
20. இயக்குநர் மிஷ்கினின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கட்டுரையாளர்
நீங்கள்தான். "நந்தலாலா" காலத்திலிருந்தே அவரது திரைப்படங்களைப் பற்றி
எழுதி வருகிறீர்கள். மிஷ்கினுடனான, அவரது சினிமாவுடனான
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆர். அபிலாஷ்: மிஷ்கின் ஒரு அபாரமான
ஆளுமை. நான் மிகவும் விரும்பி தேடி சந்தித்த
மனிதர் அவர். அவரைப் பற்றி அவரது நண்பர்கள் வழி நிறைய தெரிந்து கொண்டேன். அவரை நான் அவ்வாறு கவனித்து
அவதானித்ததைக் கொண்டு “துப்பறிவாளன்” படத்தை அலசினேன். அது மிஷ்கினின் மன அமைப்பு
குறித்த படம் என்பது என் தரப்பு. அவர் அளவு சினிமா மொழி குறித்த ஆழமான பார்வையும் பிரக்ஞையும்
கொண்ட இன்னொருவர் உண்டென்றால் அது ராம் தான்.
முழுக்க முழுக்க தன் தேடலால் உழைப்பால் உருவாகி வந்த மனிதர் மிஷ்கின். காலையில் விழிப்பது முதல்
உறங்குவது வரை சில்லறை விசயங்களைப் பற்றி அவர் அதிகம் கவலை கொள்வதில்லை. முழுக்க கலையும் தன்னை உணர்தலும்
சுதந்திரமாய் வாழ்தலுமே அவரது அக்கறையாக இருக்கிறது. ஜென் மரபில் இருந்து கற்றுக்
கொண்டவற்றை நடப்பில் அவர் முயற்சிப்பதை கவனித்திருக்கிறேன். அவரைப் பற்றி பேசுவதானால்
இந்த பேட்டி போதாது. என்றாவது அவரது படங்கள் பற்றி, அவரது ஆளுமை குறித்து ஒரு
நூல் எழுதுவேன்.
21. தமிழில் விமர்சனக் கலையின் போக்கு எப்படி இருக்கிறது?
21. தமிழில் விமர்சனக் கலையின் போக்கு எப்படி இருக்கிறது?
ஆர். அபிலாஷ்: நீண்ட காலமாய் நாம் சினிமாவை இலக்கியம்
போன்று மற்றொரு கதை வடிவமாய் கண்டு அதைப் பற்றி எழுதி வந்தோம். அதன் தொழில்நுடப் அம்சங்களான frame, blocking, ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு ஆகியவற்றை அலசி சினிமாவை நாம் அதன் கதையம்சம், வசனம் ஆகியவை தாண்டி முற்றிலும் வேறொரு விதத்தில் அலச முடியும்.
இன்று முகநூல் வழி நிறைய விமர்சனங்கள் ஜனரஞ்சமாய்
நேர்மையாய் எழுதப்படுகின்றன. உலக சினிமா அக்கறை
கொண்டவர்களும் தம் பார்வையை, பரிந்துரைகளை
தருகிறார்கள். இன்னொரு பக்கம், சினிமா மொழியை அறிந்து கொள்ள இன்று இணையம் வழி ஏகப்பட்ட சாத்தியங்கள்
ஏற்பட்டுள்ளன. சினிமாவை ஆய்வு செய்யும், படித்தறியும், அதைப் பற்றி தீவிரமாய் ஆழமாய் எழுதும் வாய்ப்புகள் இன்று பெருகி விட்டன. இதைக் கொண்டு சினிமா விமர்சனத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது
நம் பொறுப்பு.
22. தமிழின் வணிக சினிமாக்கள் மட்டமானவை என்பது பெரும்பாலான அறிவுஜீவிகளின் வாதம். அதே வணிக சினிமாக்களை வைத்தே நம் சமூகத்தின் நடப்புகளை எப்படி உங்களால் அவதானிக்க முடிகிறது?
22. தமிழின் வணிக சினிமாக்கள் மட்டமானவை என்பது பெரும்பாலான அறிவுஜீவிகளின் வாதம். அதே வணிக சினிமாக்களை வைத்தே நம் சமூகத்தின் நடப்புகளை எப்படி உங்களால் அவதானிக்க முடிகிறது?
ஆர். அபிலாஷ்: சமூகப் போக்குகளை வணிக
சினிமா உடனுக்குடன் விவாதிக்கிறது.
மேலும் நம் சமூக நனவிலியின் கண்ணாடியாகவும் வணிக சினிமா உள்ளது.
அதனாலே அதை அலசுவது நிழலில் உறைந்த சமூக முகத்தில் வெளிச்சம் பாய்ச்ச
அவசியமாய் உள்ளது.
23. ஓர் எழுத்தாளராக உங்கள் அடுத்தக் கட்டப் பயணம்?
23. ஓர் எழுத்தாளராக உங்கள் அடுத்தக் கட்டப் பயணம்?
ஆர். அபிலாஷ்: நேர்மையாய் சொல்வதானால்
தெரியவில்லை. இந்த நொடி வரை எழுத்து எனக்கு சுகானுபவம் அளிக்கிறது. எழுதும் போது அபாரமான பாய்ச்சலை உள்ளுக்குள் உணர்கிறேன். ஆகையால் நான் என் இறுதி மூச்சு வரை எழுதுவேன் என நினைக்கிறேன்.
Comments