முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன் எனும் பேரலை (5)


 Image result for balakumaran
பாலகுமாரனின் தனிச்சிறப்பு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட ந்த உணர்வுவேகமும் அதில் தன்னை இழந்து கரைந்து ஒன்றிலிருந்து அதற்கு முற்றிலும் மாறுபட்ட இன்னொன்றாகிப் போகும் லாவகமுமே, அப்படி ஆவதற்கு தன்னையே முரண் கொள்வதாகும் என்பது குறித்த துணிச்சல் வேண்டும். பாலகுமாரனிடம் அத்துணிச்சல் நிறைய இருந்தது.

சுயமுரண்களையும், நேர்த்தியாய் தொகுக்க முடியாத மனத்தின் பாய்ச்சல்களையும் பாலகுமாரன் வடிகட்டுவதோ தர்க்க வடிவுக்குள் கொண்டு வருவதோ இல்லை. தமிழின் உன்னதமான இலக்கிய படைப்பாளிகள் கூட இப்படி துணிச்சலாய் பாதாளம் நோக்கி கண்ணை மூடிப் பாய்ந்ததில்லை. (இப்படியான இருளில் விளக்கின்றி நடக்கும் மொழியை பிரஞ்சு தத்துவஞானியும் பின்அமைப்பியல் பெண்ணியவாதியுமான சிக்ஸு பெண் மொழி என்றார். மனத்தை வகிடெடுக்காமல் கலைந்த கூந்தலாய் காட்டுவது, தான் சொன்னதை தயக்கமின்றி அடுத்த நொடி மீறிச் செல்லும் விதமாய் ஒரு பாத்திரத்தை பேச அனுமதிப்பதே படைப்பூக்கமிக்க மொழி, அதுவே பெண்ணின் இயல்பான மொழி என்றார் சிக்ஸு. பாலகுமாரனின் புனைவுகளில் பல இடங்களில் இந்த மொழி முகம் காட்டுகிறது.)
இந்த பிரவாகமான மொழியை பாலகுமாரன் விட்டேந்தியாய் நின்று மனிதர்களை விவாதிக்கவும் சித்தரிக்கவும் பயன்படுத்தவில்லை. கதாகாலட்சேப பாணியை அவர் பின்பற்றினார். தொடர்ந்து நாவலுக்குள் பேசிக் கொண்டே போனார். பாலகுமாரனுக்குள் இருந்த தெளிவான அறிவு முதிர்ந்த ஆண் விழிக்கும் போது இந்த பேச்சு அலுப்பூட்டியது; ஆனால் அவருக்குள் ஆர்ப்பரித்து அடங்கும் பெண்மை விழிக்கும் போது இந்த பேச்சு ஆர்வமூட்டியது; உண்மைக்கு வெகுஅருகில் அவர் கதைகளை இது நகர்த்தியது.
பாலகுமாரன் தன் நாவல்களில் தன் பாத்திரங்கள் வழியாக நம்மிடம் மட்டும் பேசவில்லை; சிலநேரம் ஒரு பாத்திரம் மூலம் இன்னொரு பாத்திரத்திடம் பேசினார். தடுக்கி விழப் போகிறவரை தாங்கி நிறுத்தினார்; ஆறுதல் செய்தார்; அறிவுரைத்தார். ஆனால் இது வெறும் உபன்யாசக் கதையாகவும் அவர் நாவல்களை மாற்றவில்லை.
அவரது வாழ்க்கைப் பார்வையை அவர் நம் காதுவலிக்க திரும்ப திரும்ப நாவலில் சொல்வார். ஆனால் அதற்கு நேர்மாறான கருத்துக்களையும் தன்னையறியாமல் சித்தரிப்புகளினூடே வலியுறுத்துவார். “நீ இனி குழம்பக் கூடாது; இப்படியே உணர்வலையில் தட்டுத்தடுமாறி உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கக் கூடாது. நிதானம் கொள்.” என பாத்திரங்களை நோக்கி சொல்வார். ஒரு பாத்திரத்தைக் கொண்டு இன்னொரு பாத்திரத்துக்கு அறிவுரை சொல்வார். அப்பாத்திரமே தனக்குத் தானே அறிவுரைக்கும்.
