கும் இனி இந்த உறவு தேவையில்லை என முடிவெடுக்கிறாள். ஆனால் அடுத்த நிமிடமே, காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அவனைத் தேடிச் சென்று உதவுகிறாள். அங்கே அவன் தன்னை அவமதிக்க அவமதிக்க அவள் துன்புறுகிறாள், ஆனால் அவனை மறக்க முடியாது மீள மீள அவனிடமே செல்கிறாள்.
அவன் சியாமிளியை மறக்க அரசியலில் ஈடுபடுகிறான். அவசரமாய் ஒரு திருமணம் செய்து கொள்கிறான். தன் மனைவியை கனிவாய் ஆதுரமாய் நடத்த வேண்டும், இனிமேல் இவள் தான் எனக்கு எல்லாம் என நினைக்கிறான்.
 சியாமிளியும் தான் அதுவரை வெறுத்து வந்த கணவனை இனி பிரியமாய் புரிதலுடன் நடத்த வேண்டும் என முடிவெடுக்கிறாள். செயல்படுத்துகிறாள்.
ஆனால் இருவரின் மனமும் இந்த புதிய சரியானவாழ்க்கையில் இல்லை; சங்கரையும் சியாமிளியையும் இப்போது ஒரு வெறுமை சூழ்கிறது என்பதை பாலகுமாரன் குறிப்புணர்த்துகிறார்.
அவர்கள் எடுத்த முடிவே சமயோஜிதமானது; பிறரது நலனையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மனிதநேயமிக்க முடிவு அது. ஆனால் அம்முடிவே அவர்களின் ஆன்மாவையும் கொன்று விடுகிறது. பாலகுமாரன் உபதேசிக்க்கிற ஒரு பார்வையுடன் அவரே முரண்படும் இடம் இது. ஒரு பக்கம் அவர் திடமாய் ஒன்றை சொல்கிறார்; ஆனால் கதைக்குள் நம்மால் இவ்வளவு திடமாய் வாழ்க்கையில் இயங்க முடியாது என்பதை குறிப்புணர்த்துகிறார். பாலகுமாரனுக்குள் இருக்கும் உபதேசி நம்மை அதிகம் உறுத்தாம் இருப்பது இந்த முரண்களால் தான்.
பாலகுமாரனை கராறாய் மதிப்பிடும் ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் (“பாலகுமாரனும் வணிக இலக்கியமும்”) பாலகுமாரனை வரும் தலைமுறையினர் பொருட்படுத்தி வாசிக்க மாட்டார்கள். வணிக இலக்கிய அலமாரி ஒன்றின் தூசுபடிந்த தட்டில் அவர் நூல்கள் தூங்கும் என்கிறார். ஆனால் இன்றைய விமர்சன நோக்கு உலகம் முழுக்க மாறி வருகிறது. ஐரோப்பாவில் இன்று வணிக, இடைநிலை படைப்பாளிகளை நுணுக்கமாய் ஆராய்ந்து நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இந்நிலை விரைவில் தோன்றும். இன்றைய தலைமுறையினரின் மனம் ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் இருக்கிறது. பாலகுமாரன் எழுதிய எண்பது தொண்ணூறுகளை விட இதுவே காயத்ரிகளின் சாவித்ரிகளின் சியாமிளிகளின் காலமாய் இருக்கிறது. ஆகையால் பாலகுமாரன் தொடர்ந்து வாசிக்கப்படுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
அப்படியே இந்த காலகட்டமும் விரைவில் நகர்ந்து போனாலும், உடைப்பெடுத்த நதிவெள்ளம் போன்ற இந்த மொழிக்காகவே பாலகுமாரன் நீண்ட காலம் படிக்கப்படுவார். இல்லாவிட்டாலும் பிரச்சனையில்லை!


நன்றி: தீராநதி, ஜூன் 2018


கருத்துகள்

Basheer இவ்வாறு கூறியுள்ளார்…
//எழுதிய எண்பது தொண்ணூறுகளை விட இதுவே காயத்ரிகளின் சாவித்ரிகளின் சியாமிளிகளின் காலமாய் இருக்கிறது.// மிகச்சரியான அவதானிப்பு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...