முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (12)



 (எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for director mysskin

20. இயக்குநர் மிஷ்கினின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கட்டுரையாளர் நீங்கள்தான். "நந்தலாலா" காலத்திலிருந்தே அவரது திரைப்படங்களைப் பற்றி எழுதி வருகிறீர்கள். மிஷ்கினுடனான, அவரது சினிமாவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆர். அபிலாஷ்: மிஷ்கின் ஒரு அபாரமான ஆளுமை. நான் மிகவும் விரும்பி தேடி சந்தித்த மனிதர் அவர். அவரைப் பற்றி அவரது நண்பர்கள் வழி நிறைய தெரிந்து கொண்டேன். அவரை நான் அவ்வாறு கவனித்து அவதானித்ததைக் கொண்டுதுப்பறிவாளன்படத்தை அலசினேன். அது மிஷ்கினின் மன அமைப்பு குறித்த படம் என்பது என் தரப்பு. அவர் அளவு சினிமா மொழி குறித்த ஆழமான பார்வையும் பிரக்ஞையும் கொண்ட இன்னொருவர் உண்டென்றால் அது ராம் தான்.
முழுக்க முழுக்க தன் தேடலால் உழைப்பால் உருவாகி வந்த மனிதர் மிஷ்கின். காலையில் விழிப்பது முதல் உறங்குவது வரை சில்லறை விசயங்களைப் பற்றி அவர் அதிகம் கவலை கொள்வதில்லை. முழுக்க கலையும் தன்னை உணர்தலும் சுதந்திரமாய் வாழ்தலுமே அவரது அக்கறையாக இருக்கிறது. ஜென் மரபில் இருந்து கற்றுக் கொண்டவற்றை நடப்பில் அவர் முயற்சிப்பதை கவனித்திருக்கிறேன். அவரைப் பற்றி பேசுவதானால் இந்த பேட்டி போதாது. என்றாவது அவரது படங்கள் பற்றி, அவரது ஆளுமை குறித்து ஒரு நூல் எழுதுவேன்.

21. தமிழில் விமர்சனக் கலையின் போக்கு எப்படி இருக்கிறது?

ஆர். அபிலாஷ்: நீண்ட காலமாய் நாம் சினிமாவை இலக்கியம் போன்று மற்றொரு கதை வடிவமாய் கண்டு அதைப் பற்றி எழுதி வந்தோம். அதன் தொழில்நுடப் அம்சங்களான frame, blocking, ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு ஆகியவற்றை அலசி சினிமாவை நாம் அதன் கதையம்சம், வசனம் ஆகியவை தாண்டி முற்றிலும் வேறொரு விதத்தில் அலச முடியும்.
இன்று முகநூல் வழி நிறைய விமர்சனங்கள் ஜனரஞ்சமாய் நேர்மையாய் எழுதப்படுகின்றன. உலக சினிமா அக்கறை கொண்டவர்களும் தம் பார்வையை, பரிந்துரைகளை தருகிறார்கள். இன்னொரு பக்கம், சினிமா மொழியை அறிந்து கொள்ள இன்று இணையம் வழி ஏகப்பட்ட சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. சினிமாவை ஆய்வு செய்யும், படித்தறியும், அதைப் பற்றி தீவிரமாய் ஆழமாய் எழுதும் வாய்ப்புகள் இன்று பெருகி விட்டன. இதைக் கொண்டு சினிமா விமர்சனத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது நம் பொறுப்பு.

22. தமிழின் வணிக சினிமாக்கள் மட்டமானவை என்பது பெரும்பாலான அறிவுஜீவிகளின் வாதம். அதே வணிக சினிமாக்களை வைத்தே நம் சமூகத்தின் நடப்புகளை எப்படி உங்களால் அவதானிக்க முடிகிறது?

ஆர். அபிலாஷ்: சமூகப் போக்குகளை வணிக சினிமா உடனுக்குடன் விவாதிக்கிறது. மேலும் நம் சமூக நனவிலியின் கண்ணாடியாகவும் வணிக சினிமா உள்ளது. அதனாலே அதை அலசுவது நிழலில் உறைந்த சமூக முகத்தில் வெளிச்சம் பாய்ச்ச அவசியமாய் உள்ளது.

23. ஓர் எழுத்தாளராக உங்கள் அடுத்தக் கட்டப் பயணம்?

ஆர். அபிலாஷ்: நேர்மையாய் சொல்வதானால் தெரியவில்லை. இந்த நொடி வரை எழுத்து எனக்கு சுகானுபவம் அளிக்கிறது. எழுதும் போது அபாரமான பாய்ச்சலை உள்ளுக்குள் உணர்கிறேன். ஆகையால் நான் என் இறுதி மூச்சு வரை எழுதுவேன் என நினைக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...