மெர்க்குரிப் பூக்களில்தகாத உறவு கேடானது எனும் சேதி உள்ளது. திருமணமான சியாமிளியுடன் ரகசிய காதலுறவில் இருக்கிறான் சங்கர். இந்த உறவு சாத்தியப்படாது என புரிந்ததும் இருவரும் பிரிகிறார்கள். அதுவே ஆரோக்கியமானது என பேசுகிறார்கள்; பாலகுமாரனும் அதை நேரடியாய் வலியுறுத்துகிறார்தாம்பத்யம் நிலையானது; உறுதியானது என்கிறார். சங்கர் தன்னைப் பிரிந்து வெறுத்து ஒதுக்கும் போது சியாமிளி எனக்கும் இனி இந்த உறவு தேவையில்லை என முடிவெடுக்கிறாள். ஆனால் அடுத்த நிமிடமே, காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அவனைத் தேடிச் சென்று உதவுகிறாள். அங்கே அவன் தன்னை அவமதிக்க அவமதிக்க அவள் துன்புறுகிறாள், ஆனால் அவனை மறக்க முடியாது மீள மீள அவனிடமே செல்கிறாள்.
அவன் சியாமிளியை மறக்க அரசியலில் ஈடுபடுகிறான். அவசரமாய் ஒரு திருமணம் செய்து கொள்கிறான். தன் மனைவியை கனிவாய் ஆதுரமாய் நடத்த வேண்டும், இனிமேல் இவள் தான் எனக்கு எல்லாம் என நினைக்கிறான்.
 சியாமிளியும் தான் அதுவரை வெறுத்து வந்த கணவனை இனி பிரியமாய் புரிதலுடன் நடத்த வேண்டும் என முடிவெடுக்கிறாள். செயல்படுத்துகிறாள்.
ஆனால் இருவரின் மனமும் இந்த புதிய சரியானவாழ்க்கையில் இல்லை; சங்கரையும் சியாமிளியையும் இப்போது ஒரு வெறுமை சூழ்கிறது என்பதை பாலகுமாரன் குறிப்புணர்த்துகிறார்.
அவர்கள் எடுத்த முடிவே சமயோஜிதமானது; பிறரது நலனையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மனிதநேயமிக்க முடிவு அது. ஆனால் அம்முடிவே அவர்களின் ஆன்மாவையும் கொன்று விடுகிறது. பாலகுமாரன் உபதேசிக்க்கிற ஒரு பார்வையுடன் அவரே முரண்படும் இடம் இது. ஒரு பக்கம் அவர் திடமாய் ஒன்றை சொல்கிறார்; ஆனால் கதைக்குள் நம்மால் இவ்வளவு திடமாய் வாழ்க்கையில் இயங்க முடியாது என்பதை குறிப்புணர்த்துகிறார். பாலகுமாரனுக்குள் இருக்கும் உபதேசி நம்மை அதிகம் உறுத்தாம் இருப்பது இந்த முரண்களால் தான்.
பாலகுமாரனை கராறாய் மதிப்பிடும் ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் (“பாலகுமாரனும் வணிக இலக்கியமும்”) பாலகுமாரனை வரும் தலைமுறையினர் பொருட்படுத்தி வாசிக்க மாட்டார்கள். வணிக இலக்கிய அலமாரி ஒன்றின் தூசுபடிந்த தட்டில் அவர் நூல்கள் தூங்கும் என்கிறார். ஆனால் இன்றைய விமர்சன நோக்கு உலகம் முழுக்க மாறி வருகிறது. ஐரோப்பாவில் இன்று வணிக, இடைநிலை படைப்பாளிகளை நுணுக்கமாய் ஆராய்ந்து நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இந்நிலை விரைவில் தோன்றும். இன்றைய தலைமுறையினரின் மனம் ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் இருக்கிறது. பாலகுமாரன் எழுதிய எண்பது தொண்ணூறுகளை விட இதுவே காயத்ரிகளின் சாவித்ரிகளின் சியாமிளிகளின் காலமாய் இருக்கிறது. ஆகையால் பாலகுமாரன் தொடர்ந்து வாசிக்கப்படுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
அப்படியே இந்த காலகட்டமும் விரைவில் நகர்ந்து போனாலும், உடைப்பெடுத்த நதிவெள்ளம் போன்ற இந்த மொழிக்காகவே பாலகுமாரன் நீண்ட காலம் படிக்கப்படுவார். இல்லாவிட்டாலும் பிரச்சனையில்லை!


நன்றி: தீராநதி, ஜூன் 2018


கருத்துகள்

Basheer இவ்வாறு கூறியுள்ளார்…
//எழுதிய எண்பது தொண்ணூறுகளை விட இதுவே காயத்ரிகளின் சாவித்ரிகளின் சியாமிளிகளின் காலமாய் இருக்கிறது.// மிகச்சரியான அவதானிப்பு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...